Wednesday, December 30, 2015

34-நட்பு




யாருடைய கோபம் நம்மை அச்சப்படுத்துகிறதோ...அவர் நண்பர் அல்ல.அச்சத்தாலோ அல்லது தப்பாக நினைக்கக்கூடாது என்றோ யாருக்கு நாம் பணிவிடை செய்ய நேரிடுகிறதோ..அவர் நம் நண்பர் அல்ல.தந்தையிடம் பேசுவது போல நாம் யாரை நம்பிக்கையுடன் அணுகி பிரச்னைகளுக்கு ஆறுதல் பெறுகிறோமோ அவரே நம் நண்பர் ஆவார்.மற்றவர்கள் அவ்வப்போது தலைகாட்டுபவர்கள் ஆவார்கள்.அவ்வளவே!

நமக்கு உறவாக இல்லாவிடினும்..நட்போடு பழகினால் அவர் நமக்கு உறவுபோலத்தான்.அவரே நம் நண்பர்.அவரே நமக்கு உதவக் கூடியவர்.அவரே பிரச்னைகளின் போது நமக்கு அடைக்கலமும், ஆறுதலும் தருபவராக இருப்பார்

சஞ்சலமான மனதினனுக்கும், விவேகமும் அனுபவமும் உள்ள பெரியோர்களுக்கு பணிவிடை செய்யாதவனுக்கும், பதற்றப்பட வேண்டியவனுக்கும் அல்லது ஏமாற்றுபவனுக்கும் ஒரு போதும் நிரந்தர நண்பர்கள் இருக்க மாட்டார்கள்

ஏரி வறண்டு போனால் அன்னப்பறவைகள் வெளியேறி விடுவது போல..ஒருவன் சஞ்சலமான மனதினனாகவும், சுயக்கட்டுப்பாடு அற்றவனாகவும், புலன் ஆசைகளுக்கு வசப்பட்டவனாகவும் இருந்தால் அவனுடைய செல்வமும், வசதிகளும் அவனை விட்டு நீங்கி விடும்

கொடியவர்கள் திடீரென சீறி விழுவார்கள்.அதுபோல திடீரென காரணமில்லாமலேயே மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.அவர்கள் குணம் ஆகாயத்தின் தோற்றம் போல கணம் தோறும் மாறியபடியே இருக்கும் (வானம் மேகங்களால் திடீரென இருளும்..பின் மேகங்கள் விலக திடீரென வெளிச்சமாகும்)

சிலர் தங்கள் நண்பர்களால் நன்கு வரவேற்கப்பட்டு, உபசரிக்கப்பட்டு நன்மைகள் பல பெற்றாலும், நன்றியுணர்வு அற்றவர்களாக இருப்பர்.அத்தகையோர் இறந்த பின்..அவர்களது உடலை நரி, கழுகு போன்றவை கூடத் தொடாது

ஒருவன் பணம் படைத்தவனாக இருந்தாலும் சரி,ஏழையாக இருந்தாலும் சரி உதவி தேவைப்படும் போது நண்பர்களை அணுக வேண்டும்.அப்படி ஒருபோதும் உதவி கோராவிடின் நம் நண்பர்கள் எனப்படுபவர்கள் உண்மையானவர்களா ,இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடியாது

கவலையால் அழகு குலையும்.உடல் வலிமை குறையும், அன்பு மழுங்கும். கவலை காரணமாக மனிதன் பல நோய்களுக்கு ஆளாகிறான்

கவலைப்படுவதால் மட்டும் நாம் விரும்பும் எதையும் பெற முடியாது.மனதில் துன்பம் பரவி உடலும் கஷ்டத்திற்குள்ளாகிறது.இது கண்டு நம் எதிரிகள் மகிழ்வர்.எனவே கவலையால் மனம் தளரக்கூடாது

மனிதன் இறக்கிறான்.மீண்டும் பிறக்கிறான்..ஏழையாகிறான்.மீண்டும் செல்வச் சிறப்பு பெறுகிறான்.பிச்சை எடுக்கிறான்..பின்னர் வாரி வழங்குகிறான்.இன்னொருவரின் மரணத்திற்காக சோகத்தை வெளிப்படுத்துகிறான்.வேறொரு சமயம் அவன் மரணத்திற்காக மற்றவர்கள் விசனப்படுகின்றனர்

இன்பம்-துன்பம், தோற்றம்- அழிவு, வளமை- வறுமை, லாபம்- நஷ்டம், சாவு- பிறப்பு, என்ற இரட்டை நிலைகள் எல்லோருக்கம் மாறி மாறி, மீண்டும் மீண்டும் ஏற்படுகின்றன.எனவே, நாம் நமது மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு, ஒரு சமயம் கூத்தாடாமலும் மறுசமயம் புலம்பாமலும் அமைதியாகவே இருக்க வேண்டும்

கண், காது, மூக்கு,நாக்கு,சருமம். மனம் என ஆறும் எப்போதும் சஞ்சலத்துடனே உள்ளன. பானையின் எந்தப் பகுதி ஓட்டையானாலும் ஊற்றப்படும் தண்ணீர் வெளியேறுவது போல நம்புலன்கள் ஏதேனும் ஒன்று தவறாக இயங்கினாலும் அதன் வழியே நம் அறிவு வெளியேறிவிடும்

என்று விதுரர் கூறினார்.

திருதராஷ்டிரர் சோகமாக விதுரரிடம்,"துரியோதனனைச் செல்லமாக வளர்த்துவிட்டேன்.அது தவறு.உடலுக்குள் நெருப்பை மறைத்துவைக்க முயன்றது போல ஆகிவிட்டது.அந்த நெருப்பு உடலை எரித்து..அதனுடன் தொடர்பு கொண்டுள்ள மற்றவற்றையும் அழித்துவிடும்.துரியோதனன் தானும் அழிவதுடன், என் மற்ற மகன் களையும்  கூட அழித்துவிடுவான் போல இருக்கிறதே! இச் சூழ்நிலைத் தொடர்ந்து அச்சுறுத்துவதாகவே உள்ளது.இதனால் மனம் குழம்பிக் கிடக்கிறது.விதுரரே! எல்லா கவலைகளில் இருந்து  விடுபட வழி என்ன?" என்றார்

விதுரர் கூறலானார், "தூய மன்னரே! அறநெறி அறிந்திருத்தல், கடமையைத் தவம் போலச் செய்து வருதல், புலன்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல்,பிறர் செல்வத்திற்கு ஆசைப்பாடாதிருத்தல் ஆகியவை மூலம் மனிதர்கள் மன அமைதியைப் பெற முடியும்

அறிவின் மூலம் அச்சத்தை விரட்டலாம்.கடமையைத் தவம் போலச் செய்தால் பெரிய சாதனைகள் புரியலாம்.குருவைச் சார்ந்திருந்து சேவை புரிந்தால் ஆத்ம ஞானம் பெறலாம்.புலன்களை வசப்படுத்தினால் அமைதியாக வாழலாம்

முக்தி பெற விரும்புபவர்கள், வாழ்க்கையில் விருப்பு, வெறுப்பு அற்றவர்களாகவும், பற்றுகளை குறைத்துக் கொண்டும் வாழ வேண்டும்.தான தருமம் செய்வதால் விளையக்கூடிய நல்ல பலன் களுக்காக ஏங்கக் கூடாது.வேதங்கள் கூறும் சடங்குகளைச் செய்வதால் கிடைக்கக் கூடிய நல்ல விளைவுகளுக்காகவும் ஆசைப்படக் கூடாது

சரியான படிப்பைத் தேர்ந்தெடுத்து முறையாக பயில்வனும்,நியாயமான காரணத்திற்காக வீரமாக போராடுபவனும், எப்போதும் நற்செயல்களையே செய்பவனும் கடமைகளைத் தவம் போல உறுதியாகச் செய்பவனும் தங்கள் முயற்சியின் முடிவில் வளமாக வாழ்வார்கள்

இனி வள்ளுவர்

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து

உறுப்புகளைஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல ஐம் புலன் களையும் அடக்கியாளும் உறுதி காலமெல்லாம் வாழ்க்கைக்கு அரணாக அமையும்


Tuesday, December 29, 2015

33-உயர்க்குலப் பண்புகள்



விதுரரைப் பார்த்து திருதராஷ்டிரர் கேட்டார்,,,

:விதுரரே! அறநெறியைப் பின்பற்றுபவர்களும், நேர்மையான முறையில் சுகம் அனுபவிப்பவர்களும் ,அறிஞர்களான தேவர்களும் உயர்குலத்தினரை விரும்புவதாக அறிகிறேன்.உயர்க்குலக் குடும்பங்கள் என்பதற்கான தகுதிகள் என்ன்?

விதுரர் கூறலானார்.....

'தவம் செய்வது போன்ற புனித வாழ்க்கை,புலன்களை அடக்குதல்,ஆன்மீக அறிவு,சகிப்புத்தன்மை ,வேள்விகள் செய்தல், சாதிப்பிரிவிற்குள் திருமணம்,மனநிறைவு,அன்னதானம் செய்வதில் விருப்பம் ஆகிய எட்டும் உயர்க்குலக் குடும்பங்களில் காணப்படும் நற்பண்புகள் ஆகும்.

உயர்குலக்குடும்பத்தில் பிறந்தவர்கள்...ஒழுக்கத்திலிருந்து தடம் புரள மாட்டார்கள்.தங்களது முன்னோர், மூத்தவர்கள் மனம் புண்படும்படி பேச மாட்டார்கள்.நற்பண்புகளைபின்பற்றுவார்கள்.தங்கள் குடும்பம் புகழ்ப் பெற விரும்புவார்கள்.எல்லாவித பொய்களையும் தவிர்ப்பார்கள்

உயர்குலக் குடும்பத்தினர், தங்களுக்குரிய வேள்விகளை செய்யாவிடினும்,தங்கள் தகுதிக்குத் தாழ்வான குடும்பத்தில் திருமண உறவு ஏற்படுத்திக் கொண்டாலும், வேதங்களைப் புறக்கணித்தாலும், நற்பண்புகளை மீறி நடந்து கொண்டாலும் அக்குடும்பத்தின் பெயர் களங்கப்படும்

உயர்குலக் குடும்பத்தினர் கோயில்களிலுள்ள கடவுள் சம்பந்தப்பட்ட பொருட்களை சேதப்படுத்தினாலும்,அந்தணர்களின் சொத்தை பிடுங்கிக் கொண்டாலும்,அந்தணர்களை அவமதித்தாலும் அக்குடும்பப் பெயர் களங்கப்படும்.(அந்தணர்களை உயர்க்குலம் என இங்கு குறிப்பிடாததை கவனித்தில் கொள்ள வேண்டும்)

உயர் குலக் குடும்பத்தினர் அந்தணர்களை அவமதித்தாலும், ஏசினாலும்,பிறர் தங்களிடம் நம்பிக்கையுடன் ஒப்படைத்த பொருட்களைத் தாங்களே கவர்ந்து கொண்டாலும் அக்குடும்பத்தின் பெயர் களங்கப்படும்

சில குடும்பங்களில் கால்நடைச் செல்வம்,குழந்தைகள். சொத்து வசதிகள்,நிறைந்து இருக்கலாம்.ஆனாலும் அக்குடும்பங்களில் உறுப்பினர்கள் நன்னடத்தையும்,நற்பழக்கங்களும் கொண்டிராவிட்டால் அவற்றை உயர்குலக் குடும்பங்களாக எண்ண முடியாது.

சில குடும்பங்களில் செல்வ வசதி குறைவாக இருக்கலாம்.ஆனால் அதே நேரம், குடும்ப உறுப்பினர்கள் நல்ல நடத்தையும், நல்ல பழக்கத்தையும் உடையவர்களாக இருக்கலாம்.அப்படியானால் அந்தக் குடும்பங்களும் நல்ல குடும்பங்களாகவே கருதப்பட்டுப் பெரும் புகழ் பெறும்

எத்தகைய சூழ்நிலையிலும் நன்னடத்தையும்,நல்ல பழக்கங்களையும் கைவிடாமல் பின்பற்றி வர வேண்டும்.பணம் வரும்..போகும்..பணவசதி இல்லாததால் ஒருவரது வாழ்க்கை வீணாகிவிட்டது எனக் கூற முடியாது.ஆனால் ஒழுக்கமும், நற்பழக்கங்களும் அற்றவனது வாழ்க்கை நிரந்தரமாக வீணாகி விட்டதென்றே கூற வேண்டும்.

சில குடும்பங்களில் ஏராளமான பசுக்கள்,பிற வளர்ப்பு மிருகங்கள்,குதிரைகள் ,ஏராளமான தானியங்கள் ஆகியவை இருக்கக்கூடும்.ஆனால்,குடும்ப உறுப்பினர்கள் ஒழுக்கமும், நற்பண்புகளும் கொண்டிருக்காவிட்டால் அக்குடும்பங்கள் முன்னேறவோ, புகழ் பெறவோ முடியாது

எனவே நம் குடும்பத்தைச் சார்ந்தவர் எவனும் பிறரது பகைமையைத் தூண்டாமல் இருக்க வேண்டும்.நம் கீழுள்ள அரசர்கள். எதிரிகளிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.நம்மவர்கள் பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது.நண்பர்களுக்குத் துரோகம் செய்யக் கூடாது.பிறரை ஏமாற்றவோ, பொய் சொல்லவோ கூடாது.வீட்டில் தயாராகும் உணவை மறைந்த முன்னோர்களுக்கும், தெய்வங்களுக்கும் படைத்து, வந்துள்ள விருந்தாளிகளுக்கும் பரிமாறிய பின்னரே உண்ண வேண்டும்

(வள்ளுவர்-
விருந்து புறத்ததாய் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல)

நம் குலத்தைச் சேர்ந்தவர் ,அந்தணர்களுக்குத் தீங்கு விளைவித்தால் அல்லது அவர்களை வெறுத்தால் அல்லது அறுவடைக்குள்ள பயிரை நாசம் செய்தால் அத்தகையவர் நம்முடன் பழக,உறவாட நாம் அனுமதிக்கக் கூடாது

நல்ல மனிதர்களின் குடும்பங்களில் தர்ப்பைப் புல்லால் ஆன ஆசனமும் அல்லது பாயும், விருந்தினர் அமர மேடை போன்ற அமைப்பும், கை கால் கழுவ தண்ணீரும் உண்மையான இனிமையான  பேச்சும் ஆகியவற்றை கட்டாயம் எதிர்பார்க்கலாம்

பாராட்டுக்குரிய நற்செயல்கள் புரிவதில் ஆர்வமுள்ளவர்கள் மேற்கூறியவற்றுடன் தயாராய் இருப்பார்கள்.வீட்டிற்கு வரும் விருந்தினரை வரவேற்று கௌரவிக்கும் போது மேற்கண்டவற்றை அவர்களுக்கு மரியாதையுடன் அளிப்பார்கள்

வண்டியும், தேரும் செய்ய பயன்படும் மரம் பார்க்க சிறியதாய் இருக்கும்.ஆனால், மிக உறுதியானது.அதன் சிறு கிளைகளும் பெரும் பாரத்தைத் தாங்கும்.ஆனால், வேறு சில மரங்கள் பெரியதாய் இருந்தாலும் சுமையைத் தாங்காது.அதுபோலவே உயர்குலக் குடும்பங்களில் பிறந்தவர் பெரிய பொறுப்புகளை சுமக்ககூடியவர்களாக இருப்பார்கள்.சாதாரணமான மக்களால் பெரிய பொறுப்புகளை நிர்வகிக்க இயலாது


வள்ளுவன்-
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது

சொல்லாற்றல் படைத்தவனாகவும்,சோர்வு அறியாதவனாகவும்,அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது


Sunday, December 27, 2015

32-பேச்சின் விளைவும்...மனிதரின் மூவகையும்



விதுரர் மேலும் கூறலானார்...

சூழ்நிலையை விளக்க ஒரு பழங்கதையைக் கூறுகிறேன்.இது ஒரு உரையாடல்.தத்தாத்திரேய முனிவருக்கும், சாத்தியர்கள் என்ற தேவ வையினருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் ஆகும் இது.

முன்னொருகாலத்தில் ஆத்திரேயர் என்ற மாமுனிவர் வாழ்ந்தார்.விவேகமுள்ளவர்.அவர் கடுமையான விரதங்களைக் கடைபிடித்தார்.அவர் பரமஹம்ச முறையிலான துறவி உடை அணிந்து செல்வார்.அவரிடம் சாத்தியர்கள் ஒரு விஷயம் கேட்டனர்

"மாமுனிவரே! சாத்தியர்கள் எனும் நாங்கள் தேவவகையைச் சேர்ந்தவர்கள்.தங்களை தரிசிப்பதில் மகிழ்ச்சி.ஆனால், தாங்கள் யாரென எங்களுக்குத் தெரியவில்லை.நீங்கள் வேதங்களை பயின்றவர்..பேரறிஞர் என்று நினைக்கிறோம்.நீங்கள் எங்களுக்கு ஞானத்தைப் போதித்தால் பேருதவியாய் இருக்கும்"

பரமஹம்சர் சொன்னார்.." தேவ புருஷர்களே! முதலில் நான் நன் குக்  கற்ற விஷயம் ஒன்றைக் கூறுகிறேன்.எந்த சூழ்நிலையிலும், மன உறுதி,மன அமைதி அல்லது மனக்கட்டுப்பாடு, வாய்மை,நற்பண்புகள் ஆகியவற்றைக் கைவிடக்கூடாது.இதயத்தை இறுக்கும் காமம், சினம் போன்ற முடிச்சுகளை நெகிழ்த்தி விட வேண்டும்.தன்னைப் பொறுத்தவரை இன்ப. துன்பங்கள் ஆகியவற்றை சமமாகக் கருத வேண்டும்.

நம்மை ஒருவன் இகழ்ந்து பேசினால் பதிலுக்கு நாமும் அவனைத் தூற்றக்கூடாது.இகழப்பட்டவர் பொறுமையாக இருந்தால் அவர் படும் வேதனை தீயைப்போல இகழ்ந்தவனை பற்றிக்கொள்ளும்.அதுமட்டுமல்ல, இகழ்ந்தவன் ஏதேனும் புண்ணியம் செய்திருந்தால் அது இகழப்பட்டவனைப் போய்ச் சேர்ந்துவிடும்

நாம் யாரையும் ஏசக்கூடாது.பிறரை அவமதிக்கவும் கூடாது.நீசர்களை சார்ந்து வாழக்கூடாது.நன்பர்களுக்குத் துரோகம் செய்யக் கூடாது.திமிர் பிடித்து அலையக் கூடாது.கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடக்கூடாது. கடுமையான புண்படுத்தும் சொற்களைப் பேசக்கூடாது.

கடுஞ்சொல் கூறுவதால் உடலுக்குக் கெடுதல் விளைகிறது.கடுஞ்சொற்கள் உடலில் உயிர்நிலைகளாக உள்ள உறுப்புகளை அரித்துவிடும்.எலும்புகள், இதயம், நுரையீரல் ஆகிய பகுதிகளையும் பாதித்துவிடும்.ஆகவே  அறநெறியைப் பின்பற்ற விரும்பிகிறவன்  பிறரைக் கீறுவது போன்ற கடுஞ்சொற்களை எப்போதும் கூறாமல் இருக்க வேண்டும்.

எவன் எரிந்து விழும் குணம் கொண்டுள்ளானோ, கல் போன்ற கடுமையான சுபாவம் கொண்டுள்ளானோ, சொல்லம்புகளால் பிறரது இதயத்தைத் துளைக்கின்றானோ அத்தகையவன் அதிர்ஷ்டம் கெட்டவனாக, மனிதர்களுள் கீழ்த்தரமானவனாக இருப்பான்.அவனது வாயில் எமன் குடிகொண்டிருப்பான்

ஒரு தீயவன், கூரானதும் நெருப்பு அல்லது சூடான சொல்லம்புகளால் ஒரு அறிஞனைத் தூற்றினால், அந்த அறிஞன் வேதனையடைந்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.இப்படிப் பொறுமைக் காத்தால் திட்டியவன் செய்திருந்த புண்ணியங்களின் நற்பலனெல்லாம் அறிஞனிடம் வந்துவிடும்  என்பதை அறிஞன் உணர்ந்திருக்க வேண்டும்

நாம் துணியை எந்த நிறச் சாயத்தில் நனைக்கிறோமோ, அந்த நிறத்தில் துணி மாறும். அதுபோல நல்லவருடனோ, தீயவருடனோ,துறவியிடனோ, கள்வனுடனோ இப்படி யாருடன் பழகுகிறோமோ அவரது பாதிப்பால் அதற்குரிய குணமாறுதலைப் பெற்றுவிடுவோம்.

