Friday, November 20, 2015

25- பேசும் சொற்கள்



பேச்சு, உண்மையாக, எளிமையாக இருப்பது கடினம்.அதே நேரம் புதுமையாகவும், கேட்போரை கவரும் விதமாகவும், பொருள் நிறைந்ததாகவும் இருப்பதும் கடினமே

சிறப்பாக, இனிமையாக நிகழும் சொற்பொழிவு பல நன்மைகளை விளைவிக்கும்.ஆனால் சரியாக அமையாத கடுமையானப் பேச்சு பெரிய தொந்தரவுகளைக் கொடுக்கும்

வில்லம்புப்பட்ட புண் ஆறிவிடும்.கோடாரியால் வெட்டப்பட்ட காட்டிலுள்ள மரங்கள் மீண்டும் துளிர்க்கும்.ஆனால், புண் படும் படி பேசும் காயம் ஆறவே ஆறாது.ஆறினாலும் வடு இருக்கும்

காது வடிவிலான அம்பு,குழல் வழியே வீசப்படும் அம்பு, இரும்பு அம்பு ஆகியவை  உடலில் பாய்ந்து விட்டாலும் அவற்றை அவ்விடத்திலிருந்து எடுத்துவிடலாம்.ஆனால். கடுஞ்சொல் என்னும் அம்பு தைத்துவிட்டால் அதை எடுப்பது முடியாது.அது இதயத்தில் ஆழமாகப் பதிந்து துன்புறுத்திக் கொண்டே இருக்கும்

ஒருவர் வாயிலிருந்து புறப்படும் சொல் அம்புகள், மற்றவரைத் தாக்கி அவர்களை இரவும், பகலும் வருந்தச் செய்யும்.ஏன், சில வேளைகளில் உயிரையேப் பறிக்கும் அளவிற்கு ஆபத்து நிறைந்தவை.ஆகவே, ஒரு அறிவாளன் அத்தகைய அம்புப் போன்ற சொற்களை பிறர் மீது மறந்தும் கூறாது த்ன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இனி வள்ளுவர்..

யாகாவா ராயினும் நாக்காக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

ஒருவர் எதைக் காத்திட முடியாவிடினும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும்.இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்திற்குக் காரணம் ஆகிவிடும்

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

நெருப்பு சுட்ட புண் கூட ஆறிவிடும்.ஆனால், வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்களால் விளைந்த துன்பம் வடுவாய் இருந்து ஆறவே ஆறாது

No comments:

Post a Comment