Wednesday, December 30, 2015

34-நட்பு




யாருடைய கோபம் நம்மை அச்சப்படுத்துகிறதோ...அவர் நண்பர் அல்ல.அச்சத்தாலோ அல்லது தப்பாக நினைக்கக்கூடாது என்றோ யாருக்கு நாம் பணிவிடை செய்ய நேரிடுகிறதோ..அவர் நம் நண்பர் அல்ல.தந்தையிடம் பேசுவது போல நாம் யாரை நம்பிக்கையுடன் அணுகி பிரச்னைகளுக்கு ஆறுதல் பெறுகிறோமோ அவரே நம் நண்பர் ஆவார்.மற்றவர்கள் அவ்வப்போது தலைகாட்டுபவர்கள் ஆவார்கள்.அவ்வளவே!

நமக்கு உறவாக இல்லாவிடினும்..நட்போடு பழகினால் அவர் நமக்கு உறவுபோலத்தான்.அவரே நம் நண்பர்.அவரே நமக்கு உதவக் கூடியவர்.அவரே பிரச்னைகளின் போது நமக்கு அடைக்கலமும், ஆறுதலும் தருபவராக இருப்பார்

சஞ்சலமான மனதினனுக்கும், விவேகமும் அனுபவமும் உள்ள பெரியோர்களுக்கு பணிவிடை செய்யாதவனுக்கும், பதற்றப்பட வேண்டியவனுக்கும் அல்லது ஏமாற்றுபவனுக்கும் ஒரு போதும் நிரந்தர நண்பர்கள் இருக்க மாட்டார்கள்

ஏரி வறண்டு போனால் அன்னப்பறவைகள் வெளியேறி விடுவது போல..ஒருவன் சஞ்சலமான மனதினனாகவும், சுயக்கட்டுப்பாடு அற்றவனாகவும், புலன் ஆசைகளுக்கு வசப்பட்டவனாகவும் இருந்தால் அவனுடைய செல்வமும், வசதிகளும் அவனை விட்டு நீங்கி விடும்

கொடியவர்கள் திடீரென சீறி விழுவார்கள்.அதுபோல திடீரென காரணமில்லாமலேயே மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.அவர்கள் குணம் ஆகாயத்தின் தோற்றம் போல கணம் தோறும் மாறியபடியே இருக்கும் (வானம் மேகங்களால் திடீரென இருளும்..பின் மேகங்கள் விலக திடீரென வெளிச்சமாகும்)

சிலர் தங்கள் நண்பர்களால் நன்கு வரவேற்கப்பட்டு, உபசரிக்கப்பட்டு நன்மைகள் பல பெற்றாலும், நன்றியுணர்வு அற்றவர்களாக இருப்பர்.அத்தகையோர் இறந்த பின்..அவர்களது உடலை நரி, கழுகு போன்றவை கூடத் தொடாது

ஒருவன் பணம் படைத்தவனாக இருந்தாலும் சரி,ஏழையாக இருந்தாலும் சரி உதவி தேவைப்படும் போது நண்பர்களை அணுக வேண்டும்.அப்படி ஒருபோதும் உதவி கோராவிடின் நம் நண்பர்கள் எனப்படுபவர்கள் உண்மையானவர்களா ,இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடியாது

கவலையால் அழகு குலையும்.உடல் வலிமை குறையும், அன்பு மழுங்கும். கவலை காரணமாக மனிதன் பல நோய்களுக்கு ஆளாகிறான்

கவலைப்படுவதால் மட்டும் நாம் விரும்பும் எதையும் பெற முடியாது.மனதில் துன்பம் பரவி உடலும் கஷ்டத்திற்குள்ளாகிறது.இது கண்டு நம் எதிரிகள் மகிழ்வர்.எனவே கவலையால் மனம் தளரக்கூடாது

மனிதன் இறக்கிறான்.மீண்டும் பிறக்கிறான்..ஏழையாகிறான்.மீண்டும் செல்வச் சிறப்பு பெறுகிறான்.பிச்சை எடுக்கிறான்..பின்னர் வாரி வழங்குகிறான்.இன்னொருவரின் மரணத்திற்காக சோகத்தை வெளிப்படுத்துகிறான்.வேறொரு சமயம் அவன் மரணத்திற்காக மற்றவர்கள் விசனப்படுகின்றனர்

இன்பம்-துன்பம், தோற்றம்- அழிவு, வளமை- வறுமை, லாபம்- நஷ்டம், சாவு- பிறப்பு, என்ற இரட்டை நிலைகள் எல்லோருக்கம் மாறி மாறி, மீண்டும் மீண்டும் ஏற்படுகின்றன.எனவே, நாம் நமது மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு, ஒரு சமயம் கூத்தாடாமலும் மறுசமயம் புலம்பாமலும் அமைதியாகவே இருக்க வேண்டும்

கண், காது, மூக்கு,நாக்கு,சருமம். மனம் என ஆறும் எப்போதும் சஞ்சலத்துடனே உள்ளன. பானையின் எந்தப் பகுதி ஓட்டையானாலும் ஊற்றப்படும் தண்ணீர் வெளியேறுவது போல நம்புலன்கள் ஏதேனும் ஒன்று தவறாக இயங்கினாலும் அதன் வழியே நம் அறிவு வெளியேறிவிடும்

என்று விதுரர் கூறினார்.

திருதராஷ்டிரர் சோகமாக விதுரரிடம்,"துரியோதனனைச் செல்லமாக வளர்த்துவிட்டேன்.அது தவறு.உடலுக்குள் நெருப்பை மறைத்துவைக்க முயன்றது போல ஆகிவிட்டது.அந்த நெருப்பு உடலை எரித்து..அதனுடன் தொடர்பு கொண்டுள்ள மற்றவற்றையும் அழித்துவிடும்.துரியோதனன் தானும் அழிவதுடன், என் மற்ற மகன் களையும்  கூட அழித்துவிடுவான் போல இருக்கிறதே! இச் சூழ்நிலைத் தொடர்ந்து அச்சுறுத்துவதாகவே உள்ளது.இதனால் மனம் குழம்பிக் கிடக்கிறது.விதுரரே! எல்லா கவலைகளில் இருந்து  விடுபட வழி என்ன?" என்றார்

விதுரர் கூறலானார், "தூய மன்னரே! அறநெறி அறிந்திருத்தல், கடமையைத் தவம் போலச் செய்து வருதல், புலன்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல்,பிறர் செல்வத்திற்கு ஆசைப்பாடாதிருத்தல் ஆகியவை மூலம் மனிதர்கள் மன அமைதியைப் பெற முடியும்

அறிவின் மூலம் அச்சத்தை விரட்டலாம்.கடமையைத் தவம் போலச் செய்தால் பெரிய சாதனைகள் புரியலாம்.குருவைச் சார்ந்திருந்து சேவை புரிந்தால் ஆத்ம ஞானம் பெறலாம்.புலன்களை வசப்படுத்தினால் அமைதியாக வாழலாம்

முக்தி பெற விரும்புபவர்கள், வாழ்க்கையில் விருப்பு, வெறுப்பு அற்றவர்களாகவும், பற்றுகளை குறைத்துக் கொண்டும் வாழ வேண்டும்.தான தருமம் செய்வதால் விளையக்கூடிய நல்ல பலன் களுக்காக ஏங்கக் கூடாது.வேதங்கள் கூறும் சடங்குகளைச் செய்வதால் கிடைக்கக் கூடிய நல்ல விளைவுகளுக்காகவும் ஆசைப்படக் கூடாது

சரியான படிப்பைத் தேர்ந்தெடுத்து முறையாக பயில்வனும்,நியாயமான காரணத்திற்காக வீரமாக போராடுபவனும், எப்போதும் நற்செயல்களையே செய்பவனும் கடமைகளைத் தவம் போல உறுதியாகச் செய்பவனும் தங்கள் முயற்சியின் முடிவில் வளமாக வாழ்வார்கள்

இனி வள்ளுவர்

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து

உறுப்புகளைஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல ஐம் புலன் களையும் அடக்கியாளும் உறுதி காலமெல்லாம் வாழ்க்கைக்கு அரணாக அமையும்


Tuesday, December 29, 2015

33-உயர்க்குலப் பண்புகள்



விதுரரைப் பார்த்து திருதராஷ்டிரர் கேட்டார்,,,

:விதுரரே! அறநெறியைப் பின்பற்றுபவர்களும், நேர்மையான முறையில் சுகம் அனுபவிப்பவர்களும் ,அறிஞர்களான தேவர்களும் உயர்குலத்தினரை விரும்புவதாக அறிகிறேன்.உயர்க்குலக் குடும்பங்கள் என்பதற்கான தகுதிகள் என்ன்?