தன்னை பிறர் ஏசினாலும் எவன் ஒருவன் பிறரை இகழ்வதில்லையோ, தன் சார்பில் யாரும் பிறரை இகழ அனுமதிப்பதும் இல்லையோ அத்தகைய பொறுமைசாலி தங்களுடன் வசிக்க வேண்டும் என தெய்வங்களும் விரும்பும்

தன்னை ஒருவன் தாக்கினாலும், எவன் அவனைத் திருப்பித் தாக்குவதில்லையோ....தன் சார்பில் யாரும் அவரைத் திருப்பித் தாக்க அனுமதிப்பதும் இல்லையோ, தன்னைக் காயப்படுத்தியவனுக்குத் துளிக்கூட கெடுதல் செய்ய விரும்புவதில்லையோ அத்தகைய பொறுமைசாலியை தங்களுடன் வசிக்க வேண்டும் என தெய்வங்களும் விரும்புவர்

பேசுவதைவிட மௌனமாக இருப்பது சிறந்தது.பேச வேண்டிய அவசியம் ஏற்படும் போது உண்மையே பேச வேண்டும்.அவ்வாறு நாம் பேசும் உண்மைபிறருக்கு நன்மை செய்வதாகவும் அமைய வேண்டும்.நாம் நன்மையளிக்கும் வகையில் பேசுவது அறநெறிக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும்

ஒரு மனிதன் யாருடனெல்லாம் நெருங்கிப் பழகிகிறானோ அவர்களைப் போலவே ஆகிறான்.அல்லது யாரைச் சார்ந்து பணி புரிகிறானோ அவர்களைப் போலவே ஆகிறான் அல்லது யாரைப்போல ஆகவேண்டும் என மனதில் நினைக்கிறானோ அவரைப்போல ஓரளவாகிறான்

ஒருவன் எதை எதைத் தவிர்த்து விடுகிறானோ அதனதன் பின் விளைவுகளிலிருந்தும் தப்பித்து விடுகிறான்.எல்லாவற்றையும் தவிர்ப்பவன் வாழ்வில் சிறிதளவு கூட துன்பம் ஏற்படுவதில்லை

மேற்கண்டவாறு பற்றுகளை விட்டவனை யாரும் வெல்ல முடியாது.அவனும் யாரையும் வெல்ல விரும்புவதில்லை.அவன் யாருக்கும் எதிரியில்லை.அவன் யாரையும் பழி வாங்குவதில்லை.பிறர் புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் பாதிற்குள்ளாகாது அவன் அமைதியாக இருப்பான்.அவன் ஒன்றை இன்பம் என எண்ணிக் குதிப்பதில்லை.மற்றதைத் துன்பம் என எண்ணி துவண்டும்போவதில்லை

மனிதர்களில் முதல்தர மனிதன் உலகில் அனைவரும்,அனைத்தும் நலமாக வாழ வேண்டுமென ஆசைப்படுவான்.அத்தகைய நிலைக்கு எதிரான எதையும் என்றும் அவன் ஆதரிக்க மாட்டான்.அவன் உண்மையே பேசுவான்.கனிவுடன் பழகுவான்.உடல்,மன உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பான்

நடுத்தர மனிதன்   வாக்குறுதிகள் கொடுப்பான்.அவற்றை நிறைவேற்றியும் தருவான்.எதையும் கொடுப்பதாக வாக்களித்தால் அவ்வாறே கொடுத்து விடுவான்.பிறரிடம் குற்றம் கண்டுபித்தவாரே இருப்பான்.

கீழ்த்தர மனிதர்கள் யாருக்கும் அடங்க மாட்டார்கள்.எப்போதும் ஆவேசமாக இருப்பார்கள்.பாவச்செயல்களில் ஈடுபடுவார்கள்.பயங்கரமாய்க் கோபப்படுவார்கள்.நன்றி கெட்டவர்களாக இருப்பார்கள்.அவர்கள் யாருக்கும் நண்பர்கள் அல்லர்.சில சமயங்களில் நல்லவர்களைப் போலப்பழகினாலும் கொடிய மனம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

கீழ்த்தரமானவர், பெரியவர்கள் கூறும்  நல்ல ஆலோசனைகளின்படி நடந்து கொள்ள மாட்டார்கள்.அந்த ஆலோசனைகளால் நன்மை விளையும் என நம்பமாட்டார்கள்.தன்னையே சந்தேகப்படுபவர்களாக இருப்பார்கள்.தன் நண்பர்களையும் காட்டிக் கொடுத்து விடுவார்கள்

வாழ்க்கையில் வளம் பெற்று முன்னேற விரும்புபவன் மேற்கண்ட மூவகை மனிதரில் உத்தமமான மனிதர்களையே அணுக வேண்டும்.தவிர்க்க இயலா நிலையில் நடுத்தரமானவர்களை அணுகலாம்.ஆனால் ஒருபோதும் கீழ்த்தரமக்களை சார்ந்திருக்கக் கூடாது

ஒருவன் தன் வலிமையைத் தவறாகப் பயன்படுத்தியோ,விடாமுயற்சியுடன் உழைத்தோ, அறிவையும், ஆண்மையையும்கொண்டோ செல்வம் சம்பாதிக்கலாம்.ஆனால் இவற்றால் மட்டுமே அவன் நற்பெயரோ, உயர்குடியில் பிறந்தோரின் நற்பண்பையையோ அடையமுடியாது.


Friday, December 25, 2015

31-பாவ புண்ணியம்



வாய்மை,பணிவு,ஆன்மீகப் பயிற்சி,நூல் அறிவு,உயர் குடிப் பிறப்பு,ஒழுக்கம்,மனவலிமை,நல் வழியில் சம்பாதித்த செல்வம்,வீரம், பல விஷயங்களை இனிமையாய்ப் பேசும் திறன் ஆகிய பத்தும் சுவர்க்கத்திற்கு ஒருவரை அழைத்துச் செல்லும் வழியைக் காட்டும்

ஒருவன் பாவச்செயலைப் புரிந்தால் அதன் விளைவாக பாவி என்று சொல்லப்பட்டு இகழப்படுவான்.அதனால் தண்டனையும் பெறுவான்.அதுவே, ஒருவன் நற்செயல் புரிந்தால் அவன் புண்ணியவான் எனப் புகழ்ப் பெறுவான்.அச்செயலால் பிற்காலத்தில் நல்ல பலனையும் பெறுவான்

ஆகவே, நாம் பாவச்செயல் புரிய மாட்டோம் என உறுதியுடன் இருக்க வேண்டும்.மீண்டும் மீண்டும் பாவச் செயல் புரிபவனின் அறிவு மழுங்கிவிடும் .இவ்வாறு அறிவை இழப்பவன் பாவச் செயல்களையேச் செய்வான்.மாறாக நல்ல செயல்களைச் செய்து வந்தால் நம் அறிவு மேலும் வளரும்

நல்லறிவு கொண்டவன் புண்ணியச் செயல்களில் ஈடுபடுவான்.புகழ் பெறுவான்.இறுதியில் அவன் சுவர்க்கத்தைச் சென்றடைவான்.ஆகவே ஒருவன் புண்ணியச் செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்

பொறாமை கொள்பவன், பாம்பு போல மனதில் விஷம் நிறைந்தவன்.கொடூர இதயம் படைத்தவன்.கடுஞ்சொல் கூறுவோன்.வேண்டுமென்றே பிறரிடம் விரோதம் கொள்வோன்.மோசடி செய்வோன்.ஆகியோர் பாவச் செயல்கள் புரிவோர் ஆவர்.அவர்கள் விரைவில் பெருந்துன்பத்திற்கு ஆளாவர்

ஒருவன் பிறரிடம் பொறாமை கொள்ளாதவனாகவும், நல்லதை பிரித்தறியும் விவேகம் உள்ளவனாகவும், பின் நல்லதை மட்டுமே செய்பவனாகவும் இருந்துவிட்டால் அவனுக்கு துன்பம் நேராது.மேலும் அவன் எளிதில் புகழப்படுவான்.

அறிவுள்ள மனிதன் தயங்காமல் மற்ற அறிஞர்களின் அறிவையும் திரட்டிப் பெற்று மேலும் அறிஞன் ஆவான்.அவன் நற்பண்புகளை கடைப்பிடிப்பான்.நேர்மையான ,முறையில் வாழ்க்கை வசதிகளைச் சேகரித்துக் கொள்வான்.இதனால் மேன்மேலும் மகிழ்ச்சி அடைபவனாக முன்னேறுவான்

நாம் இரவில் மகிழ்ச்சியாகத் தூங்க உதவும் வகையில் பகலில் செய்யும் வேலையின் தன்மையின் அளவும் அமைந்திருக்க வேண்டும்.மழைக்காலமான நான்கு மாதங்களில் நாம் வாழ உதவியாக எட்டு மாதங்களில் செய்யும் வேலையின் தன்மையும், அளவும் அமைய வேண்டும்

நாம் முதுமையில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கேற்றபடி வாழ்க்கையின் தொடக்கத்திலேயே செய்கின்ற வேலையின் தன்மையும், அளவும் அமைந்திருக்க வேண்டும்.இவ்வுலகை விட்டு நாம் சென்றாலும் சுவர்க்கத்தில் மகிழ்வோடு வாழ உதவும் வகையில் வாழ்க்கை முழுதும் நாம் செய்கின்ற வேலையின் தன்மை அமைய வேண்டும்

அறிஞர்கள் அவசரப்பட்டு எதையும், யாரையும் புகழ்ந்துவிட மாட்டார்கள்.அவர்கள் எளிதில் ஜீரணமானபின்பே குறிப்பிட்ட உணவையும்,நடுத்தர வயதைக் கடந்துவிட்ட பிறகே மனைவியையும், போரில் வெற்றி பெற்ற பிறகே வீரனையும்,தன்னை அறிந்து ஆத்ம தரிசனம் பெற்ற பிறகே துறவியையும் புகழ்வார்கள்

ஒருவன் தவறான வழியில் செல்வம் சம்பாதித்து பிறகு அதைக்கொண்டு அத்தவறை மூடி மறைக்க முயற்சித்தால் அது பலனளிக்காது.அது மட்டுமின்றி வேறு பல தவறுகளும் ஏற்பட்டுவிடும்

ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டவர்களை ஆன்மீகக்குரு அடக்கியாள்கிறார்.கொடியவர்களை அரசர் தண்டனைகள் மூலம் அடக்கிகிறார்.விவஸ்வத் எனப்படும் சுரியனின் மகனாகிய வைவஸ்தர் என்னும் யமன் ரகசியமாகப் பாவம் செய்தவர்களையும் கண்டுபிடித்து அடக்கிவிடுகிறான்

ரிஷிமூலம், நதிமூலம் ,உத்தமர்களின் குலத்தின் மூலம் ஆகியவற்றைத் தேடி ஆராய்ந்துக் கொண்டிருக்கக் கூடாது.பெண்கள் கெட்டுப்போனால் அவர்கள் மேற்கொள்கின்ற தந்திரமான வழிகளில் மூலத்தையும் கண்டறிய இயலாது

எந்தச் சத்திரியர் அந்தணர்களை  போற்றுகிறாரோ , நிறைய தான தருமம் செய்கிறாரோ,உறவினர், சுற்றத்தாருடன் மென்மையாக, நேர்மையாக பழகுகிறாரோ, ஒழுக்கமான நடத்தை கொண்டுள்ளாரோ அவர் நெடுங்காலம் உலகை ஆள்வார்

வீரம் மிகுந்தவர்கள்,அறிவு மிக்கவர்கள்,மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற சேவை உணர்வு மிகுந்தவர்கள் ஆகிய மூன்று வகையினரும் தங்க மலர்களால் ஆன உலகத்தைப் பரிசாகப் பெறுவர் (செல்வச் செழிப்புடன்விளங்குவர்)

மூளையின் உதவியுடன் செயல்படும் செயல்கள் உயர்தரவையாக இருக்கும். கைகளில் உதவியுடன் செயல்படுபவை நடுத்தரமானவையாகும்.தொடைகளால் செயல்படுபவை மோசமானதாக இருக்கும்.தலையால் செய்யப்படும் (பாரம் தூக்குதல் போன்றவை) தாழ்ந்ததாக இருக்கும்

திருதராஷ்டிரரே! இந்த நாட்டில் ஆட்சியை துரியோதனன்,சகுனி, துச்சாதனன், கர்ணன் ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டீர்.இப்படிப்பட்ட நிலையில் நாடு வளம் பெற்று விளங்கும் என எப்படிச் சொல்வது?

இதற்கு மாறாக பாண்டவர்கள் ஐவரும் நற்குணங்கள் நீரைந்து விளங்குகிறார்கள்.உங்களைத் தங்களதுத் தந்தையாகவே எண்ணி மதிக்கின்றனர்.ஆகவே நீங்களும் அவர்களை உங்கள் புதல்வர்களாக எண்ணி அந்த முறையில் நடத்துங்கள்

என்று விதுரர் கூறி முடித்தார்.

இனி வள்ளுவர் என்ன கூறியுள்ளார் எனப் பார்ப்போம்


பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை

பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை

பிறர் அழத்திரட்டிய செல்வம் அழ அழப் போய் விடும்.நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்


Wednesday, December 23, 2015

30-ஏற்றம் பெற எட்டு



விவேகம், உயர்குடிப் பிறப்பு,சுயக்கட்டுப்பாடு,புனித நூல்களில் பயிற்சி,வீரம், பேச்சில் அளவாக இருத்தல், சக்திக்கு உட்பட்டு தான தருமம் செய்தல்,நன்றி மறவாமை ஆகிய எட்டுக் குணங்களும் ஒருவனைப் புகழ்ப் பெறச் செய்யும்.

இந்த எட்டுக் குணங்களையும் ஒருவன் பெற்றிருந்தால், அவனுக்கு ஆட்சியாளர் மூலம் கௌரவம் கிடைக்கும்.அந்தக் கௌரவம் மேற்கண்ட எட்டையும் விடச் சிறப்பாகும்.

இப்பொழுது  சொல்லும் எட்டுக் குணங்களைக் கடைப்பிடித்தால் அவை நம்மை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்.அவற்றில் நான் கு  நன்மக்களுக்கு இயல்பாகவே அமைவது.மீதியை அவர்கள் முயற்சித்து பெறுகின்றனர்.

வேள்வி செய்தல்,தரும சிந்தனை,ஆன்மீகக் கல்வியில் ஆர்வம்,தருமம் செய்வதில் ஈடுபாடு ஆகிய நான்கும் நல்லவர்களிடம் இயல்பாகவே உள்ளன.சுயக்கட்டுப்பாடு,வாய்மை,நேர்மை, அகிம்சை ஆகிய நான்கு குணங்களையும் நல்லவர்கள் தம்முடையதாக்கிக் கொள்கின்றனர்.

வேள்வி, தரும சிந்தனை,ஆன்மீகக் கல்வியில் ஆர்வம், தவம், வாய்மை, மன்னிக்கும் பண்பு, கருணை, பிறர் பொருளை விரும்பாமை ஆகிய எட்டும் நாம் பின்பற்ற வேண்டிய நற்குணப் பாதைகள் என முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிறர் பாராட்டைப் பெற சிலர் மேற்சொன்ன எட்டில் வேள்வி,ஆன்மீக நாட்டம்,தான தருமம் தவம் ஆகிய நான்கையும் மேற்கொண்டிருக்கலாம்.ஆனால் வாய்மை, பிழையைப் பொறுத்தல்,கருணை, பிறர் பொருளுக்கு ஆசைப்படாமை ஆகிய நான்கும் உண்மையாகவே..இயல்பாகவே சான்றோர்களீடம் காணப்படும்

முதியோர் கலந்து கொள்ளாத ஆலோசனை நிகழ்ச்சியைக் கூட்டமென்றே கூறமுடியாது.நற்பண்புகளை எடுத்துரைக்காதவர்களை முதியோர்கள் என கூறமுடியாது.எடுத்துரைக்கப்படும் குணம் உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்காவிட்டால் அது நற்பண்பு ஆகாது.வஞ்சகம் கலந்த ஒன்றை உண்மை எனக் கூறமுடியாது.

இனி வாய்மை, பிறர் பொருள் விரும்பாமை ஆகியபற்றி வள்ளுவர் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம்.....

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்

பிறருக்கு எம்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை

உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கிறவர்களை விட உயர்ந்தவர்கள் ஆவார்கள்


Tuesday, December 15, 2015

29 - பாவச்செயல்கள்



விதுரர் தொடர்ந்தார்...

"திருதராஷ்டிரரே! நாட்டை உங்கள் குடும்பத்தின் வசமே வைத்துக் கொள்ள பொய் பேசுவது சரியல்ல. உண்மையைப் பேசாமல் மறைத்து, உங்களுக்கும், உங்கள் மகன்களாகிய கௌரவர்களுக்கும், அமைச்சர்களுக்கும் அழிவைத் தேடித் தராதீர்கள்.கால்நடைகளை மேய்க்கும் இடையர் அவற்றைச் சரியான வழியில் நடத்த தடியைப் பயன் படுத்துவது போல..மக்களைக் காத்து நல்வழிப்படுத்தக் கடவுள் தடியெடுப்பதில்லை.மக்கள் தங்களைப் பாதுகாத்து முன்னேற அறிவைத் தந்துள்ளார்.நாம் நல்ல், மங்களகர விஷயங்களில் ர்வ்வளவு அதிகமாகவோ, அல்லது குறைவாகவோ ஈடுபடுத்திக் கொள்கிறோமோ அதே விகிதத்தில் நமது விருப்பங்கள் அதிகமாகவோ, குரைவாகவோ நிறைவேறும்.இதில் சந்தேகம் இல்லை.ஒருவன் வேதங்கள் அனைத்தும் கற்றுத் தேர்ந்த பண்டிதனாயிருப்பான்.ஆனால், அதே சமயம் அவன் மோசடி செய்து ஏமாற்றுபவனாக இருக்கலாம்.அவனை வேதங்கள் பாவத்திலிருந்து காப்பாற்றாது.பறவைகள் இறக்கை முளைத்ததும் பழைய கூட்டை மறந்துவிடுவது போல அத்தகைய பாவியை இறுதி காலத்தில் அவனது வேத அறிவு கை விட்டுவிடும்..

குடிப்பழக்கம், சண்டை போடுதல், மனிதர்களுடன் விரோதம், கணவன் மனைவி இடையே கலகம் மூட்டுதல், உறவினர்களைப் பிரித்து பிளவு உண்டாக்குதல், ராஜத்துரோகம், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே தகராறு விளைவித்தல் போன்ற செயல்கள் செய்வதை விட வேண்டும்.

முகம், கை பார்த்து சோதிடம் சொல்லுதல், போலி எடைக்கல் வைத்து ஏமாற்றும் வியாபாரி அல்லது திருடி விற்பவர், மோசடிப் பேர்வழி, மருத்துவர், எதிரி, நண்பர், நடிகர் இவர்கள் ஏழு பேரும் சாட்சியம் சொல்ல தகுதியற்றவர்கள் ஆவார்கள்...பிறர் இல்லத்திற்கு தீ வைப்பவர், பிறரை விஷம் வைத்து கொல்பவர், விலை மாதர்களை ஏற்பாடு செய்யும் தரகர்,சாராய வியாபாரி, கோல் மூட்டுபவர்,ஆயுதங்கள் உற்பத்தி செய்பவர், காட்டிக் கொடுப்பவர், சதி செய்து நண்பருக்கு துன்பம் விளைவிப்பவர், பிறர் மனைவியை நாடுபவர், கருச் சிதைவு செய்து வைப்பவர், குருவின் மனைவியைக் கெடுப்பவர், கள் குடிக்கும் அந்தணர், குரூரமாக பிறரை ஏசுபவர், பழைய விரோதத்தைக் கிளரி விடுபவர், நாத்திகர்கள், வேதங்களை பழிப்பவர்கள், பேராசைப்பட்டு பணம் பிடுங்கும் புரோகிதர், உரிய வயதிற்குள் பூணூல் அணியாதவர், பசுக்களை கொல்பவர்,அடைக்கலம் புகுந்தவரைக் கொபவர்,இவர்கள் எல்லாம் அந்தணர்களை கொலை செய்யும் பாவிகள் ஆவர்.

(இது நடந்த காலகட்டத்தி ஞாபகம் கொள்ள வேண்டும்.அந்தணர் என்போர் சான்றோர் என வள்ளுவர் சொன்னதையும் நினைவில் கொள்ள வேண்டும்)

அந்தணர் என்போர் அறிவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்

அனைத்து உயிர்களிடத்தும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுபவர் ஆவார்

.இரவுநேரத்தில் தீக்குச்ச்யைக் கொளுத்தினால்தான் வெளிச்சம் கிடைக்கும்..பொருள்கள் கண்ணூக்குத் தெரியும்.அதுபோலவே ஒருவன் செய்யும் செயல்கள் மூலமே, அவன் எவ்வளவு உயர்ந்தவன் என அறியலாம்.அவன் நடந்து கொள்ளும் விதத்தால் எவ்வளவு பண்பாளன் எனத் தெரியும்.ஆபத்தான சூழ்நிலையில் ஒரு தலைவனை அடையாளம் காணலாம்.எதிர்ப்பான பொருளாதாரச் சூழ்நிலையில் ஒருவனின் வீரம் தெரியும்.நமக்குத் துன்பம் ஏற்படுகையில்தான் யார் நண்பர், யார் எதிரி எனத் தெரியும்.

முதுமை , நமது அழகையும்,ஆசை பொறுமையையும் சீர்குலைக்கும்.சாவு நம் உயிர் மூச்சை நிறுத்திவிடும்.பொறாமை நன்னெறியில் செல்வதைத் தடுக்கும்.கோபம் செல்வத் திமிரையும், தீயோர் நட்பையும், நமது நன்னடத்தையையும் பாதிக்கும்.காமம் மான உணர்வை மரத்துப் போகச் செய்யும்.கர்வமோ அனைத்தையுமே அழித்துவிடும்.

கோபக்காரனைப் பார்த்து அதிர்ஷ்டம் புன்னகைக்காது.கெட்ட நோக்கம் உள்லவர்களுக்கு நண்பர்கள் உதவ மாட்டார்கள்.குரூரமானவர்களைப் பெண்கள் புறக்கணிப்பர்.மேலோட்டமாக ஈடுபாடு உள்ளவனுக்கு படிப்பு ஏறாது.காமம் மிக்கவன் வெட்கம் கெட்டவனாக இருப்பான். சோம்பேறிக்கு வாழ்க்கை வசதி கிடைக்காது.மன உறுதியுடன் செயலாற்றாதவன் எதையும் சாதிக்க இயலாது.

நல்ல மங்களமான செயல்களின் மூலம் செல்வம் ஏற்படும்.திறமையின் மூலம் அது வேரூன்றும்.உழைப்பின் மூலம் அது விரிவடையும்.மனக்கட்டுப்பாடுடன் வாழ்ந்தால் அது நிலைத்து நிலைபெறும்.

இனி கோபம்பற்றியும், நட்பு பற்றியும் வள்ளுவர் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம்

நட்பு பற்றி..

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் கலைவதாம் நட்பு

நாம் அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவுகையில் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனை சரிசெய்ய உதவுகிறதோ அதுபோல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்க துடித்துச் செல்வதே நட்புக்கு இலக்கணமாகும்

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்

ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், கோபத்தைக் கைவிட வேண்டும்.அல்லையேல், அந்தக் கோபம் அவனையே அழித்துவிடும்

இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை

எல்லையற்ற கோபம் கொள்பவர் இறந்தவர்க்கு ஒப்பாவர்.சினத்தைத் துறந்தவர் துறவிக்கு ஒப்பாவர்

Sunday, December 13, 2015

28_-விதுரர் சொன்ன கதை (தொடர்ச்சி)



அதற்கு பரஹம்சர் "அரசே! ஒருவர் தன் மகனுக்குத் தன்னிடம் உள்ள அனைத்து செய்வங்களையும் கொடுக்கலாம்.ஆனால், மகனுக்கும், மற்றவர்க்கும் தகராறு ஏற்பட்டு விவாதம் எழுந்தால் உண்மையான பதிலைக் கூற வேண்டும்" என்றார்.

பிரகலாதர், "முனிவரே! ஒருவன் முழு உண்மையையோ, பொய்யையோ பதிலாகக் கூறாவிடின் என்ன பாவம் செய்தவனாகிறான்? அவனுக்கு என்ன கஷ்டம் ஏற்படும்?" என வினவினார்.

"தர்மநெறி பற்றி ஒருவரிடம் கேட்டால் சரியான பதில் தர வேண்டும்,வழி தவறிய கழுதை அலைவதைப் போல சுற்றி வளைத்துப் பேசக் கூடாது.அவ்வாறு சொல்பவன் அறநெறியிலிருந்து வீழ்பவன் ஆகிறான்.அப்படிப்பட்டவன், அரசன் எனில், அவன் தன் நாட்டையும், குடிமக்களையும் இழந்தவன் ஆகிறான்.ஆற்றங்கரையில் உள்ள மரங்கள் வெள்ளம் பெருக்கெடுத்தால் வீழ்ந்துவிடும்.அதுபோல அறநெறியை அறிந்திருந்தும் மௌனமாய் இருப்பவரும்,அதுபற்றி சிந்தித்தும் கருத்தை வெளியிடாதவனும் அழிந்து போவார்கள்.ஒரு சபையின் கூட்டத்தில் சிலர் தவறாக நடந்தால் அவர்கள் கண்டிக்கப் பட வேண்டும்.அல்லையேல்,பாதி பாவம் சபைத்தலைவரைச் சேரும்.மீதியில் கால் பாகம் தவறிழைத்தவரையும், எஞ்சியுள்ள கால் பாகம் கூட்டத்திற்கு வந்து மௌனமாய் இருந்தவர்களையும் சாரும். (இவ்விடத்தில்..பாஞ்சாலி சபையில் அவமானப்பட்டபோது, விதுரர்,விகர்ணன் தவிர பீஷ்மர் உடபட மௌனம் காத்த அனைவரும் தவறிழத்தவர்கள் என்பதை நினைவுக்கு வருகிறது).

இதற்கு மாறாக குற்றம் செய்தவர்கள் கண்டிக்கப் பட்டால் சபையின் தலைவர் பாவமற்றவர் ஆகிறார்.சபையிலுள்ளோர் பாவமும் நீங்கும்.எல்லாப் பாவமும் கூற்றமிழைத்தவரையேச் சாரும்." என்றார் பரஹம்சர்.

பின் பிரகலாதர், " முனிவரே! அறியாமை காரணமாகவோ அல்லது சுயநலத்தாலோ தூண்டப்பட்டு ஒருவன் பொய்யான பதிலைச் சொன்னாலவன் நிலை என்ன? அவன் எத்துன்பத்தை அனுபவிப்பான்?" என வினவினார்.

கணவன் இன்னொருத்தியை மணந்து கொண்டால் முதல் மனைவியும், சூதாட்டத்தில் தோற்றவனும், கவலைகளால் நசுக்கப்பட்டவனும் இரவு நேரத்தில் தூங்காமல் புலம்பிக் கொண்டிருப்பார்கள்.அதுபோலவே ஒருவன் தனக்குத் தெரிந்துள்ள உண்மையை தெளிவாகவும், துணிச்சலாகவும் பேசாவிடில் வாழ்நாள் முழுதும் துயருடன் கழிப்பான்.

ஒரு நகரினுள் நுழையமுடியாது தடுக்கப்பட்டவனும், நகருக்கு வெளியே இருக்க நேர்ந்து பட்டினி கிடப்பவனும், கண்ணெதிரே எதிரிகளையேக் காண்பவனும் , இரவு நேரத்தில் தூங்க முடியாது புலம்பிக் கொண்டிருப்பர்.அதுபோல ஒருவன் தான் அறிந்த உண்மையைத் துணிச்சலாக வெளியிடாவிடின் வாழ்நாளை துயருடன் கழிப்பர்

ஒருவன் தான் வளர்க்கும் விலங்கிற்காக (ஆடு போன்றவை) பொய் சொன்னால் அவன் முன்னோர்களில் ஐவர் நரகத்தில் தள்ளப்படுவர்.தனது பசுவிற்காகப் பொய் சொன்னால் பத்து முன்னோர்களும், தனது குதிரைக்காகப் பொய் சொன்னால் நூறு முன்னோர்களும் நரகத்தில் தள்ளப்படுவர்.தனது வேண்டிய மனிதர்களுக்காகப் பொய் சொன்னால் ஆயிரம் முன்னோர்கள் நரகத்தை அடைவர்

செல்வத்தை அடைய பொய் கூறுபவன், தன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும், எதிர்காலத்தில் பிறக்கப் போகிறவர்களுக்கும் அழிவு ஏற்படச் செய்கிறான்.நிலம் சம்பந்தமாய் பொய் சொன்னால் தன்னிடம் உள்ளவையும் தன்னைச் சார்ந்தவையும் எதுவும் மிஞ்சாமல் அழிந்துவிடும்.ஆகவே நிலம் (ராஜ்ஜியம்) பற்றிப் பொய் பேசக்கூடாது.,

பரஹம்சர் சொன்னவற்றைக் கேட்ட பிரகலாதர் விரோசனன், சுதன்வன் இருவரின் கேள்விக்கு தீர்ப்பு சொல்ல ஆரம்பித்தார்.

விரோசனனைப் பார்த்து, "விரோசனா! சுதன்வனின் தந்தை அங்கிரச முனிவர் என்னைவிட உயர்ந்தவர்.சுதன்வனின் தாயார் உன் தாயாரைவிட உயர்ந்தவர்.எனவே சுதன்வனும் உன்னைவிட உயர்ந்தவர் ஆகிறார்.அவர் உன்னை பந்தயத்தில் வென்று விட்டார். உன் உயிரப் பணயம் வைத்துப் போட்டியிட்டதால் சுதன்வன் உன் உயிருக்கு உரைமையாளர் ஆகிறார்" என்றார்.

பின் சுதன்வனைப் பார்த்து, "சுதன்வரே! தயவு செய்து விரோசனின் உயிரை அவனுக்குத் திருப்பித் தாருங்கள்" என்றார்.

சுதன்வன், "பிரகலாதரே1 உங்கள் மகன் போட்டியில் தோற்றதால் பணயமாக வைத்த உயிர் மீதான உரிமையை இழந்துவிட்டார்.ஆனால் நீண்கள் தர்மத்தையே கடைப்பிடிக்க முடிவெடுத்தீர்கள்.சுயநலத்திற்குக் கூட நீங்கள் பொய் சொல்ல வில்லை.நீங்கள் சத்தியத்தைக் கூறியதற்காக உங்கள் மகனை உங்களுக்கேத் திருப்பி அளிக்கிறேன்.விரோசனனின் உயிர் மீதான என் உரிமையைத் திருப்பித் த்ந்து விட்டேன்.நான் உயர்ந்தவன் என்பதை ஒப்புக் கொண்டுவிட்டதால் கேசினியின் முன் விரோசனன் என் கால்களைக் கழுவ வேண்டும்" என்றார்.

(சாதி, மதங்கள், உயர்ந்தவன் .தாழ்ந்தவன் ஆகியவை ஒழிந்துவரும் இக்காலத்தில்...மேற்கண்ட கதை..அந்தக் காலக்கட்டத்தில் சொல்லப்பட்டது என்பதி நினைவில் கொள்க)

இனி வள்ளுவர்

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி

ஒரு பக்கமே சாய்ந்துவிடாமல் நாணயமான தராசுமுள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்


Saturday, December 12, 2015

27-விதுரர் சொன்ன கதை



விதுரர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த திருதராஷ்டிரர் அவரிடம், "விதுரா! நீ அறிஞன்.இதுவரை எனக்குச் சொன்னதைப் போன்ற அறிவுரைகளை மேலும் சொல்வாயாக.உன் சொற்கள் நற்பண்பை வலியுறுத்துகின்றன.உலக நன்மைக்கான பல விஷயங்களைக் கூறினாய்.அவை உண்மை.ஆனாலும், என் மனம் மேலும் கேட்க விழைகிறது" என்றார்.

விதுரர் கூறலானார்...

புனித நதிகளீல் நீராடினால் நமக்கு என்ன புண்ணியம் கிடைக்குமோ அதற்கு சமமான புண்ணியம், எல்லா உயிரினங்களையும் சமமாக பார்ப்பதிலும் கிடைக்கும்.ஆகவே சம நோக்கு வேண்டும்.

கௌரவர்கள், பாண்டவர்கள் இருவரையும் சமமாக உம் புதல்வராக நினையுங்கள்.இதனால் உங்கள் புகழ் ஓங்கும்.சமநோக்கு என்ற புண்ணியம், இறந்தபின் சுவர்க்க வாழ்வை அளிக்கும்.எவ்வளவு காலம் வரை ஒரு மனிதரின் புகழும், புண்ணியமும் போற்றப்படுகின்றனவோ..அவ்வளவு காலம் சுவர்க்கத்திலும் அவனுக்குக் கௌரவம் கிடைக்கும்.இதை விளக்க பழைய கதை ஒன்றைக் கூறுகிறேன்....

கேசினி என்ற ராஜகன்னிகையால் தூண்டப்பட்டு பிரகலாதன் மகனான விரோசனன், அங்கிரச முனிவரின் புதல்வன் சுதன்வனுடன் விவாதம் செய்து பேசிய கதை இது.

கேசினி அழகியாவாள்.அவள் தலைசிறந்த இளைஞன் ஒருவனைக் கணவனாக அடைய விரும்பினாள்.இதற்கான சுயம்வரம் நடத்த முடிவெடுத்தாள்.அவளை மனைவியாக டையும் நோக்கில் விரோசனன் சுயம்வரத்திற்கு வந்தான்.அவன் தைத்திய இனத்தைச் சேர்ந்தவன்.கேசினி அவனிடம் கேட்டாள்.(காசியமுனிவர் தொடங்கியது தைத்திய இனம்.மனைவி திதி.இவர்களது மக்ன்தான் இரண்யன்.இரண்யனின் மகன் பிரகலாதன்.பிரகலாதனின் மகன் விரோசனன்)

"விரோசனரே! அந்தணர்கள் உயர்ந்தவர்களா? தைத்தியர்கள் உயர்ந்தவர்களா? சுதன்வன் ஏன் சுயம்வரத்திற்கு வரவில்லை?"

இதற்கு விரோசனன், "கேசினி...பிரஜாபதியின் வம்சமான நாங்கள் அந்தணர்களைவிட உயர்ந்தவர்கள்.அதுமட்டுமல்ல....எல்லாரையும்விட நாங்கள் உயர்ந்தவர்கள்.இந்த உலகு எங்களுடையது.தேவர்கள், அந்தணர்கள் யாரும் எங்களுடன் ஒப்பிடத் தகுந்தவர் அல்ல"

கேசினி - விரோசனரே! சுதன்வன் விடியற்காலம் வரக்கூடும்.நாம் காத்திருப்போம்.உங்கள் இருவரையும் கண்டு ஒப்பிட விரும்புகிறேன்

 அன்று இரவு கழிந்தது.மறுநாள் சூரியன் உதிக்கும்போது சுதன்வன் சுயம்வர மண்டபத்திற்கு வந்தான்.விரோசனன், கேசினி இருந்த இடத்தை அடைந்தான்.

சுதன்வனைப் பார்த்ததும் கேசினி எழுந்து வரவேற்று இருக்கை அளித்தாள்.பாதபூஜை செய்ய தண்ணீர் எடுத்து வந்தாள்.இதர பூஜைக்கான பொருட்களையும் கொணர்ந்தாள்.

சுதன்வன், விரோசனனைப் பார்த்து, "பிரகலாதனின் மகனான் நீ தங்க இருக்கையில் அமர்.நான் அந்தணன்.எனக்கு சாதா இருக்கைப் போதும்.அந்தத் தங்க இருக்கையை ஒருமுறை தொடுவதுடன் நிறுத்திக் கொள்கிறேன்.நான் உனக்கு நெருக்கமானவன்.ஆயினிம், சரி சமமாக அமர்வது பொருந்தாது" என்றான்.

அதற்கு விரோசனனும், "ஆம்.எனக்கு சமமாக அமர தகுதியற்றவன் நீ.மரப்பலகை, புல், மான் அல்லது புலித்தோல் ஆகியவையே உனக்குச் சரி" என்றான்.அதற்கு சுதன்வன் "ஆம்.நீ சொல்வது சாஸ்திரப்படி சரி.தந்தையும், மகனும் சமமாக உட்காரலாம்.இரு அந்தணர்கள், இரு சத்திரியர்கள், இரு வைசியர்கள், இரு நான்காம் வருணத்தார் சமமாக உட்காரலாம்.ஆனால், வெவ்வேறான இருவர் சமமாக அமரக் கூடாது. உன் தந்தை என்னை உயர்ந்த ஆசனத்தில் அமர்த்தி உபசரிப்பார்.தாழ்ந்த இருக்கையைப் போட்டுதான் தான் அமர்வார்.நீ அரண்மனையில் ஆடம்பர சூழ்நிலையில் வளர்ந்தவன்.உனக்கு இதெல்லாம் தெரியாது" என்றான்.

விரோசனன் அதற்கு, "எங்களிடம் உள்ள தங்கம், கால்நடைச் செல்வங்கள், குதிரைகள் ஆகிய அனைத்தையும் பணயமாக வைக்கிறேன்.ஆற்றல் மிக்க யாரேனையும் நம்மில் உயர்ந்தவர் யார் எனக் கேட்டுப் பார்ப்போம்' என்றான்

அதற்கு சுதன்வன், "உன்னிடமுள்ள ஆடு, மாடு, குதிரைகள், தங்கம் அனைத்தையும் நீயே வைத்துக் கொள்.நான் என் உயிரை பணயமாக வைக்கிறேன்" என்றான்.
அதற்கு, விரோசனனும், தன் உயிரையும் பணயம் வைக்க தயாராய் இருப்பதாய்க் கூறினான்.ஆனால், இது குறித்து தேவர்களையோ, மனிதர்களையோ அணுக தனக்கு விருப்பமில்லை என்றான்.

உடன் சுதன்வன் "நாம் உயிரை பணயமாக வைத்து விட்டதால் இருவரும் உன் த்ந்தை பிரகலாதரிடம் கேட்போம்' என்றான்.இருவரும் பிரகலாதரிடம் சென்றனர். .

இவர்கள் வருவதைப் பார்த்த பிரகலாதர், "இவர்கள் இருவரும் ஒற்றுமையாய் இருந்ததில்லை.இப்போதும் சீற்றத்துடன் வருவது போலத் தெரிகிறது.என்ன சேதியாய் இருக்கும்" என யோசிக்கலானார்.

பின் அவர் விரோசனனைப் பார்த்து, "இதுவரை நீங்கள் நட்புடன் பழகியதில்லை.இப்போது சுதன்வன் உனக்கு நண்பன் ஆகிவிட்டானா?" என்றார்.

அதற்கு விரோசனன், "தந்தையே! நாங்கள் எங்கள் உயிரை பணயமாக வைத்து ஒரு பந்தயத்தில் இறங்கியுள்ளோம்.நாங்கள் கேட்கப்போகும் கேள்விக்கு பொய் கலக்காது உண்மையைச் சொல்லுங்கள்" என்றான்.

பிரகலாதரோ , அதற்கு முன்னதாக தனக்கு ஒரு கடமை உள்ளதாகக் கூறி, "சுதன்வன் அந்தண அதிதி.மரியாதைக்குரியவர் ஆகவே அவரை.வரவேற்கத் தண்ணீரும், பானமும், தானம் அளிக்க ஒரு வெள்ளைப் பசுவும் தயாராக உள்ளது' என்றார்.

சுதன்வனோ, "பிரகலாதரே! நீங்கள் கூறிய சொற்களே போதும்.எங்கள் கேள்விக்கு உண்மையான பதிலைச் சொன்னால் போதும்" என்றான்.

"அந்தணர் உயர்ந்தவரா? விரோசனன் உயர்ந்தவனா? ' என்றான் சுதன்வன்

பிரகலாதர் சொன்னார், "உமது கேள்விக்கு சரியாக விடையளிக்கும் திறமை, தர்ம சாஸ்திரங்களில் கரை கண்டவர்களான கல்மாஷர்,கபிலர்,வியாசர், லோகிதர் ஆகியவரிடம் கூடக் கிடையாது.அந்தணர், சத்திரியரில் யார் உயர்ந்தவர் என்பது கத்தி முனையைவிட கூர்மையான கேள்வி.தர்மநெரி சம்பந்தப்பட்டது.அந்தணரே1 ஒருபுறம் என் ஒரே மகன்,இன்னொரு புறம் நீங்களே நேரில் வந்துள்ளீர்கள்.என்னைப் போன்ற ஒருத்தரால் உங்கள் பிரச்னைக்கு எப்படி பதில் அளிக்க முடியும்?" என்றார்.

சுதன்வனோ, "பரவாயில்லை.என் கேள்விக்கு நீங்களே பதில் கூறுங்கள்.ஆனால் அது உண்மையானதாய் இருக்க வேண்டும்.பொய்யான பதிலைச் சொன்னால் உங்கள் தலை வெடித்துவிடும்."என்றார்.

அப்போது, அங்கே..பரமஹம்சர் பிரிவைச் சேர்ந்த தெய்வீகமான ஒரு முனிவர், அதிதி வம்சத்தைச் சேர்ந்த ஒருவருடன் வந்தார்.

அவரிடம், பிரகலாதார், "முனிவரே! இந்த இருவரில் ஒருவர் என் மகன்.மற்றொருவர் எனக்குத் தெரிந்த அந்தணர்...இவர்களிடையே தகராறு ஒன்று உள்ளது.நான் நடுவராக இருக்க வேண்டியுள்ளது.உண்மையை எப்படி நிலைநாட்டுவது?' என்றார்.

Saturday, November 21, 2015

26 -தருமரின் நற்பண்புகள்


ஒருவன் தோல்வியோ, அவமானமோ அடைய வேண்டும் என்று விதியிருந்தால் அவர்களின் அறிவு மழுங்கிப் போய்விடும்.அறிவு பழுதுப்பட்ட நிலையில் அந்த மனிதன் கீழ்த்தரமான செயல்களைப் புரியத் தொடங்கி விடுவான்

அறிவு மயங்கி அதனால் வீழ்ச்சியடையும் நேரம் வந்து விட்டால், ஒருவனுக்கு அவன் செய்யும் அநியாயமெல்லாம், நியாயமாகத் தெரியும்.தனது அநியாயச் செயலை நியாயமானது என மனதில் பதிந்துவிடச் செய்வான்

பரதகுலத்தில் பிறந்த திருதராஷ்டிரரே! உமது புதல்வர்கள் பாண்டவர்களிடம் பகைமை உணர்வு கொண்டுள்ளதால் அவர்களிடம் புத்தித் தெளிவு இல்லை.அவர்கள் எத்தகையவர்கள் என நீங்களும் அறியவில்லை

தருமர், மூவுலகும் ஆளத்தகுதியுடையவர். அதற்கான அனைத்து அரச லட்சணங்களும் உடையவர்.அப்படியிருந்தும் உங்களிடம் பணிவுடன் நடந்து கொள்கிறார்.ஆகவே அவரை அமைச்சராக்கி விடுங்கள்

தருமரிடம், ஆற்றலும்,விவேகமும் சிறப்பாகக் காணப்படுகின்றன.நற்பண்புகள், உலக நன்மைக்கான அனைத்து நடவடிக்கைகள் ஆகியவற்றை நன்கு அறிந்துள்ளார்.ஆகவே, உங்கள் மகன்களைவிட தருமரே அரசப் பதவிக்கு அதிக உரிமையுள்ள வாரிசு ஆவார்..

நல்ல ,மனிதர்களில் முதல்வரானவர் தருமர்,அவருக்கு விளைவிக்கப்பட்ட கெடுதல்களையெல்லாம் பொறுத்துக் கொண்டு வருகிறார்.அவர், கனிவானவர்.மென்மையானவர்.உங்களிடம் மரியாதை உடையவர்.இதுவே அவர் பொறுமைக்குக் காரணம்

இவ்வாறு விதுரர் கூறி முடித்தார்.