விதுரர் கூறலானார்.....

'தவம் செய்வது போன்ற புனித வாழ்க்கை,புலன்களை அடக்குதல்,ஆன்மீக அறிவு,சகிப்புத்தன்மை ,வேள்விகள் செய்தல், சாதிப்பிரிவிற்குள் திருமணம்,மனநிறைவு,அன்னதானம் செய்வதில் விருப்பம் ஆகிய எட்டும் உயர்க்குலக் குடும்பங்களில் காணப்படும் நற்பண்புகள் ஆகும்.

உயர்குலக்குடும்பத்தில் பிறந்தவர்கள்...ஒழுக்கத்திலிருந்து தடம் புரள மாட்டார்கள்.தங்களது முன்னோர், மூத்தவர்கள் மனம் புண்படும்படி பேச மாட்டார்கள்.நற்பண்புகளைபின்பற்றுவார்கள்.தங்கள் குடும்பம் புகழ்ப் பெற விரும்புவார்கள்.எல்லாவித பொய்களையும் தவிர்ப்பார்கள்

உயர்குலக் குடும்பத்தினர், தங்களுக்குரிய வேள்விகளை செய்யாவிடினும்,தங்கள் தகுதிக்குத் தாழ்வான குடும்பத்தில் திருமண உறவு ஏற்படுத்திக் கொண்டாலும், வேதங்களைப் புறக்கணித்தாலும், நற்பண்புகளை மீறி நடந்து கொண்டாலும் அக்குடும்பத்தின் பெயர் களங்கப்படும்

உயர்குலக் குடும்பத்தினர் கோயில்களிலுள்ள கடவுள் சம்பந்தப்பட்ட பொருட்களை சேதப்படுத்தினாலும்,அந்தணர்களின் சொத்தை பிடுங்கிக் கொண்டாலும்,அந்தணர்களை அவமதித்தாலும் அக்குடும்பப் பெயர் களங்கப்படும்.(அந்தணர்களை உயர்க்குலம் என இங்கு குறிப்பிடாததை கவனித்தில் கொள்ள வேண்டும்)

உயர் குலக் குடும்பத்தினர் அந்தணர்களை அவமதித்தாலும், ஏசினாலும்,பிறர் தங்களிடம் நம்பிக்கையுடன் ஒப்படைத்த பொருட்களைத் தாங்களே கவர்ந்து கொண்டாலும் அக்குடும்பத்தின் பெயர் களங்கப்படும்

சில குடும்பங்களில் கால்நடைச் செல்வம்,குழந்தைகள். சொத்து வசதிகள்,நிறைந்து இருக்கலாம்.ஆனாலும் அக்குடும்பங்களில் உறுப்பினர்கள் நன்னடத்தையும்,நற்பழக்கங்களும் கொண்டிராவிட்டால் அவற்றை உயர்குலக் குடும்பங்களாக எண்ண முடியாது.

சில குடும்பங்களில் செல்வ வசதி குறைவாக இருக்கலாம்.ஆனால் அதே நேரம், குடும்ப உறுப்பினர்கள் நல்ல நடத்தையும், நல்ல பழக்கத்தையும் உடையவர்களாக இருக்கலாம்.அப்படியானால் அந்தக் குடும்பங்களும் நல்ல குடும்பங்களாகவே கருதப்பட்டுப் பெரும் புகழ் பெறும்

எத்தகைய சூழ்நிலையிலும் நன்னடத்தையும்,நல்ல பழக்கங்களையும் கைவிடாமல் பின்பற்றி வர வேண்டும்.பணம் வரும்..போகும்..பணவசதி இல்லாததால் ஒருவரது வாழ்க்கை வீணாகிவிட்டது எனக் கூற முடியாது.ஆனால் ஒழுக்கமும், நற்பழக்கங்களும் அற்றவனது வாழ்க்கை நிரந்தரமாக வீணாகி விட்டதென்றே கூற வேண்டும்.

சில குடும்பங்களில் ஏராளமான பசுக்கள்,பிற வளர்ப்பு மிருகங்கள்,குதிரைகள் ,ஏராளமான தானியங்கள் ஆகியவை இருக்கக்கூடும்.ஆனால்,குடும்ப உறுப்பினர்கள் ஒழுக்கமும், நற்பண்புகளும் கொண்டிருக்காவிட்டால் அக்குடும்பங்கள் முன்னேறவோ, புகழ் பெறவோ முடியாது

எனவே நம் குடும்பத்தைச் சார்ந்தவர் எவனும் பிறரது பகைமையைத் தூண்டாமல் இருக்க வேண்டும்.நம் கீழுள்ள அரசர்கள். எதிரிகளிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.நம்மவர்கள் பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது.நண்பர்களுக்குத் துரோகம் செய்யக் கூடாது.பிறரை ஏமாற்றவோ, பொய் சொல்லவோ கூடாது.வீட்டில் தயாராகும் உணவை மறைந்த முன்னோர்களுக்கும், தெய்வங்களுக்கும் படைத்து, வந்துள்ள விருந்தாளிகளுக்கும் பரிமாறிய பின்னரே உண்ண வேண்டும்

(வள்ளுவர்-
விருந்து புறத்ததாய் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல)

நம் குலத்தைச் சேர்ந்தவர் ,அந்தணர்களுக்குத் தீங்கு விளைவித்தால் அல்லது அவர்களை வெறுத்தால் அல்லது அறுவடைக்குள்ள பயிரை நாசம் செய்தால் அத்தகையவர் நம்முடன் பழக,உறவாட நாம் அனுமதிக்கக் கூடாது

நல்ல மனிதர்களின் குடும்பங்களில் தர்ப்பைப் புல்லால் ஆன ஆசனமும் அல்லது பாயும், விருந்தினர் அமர மேடை போன்ற அமைப்பும், கை கால் கழுவ தண்ணீரும் உண்மையான இனிமையான  பேச்சும் ஆகியவற்றை கட்டாயம் எதிர்பார்க்கலாம்

பாராட்டுக்குரிய நற்செயல்கள் புரிவதில் ஆர்வமுள்ளவர்கள் மேற்கூறியவற்றுடன் தயாராய் இருப்பார்கள்.வீட்டிற்கு வரும் விருந்தினரை வரவேற்று கௌரவிக்கும் போது மேற்கண்டவற்றை அவர்களுக்கு மரியாதையுடன் அளிப்பார்கள்

வண்டியும், தேரும் செய்ய பயன்படும் மரம் பார்க்க சிறியதாய் இருக்கும்.ஆனால், மிக உறுதியானது.அதன் சிறு கிளைகளும் பெரும் பாரத்தைத் தாங்கும்.ஆனால், வேறு சில மரங்கள் பெரியதாய் இருந்தாலும் சுமையைத் தாங்காது.அதுபோலவே உயர்குலக் குடும்பங்களில் பிறந்தவர் பெரிய பொறுப்புகளை சுமக்ககூடியவர்களாக இருப்பார்கள்.சாதாரணமான மக்களால் பெரிய பொறுப்புகளை நிர்வகிக்க இயலாது


வள்ளுவன்-
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது

சொல்லாற்றல் படைத்தவனாகவும்,சோர்வு அறியாதவனாகவும்,அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது


Sunday, December 27, 2015

32-பேச்சின் விளைவும்...மனிதரின் மூவகையும்



விதுரர் மேலும் கூறலானார்...