Friday, November 20, 2015

25- பேசும் சொற்கள்



பேச்சு, உண்மையாக, எளிமையாக இருப்பது கடினம்.அதே நேரம் புதுமையாகவும், கேட்போரை கவரும் விதமாகவும், பொருள் நிறைந்ததாகவும் இருப்பதும் கடினமே

சிறப்பாக, இனிமையாக நிகழும் சொற்பொழிவு பல நன்மைகளை விளைவிக்கும்.ஆனால் சரியாக அமையாத கடுமையானப் பேச்சு பெரிய தொந்தரவுகளைக் கொடுக்கும்

வில்லம்புப்பட்ட புண் ஆறிவிடும்.கோடாரியால் வெட்டப்பட்ட காட்டிலுள்ள மரங்கள் மீண்டும் துளிர்க்கும்.ஆனால், புண் படும் படி பேசும் காயம் ஆறவே ஆறாது.ஆறினாலும் வடு இருக்கும்

காது வடிவிலான அம்பு,குழல் வழியே வீசப்படும் அம்பு, இரும்பு அம்பு ஆகியவை  உடலில் பாய்ந்து விட்டாலும் அவற்றை அவ்விடத்திலிருந்து எடுத்துவிடலாம்.ஆனால். கடுஞ்சொல் என்னும் அம்பு தைத்துவிட்டால் அதை எடுப்பது முடியாது.அது இதயத்தில் ஆழமாகப் பதிந்து துன்புறுத்திக் கொண்டே இருக்கும்

ஒருவர் வாயிலிருந்து புறப்படும் சொல் அம்புகள், மற்றவரைத் தாக்கி அவர்களை இரவும், பகலும் வருந்தச் செய்யும்.ஏன், சில வேளைகளில் உயிரையேப் பறிக்கும் அளவிற்கு ஆபத்து நிறைந்தவை.ஆகவே, ஒரு அறிவாளன் அத்தகைய அம்புப் போன்ற சொற்களை பிறர் மீது மறந்தும் கூறாது த்ன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இனி வள்ளுவர்..

யாகாவா ராயினும் நாக்காக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

ஒருவர் எதைக் காத்திட முடியாவிடினும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும்.இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்திற்குக் காரணம் ஆகிவிடும்

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

நெருப்பு சுட்ட புண் கூட ஆறிவிடும்.ஆனால், வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்களால் விளைந்த துன்பம் வடுவாய் இருந்து ஆறவே ஆறாது

Thursday, November 19, 2015

24-ஐம்புலன்கள்



கிரகங்களின் காரணமாய், நட்சத்திரங்கள் பாதிக்கப் படுகின்றன.அதுபோலவே எக்கட்டுப்பாடும் இன்றி ஐம்புலன்களிடம் தங்களுக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொள்வதில் மூழ்கியிருப்பதால் உலகம் துன்பத்திற்கு ஆளாகிறது.(கிரகங்களின் சுழற்சியால்..சில நட்சத்திரங்களின் கீழ்ப் பிறந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர்)

வளர்பிறைக் காலத்தில் நிலவு மேன்மேலும் வளர்ந்து ஒளி கூடுகிறது.அதுபோலவே ஐம்புலன்களின் ஆசை ஒருவனை வென்று விட்டால் அவனது துயரங்கள் அதிகமாகிக் கொண்டே செல்லும்

அரசன் தன் ஐம்புலன்களை வெல்ல இயலவில்லை எனில் அவனால் தன் அமைச்சர்களை வசப்படுத்த இயலாது.அப்படிப்பட்ட அரசன் எதிரிகளை வெல்ல முடியாது.உதவ யாருமில்லாமல் அவன் அழிவான்.

ஆனால், அதற்கு மாறாக ஐம்புலன்களையும் தனக்கு எதிரியாகக் கருதி வென்று...தன் மனதைக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தால் அவனால் தன் அமைச்சர்களை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.அவர்கள் துணையுடன் வெளிப்பகையை வெல்ல முடியும்

ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி, அமைச்சர்களையும் தன் வசப்படுத்தி, குற்றவாளிகளை சரியாகத் தண்டித்து நன்கு ஆராந்து தன் கடமைகளைப் புரிந்து கொண்டு உறுதியுடன் இருக்கும் அரசன் செல்வச் செழிப்புடன் இருப்பான்

மனித உடல் தேர் போல.மனம் தன் சாரதி.ஐம்புலன்களும் குதிரைகள்.இந்தக் குதிரைகளை வசப்படுத்தி நன்கு பழக்கினால் அவன் அறிஞன் ஆவான்.அவன் தேரில் ஆபத்தின்றி இன்பமாய் வாழ்க்கைப் பயணம் செய்யலாம்

குதிரைகள் கடிவாளம் பூட்டப்படாது, பயிற்சி பெறாததாகவோ. அடங்காதவையாகவோ இருந்தால்..ஆபத்து.அவை சமயத்தில் தேரைக்கவிழ்த்து, தேரில் இருப்போரையும் வீழ்த்தி மரணிக்கச் செய்யும்.அதுபோலவே புலன்களை நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்காவிடின் அவை நாளாக ஆக நம் உடலையும், உயிரையும் அழித்து விடும்.

புலன்களை வசப்படுத்தாமல் அதன் போக்கில் வாழ்பவன் முட்டாள்.அவன் நல்ல விஷயங்களையும் கெடுதல் என எண்ணி புறக்கணித்துவிடுவான்.கெட்ட விஷயங்களை நல்லதாக எண்ணுவான்.துயரத்தை ஏற்படுத்தப் போகும் புலன் வழி திருப்தியை நிஜமான இன்பம் என ஏமாறுவான்

ஒருவன் நல்குணத்தையும்,நல்வழியையும் கைவிட்டுப் புலன்களின் தூண்டுதல்படி அலைந்தால் அவனை விட்டு செல்வம் நீங்கும்.அவன் ஆயுள் குறையும்.அவன் வாழ்க்கை வசதிக:ள் விலகும்.மனைவியும் கை விடுவாள்

ஒருவன் ஏராளமான செல்வத்திற்கு அதிபதியாக இருக்கலாம்.ஆனால் புலனாசைகளுக்கு அடிமையாகி விட்டால் அந்த பலகீனமே அவனை தன் அந்தஸ்து, ஐஸ்வரியம் ஆகியவற்றை இழந்து தாழ்ந்த நிலைக்கு தள்ளப்படுவான்.

மனிதன், தன் மனம்,அறிவு,புலன்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.இதன் மூலம் தன் ஆத்மாவின் தரிசனம் கிடைக்கும்.ஆத்மாவை உணர்ந்து கொண்டு அதன் மூலம் பரமாத்வாவைத் தேட வேண்டும்.ஆத்மாவே ஒருவனுக்கு நண்பன்,புலன்களை வசப்படுத்தாதவன் அந்த ஆத்மா என்னும் நண்பனின் விரோதி ஆகிவிடுகிறான்

ஒருவன் புலன்களை அடக்கித் தன் ஆத்மாவை வசப்படுத்திக் கொள்ள வேண்டும்.ஆத்மா அவனுக்கு உண்மையான நண்பனாய் வழிகாட்டும். புலன்களை வசப்படுத்திக் கொண்டால்,ஆத்மா அவனுக்கு நெருங்கிய நண்பனாய் வழி காட்டும்.புலன்களை வசப்படுத்தா விட்டால் அதே ஆத்மா அவனுக்கு பரம எதிரி ஆகி விடும்.
(உடல், மனம், உயிர், புலன்கள்,அறிவு, தான் எனும் உணர்வு ஆகியவற்றின் அம்சங்கள் சேற்ந்ததே ஆத்மா எனப்படுவது)

மீன் பிடிக்க வலை வீசப்படுகிறது.ஆனால், இரு பெரிய மீன்கள் அந்த வலையைத் தாக்கினால் வலை அறுந்து போகும்,அதுபோலவே காமம், சினம் ஆகிய தீய குணங்கள் ஆபத்தானவை.அவை நம் விவேகத்தை நாசமாக்கிவிடும்.

வாழ்க்கையில் நாம் வெற்றி பெற விரும்பினால் அறநெறியை பின்பற்றுவதுடன் அல்லாது...உலக நன்மையையும் கவனத்தில் கொண்டு அதற்குப் பயன் தரும் விதத்தில் தேவையான ஏற்பாடுகளைத் தொடங்க வேண்டும்.அப்போது அவை மூலம் நமக்கு மகிழ்ச்சி விளையும்

நம் மனதில் காமம், சினம், பேராசை, அறியாமை, கர்வம் என ஐந்து பகைவர்கள் வசிக்கின்றனர்.அவர்களை முதலில் வென்றால், வெளியில் இருக்கும் எதிரிகளை வெல்லலாம்

ஐம்புலன்களை வசப்படுத்த முடியாது...புலனாசைகளுக்கு ஆசைப்பட்டு பல மாமமன்னர்கள் அடிமையாகி இருக்கின்றனர்.பிறநாடுகளை வெல்ல வேண்டும் என்ற பேராசையாலும்..இதர அரச போகங்களுக்கு ஆசைப்பட்டும் அவர்கள் விரும்பத்தகாத நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளனர்.

ஈரமான விறகு எரியாது.ஆனால் உலர்ந்த விறகு எரிகையில் அதனுடன் சேர்ந்து ஈர விறகும் எரியத் தொடங்கும்.நாம் நல்லவர்களாக இருக்கலாம்.ஆனால், தீயோருடன் நட்புக் கொண்டால் அவர்கள் பெறும் தண்டனையை நாமும் அனுபவிக்க நேரிடும்

விறகு எரிய தாமதமாகலாம்.ஆனால் கண்டிப்பாக எரியும்,நல்லவர்கள் தீயோருடன் சேர்ந்து கெட்டுப் போக தாமதமாகலாம்.ஆனால் கெடப்போவது நிச்சயம்.கரி படர்ந்த அறையில் நுழைந்தால் கறை படாது வெளியே வர முடியாது

பொறாமை இல்லாமை,நேர்மையான பேச்சு,உள்ளத் தூய்மை,போதுமென்ற மனம், எரிச்சலூட்டா இனிய பேச்சு,மனக் கட்டுப்பாடு,வாய்மை, மன உறுதி இப்படிப்பட்ட நற்பண்புகளைத் தீயோரிடம் எதிர்பார்க்க முடியாது.

ஆத்ம அறிவு, கோபமற்ற தன்மை,வாழ்க்கையில் உண்டாகும் கசப்பை சகித்துக் கொள்ளல்,அறநெறியில் பிடிப்பு,பேச்சில் எச்சரிக்கை,தானம் செய்வதில் ஆர்வம்..ஆகிய பண்புகளை தீயோரிடம் எதிர்பார்க்க முடியாது.

முட்டாள்கள் அறிவாளிகளை கடுஞ்சொற்களால் விமரிசித்து அவர்கள் மனதை புண்படுத்துகிறார்கள்.இவ்வாறு பழித்தவர்கள் பாவி ஆகின்றனர்.அறிஞர்கள் அச்சொற்களை பொறுத்துக் கொள்வதால், அவர்கள் ஏதேனும் பாவம் செய்திருந்தாலும் அதிலிருந்து விடுபடுகின்றனர்.அவர்கள் செய்த பாவம் அவர்களைத் திட்டிய முட்டாள்களையே போய்ச் சேர்ந்துவிடும்.

வன்முறை செயல்களே தீயோரின் பலம்.தண்டனைப் பற்றிய சட்ட நூல்களே அரசனின் பலம். பண்பும், சேவையும் பெண்களின் பலம்.பொறுமையே சான்றோர் பலம்.

ஐம்புலன்களை அடக்கி ஆளுவதை ஒரே குறளில் வள்ளூவர் சொல்லிவிட்டார்...

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து

உறுப்புகளை ஒரே ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல ஐம்புலன்களையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்

Saturday, October 31, 2015

23- செல்வம்



செல்வந்தர் உணவில் இறைச்சி அதிகம் இருக்கும்.நடுத்தர வர்க்கத்தினர் உணவு நெய்யும், அதனால் தயாரான உணவு வகைகளும் இருக்கும்.ஆனால் ஏழைகள் உணவோ எண்ணெயில் ஆகியவனவாகவே இருக்கும்

ஏழைகளுக்கு எப்போதும் நன்கு பசி எடுத்து, ருசியைத் தூண்டுகிறது. . ஆதலால், அவர்கள் உணவை ரசித்தும்,ஆர்வத்துடனும்,முழுமையாகவும் உண்கின்றனர்.ஆனால், பணக்காரர்களோ பசித்து உண்ணுவதில்லை.ஆகவே, முழுமையாக அனுபவித்து உண்ணும் வாய்ப்பு அவர்களுக்கு அரிதாகும்.

ஏழைகளுக்கு நல்ல சீரண சக்தி உண்டு..மரத்துண்டைக் கூட அவர்களால் செரிக்க முடியும்.ஆனால், பணக்காரனோ, எதிர்ப்பு சக்திக் குறைவால் சரியாகச் சாப்பிட இயலாது தவிப்பர்

அச்சம் மூன்று வகையாகும்.சமூகத்தில், அடித்தள மக்கள் உயிர் வாழ வேலையில்லாமல் போய்விடுமோ என அஞ்சுகின்றனர்.நடுத்தர மக்கள் (வசதி வருமுன்)சாவு வந்துவிடுமோ  என அஞ்சுகின்றனர்.உயர் வர்க்கத்தினர் தங்களுக்கு அவமரியாதையோ, அவமானமோ ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுகின்றனர்

குடிப்பழக்கத்தால் ஏற்படும் போதையைவிட, செல்வ மிகுதியால் ஏற்படும் போதை ஆபத்தானது.செல்வத்தால் ஏற்படும் போதைக்கொண்டவன் பேரழிவு ஏற்பட்ட பின்னரே சுயநினைவு அடைகிறான்.(பணத்திமிர் செல்வம் அழியும் வரை நீடிக்கும்)



22- நன்னடத்தை.....



படிப்பதால் வரும் கர்வம், செல்வ வசதியால் வரும் கர்வம், உயர் குலத்தில் பிறந்ததால் வரும் கர்வம் இம்மூன்று வகை கர்வங்களும் சாதாரண மனிதனைத் திமிராக நடந்து கொள்ள வைக்கும்.ஆனால் நற்பண்புகளைக் கொண்டவன் இந்த மூன்று வகைக் கர்வங்களையும் தன் முன்னேற்றத்திற்குத் தடையாகக் கருதுவான்

நல்லவர்களும், எக்காலத்திலாவது, எதற்காகவாவது தீயவர்களிடம் உதவி கேட்க நேரிடலாம்.உடன் தீயவர்கள் தாங்கள் நல்லவர்கள், உயர்ந்தவர்கள் என கர்வம் கொள்வர்

உத்தமர்களிடம் அனைவரும் அடைக்கலமாகலாம்.சுயக்கட்டுப்பாடும், நற்பண்புகளும் உடையவர்களும் மட்டுமல்ல,தீயவர்களும் அவர்களை அடைந்து ஆதரவும், பாதுகாப்பும் பெறலாம்.ஆனால் தீயவர்கள் நல்லவர்களுக்கு புகலிடம் அளிப்பவராக விளங்க முடியாது.(தீயவர்களையும் நல்லவன் கைவிட ,மாட்டான்.ஆனால் தீயவன், நல்லவர்களுக்கு உதவவும் மாட்டான்.ஆபத்தையும் ஏற்படுத்துவான்)

சிறப்பாக ஆடை அணிபவன் அதற்கு மதிப்பவர்களைக் கவர்ந்து விடுவான்.காலநடை செல்வம் உள்ளவன் உணவு விஷயத்திலான விருப்பங்களை நிறைவேற்றி கொள்வான்.வாகன வசதியைக் கொண்டவன் சாலையை விரைவில் கடக்கும் விருப்பத்தை நிறைவேற்றி கொள்வான்.ஆனால், நன்னடத்தை உள்ள மனிதன் தன் நற்பண்புகள் மூலம் எல்லோரையும் கவர்ந்து அவர்கள் மூலம் தன் விருப்பங்களை நிறைவேற்றி கொள்வான்

ஒருவன் நீண்ட ஆயுள், அதிக செல்வம், அதிக உறவினர் ஆகிய வசதிகளைப் பெற்றிருக்கலாம்.ஆனால், வாழ்க்கையில் நல்ல நடத்தை உயிருக்கு சமமானது.நல்ல நடத்தி இல்லாதவன் ஒருவன் வாழ்க்கையில் நல்ல பயன் பெற முடியாது. 

Thursday, October 29, 2015

21- நெகிழ்தல்



எளிதில் பாலைக் கறக்க விடாத முரட்டுப் பசு முரட்டுத்தனமாக நடத்தப்படும்.எளிதில் பால் கறக்க உதவும் பசு நேசிக்கப்படும்.அதை மக்கள் துன்புறுத்த மாட்டார்கள்.(முதலில் எதையாவது கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்ற நிலை வரின்..முரண்டுப் பிடிக்காதுக் கொடுத்து நல்ல பெயர் வாங்க வேண்டும்)

சூடு படுத்தாமல் வளையக் கூடியதை சூடேற்ற வேண்டிய அவசியமில்லை.உதாரணமாக மரத்தின் கிளைகளைச் சொல்லலாம். அவை தாமாகவே வளையக் கூடியவை.(அறிஞர்களும் தங்கள் செல்வாக்குச் செல்லாத இடத்தில் வளைந்து கொடுப்பர்)

அறிஞர் எனப்படுபவர் குறிப்பிட்ட சூழ்நிலையில் தன்னைவிட வலியவர் முன்னால் வளைந்துக் கொடுப்பர்.(இதைத் தாழ்வாக எண்ணிவிடக் கூடாது.பிறரின் வலிமை அறிந்து நடப்பது விவேகமாகும்)

கால்நடைகள் மேயும் புல் செழிக்க மழையை நம்பியுள்ளன.அரசன், அமைச்சர்களின் ஆலோசனையைச் சார்ந்துள்ளான்.மனைவி, கணவனை நம்பி வாழ்கிறாள்.அந்தணர்கள் வேதங்களை வழிகாட்டியாகக் கொண்டு பணி செய்கின்றனர்

நாம் சத்தியத்தைப் பின் பற்றினால் நம் நற்பண்புகள் காப்பாற்றப் படும்.நாம் அறிவைத் தொடர்ந்து பயன் படுத்தினால் அது குறையாமல் நம்மிடம் நிலைத்து இருக்கும்.நாம் உடலைத் தேய்த்துக் குளித்து தூய்மையாக வைத்திருந்தால் அழகுடன் விளங்குவோம்.நம்  நடத்தை நன்றாக இருந்தால் நம் பரம்பரை நிலைபெற்று வளரும்

தானியங்கள், அவ்வப்போது எவ்வளவு உள்ளன என்பதை அவ்வப்போது  பார்த்தால் அவற்றிற்கு பஞ்சம் ஏற்படாது.குதிரைகளை  லாயத்திலேயே வைத்திருந்தால் நோயுறும்.அவ்வப்போது அவற்றை ஓட்டிச் செல்ல வேண்டும்.பசுக்களை நேரடியாகக் கவனித்து வந்தால் நல்ல அதிகப்படியான பால் தரும்.பெண்கள் உடல் தெரியுமாறு இருக்கக் கூடாது.வறுமையில் உள்ளோரும் கந்தைத் துணியிலாவது உடலை மறைக்க வேண்டும்

ஒருவன் உயர் பரம்பரையைச் சார்ந்தவானாக இருந்தாலும், ஒழுக்கத்தில் குறையுடையவன் ஆனால் அவன் மரியாதைக்குரியவன் அல்ல.அதுபோன்று தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் ஆனாலும் ஒழுக்கத்தின் அடிப்படையில் அவனை மதிக்க வேண்டும்.(குலம் முக்கியமில்லை..குணமே முக்கியம்)

பிறர் பெற்றுள்ள செல்வம், அழகு, வீரம், குலகௌரவம், மகிழ்ச்சியான வாழ்க்கை,அதிர்ஷ்டம், பட்டம், பரிசுகள் ஆகியவற்றைக் கண்டு பொறாமைப்பட்டால் நாம் வாழ்நாள் முழுதும் தீராத நோயாளியைப் போல அவதிப்பட நேரிடும்.

செய்யக் கூடாததாகிய காரியத்திற்கு அஞ்சுபவன், கட்டாயாகச் செய்ய வேண்டிய காரியத்தை செய்யாமல் விட அஞ்சுபவன், குறிப்பிட்ட காலத்திற்கு முன் ரகசியத்தை வெளியிட அஞ்சுபவன் இம்மூவகையினரும் ஒரு போதும் போதைதரும் எப்பொருளையும்  பயன்படுத்தக் கூடாது.(போதை, செய்யக்கூடாததை செய்யவைக்கும்.செய்ய வேண்டியதை  மறக்கச் செய்யும்.ரகசியம் அவனால் காப்பாற்றப் பட முடியாது)

Wednesday, October 28, 2015

20-ஆட்சியாளர்



பெண்கள் ஆண்மையற்றவரை கணவராக அடைய விரும்ப மாட்டார்கள்.அதுபோல குடிமக்களும் தங்களது அரசன் (ஆட்சியாளன்) பயனற்ற முயற்சியில் ஈடுபடுபவனாகவோ, பயனுள்ள செயல்களை தட்டிக் கழிப்பவனாகவோ இருந்தால் அவரை தங்களது தலைவனாக ஏற்க மாட்டார்கள்.

பெண்கள் ஆண்மையற்றவரை கணவராக அடைய மாட்டார்கள்.அதுபோல குடிமக்கள் தங்கள் அரசனுடைய ஆதரவால் அல்லது மகிழ்ச்சியால் ஒரு பயனும் இல்லையென்றாலும்,அவனது கோபத்தால் ஒரு ஆபத்தும் இல்லையென்றாலும் அவனைத் தலைவனாக மதித்து ஏற்கமாட்டார்கள்

சில விஷயங்களுக்கு அதிக முயற்சி தேவைப்படாது.ஆனால், அதனால் பெரிய பயன்கள் ஏற்படக் கூடும்.அத்தகையவற்றை அறிவாளி தள்ளிப் போடாமல் உடனுக்குடன் செய்து முடிப்பான்.

ஒரு அரசன் (ஆட்சியாளர்) வெளிப்பார்வைக்கு ஒன்றும் அறியாதவன் போல அமைதியாகத் தெரியலாம்.ஆனால் அவன் தன்னைச் சுற்றி நடைபெறும் எல்லா விஷயங்களையும் தெளிவாகவும், கூர்மையாகவும் கவனித்துக் கொண்டிருக்கக் கூடும். அத்தகையவரிடம் குடிமக்களும் விசுவாசமாக இருப்பர்

மரமானது பூக்கள் நிறைந்ததாக இருப்பினும் அதிகம் பழம் தராததாக இருக்க வேண்டும்.பழம் தரும் மரமானால், எளிதில் ஏறிப் பறிக்க முடியாத அளவிற்கு உயரமாக இருக்க வேண்டும்.அதன் பழங்கள் அரைகுறையாக பழுத்திருந்தாலும், முழுதாக பழுத்தது போல இருக்க வேண்டும்,இப்படியெல்லாம் இல்லாமல் வாடிய மரம் போல இருந்தால் மக்கள் அது பயனற்றது என வெட்டி வீழ்த்தி விடுவர்.

(ஆட்சியாளர் பழக இனிமையாக இருக்க வேண்டும்.அதே நேரம் வாரி வழங்குபவராக இருக்கக் கூடாது..எல்லோராலும் அணுகப்படக் கூடியவராய் இருக்கக் கூடாது.)

அரசன் (ஆட்சியாளர்) தன் பார்வையாலும், மனதாலும், பேச்சாலும், செயலாலும் உலகத்திற்கு மனநிறைவை ஏற்படுத்துபவராக இருக்க வேண்டும். அத்தகையோரை குடிமக்கள் வழிபடுவர்.

ஒரு அரசன் கடல்வரை பரவியுள்ள நிலத்திற்கு முழுதும் உரிமையாளனாக இருக்கலாம்.ஆனால், மக்கள் அவனுக்குப் பயப்படும் நிலையில் இருந்தால், அவன் அரசு புரிய தகுதியற்றவன் ஆவான்.மக்கள் அவனை விரைவில் கைவிட்டு விடுவர்,(மக்களை பயமுறுத்தி ஆட்சியாளர் மக்கள் நம்பிக்கையைப் பெற முடியாது)

அரசருக்கு ஆட்சி செய்யும் உரிமை பரம்பரை சொத்தாய் கிடைத்திருக்கலாம்.அதற்காக அவன் அநியாய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பதில்லை.அவன் தீய செயல்களைச் செய்தால்...காற்று மேகங்களை சிதறடிப்பது போல நாடு சிதறுண்டு போகக் காரணமாவான்.

பண்டைக் காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வரும் அறநெறி வழிப்படி அரசன் நல்லாட்சி செய்ய வேண்டும்.அத்தகையவனுடைய நாடு செழிப்புடன் விளங்கும்.அந்நாட்டில் மகிழ்ச்சி பொங்கும்

இதற்கு மாறாக அரசன் தன் நற்பண்புகளை விட்டு, அநியாய நடவடிக்கைகளை மேற்கொண்டால், அவனது நாட்டில் வளம், வசதிகள் குறையும்.நெருப்பினால் சருமம் சுருங்கி விடுவதுபோல அவனது நாட்டு எல்லையும் சுருங்கி விடும்.

அரசர்கள் எதிரி நாடுகளை வென்று தாக்க கடுமையாக முயற்சிப்பர்.அதுபோலவே அவர்கள் கடும் முயற்சி செய்து தங்கள் நாட்டையும் பாதுகாத்து செழிப்படையச் செய்ய வேண்டும்.

ஆட்சியை நேர்மையான முறையில் முயற்சித்து அடைய வேண்டும்.ஆட்சியைப் பிடித்த பின்னர் நேர்மையாக ஆள வேண்டும்.நேர்மையாகக் கிடைக்கின்ற ஆட்சியை ஆட்சியாளர் கைவிட மாட்டார்கள்.அந்த அரசாட்சி வாய்ப்பும் அவர்களைக் கைவிடாது.

எங்கும் எதிலும் நாம் சத்தியத்தைத் தேடி அறிய வேண்டும்.பாறையிலிருந்து தங்கத்தைச் சுரண்டி எடுப்பது போல, சத்தியத்தை அறிய முயற்சிக்க வேண்டும்.உளறுகின்ற பைத்தியம், மழலைப் பேசும் குழந்தை ஆகியோரிடம் கூட விஷயங்கள் இருக்கலாம்.ஆகவே யாரையும் அலட்சியம் செய்யக் கூடாது

அறுவடை நேரத்தில், கொஞ்சம் தானியங்கள் வயலிலேயே சிதறிப் போகும்.அதை சேகரித்து, உணவாக்கி சிலர் விரத வாழ்க்கை நடத்து கின்றனர்.அதுபோன்ற சான்றோர்களின், நன்மொழிகளும்,அரிய செயல்களின் விவரங்களும் பல்வேறு இடங்களில் கொட்டிக் கிடக்கின்றன.அவற்றையெல்லாம் சேகரித்து அவற்றின் அடிப்படையில் வாழ வேண்டும்

பசுக்கள் மோப்ப சக்தி மூலம் தொலைவில் உள்ளதையும் அறிந்து கொள்கின்றன. அந்தணர்கள் வேதம் மூலம் கண்ணுக்குப் புலப்படாததை அறிகின்றனர்.அரசர்கள் ஒற்றர்கள் மூலம் தங்கள் பார்வைக்கு அப்பால் நடக்கும் விஷயங்களையும் அறிகின்றன.சாதாரண மக்கள் தங்கள் படுவதைக் கண்டு திருப்தியடைகின்றனர்.

Sunday, October 25, 2015

19-காலம் கனியும் வரை காத்திருத்தல்



அறிவாளி எனப்படுபவன் தான் செய்யும் செயலுடன் தொடர்புடைய சாதக, பாதக அம்சங்களையும், அதனால் ஏற்படும் சாதக, பாதக விளைவுகளையும், மேலும் அச்செயலை நிறைவேற்ற தன்னிடம் ஆற்றல் உள்ளதா? அது தன்னை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லுமா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.பிறகே அச்செயலில் இறங்க வேண்டும்.மேற்கண்டவை அவனுக்கு சாதகமாக இல்லாவிடில் அப்பணீயை எடுத்துக் கொள்ளக் கூடாது

அரசன் (ஆட்சி செய்பவன்) தன் தலைநகர், தன் ஆட்சி ஆகியவற்றின் பாதுகாப்புத் த்ன்மை, நிதி நிலமை, தன் நாட்டு நிலப்பகுதியில் உள்ள நிறை, குறை, த்னது படை ஆகியவற்றின் அதுக பட்ச அளவு ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும்,இவற்றைத் தெரிந்து வைத்துக் கொள்ளாதவர் நீண்ட காலம் ஆட்சியில் நிலைக்கமுடியாது.

அரசன், (ஆட்சி புரிபவன்) தன்னிடம் மேற்கண்டவை சாஸ்திரங்களில் கூறப்பட்ட அளவு போதுமானதா என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும்.அத்துடன், அவர் நற்பண்பு கொண்டவராயும், பொருளாதார அறிவு பெற்றவராகவும் இருக்க வேண்டும்.இப்படிப்பட்ட ஆட்சியாளரின் ஆட்சியை தன் வசம் வைத்திருக்கக் கூடியவர் ஆவார்.

ஒரு நாட்டை வென்று விட்டோம் (அல்லது ஆட்சியைப் பிடித்து விட்டோம்) என்று அலட்சியமாக ஆட்சி செய்வது பெரிதல்ல.அழகான உடலையும் முதுமை காலப்போக்கில் சிதைப்பது போல, ஆட்சி தன் வசம் உள்ளது என திமிருடன் இருந்தால் அந்த ஆட்சி அழிந்து போகச் செய்து விடும்.

இரைக்கு ஆசைப்பட்டு மீன், தூண்டிலிலுள்ள புழுவுடன் இரும்பு முள்ளையும் சேர்த்து இழுத்து இறக்கிறது.பின் விளைவுகளைப் பற்றி அது யோசிப்பது இல்லை.(நாமும் சாதக, பாதகங்களை பற்றி யோசிக்காது, ஒரு செயலில் இறங்கக் கூடாது.

வளமாக இருக்க எண்ணுபவன், தனக்கு ஏற்ற உணவையே, தன்னால் சாப்பிடக்கூடிய உணவையே, சாப்பிட்டால் செரிக்கக் கூடிய உணவையே, செரித்தால் நன்மை தரக்கூடிய உணவையே உண்ண வேண்டும்.(நம் உடலுக்கு ஏற்ற உணவை உண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.எல்லை மீறினால் நோய்தான்)

பழுக்காத கனிகளை பறித்து நாம் சாறு பிழிய முயன்றால் தோல்வியே ஏற்படும்.பாதி பழுத்த அக்கனியில் உள்ள விதைகளும் பலனின்றி போகும்.(எதையும் உரிய காலத்தில் செய்ய வேண்டும்).சரியான பழத்தைப் பறித்தால் அதில் சுவையான சாறு இருக்கும்.அதிலுள்ள விதைகளும் பூமியில் விழுந்து மீண்டும் மரமாகும்.அதுவே பிறகு பலருக்குக் கூடுதலான பழ்னகளை வழங்கும்.



தேனீ மலர்களைச் சேதப்படுத்தாமல் தனக்குத் தேவையான அளவு தேனை எடுத்து சேகரிக்கும்.அதுபோல அரசனும் (ஆட்சியாளரும்) மக்களைப் பிழியாமல் அளவிற்குட்பட்டு மென்மையாக வரி வசூலிக்க வேண்டும்

தோட்டக்காரன் மலர்ந்த பூக்களை, செடிகளை சேதப்படுத்தாமல் பறிப்பான்.விறகு வெட்டியோ விறகு தயாரிக்க மரங்களை வேரோடு வெட்டுவான்.(அரசன் வரி விதிப்பு என்ற பெயரில் மக்களை ஏழைகள் ஆக்கிவிடாது, வசதியுள்ளவர்களிடம் மட்டும் வரி வசூலிக்க முயற்சிக்க வேண்டும்)

ஒரு செயலைச் செய்வதால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என அறிந்து கொள்ள வேண்டும்.அதை செய்யாவிடினும் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதையும் உணர வேண்டும்.இரண்டையும் ஒப்பிட்டுச் சிந்தித்தப் பிறகே நம் செயல்களை செய்ய வேண்டும்.அச் செயலால் பாதகம் என்றால் செய்யக்கூடாது

செயல்கள் பலவகையாகும்.சில செயல்களில் ஈடுபடக்கூடாது.சில செயல்களை முழுமையாக நம்மால் செய்து முடிக்க இயலாது.பலனில்லா அச்செயல்களில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு கடுமையாக உழைப்பது வீணாகும்

Tuesday, October 20, 2015

18-விதுரரின் பதில்



விதுரர் பதில் கூறலானார்-

ஒருவர் நம்மைக் கேட்டுக் கொள்ளாதவரை நாம் அவருக்கு ஆலோசனை சொல்லக் கூடாது.நல்லதோ, கெட்டதோ, பிரியமானதோ,பிரியமற்றதோ எவ்வகை ஆலோசனையும் சொல்லக்கூடாது.புத்திமதி கூறினால் நம் மரியாதை கெட்டுவிடும்

நீங்கள் என்னை ஆலோசனைக் கேட்டதால்...கௌரவர்களுக்கு என்ன நன்மை பயக்குமோ அதைச் சொல்கிறேன்.இது, மகிழ்ச்சியளிப்பதாகவும், அறநெறிப்படியும் இருக்கும்.

மோசமான செயல்களும், தீய வழிமுறைகளும், அதனால் செய்யப்படும் செயல்களும் முதலில் வெற்றியைத் தருவது போலத் தெரியும்,அதை நம்பக்கூடாது.(சகுனியின் சூதாட்ட வெற்றியை மறைமுகமாகச் சொன்னதாகக் கொள்ளலாம்)

அதே சமயம் மறுபுறம், ஒழுங்காக, கவனமாக உழைத்து, நேர்மையான வழிமுறைகளைப் பின்பற்றினாலும் அவை நம் முயற்சிக் கேற்ற பலன் தராதிருக்கலாம்.அறிஞன் ஒருவன் இந்த முறன்பாட்டைக் கண்டு மனமொடியக் கூடாது.நாம் விரும்பும் செயல்கள் வேறு பல நபர்களுடன் தொடர்புடையதாக இருப்பின்...நாம் அவற்றை சரியாகக் கவனித்து மதிப்பிட வேண்டும்.நாம் தொடங்கவுள்ள வேலையின் நன்மை, தீமைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.அதன் பின்னரே வேலையைத் தொடங்க வேண்டும்.உணர்ச்சிவசப்பட்டு அவசரப்பட்டு எந்த வேலையையும் மேற்கொள்ளக் கூடாது.

)

Monday, October 19, 2015

17- திருதிராட்டிரர் மேலும் கேட்டார்



விதுரன் கூறியவற்றைக் கேட்ட திருதிராட்டிரரின் மனம் சமாதானம் அடையவில்லை.சஞ்சயன்மூலம் தருமர் அனுப்பியுள்ள செய்தி என்னவாய் இருக்கும் எனத் தெரியாது தவித்தார்.அச் செய்தியை ஓரளவு விதுரரால் யூகிக்கமுடியும் என எண்ணி விதுரரிடம் சொன்னார்.

:என் உடல் கவலைக் காரணமாக தகிக்கிறது.தூக்கம் வராமல் அவதிப்படும் எனக்கு நன்மை ஏற்பட ஒரு நல்வழி கூறுவாயாக1 நீ சாஸ்திரங்கள்,புனித நூல்களைக் கற்றவன்.உலகியல் நூல்களையும் முற்றும் பயின்றவன்.அப்படிப்பட்ட நிபுணன் நம்மிடையே நீ மட்டுமே!

ஆகவே, உன் விவேகத்தைப் பயன்படுத்தி எனக்குச் சரியான ஆலோசனை வழங்கு..அது, தருமபுத்திரர்களுக்கும்,கௌரவர்களுக்கும் திருப்தியும், நன்மையும் தருவதாய் இருக்க வேண்டும்.

நான் ஏற்கனவே பாண்டவர்களுக்குச் செய்யப்பட்டுள்ள பாவங்களை சுமந்துள்ளேன்.எதிர்காலத்தில் நடைபெறும் செயல்களும் பாவமயமாகவே இருக்கப் போகிறதே என அஞ்சுகிறேன்.இந்நிலையில் உன் ஆலோசனை அவசியம்.தருமன் ,சஞ்சயன் மூலம் அனுப்பியுள்ள செய்தி என்னவாக இருக்கும்?என யூகித்துச் சொல்" என்றார்.

16- எவன் ஒருவன்



எவன் ஒருவன் காமத்தையும்,கோபத்தையும் விட்டொழிக்கிறானோ, தகுதியுள்ளவர்களுக்கு நிதி உதவி செய்கிறானோ, நல்லது, கெட்டதை பிரித்துணரும் விவேகியாக உள்ளானோ, அறிஞனாக விளங்குகிறானோ, சுறு சுறுப்பாய் செயல்படுகிறானோ அவனைத் தலைவனாக உலகம் கருதும்.

எவன் ஒருவன், மற்றவர்களின் நம்பிக்கையைப் பெற்று விடுகிறானோ, குற்றவாளிக்கு பொருத்தமான தண்டனையை வழங்குகிறானோ, தண்டனையின் அளவைச் சரியாகத் தெரிந்து வைத்துள்ளானோ, எந்த சமயத்தில் கருணையைக் காட்டி மன்னிக்க வேண்டும் என்பதை அறிந்துள்ளானோ..அவனை செல்வம், செல்வாக்குத் தேடி வரும்

எவன், தன் எதிரி பலகீனமாய் இருந்தாலும், அவனிடமும் எச்சரிக்கையாய் உள்ளானோ, சரியான சந்தர்ப்பம் வரும்வரையிலும் எதிரியை அனுசரித்துச் செல்கிறானோ, தன்னைவிட வலிமையானவருடன் மோதாமல் இருக்கிறானோ, சரியான நேரம் தன் ஆற்றலை வெளிப்படுத்தித் தாக்குகிறானோ அவனே அறிவாளியும், வீரனும் ஆவான்

எவன் துன்பத்தையும், எதிர்ப்புகளையும் கண்டு வருந்துவதில்லையோ,, எவன் தேடிச்சென்று, கவனமாயும், கடுமையாகவும் உழைக்கின்றானோ, சூழ்நிலையைக் கருதி துன்பங்களைப் பொறுத்துக் கொள்கின்றானோ..அவனே மனிதர்களில் முதன்மையானவன்.அவன் அனைத்து எதிரிகளையும் வென்றிடுவான்.

எவன் காரணமின்றி வீட்டை விட்டு வெளியே சென்று வாழ்வதில்லையோ,தீயவர்களுடன் பழகுவதில்லையோ, பிறர் மனைவியைக் கெடுதல் செய்வதில்லையோ, கர்வப்படுவது,கபடமாக நடந்துக் கொள்வது..பிறரை நிந்திப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதில்லையோ, குடிப்பழக்கம் வைத்துக் கொள்வதில்லையோ அவன் மகிழ்ச்சியாக விலங்குவான்.

எவன், அறம்,பொருள்,இன்பம் அடைய அவசரப்பட்டுச் செயற்படுவது இல்லையோ, எப்போதும் உண்மை பேசுகிறானோ,தன் நண்பனுக்காகவும் பிறரிடம் தகராறு செய்வதை விரும்பவில்லையோ, மற்றவர்கள் மதிக்காவிடினும் கோபப்படுவது இல்லையோ அவனே அறிவாளி ஆவான்.

எவன் யாரிடமும் பொறாமை கொள்வதில்லையோ, எல்லோரிடமும் கனிவாக இருக்கிறானோ, தனது பலக்குறைவை உணர்ந்து யாரையும் எதிர்க்காமல் உள்ளானோ, திமிராகப் பேசி பண்பை மீறாதிருக்கின்றானோ, தன்னோடு தகராறு செய்பவர்களை மன்னித்து விடுகிறானோ ..அவனே புகழ் பெறுவான்

எவன் திமிருடன் ஆர்ப்பாட்டமாக நடந்து கொள்வது இல்லையோ, பிறரை இகழ்ந்து, தன்னை மெச்சிக்கொள்வது இல்லையோ, உணர்ச்சி வசப்பட்டப் போதும் தன்னை மறந்து கடுஞ்சொல் கூறுவதில்லையோ அவன் எல்லோராலும் விரும்பப்படுபவன் ஆவான்

எவன் பழைய சண்டைகளை மீண்டும் நினைவூட்டிக் கிளப்புவது இல்லையோ, கர்வப்படுவது இல்லையோ, எப்போதும் அமைதியாக உள்ளானோ, வறுமையில் வாடினாலும், துன்ப்ம் விளைந்தாலும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லையோ அவனே நன்னடத்தையாளன் எனப் புகழப்படுவான்

எவன் தனக்கு நல்லது நடக்கும் போது அதை ஆரவாரமாகக் கொண்டாடுவது இல்லையோ, பிறர் துன்பம் கண்டு மகிழ்வதில்லையோ, யாருக்காவது அன்பளிப்புக் கொடுத்த பின் அதற்காக பின்னர் வருத்தப்படுவது இல்லையோ அவனே நற்பண்பாளன் எனப் புகழப்படுவான்

எவன், உள்ளூரில் நிலவும் பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள், அங்குள்ள சாதி, சமூகப்பிரிவினர் மேற்கொள்ளும் பணிகள் ஆகியவற்றைத் தெரிந்து வைத்திருக்கின்றானோ அவன் உயர்ந்தது, தாழ்ந்தது அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பான்,அவன் எங்குச் சென்றாலும் அங்குள்ள பெரியவர்களால் மதிக்கப் படுவான்.

மோசடி, முட்டாள்தனம்,விரோதம், பாவச் செயல்கள், ஆட்சியாளருக்கு எதிராக சதி செய்தல் அல்லது ஆட்சியாளருக்கு நம்பிக்கைக்கு உகந்தவனாக இல்லாதிருத்தல், போக்கிரித்தனம்,பழி கூறுதல், தன் மக்களுடன் பகைமை, குடிகாரர்கள்,புத்தி சுவாதீனமற்றோர், கள்வர்கள் ஆகியோருடன்  பழகுதல் முதலியவை தீயச்செயலாகும்.எவன் இவற்றைத் தவிர்க்கின்றானோ அவனை சமூகம் போற்றும்.

சுயக்கட்டுப்பாடு,உடல் தூய்மை,மனத்தூய்மை, இறை வழிபாடு,மங்களச் சடங்குகள்,செய்த தவறுகளுக்கான பிராயச்சித்தம், உலக விஷயங்கள் குறித்து கருத்து பரிமாற்றம் ஆகியவை தினசரி வேண்டிய கடமைகள் ஆகும்.எவன் இவற்றைக் கடைப்பிடிக்கின்றானோ அவன் வசதியாக வாழும் வாய்ப்பை இறைவன் ஏற்கிறான்

எவன் தாழ்ந்த நிலையில் உள்ளோரை தவிர்த்து விட்டு, தனக்கு இணையான குடும்பத்துடன் திருமண உறவை ஏற்படுத்திக் கொள்கிறானோ, அதே போன்று சமமான அந்தஸ்து உள்ளோருடன் மட்டுமே நட்பு,கொடுக்கல்,- வாங்கல், பேச்சு ஆகியவை வைத்துக் கொள்கிறானோ, சான்றோருக்கு முதலிடம் அளிக்கிறானோ அவன் வாழ்க்கை ஒழுங்காக அமையும் வாய்ப்புள்ளது.

எவன் மிதமாக உண்கின்றானோ, தன் சுற்றத்துடன் உணவை பகிர்ந்து உண்கின்றானோ, கடும் உழைப்பிற்குப் பிறகும் மிகுதியாக உறங்குவது இல்லையோ, எதிரி கேட்டாலும் தயங்காது உதவுகின்றானோ அவனை துன்பம் எப்போதும் அணுகாது.