சூழ்நிலையை விளக்க ஒரு பழங்கதையைக் கூறுகிறேன்.இது ஒரு உரையாடல்.தத்தாத்திரேய முனிவருக்கும், சாத்தியர்கள் என்ற தேவ வையினருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் ஆகும் இது.

முன்னொருகாலத்தில் ஆத்திரேயர் என்ற மாமுனிவர் வாழ்ந்தார்.விவேகமுள்ளவர்.அவர் கடுமையான விரதங்களைக் கடைபிடித்தார்.அவர் பரமஹம்ச முறையிலான துறவி உடை அணிந்து செல்வார்.அவரிடம் சாத்தியர்கள் ஒரு விஷயம் கேட்டனர்

"மாமுனிவரே! சாத்தியர்கள் எனும் நாங்கள் தேவவகையைச் சேர்ந்தவர்கள்.தங்களை தரிசிப்பதில் மகிழ்ச்சி.ஆனால், தாங்கள் யாரென எங்களுக்குத் தெரியவில்லை.நீங்கள் வேதங்களை பயின்றவர்..பேரறிஞர் என்று நினைக்கிறோம்.நீங்கள் எங்களுக்கு ஞானத்தைப் போதித்தால் பேருதவியாய் இருக்கும்"

பரமஹம்சர் சொன்னார்.." தேவ புருஷர்களே! முதலில் நான் நன் குக்  கற்ற விஷயம் ஒன்றைக் கூறுகிறேன்.எந்த சூழ்நிலையிலும், மன உறுதி,மன அமைதி அல்லது மனக்கட்டுப்பாடு, வாய்மை,நற்பண்புகள் ஆகியவற்றைக் கைவிடக்கூடாது.இதயத்தை இறுக்கும் காமம், சினம் போன்ற முடிச்சுகளை நெகிழ்த்தி விட வேண்டும்.தன்னைப் பொறுத்தவரை இன்ப. துன்பங்கள் ஆகியவற்றை சமமாகக் கருத வேண்டும்.

நம்மை ஒருவன் இகழ்ந்து பேசினால் பதிலுக்கு நாமும் அவனைத் தூற்றக்கூடாது.இகழப்பட்டவர் பொறுமையாக இருந்தால் அவர் படும் வேதனை தீயைப்போல இகழ்ந்தவனை பற்றிக்கொள்ளும்.அதுமட்டுமல்ல, இகழ்ந்தவன் ஏதேனும் புண்ணியம் செய்திருந்தால் அது இகழப்பட்டவனைப் போய்ச் சேர்ந்துவிடும்

நாம் யாரையும் ஏசக்கூடாது.பிறரை அவமதிக்கவும் கூடாது.நீசர்களை சார்ந்து வாழக்கூடாது.நன்பர்களுக்குத் துரோகம் செய்யக் கூடாது.திமிர் பிடித்து அலையக் கூடாது.கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடக்கூடாது. கடுமையான புண்படுத்தும் சொற்களைப் பேசக்கூடாது.

கடுஞ்சொல் கூறுவதால் உடலுக்குக் கெடுதல் விளைகிறது.கடுஞ்சொற்கள் உடலில் உயிர்நிலைகளாக உள்ள உறுப்புகளை அரித்துவிடும்.எலும்புகள், இதயம், நுரையீரல் ஆகிய பகுதிகளையும் பாதித்துவிடும்.ஆகவே  அறநெறியைப் பின்பற்ற விரும்பிகிறவன்  பிறரைக் கீறுவது போன்ற கடுஞ்சொற்களை எப்போதும் கூறாமல் இருக்க வேண்டும்.

எவன் எரிந்து விழும் குணம் கொண்டுள்ளானோ, கல் போன்ற கடுமையான சுபாவம் கொண்டுள்ளானோ, சொல்லம்புகளால் பிறரது இதயத்தைத் துளைக்கின்றானோ அத்தகையவன் அதிர்ஷ்டம் கெட்டவனாக, மனிதர்களுள் கீழ்த்தரமானவனாக இருப்பான்.அவனது வாயில் எமன் குடிகொண்டிருப்பான்

ஒரு தீயவன், கூரானதும் நெருப்பு அல்லது சூடான சொல்லம்புகளால் ஒரு அறிஞனைத் தூற்றினால், அந்த அறிஞன் வேதனையடைந்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.இப்படிப் பொறுமைக் காத்தால் திட்டியவன் செய்திருந்த புண்ணியங்களின் நற்பலனெல்லாம் அறிஞனிடம் வந்துவிடும்  என்பதை அறிஞன் உணர்ந்திருக்க வேண்டும்

நாம் துணியை எந்த நிறச் சாயத்தில் நனைக்கிறோமோ, அந்த நிறத்தில் துணி மாறும். அதுபோல நல்லவருடனோ, தீயவருடனோ,துறவியிடனோ, கள்வனுடனோ இப்படி யாருடன் பழகுகிறோமோ அவரது பாதிப்பால் அதற்குரிய குணமாறுதலைப் பெற்றுவிடுவோம்.

தன்னை பிறர் ஏசினாலும் எவன் ஒருவன் பிறரை இகழ்வதில்லையோ, தன் சார்பில் யாரும் பிறரை இகழ அனுமதிப்பதும் இல்லையோ அத்தகைய பொறுமைசாலி தங்களுடன் வசிக்க வேண்டும் என தெய்வங்களும் விரும்பும்

தன்னை ஒருவன் தாக்கினாலும், எவன் அவனைத் திருப்பித் தாக்குவதில்லையோ....தன் சார்பில் யாரும் அவரைத் திருப்பித் தாக்க அனுமதிப்பதும் இல்லையோ, தன்னைக் காயப்படுத்தியவனுக்குத் துளிக்கூட கெடுதல் செய்ய விரும்புவதில்லையோ அத்தகைய பொறுமைசாலியை தங்களுடன் வசிக்க வேண்டும் என தெய்வங்களும் விரும்புவர்

பேசுவதைவிட மௌனமாக இருப்பது சிறந்தது.பேச வேண்டிய அவசியம் ஏற்படும் போது உண்மையே பேச வேண்டும்.அவ்வாறு நாம் பேசும் உண்மைபிறருக்கு நன்மை செய்வதாகவும் அமைய வேண்டும்.நாம் நன்மையளிக்கும் வகையில் பேசுவது அறநெறிக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும்

ஒரு மனிதன் யாருடனெல்லாம் நெருங்கிப் பழகிகிறானோ அவர்களைப் போலவே ஆகிறான்.அல்லது யாரைச் சார்ந்து பணி புரிகிறானோ அவர்களைப் போலவே ஆகிறான் அல்லது யாரைப்போல ஆகவேண்டும் என மனதில் நினைக்கிறானோ அவரைப்போல ஓரளவாகிறான்

ஒருவன் எதை எதைத் தவிர்த்து விடுகிறானோ அதனதன் பின் விளைவுகளிலிருந்தும் தப்பித்து விடுகிறான்.எல்லாவற்றையும் தவிர்ப்பவன் வாழ்வில் சிறிதளவு கூட துன்பம் ஏற்படுவதில்லை

மேற்கண்டவாறு பற்றுகளை விட்டவனை யாரும் வெல்ல முடியாது.அவனும் யாரையும் வெல்ல விரும்புவதில்லை.அவன் யாருக்கும் எதிரியில்லை.அவன் யாரையும் பழி வாங்குவதில்லை.பிறர் புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் பாதிற்குள்ளாகாது அவன் அமைதியாக இருப்பான்.அவன் ஒன்றை இன்பம் என எண்ணிக் குதிப்பதில்லை.மற்றதைத் துன்பம் என எண்ணி துவண்டும்போவதில்லை

மனிதர்களில் முதல்தர மனிதன் உலகில் அனைவரும்,அனைத்தும் நலமாக வாழ வேண்டுமென ஆசைப்படுவான்.அத்தகைய நிலைக்கு எதிரான எதையும் என்றும் அவன் ஆதரிக்க மாட்டான்.அவன் உண்மையே பேசுவான்.கனிவுடன் பழகுவான்.உடல்,மன உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பான்

நடுத்தர மனிதன்   வாக்குறுதிகள் கொடுப்பான்.அவற்றை நிறைவேற்றியும் தருவான்.எதையும் கொடுப்பதாக வாக்களித்தால் அவ்வாறே கொடுத்து விடுவான்.பிறரிடம் குற்றம் கண்டுபித்தவாரே இருப்பான்.