எவன் தன் திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொண்டு அதை ஒழுங்காக நிறைவேற்றுகின்றானோ, தனக்குக் கெடுதல் செய்பவர்களைப் பழி வாங்குவதற்கான நடவடிக்கைகளையும் பிறர் அறியாமல் வைத்துக் கொள்கின்றானோ அவன் தன் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்வான்.

எவன் தன் நடவடிக்கைகள் மூலம் பிறர் வாழ்வில் அமைதி நிலவச் செய்கின்றானோ, உண்மையாகவும், கருணை நிறைந்தும் விளங்குகின்றானோ, மரியாதை உணர்வு, நல்லெண்ணம் கொண்டுள்ளானோ அவன் ஒளி வீசும் ரத்தினம் போல தன் சுற்றத்தாரிடம் முதன்மையாக இருப்பான்

தான் செய்த தவறுகளை மற்றவர் அறியாத போதும், தான் அவற்றை நினைத்து வெட்கம் அடைகின்றானோ அவன் உலகிற்கே வழிகாட்டும் குருவாகக் கருதப்படுவான்.எவன் அளவற்ற ஆற்றல், பரிசுத்தமான இதயம், மன அமைதி ஆகியவை பெற்றுள்ளானோ, அவன் சூரியனைப் போல புகழுடன் பிரகாசிப்பான்.

விதுரர், இவ்வாறெல்லாம் திருதிராட்டிரருக்கு அறிவுரைகளைக் கூறிய பின்னர் அவரை நோக்கி, 'அம்பிகையின் மன்னரே! உமது தம்பி பாண்டுவிற்கு முனிவர் ஒருவர் சாபம் கொடுத்திருந்தார்.(ஒருசமயம் கூடிக் களித்திருந்த மான்களை பாண்டு வேட்டையாடினார்.அதைக்கண்ட முனிவர், நீ உன் மனைவியுடன் கூடிக் களித்தால் இறந்துவிடுவாய் என்ற சாபம்).அதனால் பாண்டுவிற்கு நேரடியாகக் குழந்தைகள் பிறக்கவில்லை.இந்திரன் போன்ற தேவர்கள் மூலம் ஐந்து மகன்கள்.அவர்கள் உங்களால் வளர்க்கப்பட்டார்கள்.உங்கள் கட்டளைக்குக் கீழ் படிந்தனர்.பாண்டுவிற்கு இந்த ராஜ்ஜியத்தில் பங்கு உணடு.அதை பாண்டுவின் மகன்களுக்குக் கொடுத்துவிடுங்கள்.அவர்களுடன் நீங்களும் மகிழ்ச்சியாய் இருங்கள்.இதனால் உங்களை யாரும் குறைகூற முடியாது" என்று விதுரர் கூறி முடித்தார்.

Monday, October 12, 2015

15- ஒன்பதும்...பத்தும்



இந்த வீட்டிற்கு ஒன்பது வாயில்கள்.தூண்கள் மூன்று, பணியாட்கள் ஐவர்.இதன் முதலாளி ஆத்மா. இதை சரியாக அறிந்துள்ளோரே முழுதும் தேர்ச்சிப் பெற்ற முனிவர்கள் ஆகும்.

(உடம்பிலுள்ள ஒன்பது துவாரங்கள் இங்கு வாயில்கள் எனப்படுகிறது.வாதம், சிலேட்டுமம்,பித்தம் ஆகியவை மூன்று தூண்கள்.ஐம்புலன்களும் நம் ஊழியர்.அவை நமக்குக் கீழ் படிந்து இருக்க வேண்டும்.வீடும், வீட்டில் இருப்போரும் வேறு..உடல் வேறு, ஆத்மா வேறு.)

கிழே கொடுக்கப்பட்டுள்ள பத்துவகை மனிதர்களால் நற்பண்புகளை நினைவில் கொள்ள முடியாது.ஆகவே அவற்றை பின் பற்ற முடியாது.

போதையில் மிதப்பவன்
எதிலும் கவனக் குறைவாக இருப்பவன்
பித்துப் பிடித்தவன்
களைத்து ஓய்ந்தவன்
அதிகக் கோபம் கொண்டவன்
பசியால் துடிப்பவன்
அவசரப்படுபவன்
பிறர் பொருளைக் கவர நினைப்பவன்
பயத்துடனேயே இருப்பவன்
மிகுதியான காம உணர்வு கொண்டவன்

ஆகியவர்கள் பண்பாளராக இருக்க முடியாது.ஆகவே இக்குறைபாடுகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

Sunday, October 11, 2015

14 - ஏழும்..எட்டும்



கீழே குறிப்பிட்டுள்ள ஏழு தீமைகளும் பெரும் அழிவை விளைவிக்கும்.ஆகவே, அரசர்கள் (ஆட்சிபுரிபவர்கள்) இவற்றை அறவே தவிர்த்திட வேண்டும்.இந்த ஏழு தீமைகளும்...தேவலோகத்தினரையும் , ஆட்சியில் நிலைபெற்ற மன்னர்களையும் கூட நாசமாக்கியுள்ளன.

அவை-

பெண் மோகம், சூதாடுதல்,வேட்டையாடுதல்,குடிப்பழக்கம், கடுஞ்சொல் கூறுதல்,மிகுதியான தண்டனையைக் கொடுத்தல்,செல்வத்தைத் தவறான முறையில் செலவழித்தல் ஆகியவை ஆகும்.

பின் வரும் எட்டு செயல்களும்..ஒரு மனிதன் அழியப் போகிறான் என்பதை முங்கூட்டியே தெரிவித்துவிடும் அறிகுறிகள் எனலாம்.

அந்தணர்களை வெறுப்பது,அவர்களை விரோதித்து அவர்கள் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்வது,அவர்கள் சொத்தை அபகரிப்பது,அவர்களைக் கொல்ல அல்லது அவர்களுக்குத் தீமை செய்ய விரும்புவது, அவர்கள் ஏசப்பட்டால் மகிழ்வது,அவர்கள் புகழப்பட்டால் வருந்துவது, சடங்குகள் போது அவர்களை அழைக்க மறப்பது, அவர்கள் ஏதேனும் யாசித்தால் கோபித்துக் கொள்வது ஆகிய எட்டும் புத்திசாலி மனிதன் விட்டொழிக்க வேண்டும்.
(மகாபாரதம் 5000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது என்கிறார்கள்.ஆகவே அந்தணர்கள் அந்த நாளில் எளிமையான, ஆன்மீக வாழ்க்கையை மட்டுமே கொண்டு வாழ்ந்து வந்தனர் என்பதை இவ்விடத்தில் நினைவில் வைக்கவும்)

பின் வரும் எட்டும், பாலில் திரளும்..வெண்ணெய் போல, மகிழ்ச்சியின் உச்ச நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும் எனலாம்.அவை

மனதிற்கினிய நண்பர்களைச் சந்தித்தல், நிறைய செல்வம் சேகரித்தல்,மகனால் தழுவப்படுதல், தாம்பத்திய உறவு, சூழ்நிலைக்கேற்ற இனிய உரையாடல், தன் சமூகத்தில் மேல் நிலைக்கு உயர்த்தப்படுதல்,விரும்புவது கைவசமாதல்,மக்கள் மத்தியில் மதிப்பு

விவேகம்,உயர்க் குடிப் பிறப்பு,புலன் கட்டுப்பாடு,கல்வியறிவு,வீரம்,மிதமான பேச்சு,வசதிக்கேற்ப தான தருமம் செய்தல்,நன்றியுணர்வு ஆகிய எட்டும் மனித வாழ்வு ஒளிவீசிப் புகழ்ப் பெறச் செய்வன ஆகும்

Thursday, October 8, 2015

13. ஆறுவகைகள்



அதிக தூக்கம், தூங்குவது போல இருத்தல், பயம், கோபம், சோம்பல், எதையும் தாமதப்படுத்துதல் ஆகிய ஆறும் கெடுதலான பழக்கங்கள்.உலகில் புகழுடன் முன்னேற விரும்புகிறவன் இவை தன்னைப் பற்றிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

படகில் பயணிக்கையில் படகில் ஓட்டை ஏற்பட்டுவிட்டால் அதை விட்டு வெளியேற வேண்டும்.அதுபோல, மெய்ப்பொருளுக்கு விளக்கம் தராத குரு, வேள்வி சமயம் வேதம் ஓதத் தெரியாத புரோகிதர்,மக்களைக் காப்பாற்ற இயலாத மன்னன், இனிமையாகப் பேசும் வழக்கமில்லா மனைவி, கிராமத்தைவிட்டு மேய்ச்சல் நிலம் செல்ல விரும்பாத இடையன்,, கிராமத்தைவிட்டு தொழிலுக்கு வெளியே போக விரும்பாத நாவிதராகிய அறுவரும் சமூகத்தால் கைவிடப் பட வேண்டியவர்களாகும்.

வாய்மை. தரும சிந்தனை, சுறு சுறுப்பு, பொறாமை கொள்ளாமை,பொறுமை, மனவலிமை ஆகிய பண்புகள் கொண்டவனை ஒருபோதும் கைவிடக் கூடாது.

செல்வம் சேருதல், ஆரோக்கியமாக என்றும் இருத்தல்,பிரியமாக..இனிமையாகப் பேசும் இல்லாள்,பணிவுள்ள புதல்வன், நல்ல அறிவு,..அந்த அறிவும் பொருளீட்டவோ, ஞானம் பெறவோ உதவியாக இருத்தல்..இந்த ஆறு அம்சங்கங்களும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

மனிதனின் மனதில் ஆறு தீய விஷயங்கள் உள்ளன.அவற்றை வசப்படுத்தியவன் புலன்களை வென்றவன் ஆவான்.ஆகவே அவன் பாவம் செய்யாதவனாக வாழ்வான்.அதனால், பாவத்தின் பின்விளைவுகளும்,துன்பங்களும் அவனை அணுகாது.(தீய விஷயங்கள் ஆறு..எவை என்று சொல்லாவிடினும்..அவை, காமம்,சினம், பேராசை,மோகம்,அகங்காரம், பொறாமை என எடுத்துக் கொள்ளலாம்)

காமம் மிகுந்த ஆண்களைப் பெண்களும்,
சடங்குகள் செய்பவர்களைப் புரோகிதர்களும்
தமக்குள் சண்டையிடும் மக்களை ஆட்சியாளரும்
அறிவு குறைந்தவர்களை அறிஞர்களும்
திருடர்கள் கவனம் குறைந்த மனிதர்களையும்
மருத்துவர்கள் நோயாளிகளையும்
தங்கள் வசப்படுத்தித், தங்கள் சுயநலத்திற்குப் பயன்படுத்திக் கொண்டு வசதிகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.

பசுமாடு, வேலைக்காரர்,விவசாயம்,மனைவி, அறிவு, கீழோர் நட்பு, இவற்றை நாம் கவனித்துப் பராமரிக்காவிட்டால் நம்மை விட்டு நீங்கிவிடும்.
(பசுவை நன்குப் பராமரிக்காவிட்டால் சரியாகப் பால் தராது.வேலைக்காரரை சரியாகக் கவனிக்காவிடின் நம்மை விட்டு விலகிவிடுவர்,விவசாயம் சரியாக இல்லாவிடில் பயிர்கள் வாடி விடும்.மனைவியைப் புறக்கணித்தால் குடும்ப அமைதிப் போகும்.அறிவைப் பயன்படுத்தாமல் இருந்தால் துருப்பிடித்தாற் போல வீணாகும்.கீழோர் நட்பு நாம் ஆதரிக்கும் வரையே நீடிக்கும்.)

படித்து முடிந்ததும் ஆசிரியரை மாணவர்களும்
திருமணமானப் பின்னர் தாயை மகன்களும்
காமுகர்கள் திருப்தியடைந்ததும் தன்னை நம்பிய பெண்களையும்
வாழ்க்கையில் முன்னேறியபின் தங்கள் வெற்றிக்கு உதவியவர்களையும்
பயணிகள் நதியைக் கடந்த பின்னர் படகையும்
நோய் நீங்கியதும் நோயாளிகள் மருத்துவர்களையும் மறந்துவிடுவது வழக்கம்

ஆரோக்கியமான உடல், கடன் இல்லாமை, வீட்டைவிட்டு வெளியூரில் வசிக்க வேண்டிய நிலை இல்லாமை, நல்லோர் நட்பு, மனசுக்கேற்ற திறமையானத் தொழில், அச்சமற்ற சூழ்நிலை ஆகியவை மனிதன் மகிழ்ச்சியுடன் வாழ உதவுவன.

பொறாமை உடையவர்,வெறுப்பு நிறைந்தவர்,எதிலும் திருப்தியற்றவர், எதற்கும் சிடுசிடுப்பவர், எதையும் சந்தேகப்படுபவர், பிறரைச் சுறண்டு வாழ்பவர் இந்த ஆறுவகை மனிதர்களுக்கும் எப்போதும் நிம்மதி இருக்காது.

Tuesday, September 22, 2015

12-ஐவகை



தந்தை,தாய், நெருப்பு,ஆத்மா, குரு இந்த ஐந்தும் புனிதமனாவை.ஆற்றல் மிக்கவை, ஒவ்வொரு மனிதனும் இவற்றிற்கு சேவை செய்ய வேண்டும்

கடவுள், முன்னோர், மூத்தோர் (தாய்,தந்தை, குரு), துறவிகள், விருந்தினர்  ஆகியோரை வழிபட்டு, பணிவிடை செய்வதன் மூலம் ஒருவன் முழுமையான புகழ் அடையலாம்

நண்பர்கள், எதிரிகள், காரணமில்லாமல் விசாரிக்க வருபவர்கள், நம்மை ஆதரிக்கும் அயலார், நம்மைச் சார்ந்துள்ள உறவு ஆகிய ஐவகையினரில், யாரேனும் ஒருவர் நம்மை, எங்கும், எப்போதும் பின்தொடர்ந்து கொண்டே இருப்பார்கள்.

மெய்,வாய், கண், மூக்கு,செவி..ஆகிய ஐம்புலன்களில் ஏதேனும் குறையிருந்தால், அதன் வழி கிடைக்கக் கூடிய நன்மை அல்லது அறிவானது ஓட்டையான பொருளிலிருந்து தண்ணீர் வெளியேறுவது போல நம்மை விட்டு நழுவிச் சென்று விடும்.


Wednesday, September 16, 2015

11 - நான்கு வகையினர்



அரைகுறை அறிவைப் பெற்றவர், தாமதப்படுத்தும் எண்ணத்துடன் காலம் கடத்துபவர்கள், சோம்பேறிகள் , (ஆதாயத்திற்காக) பிறரைப் புகழ்பவர்கள் ஆகிய நான்கு வகையினரிடம் ஆலோசனைக் கேட்பதைத் தவிர்க்க வேண்டும்.இவர்களது ஆலோசனைகள் அரசனையும் தோல்வியடையச் செய்யும்..

வயதான உறவினர், உயர் நிலையிலிருந்து வீழ்ச்சியுற்றோர், வறுமையில் வாடும் நண்பர், குழந்தையற்ற சகோதரி இந்த நான்கு வகையினரையும் வசதி,கடமை உணர்வு மிக்கவர்கள் தன் வீட்டில் வைத்து காப்பாற்ற  வேண்டும்

தேவர் தலைவன் இந்திரன் தனது குருவான பிரகஸ்பதியிடம் "உடன் நிகழக்கூடிய நான்கு சம்பவங்கள் என்ன? என்று கேட்டார்.அதற்கு பிரகஸ்பதி சொன்னார்...

"கடவுளின் விருப்பம், ஞானிகளின் அதிசய ஆற்றல்,அறிஞர்களின் அடக்கக் குணம், பாவிகளின் அழிவு ஆகியவை உடனுக்குடன் நடக்கும்"

அக்னிஹோத்ர வேள்வி,மௌன விரதம்,ஆழ்ந்து படித்தல், வேள்விகள் முதலிய சடங்குகள் இவை நான்கையும் முறையாக, மரியாதையுடன் செய்தால் அவை நம்மைக் கவசம் போல இருந்துக் காப்பாற்றிப் பாதுகாக்கும்.இவற்றைச் சரிவரச் செய்யாவிடின் நன்மை விளையாது என்பதுடன் தீமையே ஏற்படும்.


Monday, September 14, 2015

10 - மூன்று வகையினர்



தங்களது பணிகளை நிறைவேற்ற ஒவ்வொருவரும் தாழ்ந்தது,நடுத்தரமானது.உத்தமமானது என மூன்று வகையான அணுகுமுறைகளில் ஒன்றை மேற்கொள்கின்றனர்

உத்தமர்,மத்திமர்,அதமர் என மனிதர்கள் மூவகையாக பிரிக்கப்படுகின்றனர்.இவர்கள் முறையே உத்தமமான, நடுத்தரமான, இழிவான வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

மனைவி,அடிமை,மகன் இவர்கள் மூவரும் தங்கள் பெயரில் சொத்து அமையப் பெறாதவர்கள்.அவர்களுக்குக் கிடைக்கும் வருமானம் அல்லது அன்பளிப்பு ஆகியவை அவர்கள் யாரைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்குப் போய்ச் சேரும்(முறையே, கணவன்,முதலாளி,தந்தை)

பிறர் பொருளைத் திருடுதல், பிறர் மனைவியைக் கற்பழித்தல்,நண்பனை மோசம் செய்து கைவிடல் இவை மூன்றும் ஆபத்தானவை.இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்தாலும் அவை அவனை எலும்புருக்கி நோயாய் அரித்து அழிவிற்குக் காரணமாய் அமையும்

காமம், கோபம், பேராசை இவை நரகத்தின் வாயில்களாக அமைந்துள்ளன.இவை ஆத்மாவைக் களங்கப் படுத்தும்.ஆகவே அவற்றைக் கைவிட வேண்டும்.

தன்னைச் சார்ந்தவர்கள் வேண்டுவதைக் கொடுத்தல், நாடுகளை வெல்லுதல், மகன் பிறத்தல் இவை மூன்றும் தனித்தனி சிறப்புப் பெற்றவை.இவை மூன்றும் சேர்ந்தால் மும்மடங்கு சிறப்பு.ஆபத்தில் மாட்டிக் கொண்ட பகைவனை விடுவிப்பதற்கு சமமான சிறப்புப் பெற்றவை.(பகைவனுக்கு அருள்வது சிறப்பான குணமாகும்)

பலகாலமாக நமக்கு உண்மையாக உள்ளவர், ஆதரவாளர் இப்போது உண்மையாக உள்ளவர், நம்மிடம் அடைக்கலம் கேட்பவர் ஆகியவர்களை நமக்கு ஆபத்து வந்தாலும் கைவிடக் கூடாது.

Saturday, September 12, 2015

9- இருவகையினர்



தாக்கப்பட்டாலும் போரிடாத அரசன், வெளியூருக்கு (குருவைத் தேடியோ, புண்ணிய தலங்களுக்கோ) செல்லாத அந்தணன்..ஆகிய இரண்டு பேரையும் பொந்துகளில் வாழும் பிராணிகளை பாம்பு விழுங்குவது போல பூமி விழுங்கிவிடும்

சிறிதும் கடுஞ்சொற்கள் பேசாதிருத்தல், தீயவர்களைப் புகழ்ந்து  வணங்காமலிருத்தல் ஆகிய இரண்டும் மனிதன் புகழ் பெற்று பிரகாசிக்க உதவும்.

மற்ற பெண்கள் விரும்பும் பொருட்களுக்கு தானும் ஆசைப்படும் பெண்கள், மற்றவர்கள் வணங்குவதைப் பார்த்து தானும் வணங்கும் முட்டாள்கள் இருவரும் சுயமாக சிந்திக்காமல் மற்றவர்கள் கருத்துக்கு ஏற்ப செயல்படுபவர்கள் ஆவார்கள்

ஏழையாக இருந்தாலும் எல்லாவற்றிற்கும் ஏங்குவது, உயர் பதவியிலோ, உயர்நிலையிலோ இல்லாவிடினும் பிறர் மீது கோபத்தை வெளியிடுவது ஆகிய இரண்டு குறைகளும் கூர்மையான விஷ முட்களைப்போல உடலை பாதித்துவிடும்

உழைப்பில் ஆர்வமில்லா குடும்பத் தலைவன், உலக விவகாரங்களில் ஈடுபடும் துறவி ஆகிய இருவகையினரும் வாழ்க்கையில் கௌரவம் பெற முடியாது.

பிரபுக்கள் போல உயர்நிலையிலிருந்தும் பொறுமையாக இருப்பவர், வறியவராய் இருந்தும் வள்ளல் போல வழ்ங்குபவர்கள் ஆகிய இரண்டு வகையினரும் விண்ணுலகிற்கும் மேற்பட்ட உலகில் இடம் பெறுவார்கள்.

தகுதியற்றவர்களுக்கு பணம் கொடுத்தல், தகுதி உள்ளவர்களுக்கு உதவ மறுத்தல் ஆகிய இரு நடவடிக்கைகளும் நாம் சம்பாதித்த கௌரவத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் கருதப்படும்

தான தருமம் செய்யாத பணக்காரன், கடவுள் பற்றில்லா ஏழை ஆகிய இரு வகையினரும் கழுத்தில் பெரிய கல் கட்டப்பட்டு தண்ணீரில் தள்ளப்பட்டவர்கள் போல அழிவர்

யோகப் பயிற்சிகளில் முழு தேர்ச்சி பெற்றுவிட்ட துறவி, புறமுதுகுக் காட்டாது போரிட்டு கொல்லப்பட்ட வீரன் ஆகிய இருவகையினரும் விண்ணுலக வாழ்வைப் பெறுவர்


Saturday, September 5, 2015

8-பொறுமை



பொறுமைசாலிகளிடம் ஒரே ஒரு குறைதான் உண்டு.வேறு எந்த குறைகளும் கிடையாது.அந்த ஒரே குறை என்னவென்றால் அவனை மக்கள் பலகீனமானவன் என எண்ணும்படி நடந்து கொள்வான்

உண்மையில் பொறுமை என்பது குறையல்ல.மிகவும் வலிமை வாய்ந்தது.பலகீனமானவர்களிடம் உள்ள பொறுமையும் நற்குணம்தான்.ஆனால் பலசாலிகளின் பொறுமையோ ஒரு ஆபரணம்.

பொறுமை அனைவரையும் வசீகரித்து வசப்படுத்தும் வலிமையைக் கொண்டது.பொறுமையால் சாதிக்கமுடியாத காரியங்களே இல்லை எனலாம்.பொறுமை என்ற வாளை ஏந்தியவனை எந்த தீயவனாலும் ஏதும் செய்ய முடியாது.

புல்லற்ற தரையில் விழும் நெருப்பு தானாகவே அழிந்துவிடும்.அதே வேளையில் சுற்றியுள்ள பொருட்களையும் சேதப்படுத்தாது.பொறுமையற்றவனோ தான் அழிவதுடன் அல்லாது சுற்றத்தினருக்கும் அழிவை உண்டாக்குவான்.

நேர்மை தலை சிறந்த பண்பாகும்.பொறுமைதான் அமைதிக்கு தலை சிறந்த வழி.முழுமையான அறிவே பூரண திருப்தியத் தரும்.பிறருக்குத் தீங்கிழைக்காத தன்மையே மகிழ்ச்சிக்கு வழி வகுக்கும்.


Friday, September 4, 2015

7- அறிவிலி யார்?



அறிவிலி எனப்படுபவன்.......

தனக்கு அறிவில்லை என்பதை பொருட்படுத்தாது கர்வமாய் இருப்பான்.ஏழையாக இருந்தாலும் திமிராக நடந்து கொள்வான்.தனது விருப்பங்களைத் தவறான வழிமுறைகள் மூலம் நிறைவேற்றிக் கொள்வான்.அல்லது..எந்த முயற்சியும் செய்யாது விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என எண்ணுவான்

தனது சொந்த வேலையை விட்டு விட்டு பிறர் வேலையில் தலையிடுவான்.தன் சொத்தை இழந்துவிட்டு பிறர் தயவில் வாழ்வான்.அன்புள்ளவன் போல நடித்து நண்பர்களுக்குத் துரோகம் செய்வான்

விரும்பத்தகாத பொருளுக்கு ஆசைப்படுவான்.விரும்ப வேண்டிய பொருள்களை புறக்கணிப்பான்.தன்னைவிட வலியாரிடம் பணிவாகப் பழகாது அவர்தம் மீது வெறுப்புடன் விரோதத்தை வளர்த்துக் கொள்வான்

பகைவனை நண்பன் என ஏமாறுவான்.உண்மையான நண்பனை பகைவனாய் எண்ணி, அவனை வெறுத்து, அவனுக்கு தீங்கு செய்வான்.எப்பொழுதும் தீயச் செயல்களிலேயே ஆழ்ந்திருப்பான்.

தனக்குரிய கடமையைச் செயல்படுத்தத் தொடங்காமல் தயங்கிக் குழம்பியபடியே இருப்பான்.எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படுவான்.விரைவில் முடிக்கக்கூடிய பணியையும் இழுத்தடித்து தாமதப் படுத்துவான்.

முன்னோர்களை ஞாபகம் வைத்துக் கொண்டு திதி, படையல் ஆகியவற்றை செய்ய மாட்டான்.குலதெய்வங்களை வழிபட மாட்டான்.நல்ல உள்ளம் கொண்டவர்களை நண்பனாகக் கருத மாட்டான்.

தான் அழைக்கப்படாத இடங்களுக்கு தானே வலிய செல்வான்.தன்னிடம் பேசாதவர்களிடம் தேவையின்றி பேசுவான்.நம்பத் தகாதவர்களிடம் தன் ரகசியங்களை பகிர்ந்து கொள்வான்

தான் தவறிழைத்த போதிலும் பிறர் மீது குற்றம் சொல்வான்.தன்னைச் சார்ந்திராதவர், தனக்கு சம்பந்தமில்லாதவர் போன்றவர்களிடம் கோபித்து சண்டையிடுவான்

தனது ஆற்றல் குறைவு என புரியாமல், பெரிய செயல்களைச் செய்ய பேராசைப் படுவான்.அவை அறநெறிக்கு பொருந்தாதவையாகவும், அதிக உழைப்பின்றி பணம் சம்பாதிக்க விரும்பும் முயற்சிகளாகவும் இருக்கும்.

தன்னைச் சாராதார், தனக்கு சம்பந்தமில்லாதவர்கள் ஆகியோருக்கு வழி காட்டுவான்.ஆனால், தன்னைச் சார்ந்தவர், தனக்கு சம்பந்தமானவர்களுக்கு பயனுள்ளதாக ஏதும் செய்ய மாட்டான்.கருமிகளிடம் உதவி எதிர்ப்பார்த்து கெஞ்சிக் கொண்டிருப்பான்.

மற்றவர் பட்டினி இருந்தாலும் தான் மட்டும் உண்டு களிப்பான்.தன் குடும்பத்தினர் கிழிந்த அடை அணிந்திருந்தாலும் தான் நல்ல ஆடை அணிந்து மகிழ்வான்

ஒருவன் பாவச்செயல் செய்தால் அது அனைவரையும் பாதிக்கிறது.ஆனால் காலப்போக்கில் சரியாகிவிடுகிறது.ஆனால் பாவச் செயல் புரிந்தவனை விட்டு களங்கம் எப்போதும் நீங்காது.

அம்பு எதிரியைக் கொல்லும் போது குறி தவறும்.ஆனால், ஒரு அறிவாளி தன் அறிவை அழிவு நோக்குடன் பயன் படுத்தினால் அரசன் உட்பட ஒரு நாடே நாசமாகிவிடும்.

இரண்டை, ஒன்றால் பிரித்தறிந்து, மூன்றை நான்கின் கட்டுப்பாடின் கீழ் கொணர்ந்து, ஐந்தை வென்று, ஆறை அணிந்து கொண்டு, ஏழை கைவிட்டு மகிழ்ச்சியடையலாம்.(இது பொதுவாக மன்னர்களுக்குச் சொல்லப்பட்டது.இதன் விளக்கம்-
நல்லது, கெட்டது என்ற இரண்டை விவேகம் என்ற ஒன்றால் பிரித்து அறிந்து, நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய மூவரை , சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கின் கட்டுப்பாடின் கீழ் கொணர்ந்து ஐம்புலன்களை (ஐந்தை) வென்று, உடன்படிக்கை, போர்,அணிவகுத்து முன்னேறுதல்,தன் வசமுள்ள பகுதிகளைக் காத்தல், சாதகமான காலம் வருவரை காத்திருத்தல்,வஞ்சகம், அடைக்கலம் கிடைக்கக் கூடிய இடம் ஆகியவற்றை (விவரங்களை) அணிந்து கொண்டு, பெண்ணாசை. சூதாட்டம்,வேட்டையாடுதல்,குடிப்பழக்கம், கடுஞ்சொல் கூறல், கடுமையாக தண்டித்தல், செல்வத்தை விரயம் செய்தல் ஆகிய ஏழைக் கைவிட்டு மகிழ்ச்சியடையலாம்.

விஷம் குடிப்பவனைக் கொல்லும்.ஆயுதம் தாக்கப்பட்டவனை அழிக்கும் ஆனால் அரசியல் ரகசியங்கள் வெளியானால் ஆட்சியாளரும், குடிமக்கள் உட்பட நாடே அழியும்.(தீய ஆலோசனைகளால் நாடே அழியும்)

தனியாக ஒருவன் விருந்துணவை உண்ணக்கூடாது.தனியாக ஒருவன் முக்கிய முடிவெடுக்கக் கூடாது.தனியாக ஒருவன் பயணம் செய்யக் கூடாது மற்றவர் உறங்குகையில் தனியாக ஒருவன் கண் விழித்திருக்கக் கூடாது.

விண்ணுலகிற்கு அழைத்துச் செல்ல ஒரு ஏணிதான் உண்டு.மாற்று ஏணிக்கிடையாது.கடலைக் கடக்க உதவும் படகினைப் போல, உலகைக் கடந்து அமர வாழ்விற்கு அழைத்துச் செல்லும் அந்த ஒரே ஏணி உண்மைதான்.இதை நீங்கள் (திருதராஷ்டிரர்) உணரவில்லை.


Wednesday, September 2, 2015

6-அறிஞர் எனப்படுபவர்



உண்மையான அறிஞரின் பண்புகளை விதுரர் கூற ஆரம்பித்தார்.

அறிஞர் எனப்படுபவர்...

தனது அடிப்படையை அறிதல்,முயற்சியுடமை,சகிப்புத்தன்மை,அறநெறியில் உறுதி ஆகிய இயல்புகள் உடையவராக இருப்பர்,மேலும், வாழ்க்கையில் குறிக்கோள்களை கைவிடாதவராகவும் இருப்பார்கள்

மரம் ஒன்றுதான்...ஆனால் அதிலிருந்து பூஜைப்பாத்திரம், கரண்டி, படகு,மரக்கூடை,உலக்கை முதலிய பல பொருட்கள் தயாரிக்கப் படுகின்றன.அதுபோல, ஒரு மூத்தோரிடமிருந்து தான் நல்லது, கெட்டது இரண்டுமே தோன்றுகின்றன


அறிஞர் எனப்படுபவர்.....

உன்னதமான விஷயங்களில் பற்று கொண்டிருப்பர்.நிந்திக்கப்படும் விஷயங்களைத் தவிர்த்திடுவார்.கடவுள் பக்தி உடையவராக இருப்பதுடன், தன்னைவிட மூத்தவர்கள், குரு ஆகியோரின் அறிவுரைகளிலும், சமய நூல்கள் கூறும் கருத்துக்களிலும் நம்பிக்கை கொண்டிருப்பர்.

கோபம், மகிழ்ச்சி, கர்வம், கூச்சம்,பிடிவாதம், போலி சுயகௌரவமாகியவற்றின் வசப்படுவதில்லைவாழ்க்கையின் உன்னத லட்சியங்களை மேற்கூறியவை தடுத்துவிடும் என்பதால் அவை தன்னைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்வர்.

தனது பணிகள், வெப்பத்திலோ, குளிராலோ அச்சம் காரணமாகவோ, அன்பாலேயோ, வளமையாலோ தடைப்பட்டு நிற்காமல் தொடர்ந்து இயங்குவர்.

தடுமாறும் அறிவை வசப்படுத்தி, நல்ல விஷயங்களிலும், வாழ்க்கையின் வசதிகளை நேர்மையாகப் பெறுவதிலும் ஈடுபட்டிருப்பர்.இவ்வாறு அறம்,பொருள் இரண்டிலும் ஈடுபாடு கொண்ட  உலக இன்பங்களில் அதிக நாட்டக் காட்ட மாட்டார்கள்.

தன்னுடைய திறமையை முழுமையாக பயன்படுத்த விரும்புவர்.தன் சக்திக்கு ஏற்ப நடந்ததையெல்லாம் சிறப்பாகச் செய்வார்கள்.எப்பணியையும் தாழ்வானது என புறக்கணிக்க மாட்டார்கள்

எதையும் உடனே புரிந்து கொள்வர்.பிறர் கூறுவதை பொறுமையாகக் கேட்பார்கள்.பிறர் சொல்வதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு செயல்படுவர்.அதனால் உண்டாகும் பலனை எதிர்ப்பார்க்க மாட்டார்கள்.கடமை உணர்வுடன் செயல் படுவார்கள்.தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையிட்டு தனது நேரத்தை வீணாக்கமாட்டார்கள்.

தனக்குக் கிடைக்க வாய்ப்பற்ற பொருட்கள் மீது ஆசை படமாட்டார்கள்.தனது பொருள் தொலைந்து போனாலும் அதற்காக,
புலம்ப மாட்டார்கள்.எதிர்ப்பு, தோல்வி ஆகிய எந்த சூழ்நிலையிலும் என்ன செய்வது என அறியாமல் திகைத்து நிற்க மாட்டார்கள்.

ஒரு  செயலை செய்யும் முன் சிந்திப்பார்கள்.செயல்புரிய தொடங்கிவிட்டால் அதை பாதியில் நிறுத்த மாட்டார்கள்.தனது நேரத்தை விரயம் செய்யாமல் மனதை தன் வசத்தில் வைத்திருப்பர்.

உன்னதமான பணிகளுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொள்வார்கள்.தனக்கும், பிறருக்கும் மகிழ்ச்சியும், நன்மையும் தரக்கூடிய செயல்களிலேயே ஈடுபட்டிருப்பர்.மற்றவர்களின் வசதியைக் கண்டு பொறாமைப்பட மாட்டார்கள்.

அதீத மகிழ்ச்சியடைய மாட்டார்கள்.அவமானம் ஏற்பட்டாலும் துவண்டு விட மாட்டார்கள்.பாராட்டு, அவமானம் ஆகிய எந்நிலையிலும் கங்கை நதியிலுள்ள மடுபோல சலனமின்றி அமைதியாக இருப்பார்கள்.

உயிருள்ளவை, உயிர் அற்றவை ஆகிய அனைத்தின் அடைப்படை அறிந்தவராய் இருப்பர்.மக்கள் செய்யும் செயல்கள் எத்திசையில் செல்கின்றனவோ  , அவற்றின் விளைவுகள் எப்படி என இரண்டையும்
யூகிக்க வல்லவராய் இருப்பர்.தங்களது விருப்பங்கள் நிறைவேற மனிதர்கள் பின்பற்றும் எல்லா செயலையும் அறிந்தவராய் இருப்பர்.

தைரியமாக தடங்களின்றி பேசக்கூடியவராய் இருப்பார்கள்.பல விஷயங்கள் குறித்தும் சுவையாக பேசுவார்கள்.எல்லா விஷயங்களிலும் நல்லது, கெட்டது அறிந்திருப்பார்கள்.எந்தப் பிரச்னையானாலும் நுணுக்கமாக அறியும் பார்வை பெற்றிருப்பர்.உயரிய நூல்களிலிருந்து சுலபமாக மேற்கோள் காட்டி விளக்குவார்கள்.

தன் அறிவின் தரப்படி உயர்க்கல்வி பெற்றிருப்பர்.உயர்க் கல்விக்கேற்ப உயர் அறிவும் பெற்றிருப்பர்.மற்ற அறநூல்களில் நிலை நாட்டப்பட்டுள்ள ஒழுக்க நெறிகளை மீறமாட்டார்கள்.

தன் அறிவிற்காக கர்வப்பட மாட்டார்கள்.செல்வமோ, ஆற்றலோ. அதிகாரமோ குறைந்திருந்தாலும்திமிர் கொண்டு அலைய மாட்டார்கள்.அடக்கமாக தன் பணிகளைச் செய்வார்கள்.



Friday, August 28, 2015

5- விதுர நீதி -- உறங்கா நிலைப் படலம்


(இந்த அத்தியாயத்திலிருந்து விதுரநீதி ஆரம்பிக்கிறது.விதுரர் கூறியவை 605 சுலோகங்களாகும்.இவை 1210 வரிகள் ஆகும்)

திருதராஷ்டிரர் தன் அறையின் காவலாளியை அழைத்தார்.அவனிடம், "நான் விதுரரை சந்திக்க விழைகிறேன்! அவரை அழைத்து வருவாயாக1" என்றார்.

அந்த வாயிற்காவலனனும் விதுரரிடம் சென்று, :"ஐயா! மாமன்னர் தங்களை சந்திக்க விரும்புகிறார்." என்றான்..விதுரரும் மன்னரைச் சந்திக்கச் சென்றார்.ஆழ்ந்த சிந்தனையில் இருந்த திருதராஷ்டரரிடம், இரு கைகளையும் கூப்பியபடியே விதுரர், தான் வந்துள்ளதாகத் தெரிவித்தார்..(திருதராஷ்டிரர் பார்வை இழந்தவர் ஆதலால், தன் பெயரைக் கூறி வந்ததைத் தெரிவித்தார்.)

"விதுரரே! நல்வரவாகுக.சஞ்சயனைப் பாண்டவர்களிடம் தூது அனுப்பியிருந்தேன்.அவன் திரும்பி விட்டான்.ஆனாலும், நேரமாகிவிட்டபடியால், நாளை காலை சபையில் தருமரின் செய்தியை அறிவிக்கிறேன் என்று சொல்லி விட்டான். தருமர் சொல்லியுள்ள செய்தி என்னவாக இருக்கும்? என என்னால் தெரிந்து கொள்ள இயலவில்லை.இதை எண்ணி எண்ணியே எனக்கு உறக்கம் வரவில்லை. விதுரரே! நீர்தான் நம்மிடையே நன்கு அறிவு நூல்களைக் கற்றுத் தேர்ச்சி பெற்றவன்.ஆகவே, உறக்கம் வராது அவதிப் படும் எனக்கு ஒரு நல்வழி சொல்வாயாக.சஞ்சயன், என்ன செய்தி கொண்டு வந்துள்ளானோ? என்றே சிந்தனையாக உள்ளது.உம்மால், தருமர் என்ன சொல்லியிருப்பார் என யூகித்து சொல்ல முடியுமா? தருமர் எடுத்துள்ள முடிவு எனக்கு மகிழ்ச்சியைத் தருமா?" என்றார்.

அதற்கு விதுரர், அரசே, யார் யாருக்குத் தூக்கம் வராது தெரியுமா? பலசாலிகளால் பாதிப்புக்கு உள்ளாகும் பலமற்றவர்களும், தன் தொழிலுக்கு ஏற்ற கருவிகளை வைத்திராத தொழிலாளிகளுக்கும்,சொத்தை இழந்தவர்களுக்கும், காதலிப்பவர்கள் அல்லது காமுகர்களுக்கும், திருடர்கள் ஆகியோருக்கும் இரவில் சரியாகத் தூங்க முடியாது.

அரசே! நீங்கள் மேற்கண்ட எந்த வகைக்களுக்குள்ளும் அடங்குபவர் அல்லவே!பிறர் சொத்தை அடையும் பேராசை உங்களுக்குத் தெரியாதே!" என்றார்.

"அந்தப் பிரச்னைப் பற்றித்தான் உன் அறிவுரையைக் கேட்க விரும்புகிறேன்!உன் கருத்துகள் எப்போதுமே அறப்பண்புக்கு பொருந்தி வருபவை.ஆகவேதான், அரசர் குலத்தில் பிறந்த ஞானிகளில் நீ மட்டுமே அறிஞர்களாலும் போற்றப்படுகிறாய்" என்றார்.

அதற்கு விதுரர்,"அரசே1 நற்பண்புகள் நிறைந்த அரசன் மூவுலகங்களையு8ம் அரசாளும் மேன்மை பெறுவான்.அத்தகையப் பண்புகள் நிறைந்த தருமருக்கு ஆதரவு அளிக்காமல் நாடு கடத்திவிட்டீர்கள்".நீங்கள் நல்லவர், வல்லவர்.அறநெறி அறிந்தவரானாலும் தருமருக்கும், உங்களுக்கும் வித்தியாசம் உண்டு..பார்வை இல்லாததால் நீங்கள் அதிர்ஷ்டம் குறைந்தவர்.(திருதராஷ்டிரர் புறக்கண்கள் மட்டுமின்றி, அகக்கண்ணும்குருடானவர்,  என மறைமுகமாக உரைத்தார் விதுரர்)

தருமர்..மென்மையானவர்,கனிவானவர், அறவழியில் நடப்பவர், உண்மையானவர், உங்களுக்குக் குடும்பப் பெரியவர் என்ற முறையில் மதிப்புத் தருபவர்.தனக்கு இழைக்கப்பட்ட தீமைகளை எல்லாம் அவர் தன் நற்பண்புகள் காரணமாக சகித்து வருகிறார்.நீங்கள் அட்சிப் பொறுப்பை துரியோதனன், சகுனி,கர்ணன்,துச்சாதனன் ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டீர்கள்.அதற்குப் பிறகுமா வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும்?" என்றார்.(மேற்கண்டவர்கள் நாட்டை ஆளும் தகுதியற்றவர்களாவார்கள்)


Wednesday, August 26, 2015

4-திருதராஷ்டிரரும், விதுரரும்



மகாபாரதத்தில் மூன்று உபதேச நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

கண்ணன் அர்ச்சுனனுக்குச் செய்த கீதாபதேசம்
பீஷ்மர்  போருக்குப் பின் தருமருக்கு உரைத்த அறிவுரைகள்
விதுரர் திருதராஷ்டிரருக்குக் கூறிய நீதிகள்

ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடுள்ளவர்கள் கீதையை மிகவும் விரும்புவர் எனலாம்.மற்றவர்களுக்கு அந்த அளவிற்கு ஈடுபாடு இல்லாதிருக்கலாம்.

பீஷ்மர் கூறிய அறிவுரைகளோ...அரசர்களுக்கும், அரசியலில் உள்ளோர்க்கு மட்டுமே எனலாம்.

ஆனால் விதுரர் கூறியவை, ஆன்மீகவாதிகள்,ஆட்சியாளர்கள், ஆன்மீகத்தில் நாட்டமில்லாதவர்கள், நாத்திகவாதிகள் என அனைவருக்குமானது எனலாம்.ஆனாலும் விதுர நீதி, மற்ற இரண்டைப் போல அதிகம் பேசப்படவில்லை.ஆனாலும், அதற்கான மதிப்பு, மற்ற இரண்டைவிட எள்ளளவும் குறைவானதில்லை.

திருதராஷ்டிரர், கௌரவர்கள் பற்றிய கவலையில் உறக்கம் வராமல் தவித்தார்.அப்போது விதுரர் அவரைத் தேற்ற சொன்னக் கருத்துகள் இவை.