கீழ்த்தர மனிதர்கள் யாருக்கும் அடங்க மாட்டார்கள்.எப்போதும் ஆவேசமாக இருப்பார்கள்.பாவச்செயல்களில் ஈடுபடுவார்கள்.பயங்கரமாய்க் கோபப்படுவார்கள்.நன்றி கெட்டவர்களாக இருப்பார்கள்.அவர்கள் யாருக்கும் நண்பர்கள் அல்லர்.சில சமயங்களில் நல்லவர்களைப் போலப்பழகினாலும் கொடிய மனம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

கீழ்த்தரமானவர், பெரியவர்கள் கூறும்  நல்ல ஆலோசனைகளின்படி நடந்து கொள்ள மாட்டார்கள்.அந்த ஆலோசனைகளால் நன்மை விளையும் என நம்பமாட்டார்கள்.தன்னையே சந்தேகப்படுபவர்களாக இருப்பார்கள்.தன் நண்பர்களையும் காட்டிக் கொடுத்து விடுவார்கள்

வாழ்க்கையில் வளம் பெற்று முன்னேற விரும்புபவன் மேற்கண்ட மூவகை மனிதரில் உத்தமமான மனிதர்களையே அணுக வேண்டும்.தவிர்க்க இயலா நிலையில் நடுத்தரமானவர்களை அணுகலாம்.ஆனால் ஒருபோதும் கீழ்த்தரமக்களை சார்ந்திருக்கக் கூடாது

ஒருவன் தன் வலிமையைத் தவறாகப் பயன்படுத்தியோ,விடாமுயற்சியுடன் உழைத்தோ, அறிவையும், ஆண்மையையும்கொண்டோ செல்வம் சம்பாதிக்கலாம்.ஆனால் இவற்றால் மட்டுமே அவன் நற்பெயரோ, உயர்குடியில் பிறந்தோரின் நற்பண்பையையோ அடையமுடியாது.


Friday, December 25, 2015

31-பாவ புண்ணியம்



வாய்மை,பணிவு,ஆன்மீகப் பயிற்சி,நூல் அறிவு,உயர் குடிப் பிறப்பு,ஒழுக்கம்,மனவலிமை,நல் வழியில் சம்பாதித்த செல்வம்,வீரம், பல விஷயங்களை இனிமையாய்ப் பேசும் திறன் ஆகிய பத்தும் சுவர்க்கத்திற்கு ஒருவரை அழைத்துச் செல்லும் வழியைக் காட்டும்

ஒருவன் பாவச்செயலைப் புரிந்தால் அதன் விளைவாக பாவி என்று சொல்லப்பட்டு இகழப்படுவான்.அதனால் தண்டனையும் பெறுவான்.அதுவே, ஒருவன் நற்செயல் புரிந்தால் அவன் புண்ணியவான் எனப் புகழ்ப் பெறுவான்.அச்செயலால் பிற்காலத்தில் நல்ல பலனையும் பெறுவான்

ஆகவே, நாம் பாவச்செயல் புரிய மாட்டோம் என உறுதியுடன் இருக்க வேண்டும்.மீண்டும் மீண்டும் பாவச் செயல் புரிபவனின் அறிவு மழுங்கிவிடும் .இவ்வாறு அறிவை இழப்பவன் பாவச் செயல்களையேச் செய்வான்.மாறாக நல்ல செயல்களைச் செய்து வந்தால் நம் அறிவு மேலும் வளரும்

நல்லறிவு கொண்டவன் புண்ணியச் செயல்களில் ஈடுபடுவான்.புகழ் பெறுவான்.இறுதியில் அவன் சுவர்க்கத்தைச் சென்றடைவான்.ஆகவே ஒருவன் புண்ணியச் செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்

பொறாமை கொள்பவன், பாம்பு போல மனதில் விஷம் நிறைந்தவன்.கொடூர இதயம் படைத்தவன்.கடுஞ்சொல் கூறுவோன்.வேண்டுமென்றே பிறரிடம் விரோதம் கொள்வோன்.மோசடி செய்வோன்.ஆகியோர் பாவச் செயல்கள் புரிவோர் ஆவர்.அவர்கள் விரைவில் பெருந்துன்பத்திற்கு ஆளாவர்

ஒருவன் பிறரிடம் பொறாமை கொள்ளாதவனாகவும், நல்லதை பிரித்தறியும் விவேகம் உள்ளவனாகவும், பின் நல்லதை மட்டுமே செய்பவனாகவும் இருந்துவிட்டால் அவனுக்கு துன்பம் நேராது.மேலும் அவன் எளிதில் புகழப்படுவான்.

அறிவுள்ள மனிதன் தயங்காமல் மற்ற அறிஞர்களின் அறிவையும் திரட்டிப் பெற்று மேலும் அறிஞன் ஆவான்.அவன் நற்பண்புகளை கடைப்பிடிப்பான்.நேர்மையான ,முறையில் வாழ்க்கை வசதிகளைச் சேகரித்துக் கொள்வான்.இதனால் மேன்மேலும் மகிழ்ச்சி அடைபவனாக முன்னேறுவான்

நாம் இரவில் மகிழ்ச்சியாகத் தூங்க உதவும் வகையில் பகலில் செய்யும் வேலையின் தன்மையின் அளவும் அமைந்திருக்க வேண்டும்.மழைக்காலமான நான்கு மாதங்களில் நாம் வாழ உதவியாக எட்டு மாதங்களில் செய்யும் வேலையின் தன்மையும், அளவும் அமைய வேண்டும்

நாம் முதுமையில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கேற்றபடி வாழ்க்கையின் தொடக்கத்திலேயே செய்கின்ற வேலையின் தன்மையும், அளவும் அமைந்திருக்க வேண்டும்.இவ்வுலகை விட்டு நாம் சென்றாலும் சுவர்க்கத்தில் மகிழ்வோடு வாழ உதவும் வகையில் வாழ்க்கை முழுதும் நாம் செய்கின்ற வேலையின் தன்மை அமைய வேண்டும்

அறிஞர்கள் அவசரப்பட்டு எதையும், யாரையும் புகழ்ந்துவிட மாட்டார்கள்.அவர்கள் எளிதில் ஜீரணமானபின்பே குறிப்பிட்ட உணவையும்,நடுத்தர வயதைக் கடந்துவிட்ட பிறகே மனைவியையும், போரில் வெற்றி பெற்ற பிறகே வீரனையும்,தன்னை அறிந்து ஆத்ம தரிசனம் பெற்ற பிறகே துறவியையும் புகழ்வார்கள்

ஒருவன் தவறான வழியில் செல்வம் சம்பாதித்து பிறகு அதைக்கொண்டு அத்தவறை மூடி மறைக்க முயற்சித்தால் அது பலனளிக்காது.அது மட்டுமின்றி வேறு பல தவறுகளும் ஏற்பட்டுவிடும்

ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டவர்களை ஆன்மீகக்குரு அடக்கியாள்கிறார்.கொடியவர்களை அரசர் தண்டனைகள் மூலம் அடக்கிகிறார்.விவஸ்வத் எனப்படும் சுரியனின் மகனாகிய வைவஸ்தர் என்னும் யமன் ரகசியமாகப் பாவம் செய்தவர்களையும் கண்டுபிடித்து அடக்கிவிடுகிறான்

ரிஷிமூலம், நதிமூலம் ,உத்தமர்களின் குலத்தின் மூலம் ஆகியவற்றைத் தேடி ஆராய்ந்துக் கொண்டிருக்கக் கூடாது.பெண்கள் கெட்டுப்போனால் அவர்கள் மேற்கொள்கின்ற தந்திரமான வழிகளில் மூலத்தையும் கண்டறிய இயலாது

எந்தச் சத்திரியர் அந்தணர்களை  போற்றுகிறாரோ , நிறைய தான தருமம் செய்கிறாரோ,உறவினர், சுற்றத்தாருடன் மென்மையாக, நேர்மையாக பழகுகிறாரோ, ஒழுக்கமான நடத்தை கொண்டுள்ளாரோ அவர் நெடுங்காலம் உலகை ஆள்வார்

வீரம் மிகுந்தவர்கள்,அறிவு மிக்கவர்கள்,மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற சேவை உணர்வு மிகுந்தவர்கள் ஆகிய மூன்று வகையினரும் தங்க மலர்களால் ஆன உலகத்தைப் பரிசாகப் பெறுவர் (செல்வச் செழிப்புடன்விளங்குவர்)

மூளையின் உதவியுடன் செயல்படும் செயல்கள் உயர்தரவையாக இருக்கும். கைகளில் உதவியுடன் செயல்படுபவை நடுத்தரமானவையாகும்.தொடைகளால் செயல்படுபவை மோசமானதாக இருக்கும்.தலையால் செய்யப்படும் (பாரம் தூக்குதல் போன்றவை) தாழ்ந்ததாக இருக்கும்

திருதராஷ்டிரரே! இந்த நாட்டில் ஆட்சியை துரியோதனன்,சகுனி, துச்சாதனன், கர்ணன் ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டீர்.இப்படிப்பட்ட நிலையில் நாடு வளம் பெற்று விளங்கும் என எப்படிச் சொல்வது?

இதற்கு மாறாக பாண்டவர்கள் ஐவரும் நற்குணங்கள் நீரைந்து விளங்குகிறார்கள்.உங்களைத் தங்களதுத் தந்தையாகவே எண்ணி மதிக்கின்றனர்.ஆகவே நீங்களும் அவர்களை உங்கள் புதல்வர்களாக எண்ணி அந்த முறையில் நடத்துங்கள்

என்று விதுரர் கூறி முடித்தார்.

இனி வள்ளுவர் என்ன கூறியுள்ளார் எனப் பார்ப்போம்


பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை

பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை

பிறர் அழத்திரட்டிய செல்வம் அழ அழப் போய் விடும்.நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்


Wednesday, December 23, 2015

30-ஏற்றம் பெற எட்டு



விவேகம், உயர்குடிப் பிறப்பு,சுயக்கட்டுப்பாடு,புனித நூல்களில் பயிற்சி,வீரம், பேச்சில் அளவாக இருத்தல், சக்திக்கு உட்பட்டு தான தருமம் செய்தல்,நன்றி மறவாமை ஆகிய எட்டுக் குணங்களும் ஒருவனைப் புகழ்ப் பெறச் செய்யும்.

இந்த எட்டுக் குணங்களையும் ஒருவன் பெற்றிருந்தால், அவனுக்கு ஆட்சியாளர் மூலம் கௌரவம் கிடைக்கும்.அந்தக் கௌரவம் மேற்கண்ட எட்டையும் விடச் சிறப்பாகும்.

இப்பொழுது  சொல்லும் எட்டுக் குணங்களைக் கடைப்பிடித்தால் அவை நம்மை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்.அவற்றில் நான் கு  நன்மக்களுக்கு இயல்பாகவே அமைவது.மீதியை அவர்கள் முயற்சித்து பெறுகின்றனர்.

வேள்வி செய்தல்,தரும சிந்தனை,ஆன்மீகக் கல்வியில் ஆர்வம்,தருமம் செய்வதில் ஈடுபாடு ஆகிய நான்கும் நல்லவர்களிடம் இயல்பாகவே உள்ளன.சுயக்கட்டுப்பாடு,வாய்மை,நேர்மை, அகிம்சை ஆகிய நான்கு குணங்களையும் நல்லவர்கள் தம்முடையதாக்கிக் கொள்கின்றனர்.

வேள்வி, தரும சிந்தனை,ஆன்மீகக் கல்வியில் ஆர்வம், தவம், வாய்மை, மன்னிக்கும் பண்பு, கருணை, பிறர் பொருளை விரும்பாமை ஆகிய எட்டும் நாம் பின்பற்ற வேண்டிய நற்குணப் பாதைகள் என முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிறர் பாராட்டைப் பெற சிலர் மேற்சொன்ன எட்டில் வேள்வி,ஆன்மீக நாட்டம்,தான தருமம் தவம் ஆகிய நான்கையும் மேற்கொண்டிருக்கலாம்.ஆனால் வாய்மை, பிழையைப் பொறுத்தல்,கருணை, பிறர் பொருளுக்கு ஆசைப்படாமை ஆகிய நான்கும் உண்மையாகவே..இயல்பாகவே சான்றோர்களீடம் காணப்படும்

முதியோர் கலந்து கொள்ளாத ஆலோசனை நிகழ்ச்சியைக் கூட்டமென்றே கூறமுடியாது.நற்பண்புகளை எடுத்துரைக்காதவர்களை முதியோர்கள் என கூறமுடியாது.எடுத்துரைக்கப்படும் குணம் உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்காவிட்டால் அது நற்பண்பு ஆகாது.வஞ்சகம் கலந்த ஒன்றை உண்மை எனக் கூறமுடியாது.

இனி வாய்மை, பிறர் பொருள் விரும்பாமை ஆகியபற்றி வள்ளுவர் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம்.....

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்

பிறருக்கு எம்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை

உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கிறவர்களை விட உயர்ந்தவர்கள் ஆவார்கள்


Tuesday, December 15, 2015

29 - பாவச்செயல்கள்



விதுரர் தொடர்ந்தார்...

"திருதராஷ்டிரரே! நாட்டை உங்கள் குடும்பத்தின் வசமே வைத்துக் கொள்ள பொய் பேசுவது சரியல்ல. உண்மையைப் பேசாமல் மறைத்து, உங்களுக்கும், உங்கள் மகன்களாகிய கௌரவர்களுக்கும், அமைச்சர்களுக்கும் அழிவைத் தேடித் தராதீர்கள்.கால்நடைகளை மேய்க்கும் இடையர் அவற்றைச் சரியான வழியில் நடத்த தடியைப் பயன் படுத்துவது போல..மக்களைக் காத்து நல்வழிப்படுத்தக் கடவுள் தடியெடுப்பதில்லை.மக்கள் தங்களைப் பாதுகாத்து முன்னேற அறிவைத் தந்துள்ளார்.நாம் நல்ல், மங்களகர விஷயங்களில் ர்வ்வளவு அதிகமாகவோ, அல்லது குறைவாகவோ ஈடுபடுத்திக் கொள்கிறோமோ அதே விகிதத்தில் நமது விருப்பங்கள் அதிகமாகவோ, குரைவாகவோ நிறைவேறும்.இதில் சந்தேகம் இல்லை.ஒருவன் வேதங்கள் அனைத்தும் கற்றுத் தேர்ந்த பண்டிதனாயிருப்பான்.ஆனால், அதே சமயம் அவன் மோசடி செய்து ஏமாற்றுபவனாக இருக்கலாம்.அவனை வேதங்கள் பாவத்திலிருந்து காப்பாற்றாது.பறவைகள் இறக்கை முளைத்ததும் பழைய கூட்டை மறந்துவிடுவது போல அத்தகைய பாவியை இறுதி காலத்தில் அவனது வேத அறிவு கை விட்டுவிடும்..

குடிப்பழக்கம், சண்டை போடுதல், மனிதர்களுடன் விரோதம், கணவன் மனைவி இடையே கலகம் மூட்டுதல், உறவினர்களைப் பிரித்து பிளவு உண்டாக்குதல், ராஜத்துரோகம், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே தகராறு விளைவித்தல் போன்ற செயல்கள் செய்வதை விட வேண்டும்.

முகம், கை பார்த்து சோதிடம் சொல்லுதல், போலி எடைக்கல் வைத்து ஏமாற்றும் வியாபாரி அல்லது திருடி விற்பவர், மோசடிப் பேர்வழி, மருத்துவர், எதிரி, நண்பர், நடிகர் இவர்கள் ஏழு பேரும் சாட்சியம் சொல்ல தகுதியற்றவர்கள் ஆவார்கள்...பிறர் இல்லத்திற்கு தீ வைப்பவர், பிறரை விஷம் வைத்து கொல்பவர், விலை மாதர்களை ஏற்பாடு செய்யும் தரகர்,சாராய வியாபாரி, கோல் மூட்டுபவர்,ஆயுதங்கள் உற்பத்தி செய்பவர், காட்டிக் கொடுப்பவர், சதி செய்து நண்பருக்கு துன்பம் விளைவிப்பவர், பிறர் மனைவியை நாடுபவர், கருச் சிதைவு செய்து வைப்பவர், குருவின் மனைவியைக் கெடுப்பவர், கள் குடிக்கும் அந்தணர், குரூரமாக பிறரை ஏசுபவர், பழைய விரோதத்தைக் கிளரி விடுபவர், நாத்திகர்கள், வேதங்களை பழிப்பவர்கள், பேராசைப்பட்டு பணம் பிடுங்கும் புரோகிதர், உரிய வயதிற்குள் பூணூல் அணியாதவர், பசுக்களை கொல்பவர்,அடைக்கலம் புகுந்தவரைக் கொபவர்,இவர்கள் எல்லாம் அந்தணர்களை கொலை செய்யும் பாவிகள் ஆவர்.

(இது நடந்த காலகட்டத்தி ஞாபகம் கொள்ள வேண்டும்.அந்தணர் என்போர் சான்றோர் என வள்ளுவர் சொன்னதையும் நினைவில் கொள்ள வேண்டும்)

அந்தணர் என்போர் அறிவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்

அனைத்து உயிர்களிடத்தும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுபவர் ஆவார்

.இரவுநேரத்தில் தீக்குச்ச்யைக் கொளுத்தினால்தான் வெளிச்சம் கிடைக்கும்..பொருள்கள் கண்ணூக்குத் தெரியும்.அதுபோலவே ஒருவன் செய்யும் செயல்கள் மூலமே, அவன் எவ்வளவு உயர்ந்தவன் என அறியலாம்.அவன் நடந்து கொள்ளும் விதத்தால் எவ்வளவு பண்பாளன் எனத் தெரியும்.ஆபத்தான சூழ்நிலையில் ஒரு தலைவனை அடையாளம் காணலாம்.எதிர்ப்பான பொருளாதாரச் சூழ்நிலையில் ஒருவனின் வீரம் தெரியும்.நமக்குத் துன்பம் ஏற்படுகையில்தான் யார் நண்பர், யார் எதிரி எனத் தெரியும்.

முதுமை , நமது அழகையும்,ஆசை பொறுமையையும் சீர்குலைக்கும்.சாவு நம் உயிர் மூச்சை நிறுத்திவிடும்.பொறாமை நன்னெறியில் செல்வதைத் தடுக்கும்.கோபம் செல்வத் திமிரையும், தீயோர் நட்பையும், நமது நன்னடத்தையையும் பாதிக்கும்.காமம் மான உணர்வை மரத்துப் போகச் செய்யும்.கர்வமோ அனைத்தையுமே அழித்துவிடும்.

கோபக்காரனைப் பார்த்து அதிர்ஷ்டம் புன்னகைக்காது.கெட்ட நோக்கம் உள்லவர்களுக்கு நண்பர்கள் உதவ மாட்டார்கள்.குரூரமானவர்களைப் பெண்கள் புறக்கணிப்பர்.மேலோட்டமாக ஈடுபாடு உள்ளவனுக்கு படிப்பு ஏறாது.காமம் மிக்கவன் வெட்கம் கெட்டவனாக இருப்பான். சோம்பேறிக்கு வாழ்க்கை வசதி கிடைக்காது.மன உறுதியுடன் செயலாற்றாதவன் எதையும் சாதிக்க இயலாது.

நல்ல மங்களமான செயல்களின் மூலம் செல்வம் ஏற்படும்.திறமையின் மூலம் அது வேரூன்றும்.உழைப்பின் மூலம் அது விரிவடையும்.மனக்கட்டுப்பாடுடன் வாழ்ந்தால் அது நிலைத்து நிலைபெறும்.

இனி கோபம்பற்றியும், நட்பு பற்றியும் வள்ளுவர் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம்

நட்பு பற்றி..

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் கலைவதாம் நட்பு

நாம் அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவுகையில் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனை சரிசெய்ய உதவுகிறதோ அதுபோல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்க துடித்துச் செல்வதே நட்புக்கு இலக்கணமாகும்

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்

ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், கோபத்தைக் கைவிட வேண்டும்.அல்லையேல், அந்தக் கோபம் அவனையே அழித்துவிடும்

இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை

எல்லையற்ற கோபம் கொள்பவர் இறந்தவர்க்கு ஒப்பாவர்.சினத்தைத் துறந்தவர் துறவிக்கு ஒப்பாவர்

Sunday, December 13, 2015

28_-விதுரர் சொன்ன கதை (தொடர்ச்சி)



அதற்கு பரஹம்சர் "அரசே! ஒருவர் தன் மகனுக்குத் தன்னிடம் உள்ள அனைத்து செய்வங்களையும் கொடுக்கலாம்.ஆனால், மகனுக்கும், மற்றவர்க்கும் தகராறு ஏற்பட்டு விவாதம் எழுந்தால் உண்மையான பதிலைக் கூற வேண்டும்" என்றார்.

பிரகலாதர், "முனிவரே! ஒருவன் முழு உண்மையையோ, பொய்யையோ பதிலாகக் கூறாவிடின் என்ன பாவம் செய்தவனாகிறான்? அவனுக்கு என்ன கஷ்டம் ஏற்படும்?" என வினவினார்.

"தர்மநெறி பற்றி ஒருவரிடம் கேட்டால் சரியான பதில் தர வேண்டும்,வழி தவறிய கழுதை அலைவதைப் போல சுற்றி வளைத்துப் பேசக் கூடாது.அவ்வாறு சொல்பவன் அறநெறியிலிருந்து வீழ்பவன் ஆகிறான்.அப்படிப்பட்டவன், அரசன் எனில், அவன் தன் நாட்டையும், குடிமக்களையும் இழந்தவன் ஆகிறான்.ஆற்றங்கரையில் உள்ள மரங்கள் வெள்ளம் பெருக்கெடுத்தால் வீழ்ந்துவிடும்.அதுபோல அறநெறியை அறிந்திருந்தும் மௌனமாய் இருப்பவரும்,அதுபற்றி சிந்தித்தும் கருத்தை வெளியிடாதவனும் அழிந்து போவார்கள்.ஒரு சபையின் கூட்டத்தில் சிலர் தவறாக நடந்தால் அவர்கள் கண்டிக்கப் பட வேண்டும்.அல்லையேல்,பாதி பாவம் சபைத்தலைவரைச் சேரும்.மீதியில் கால் பாகம் தவறிழைத்தவரையும், எஞ்சியுள்ள கால் பாகம் கூட்டத்திற்கு வந்து மௌனமாய் இருந்தவர்களையும் சாரும். (இவ்விடத்தில்..பாஞ்சாலி சபையில் அவமானப்பட்டபோது, விதுரர்,விகர்ணன் தவிர பீஷ்மர் உடபட மௌனம் காத்த அனைவரும் தவறிழத்தவர்கள் என்பதை நினைவுக்கு வருகிறது).

இதற்கு மாறாக குற்றம் செய்தவர்கள் கண்டிக்கப் பட்டால் சபையின் தலைவர் பாவமற்றவர் ஆகிறார்.சபையிலுள்ளோர் பாவமும் நீங்கும்.எல்லாப் பாவமும் கூற்றமிழைத்தவரையேச் சாரும்." என்றார் பரஹம்சர்.

பின் பிரகலாதர், " முனிவரே! அறியாமை காரணமாகவோ அல்லது சுயநலத்தாலோ தூண்டப்பட்டு ஒருவன் பொய்யான பதிலைச் சொன்னாலவன் நிலை என்ன? அவன் எத்துன்பத்தை அனுபவிப்பான்?" என வினவினார்.

கணவன் இன்னொருத்தியை மணந்து கொண்டால் முதல் மனைவியும், சூதாட்டத்தில் தோற்றவனும், கவலைகளால் நசுக்கப்பட்டவனும் இரவு நேரத்தில் தூங்காமல் புலம்பிக் கொண்டிருப்பார்கள்.அதுபோலவே ஒருவன் தனக்குத் தெரிந்துள்ள உண்மையை தெளிவாகவும், துணிச்சலாகவும் பேசாவிடில் வாழ்நாள் முழுதும் துயருடன் கழிப்பான்.

ஒரு நகரினுள் நுழையமுடியாது தடுக்கப்பட்டவனும், நகருக்கு வெளியே இருக்க நேர்ந்து பட்டினி கிடப்பவனும், கண்ணெதிரே எதிரிகளையேக் காண்பவனும் , இரவு நேரத்தில் தூங்க முடியாது புலம்பிக் கொண்டிருப்பர்.அதுபோல ஒருவன் தான் அறிந்த உண்மையைத் துணிச்சலாக வெளியிடாவிடின் வாழ்நாளை துயருடன் கழிப்பர்

ஒருவன் தான் வளர்க்கும் விலங்கிற்காக (ஆடு போன்றவை) பொய் சொன்னால் அவன் முன்னோர்களில் ஐவர் நரகத்தில் தள்ளப்படுவர்.தனது பசுவிற்காகப் பொய் சொன்னால் பத்து முன்னோர்களும், தனது குதிரைக்காகப் பொய் சொன்னால் நூறு முன்னோர்களும் நரகத்தில் தள்ளப்படுவர்.தனது வேண்டிய மனிதர்களுக்காகப் பொய் சொன்னால் ஆயிரம் முன்னோர்கள் நரகத்தை அடைவர்

செல்வத்தை அடைய பொய் கூறுபவன், தன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும், எதிர்காலத்தில் பிறக்கப் போகிறவர்களுக்கும் அழிவு ஏற்படச் செய்கிறான்.நிலம் சம்பந்தமாய் பொய் சொன்னால் தன்னிடம் உள்ளவையும் தன்னைச் சார்ந்தவையும் எதுவும் மிஞ்சாமல் அழிந்துவிடும்.ஆகவே நிலம் (ராஜ்ஜியம்) பற்றிப் பொய் பேசக்கூடாது.,

பரஹம்சர் சொன்னவற்றைக் கேட்ட பிரகலாதர் விரோசனன், சுதன்வன் இருவரின் கேள்விக்கு தீர்ப்பு சொல்ல ஆரம்பித்தார்.

விரோசனனைப் பார்த்து, "விரோசனா! சுதன்வனின் தந்தை அங்கிரச முனிவர் என்னைவிட உயர்ந்தவர்.சுதன்வனின் தாயார் உன் தாயாரைவிட உயர்ந்தவர்.எனவே சுதன்வனும் உன்னைவிட உயர்ந்தவர் ஆகிறார்.அவர் உன்னை பந்தயத்தில் வென்று விட்டார். உன் உயிரப் பணயம் வைத்துப் போட்டியிட்டதால் சுதன்வன் உன் உயிருக்கு உரைமையாளர் ஆகிறார்" என்றார்.

பின் சுதன்வனைப் பார்த்து, "சுதன்வரே! தயவு செய்து விரோசனின் உயிரை அவனுக்குத் திருப்பித் தாருங்கள்" என்றார்.

சுதன்வன், "பிரகலாதரே1 உங்கள் மகன் போட்டியில் தோற்றதால் பணயமாக வைத்த உயிர் மீதான உரிமையை இழந்துவிட்டார்.ஆனால் நீண்கள் தர்மத்தையே கடைப்பிடிக்க முடிவெடுத்தீர்கள்.சுயநலத்திற்குக் கூட நீங்கள் பொய் சொல்ல வில்லை.நீங்கள் சத்தியத்தைக் கூறியதற்காக உங்கள் மகனை உங்களுக்கேத் திருப்பி அளிக்கிறேன்.விரோசனனின் உயிர் மீதான என் உரிமையைத் திருப்பித் த்ந்து விட்டேன்.நான் உயர்ந்தவன் என்பதை ஒப்புக் கொண்டுவிட்டதால் கேசினியின் முன் விரோசனன் என் கால்களைக் கழுவ வேண்டும்" என்றார்.

(சாதி, மதங்கள், உயர்ந்தவன் .தாழ்ந்தவன் ஆகியவை ஒழிந்துவரும் இக்காலத்தில்...மேற்கண்ட கதை..அந்தக் காலக்கட்டத்தில் சொல்லப்பட்டது என்பதி நினைவில் கொள்க)

இனி வள்ளுவர்

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி

ஒரு பக்கமே சாய்ந்துவிடாமல் நாணயமான தராசுமுள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்


Saturday, December 12, 2015

27-விதுரர் சொன்ன கதை



விதுரர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த திருதராஷ்டிரர் அவரிடம், "விதுரா! நீ அறிஞன்.இதுவரை எனக்குச் சொன்னதைப் போன்ற அறிவுரைகளை மேலும் சொல்வாயாக.உன் சொற்கள் நற்பண்பை வலியுறுத்துகின்றன.உலக நன்மைக்கான பல விஷயங்களைக் கூறினாய்.அவை உண்மை.ஆனாலும், என் மனம் மேலும் கேட்க விழைகிறது" என்றார்.

விதுரர் கூறலானார்...

புனித நதிகளீல் நீராடினால் நமக்கு என்ன புண்ணியம் கிடைக்குமோ அதற்கு சமமான புண்ணியம், எல்லா உயிரினங்களையும் சமமாக பார்ப்பதிலும் கிடைக்கும்.ஆகவே சம நோக்கு வேண்டும்.

கௌரவர்கள், பாண்டவர்கள் இருவரையும் சமமாக உம் புதல்வராக நினையுங்கள்.இதனால் உங்கள் புகழ் ஓங்கும்.சமநோக்கு என்ற புண்ணியம், இறந்தபின் சுவர்க்க வாழ்வை அளிக்கும்.எவ்வளவு காலம் வரை ஒரு மனிதரின் புகழும், புண்ணியமும் போற்றப்படுகின்றனவோ..அவ்வளவு காலம் சுவர்க்கத்திலும் அவனுக்குக் கௌரவம் கிடைக்கும்.இதை விளக்க பழைய கதை ஒன்றைக் கூறுகிறேன்....

கேசினி என்ற ராஜகன்னிகையால் தூண்டப்பட்டு பிரகலாதன் மகனான விரோசனன், அங்கிரச முனிவரின் புதல்வன் சுதன்வனுடன் விவாதம் செய்து பேசிய கதை இது.

கேசினி அழகியாவாள்.அவள் தலைசிறந்த இளைஞன் ஒருவனைக் கணவனாக அடைய விரும்பினாள்.இதற்கான சுயம்வரம் நடத்த முடிவெடுத்தாள்.அவளை மனைவியாக டையும் நோக்கில் விரோசனன் சுயம்வரத்திற்கு வந்தான்.அவன் தைத்திய இனத்தைச் சேர்ந்தவன்.கேசினி அவனிடம் கேட்டாள்.(காசியமுனிவர் தொடங்கியது தைத்திய இனம்.மனைவி திதி.இவர்களது மக்ன்தான் இரண்யன்.இரண்யனின் மகன் பிரகலாதன்.பிரகலாதனின் மகன் விரோசனன்)

"விரோசனரே! அந்தணர்கள் உயர்ந்தவர்களா? தைத்தியர்கள் உயர்ந்தவர்களா? சுதன்வன் ஏன் சுயம்வரத்திற்கு வரவில்லை?"

இதற்கு விரோசனன், "கேசினி...பிரஜாபதியின் வம்சமான நாங்கள் அந்தணர்களைவிட உயர்ந்தவர்கள்.அதுமட்டுமல்ல....எல்லாரையும்விட நாங்கள் உயர்ந்தவர்கள்.இந்த உலகு எங்களுடையது.தேவர்கள், அந்தணர்கள் யாரும் எங்களுடன் ஒப்பிடத் தகுந்தவர் அல்ல"

கேசினி - விரோசனரே! சுதன்வன் விடியற்காலம் வரக்கூடும்.நாம் காத்திருப்போம்.உங்கள் இருவரையும் கண்டு ஒப்பிட விரும்புகிறேன்

 அன்று இரவு கழிந்தது.மறுநாள் சூரியன் உதிக்கும்போது சுதன்வன் சுயம்வர மண்டபத்திற்கு வந்தான்.விரோசனன், கேசினி இருந்த இடத்தை அடைந்தான்.

சுதன்வனைப் பார்த்ததும் கேசினி எழுந்து வரவேற்று இருக்கை அளித்தாள்.பாதபூஜை செய்ய தண்ணீர் எடுத்து வந்தாள்.இதர பூஜைக்கான பொருட்களையும் கொணர்ந்தாள்.

சுதன்வன், விரோசனனைப் பார்த்து, "பிரகலாதனின் மகனான் நீ தங்க இருக்கையில் அமர்.நான் அந்தணன்.எனக்கு சாதா இருக்கைப் போதும்.அந்தத் தங்க இருக்கையை ஒருமுறை தொடுவதுடன் நிறுத்திக் கொள்கிறேன்.நான் உனக்கு நெருக்கமானவன்.ஆயினிம், சரி சமமாக அமர்வது பொருந்தாது" என்றான்.

அதற்கு விரோசனனும், "ஆம்.எனக்கு சமமாக அமர தகுதியற்றவன் நீ.மரப்பலகை, புல், மான் அல்லது புலித்தோல் ஆகியவையே உனக்குச் சரி" என்றான்.அதற்கு சுதன்வன் "ஆம்.நீ சொல்வது சாஸ்திரப்படி சரி.தந்தையும், மகனும் சமமாக உட்காரலாம்.இரு அந்தணர்கள், இரு சத்திரியர்கள், இரு வைசியர்கள், இரு நான்காம் வருணத்தார் சமமாக உட்காரலாம்.ஆனால், வெவ்வேறான இருவர் சமமாக அமரக் கூடாது. உன் தந்தை என்னை உயர்ந்த ஆசனத்தில் அமர்த்தி உபசரிப்பார்.தாழ்ந்த இருக்கையைப் போட்டுதான் தான் அமர்வார்.நீ அரண்மனையில் ஆடம்பர சூழ்நிலையில் வளர்ந்தவன்.உனக்கு இதெல்லாம் தெரியாது" என்றான்.

விரோசனன் அதற்கு, "எங்களிடம் உள்ள தங்கம், கால்நடைச் செல்வங்கள், குதிரைகள் ஆகிய அனைத்தையும் பணயமாக வைக்கிறேன்.ஆற்றல் மிக்க யாரேனையும் நம்மில் உயர்ந்தவர் யார் எனக் கேட்டுப் பார்ப்போம்' என்றான்

அதற்கு சுதன்வன், "உன்னிடமுள்ள ஆடு, மாடு, குதிரைகள், தங்கம் அனைத்தையும் நீயே வைத்துக் கொள்.நான் என் உயிரை பணயமாக வைக்கிறேன்" என்றான்.
அதற்கு, விரோசனனும், தன் உயிரையும் பணயம் வைக்க தயாராய் இருப்பதாய்க் கூறினான்.ஆனால், இது குறித்து தேவர்களையோ, மனிதர்களையோ அணுக தனக்கு விருப்பமில்லை என்றான்.

உடன் சுதன்வன் "நாம் உயிரை பணயமாக வைத்து விட்டதால் இருவரும் உன் த்ந்தை பிரகலாதரிடம் கேட்போம்' என்றான்.இருவரும் பிரகலாதரிடம் சென்றனர். .

இவர்கள் வருவதைப் பார்த்த பிரகலாதர், "இவர்கள் இருவரும் ஒற்றுமையாய் இருந்ததில்லை.இப்போதும் சீற்றத்துடன் வருவது போலத் தெரிகிறது.என்ன சேதியாய் இருக்கும்" என யோசிக்கலானார்.

பின் அவர் விரோசனனைப் பார்த்து, "இதுவரை நீங்கள் நட்புடன் பழகியதில்லை.இப்போது சுதன்வன் உனக்கு நண்பன் ஆகிவிட்டானா?" என்றார்.

அதற்கு விரோசனன், "தந்தையே! நாங்கள் எங்கள் உயிரை பணயமாக வைத்து ஒரு பந்தயத்தில் இறங்கியுள்ளோம்.நாங்கள் கேட்கப்போகும் கேள்விக்கு பொய் கலக்காது உண்மையைச் சொல்லுங்கள்" என்றான்.

பிரகலாதரோ , அதற்கு முன்னதாக தனக்கு ஒரு கடமை உள்ளதாகக் கூறி, "சுதன்வன் அந்தண அதிதி.மரியாதைக்குரியவர் ஆகவே அவரை.வரவேற்கத் தண்ணீரும், பானமும், தானம் அளிக்க ஒரு வெள்ளைப் பசுவும் தயாராக உள்ளது' என்றார்.

சுதன்வனோ, "பிரகலாதரே! நீங்கள் கூறிய சொற்களே போதும்.எங்கள் கேள்விக்கு உண்மையான பதிலைச் சொன்னால் போதும்" என்றான்.

"அந்தணர் உயர்ந்தவரா? விரோசனன் உயர்ந்தவனா? ' என்றான் சுதன்வன்

பிரகலாதர் சொன்னார், "உமது கேள்விக்கு சரியாக விடையளிக்கும் திறமை, தர்ம சாஸ்திரங்களில் கரை கண்டவர்களான கல்மாஷர்,கபிலர்,வியாசர், லோகிதர் ஆகியவரிடம் கூடக் கிடையாது.அந்தணர், சத்திரியரில் யார் உயர்ந்தவர் என்பது கத்தி முனையைவிட கூர்மையான கேள்வி.தர்மநெரி சம்பந்தப்பட்டது.அந்தணரே1 ஒருபுறம் என் ஒரே மகன்,இன்னொரு புறம் நீங்களே நேரில் வந்துள்ளீர்கள்.என்னைப் போன்ற ஒருத்தரால் உங்கள் பிரச்னைக்கு எப்படி பதில் அளிக்க முடியும்?" என்றார்.

சுதன்வனோ, "பரவாயில்லை.என் கேள்விக்கு நீங்களே பதில் கூறுங்கள்.ஆனால் அது உண்மையானதாய் இருக்க வேண்டும்.பொய்யான பதிலைச் சொன்னால் உங்கள் தலை வெடித்துவிடும்."என்றார்.

அப்போது, அங்கே..பரமஹம்சர் பிரிவைச் சேர்ந்த தெய்வீகமான ஒரு முனிவர், அதிதி வம்சத்தைச் சேர்ந்த ஒருவருடன் வந்தார்.

அவரிடம், பிரகலாதார், "முனிவரே! இந்த இருவரில் ஒருவர் என் மகன்.மற்றொருவர் எனக்குத் தெரிந்த அந்தணர்...இவர்களிடையே தகராறு ஒன்று உள்ளது.நான் நடுவராக இருக்க வேண்டியுள்ளது.உண்மையை எப்படி நிலைநாட்டுவது?' என்றார்.