விதுர நீதி, தனி மனித வாழ்க்கை, சமூக வாழ்க்கை என இரண்டுடன் கைகோர்த்துச் செல்கிறது.தவிர்த்து...விதுர நீதி எந்த மதத்தையும் சார்ந்தது இல்லை எனலாம்.வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அனைவருக்கும் இது பொதுவானதாகும்.

எளிய சொற்கள், சொற் சிக்கனம், ஆழ்ந்த பொருள் ஆகியவை கொண்ட விதுர நீது திருக்குறளுக்கு ஒப்பானது எனலாம்.


பாரதப்போர் ஏற்படுவதைத் தடுக்க எண்ணிய திருதராஷ்டிரர் சஞ்சயனை பாண்டவர்களிடம் தூது அனுப்பினார்.சஞ்சயன் கூறியவற்றைக் கேட்ட தருமர், திருதராஷ்டிரரின் மனதில் உள்ளதை அறிந்தார்.அதனால் அவர் சஞ்சயனிடம் " ஒரு காலத்தில் பாண்டவர்கள், திருதராஷ்டிரரின் ஆசியோடு நாடு ஆண்டோம்.இப்போது, நாடு இன்றி, ஊரின்றி பிறரை அண்டி வாழ்கிறோம்.எங்களுக்கு ஐந்து கிராமங்களையாவது கொடுத்திருக்கலாம்" என்றார்.

தருமரின், பெருந்தன்மையால் கவரப்பட்ட சஞ்சயன் அன்றிரவே அஸ்தினாபுரம் வந்தான்.இரவு நேரமாகிவிட்டபடியால், திருதராஷ்டிரரிடம், தருமர் கூறியதை காலையில் கூறுவதாகக் கூறிச் சென்றான்.

சஞ்சயன் , என்ன பதில் கொண்டு வந்திருப்பானோ என்ற எண்ணத்தில் திருதராஷ்டிரருக்கு இரவு உறக்கம் வரவில்லை.ஆகவே, இரவை பேசிக் கழிக்க எண்ணி விதுரரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்.

திருதராஷ்டிரர், தன்னைக் கூப்பிட்டுப் பேசப்போகிறார் என விதுரருக்குத் தெரியாது.அதனால், அவர் கூப்பிட்டு அனுப்பியதும், அவரிடம் சாதாரணமாக உரையாடுவது போல விதுரர் சொல்லிக் கொண்டே வந்தார்.இந்த அறிவுரைகள் கொண்ட நூல் ஒவ்வொருவருர் இல்லத்திலும் இருக்க வேண்டிய ஒன்றாகும்.

திருதராஷ்டிரர் மனம் சஞ்சலத்தில் இருந்ததால், அவருக்கு மற்ற ஒருவர் அறிவுரை தேவைப்பட்டது.அதை விதுரர் செய்தார்.

இதைத்தான் வள்ளுவனும் இக்குறளில் கூறுகிறார்.

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாந் துணை

நூல்களைக் கற்காவிடினும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால் அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக மையும். 

Tuesday, August 25, 2015

3-விதுரர் மறைவு


விதுரர் பண்பாளர்.அனைவரிடமும் அன்பாகவும், பண்புடனும் பழகியவர்.அவர் திருதராஷ்டிரருக்கு நெருக்கமாகவும், ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் இருந்தவர்.திருதராஷ்டிரரும் எப்போதும் விதுரரின் ஆலோசனைகளைக் கேட்பார்.துரியோதனன் மீது உள்ள பாசத்தால், திருதராஷ்டிரர் விதுரரின் ஆலோசனைகளை மீறிய போதெல்லாம் அவதிப்பட்டார்.விதுரர் யாருக்காகவும் வளைந்து கொடுக்க மாட்டார்.பாண்டவர்களுக்கும் துன்பக் காலத்தில் விதுரர் உறுதுணையாய் இருந்தார்.

பாண்டவர்களை நேர்மையான முறையில் வெல்ல முடியாது என துரியோதனனும், சகுனியும், தருமரை சூதாட அழைத்து வெல்ல முடிவெடுக்கின்றனர்.

திருதராஷ்டிரர், விதுரரைக் கூப்பிட்டுத் தருமரை சூதாட வருமாறு நேரில் சென்று அழைக்கக் கூறுகிறார்.விதுரர், இதை எவ்வளவோ தட்டிக் கழிக்கப் பார்த்தும், திருதராஷ்டிரரின் பிள்ளைப் பாசத்தினால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

தருமர், நாட்டை வைத்து சூதாட வேண்டிய நிலை வந்த போது, விதுரர் எல்லோர் முன்னிலையிலும் திருதராஷ்டிரரைக் கண்டிக்கிறார்."துரியோதனைப் பிள்ளையென வளர்த்திட்டேன்.ஆனால், அது பாம்பை, நரியை வளர்த்ததற்கு ஒப்பாகிவிட்டதே!" என புலம்பினார்.அறநெறி தவறிய பிறகும் வாழ்வில் இன்பம் ஏற்படும் என எண்ண வேண்டாம் என்கிறார்.ஆனால், அதற்கு , அவருக்குக் கிடத்தது அவமானமே!

தருமர் சூதாட்டத்தில் திரௌபதியை வைத்துத் தோற்றதும், அவளை கேவலப்படுத்த, சபைக்கு அழைத்து வருமாறு விதுரருக்குக் கட்டளை இடுகிறான்.ஆனால், விதுரர், அதற்கு மறுத்து அவனைக் கண்டிக்கிறார்."மாண்டு தரை மீது கிடப்பாய்" மகனே..என துரியாதனன் இறப்பை முதலிலேயே சொல்கிறார். (முக்காலமும் அறிந்தவர் அவர், பின்னர், துரியோதனன் போரில் பீமனால் தரையில்  தடைப் பிளக்கப் பட்டு மாண்டு விழ நேர்ந்தது)

விதுரரின் நேர்மையை புரிந்துக் கொள்ளாத திருதராஷ்டிரர், அவர் பாண்டவர்களுக்காக பேசியதாக நினைக்கிறார்.விதுரரை நோக்கி, "நீ எதிரிக்காக பேசுவதாகத் தான் தெரிகிறது.இனி நான் உன்னை நம்ப முடியாது.நீ, இனி எனக்கு வேண்டாம்.பாண்டவர் இருக்குமிடத்திற்கே நீ செல்'என்கிறார். விதுரரும், கிளம்பி பாண்டவர்கள் இருக்கும் வனத்திற்குச் செல்கிறார்.பின்னர், தன் தவறை உணர்ந்து திருதராஷ்டிரர், தன் நண்பரும், தேரோட்டியுமான சஞ்சயனை அனுப்பி விதுரரை அழைத்து வரச் சொல்கிறார்.திரும்பி வந்தவரிடம் மன்னிப்பும் கேட்கிறார்.

பாரதப்போர் தொடங்குமுன் கண்ணன் தூதுவராக அஸ்தினாபுரம் வருகிறார்.அவரை வரவேற்க துரியோதனன் ஏற்பாடு செய்கிறான்.ஆனாலும், தன்னை நேரில் வரவேற்க வந்த விதுரரின் இல்லம் சென்ற கண்ணன் ,அங்கு விருந்துண்டு ஓய்வெடுக்கிறார்,

இதனால் கோபமுற்ற துரியோதனன் சபையில், "எனக்குப் பகைவன் உனக்கும் பகைவனல்லவா?" என்று கூறி, கண்ணனுக்கு ஏன் விருந்தளித்தாய் ? என்கிறான்."என் தந்தையுடன் பிறந்தும். இதுநாள் வரையில் என் கையால் அளிக்கப்பட்ட உணவை உண்ட நீ, என்னிடம் அன்புடையவன் அல்ல.எனக்கு வெளிப்பகையானாய் உள்ளவர்களைவிட நீ மிகவும் ஆபத்தானவன்" என்றும், அவரை வேசி மகன் என்றும் ஏசுகிறான்.

விதுரர் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு, "என்னைப் பழி கூறிய வாயையும், உன் தலையையும் உடனே என்னால் வெட்ட முடியும.ஆனால் குரு வம்சத்தில் பிறந்த ஒருவன், தன் புதல்வன் உயிரைக் கொன்றான்" என்று நாளை உலகம் என்னை ஏசும் .அதனால் விடுகிறேன்" என்றார்.

போரில் எந்தப் பக்கத்திலிம் நிற்க மாட்டேன் என்றவர் உலகின் பிரசித்தமான சிவ தனுசு, விஷ்ணு தனுசு ஆகிய சிறந்த வில் தனுசுகளில் தன்னிடமிருந்த விஷ்ணு தனுசை உடைத்து எறிந்தார்.



புதல்வரைப் போன்ற கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் நடக்கும் போரைக் காணவிழையாமல் விதுரர் புனிதத் தலங்களைத் தரிசிக்கச் சென்றார்,

குஜராத்தில் உள்ள பிரபாச தீர்த்தம் (சோமநாத்) என்னும் தலத்தை அடந்த போது, பாரதப் போரின் முடிவினை அறிந்தார்.ஹரித்துவார் சென்று மைத்திரேய முனிவரிடம் உபதேசம் பெற்று அஸ்தினாபுரம் திரும்பினார்.

பின் திருதராஷ்டிரர்,காந்தாரி, குந்தி ஆகியோருடன் இறுதி நாட்களைக் கழிக்க இமயமலைக்குப் புறப்பட்டார்.அங்கு கடுமையான தவங்களை மேற்கொண்டு உலக வாழ்க்கையை நீத்தார்.எனினும் ஒரு நீதிமானாக இன்றும் ஆத்திகர்களால் போற்றப்படுகிறார்.



Monday, August 17, 2015

2-விதுரர் பிறந்தார்



சந்திரக் குலத்தின் அரசர் சந்தனுவிற்கும், கங்கைக்கும் மகனானவர் பீஷ்மர்.கங்கை சந்தனுவைப் பிரிந்து சென்று சில காலம் கழித்து, சந்தனு சத்தியவதி என்னும் செம்படவப் பெண்ணை மணந்தார்.அந்தப் பெண் கன்னியாய் இருக்கும் காலத்திலேயே பராசர முனிவர் அவள் மீது மோகம் கொண்டார்.மனதளவிலான மோகமே அவளுக்கு ஒரு குழ்ந்தையைப் பிறப்பித்து விட்டது.அதுதான் வியாசர்.

சந்தனு, சத்தியவதியை மணந்த பிறகு அவர்களுக்கு சித்திராங்கதன், விசித்திர வீரியன் ஆகிய புதல்வர்கள் பிறந்தனர்.

சித்திராங்கதன் ஒரு கந்தர்வனால் கொல்லப்பட்டான்.பீஷ்மர், விசித்திரவீரியனுக்கு, அம்பிகை, அம்பாலிகை என்ற இரு சகோதரிகளை மணமுடித்தார்.ஆனால், விசித்திரவீரியனும் இறந்து விட்டான்.பீஷ்மரோ மணமாகாதவர்.வாரிசு இல்லாமல் சந்திரக் குலம் அழியும் நிலை.இதைத் தடுக்க எண்ணிய சத்தியவதி, அம்பிகை, அம்பாலிகை இருவரையும் குழந்தைப் பெற வியாசரிடம் அனுப்பினாள்.வியாசரும் அவளது மகன் தானே1 (இன்றும் சில வகுப்பினரிடையே ஒருவன் இறந்து போனால் அவனது மனைவியை அவனது சகோதரன் மணமுடிக்கும் வழக்கம் உண்டு)

ஆனால் சத்தியவதி வியாசரிடம், அவர் குழந்தைப் பிறக்கக் காரணமாய்த்தான் இருக்க வேண்டும்.குழந்தைகள் பிறந்ததும் விலகிட வேண்டும் என்றாள்.

வியாசர் மூலம், அம்பிகைக்குத் திருதராஷ்டிரரும், அம்பாலிகைக்குப் பாண்டுவும் பிறந்தனர். திருதராஷ்டிரர் பார்வையற்றவராய்ப் பிறந்தார்.பாண்டுவோ உடல் முழுதும் வெள்ளையாகப் (ரோகம்) பிறந்தார்.அதனால் மீண்டும் ஒரு குழந்தையைப் பெற அம்பிகையை, வியாசரிடம் போகச் சொன்னாள் சத்தியவதி.

அதற்கு விருப்பமில்லாத அம்பிகை, தனது பணிப்பெண் ஒருத்திக்கு தன்னைப் போல அலங்காரம் செய்து அனுப்பி வைத்தாள். இதை அறிந்து கொண்ட வியாசர், அப்பணிப் பெண்ணைத் தொட்டார்.அதன் விளைவாகவே அவளுக்கு ஒரு மகன் பிறந்தான்.அவனே தரும தேவதையின் அவதாரமான விதுரர் ஆவார்.

திருதராஷ்டிரர், பாண்டு, விதுரர் மூவருக்கும் ஒரே தந்தை வியாசர் ஆவார்.தாய்மார்கள் தான் வேறு.ஆகவே விதுரர், திருதராஷ்டிரர், பாண்டு ஆகியோர் அண்ணன், தம்பி முறையாகும்.

பீஷ்மர், திருதராஷ்டிரர், பாண்டு ஆகியோர்க்கு நற்குணவதிகளான அரசகுமாரிகளைத் திருமணம் செய்வித்தார்.விதுரர், சாதாரண மனிதனைப் போல எளிமையாய் வாழும் லட்சியம் கொண்டவர் ஆதலால் வடமதுரை மன்னன் தேவசன் என்பவனின் பணிப்பெண் ஒருத்தியை விதுரருக்கு மணம் முடித்தார்.அவளது பெயர் பாரசவி ஆகும்.

"வித்" என்ற வேர்ச் சொல்லிலிருந்து தன் பெயரைப் பெற்றதால், விதுரர் மாபெரும் அறிஞராகத் திகழ்ந்தார்.முக்காலமும் உணர்ந்த அவர், எக்காலமும் நேர்மையையே வலியுறுத்தியவர் ஆவார்.கடைசிவரை அறவழியிலேயேச் சென்றவர்.

ஆகவேதான் விதுரர் இன்றும் போற்றப்படுபவராக இருக்கிறார்.

Monday, August 3, 2015

1.தரும தேவதையும், மாண்டவ்யரும்

முன்னுரை

வணக்கம்

மகாபாரதத்தில் மூன்று உபதேசங்கள் சொல்லப்பட்டுள்ளன

ஒன்று - கண்ணன், அர்ச்சுணனுக்குச் சொன்ன கீதா உபதேசம்
இரண்டு- அம்புப் படுக்கயில் இருந்தவாறே, பீஷ்மர், தருமருக்கு உரைத்த அறிவுரைகள் (இதை நான் எனது, மினியேச்சர் மகாபாரதம்" என்ற நூலில் விரிவாகக் கூறியுள்ளேன்.
மூன்று- மனம் சஞ்சலத்தில் இருந்த போது, திருதராஷ்டிரருக்கு, விதுரர் கூறிய அறிவுரைகள்

இவற்றுள், கீதை, போற்றப்பட்ட அளவிற்கு மற்ற இரண்டும் சொல்லப்படவில்லை.

விதுரர் நீதியும் பேசப்பட வேண்டும் என்ற அவாவே..இந்நூல் எழுதக் காரணம்.

சமஸ்கிருத ஸ்லோகங்களை தமிழில் மொழிபெயர்த்து டாக்டர் என்.ஸ்ரீதரன் அவர்கள் எழுதியுள்ள "விதுர நீதி" என்ற நூலை, நான் படித்துக் கொண்டிருந்த போது, அதில் சொல்லப்பட்டிருந்த பல செய்திகளை, பொய்யாமொழிப் புலவனும் , இரண்டு...இரண்டு அடிகளில் சொல்லியிருப்பதுக் கண்டு அதிசயத்தேன்

உடன், விதுரர் நீதியயும், வள்ளுவர் நீதியையும் தொகுத்து ஒரு புத்தகமாக்கும் எண்ணம் எழுந்தது.இவர்கள் கூறியுள்ள அறிவுரைகளை முடிந்த அளவிற்கு நாமும் நம் வாழ்நாளில் பின்பற்றலாமே!

ஆமாம்...விதுரருடன்...வள்ளுவரை ஏன் ஒப்பிட்டேன்...

விதுரர்...தனிப்பட்ட ஒருவருக்கு உரைத்தார்..ஆனால் வள்ளுவரோ, பொதுவாக அனைவருக்கும் சொல்லியுள்ளார்.

தவிர்த்து....திருக்குறள் ஒரு வாழ்வுநூல்

அறநூல்...எனில், அறநெறியை மட்டுமே வகுத்துக் கூறும் போக்குடையதாய் இருக்கும்.ஆனால், வாழ்வுநூல் எனில், தனக்கென பல தனித்தன்மைகளைக் கொண்டதாய் இருக்கும்.ஒரு குறிப்பிட்ட சமயத்தினர்,மொழியினர்,நாட்டினர் என்ற எல்லைகளைக் கடந்து மனிதகுலத்தின் வாழ்வு நூலாக விளங்குகிறது திருக்குறள்.இது, நடுவுநிலையுடன் உள்ளது என்பதை படிப்பவர்கள் உணர்வார்கள்

அறத்துப்பாலில், அறத்தின் பெருமையும்,பயனும் விளக்கப்பட்டுள்ளது
பொருளின் சிறப்பு,அதை சேகரித்து, காத்து,வகுத்து வழங்குமுறைகளை பொருட்பால் கூறுகிறது.இதில், சமுதாயக் கருத்துகள், அரசியல் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.

தவிர, ஒரு அதிசயம் என்னவெனில், தமிழில் எழுதப்பட்டுள்ள திருக்குறளில், ஒரு குறளில் கூட தமிழ்நாடு என்றோ, தமிழன் என்றோ, தமிழ் என்றோ சொற்கள் கிடையாது.ஆகவேதான் திருக்குறள் உலகப் பொதுமறை எனப் போற்றப் படுகிறது

இந்நூலை கொண்டுவர ஊக்குவித்த சூரியன் பதிப்பகத்தாருக்கும், குறிப்பாக திரு முருகன் அவர்களுக்கும்,முகப்பு ஓவியம் வரைந்த --------- ஓவியருக்கும், அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

கடைசியாக ...ஒரு செய்தி....

இந்நூலை ஆரம்பத்திலிருந்து...நாவலைப் போலத் தொடர்ச்சியாய் படித்தால்தான் புரியும் என்பதில்லை.எந்தப் பக்கத்தை எடுத்து, எப்போது வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் படிக்கலாம்

படியுங்கள், ரசியுங்கள், முடிந்தவற்றை பின்பற்றுங்கள்.

அனைவருக்கும் நன்றி

அன்புடன்
டி.வி.ராதாகிருஷ்ணன்
--------------------------------------------------------------------------------------------------------------------
விதுர நீதி
--------------------------------------------------------------------------------------------------------------

மாண்டவ்யர் என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார்.அந்த இடத்திற்கு சில திருடர்கள் வந்தனர்.

அந்தத் திருடர்களை, அரண்மனை சேவகர்கள் துரத்தியதால், அவர்கள் தாங்கள் திருடிய பொருள்களை அந்த முனிவரின் ஆசிரமத்தில் ஒளித்து வைத்துவிட்டு மறைந்து கொண்டனர்.

முனிவரைத் திருடர்களின் தலைவன் என்று நினைத்த படைத்தலைவன், சேவகர்களை அங்குக் காவல் வைத்து விட்டு அரசரிடம் முறையிடச் சென்றான்.அரசனும், சிறிதும் யோசியாது, "அத் திருடனை சூலத்தின் ஏற்றுங்கள்" என்றார்.

சூலத்தில் ஏற்றப்பட்ட முனிவர் இறக்காமல் சமாதி நிலையில் இருந்தார்.

இந்தச் செய்தி பரவ, பல முனிவர்கள் அங்குக் கூடினர்.அரசரும் அங்கு வந்தார்.பின், முனிவரைப் பற்றி அறிந்த அரசன், அவரை சூலத்திலிருந்து இறக்கி, அவரிம் மன்னிப்புக் கேட்டான்.

மாண்டவ்யர், தரும தேவதையிடம் சென்று, "நான் செய்த குற்றம் என்ன?  என்னை ஏன் தண்டித்தீர்கள்?" என்றார்,

"நீங்கள் சிறு வயதில் தும்பி ஒன்றைப் பிடித்து, அதன் வாலை வெட்டி எறிந்து , அதன் உடலில் ஒரு முள்ளைச் செருகி, அதை பறக்கவிட்டு துன்புறுத்தினீர்கள். அந்தத் தவறினால்தான் , தண்டனையாக சூலத்தில் ஏற்றப்பட்டீர்கள்' என்றது தரும தேவதை.

"அறியாத பருவத்தில், தெரியாமல் செய்த சிறு செயலுக்கு, என்னை இவ்வளவு கொடுமையாக தண்டித்த நீ....பூவுலகில் மனிதனாகப் பிறந்து வாழ்வாயாக1" என்று முனிவர் தருமதேவதைக்கு சாபமிட்டார்.

இந்த சாபத்தால் தரும தேவதை பீஷ்மரின் சிற்றன்னை சத்தியவதியின் மகனாகிய விசித்திரவீரியனின் மனைவி அம்பிகையின் பணிப்பெண்ணிற்கும், வியாசமுனிவருக்கும் மகனாகப் பிறந்து விதுரர் என்ற பெயர் பெற்றார் (ள்) தருமதேவதை.

(பிற உயிரை துன்புறுத்தக் கூடாது.அப்படிச் செய்பவருக்குக் கேடு விளையும்.இங்கும் மாண்டவ்யர், தும்பிக்குச் செய்த சிறு தீங்கு, அவரை சூலத்தில் ஏற்றும் நிலைக்கு வந்தது.பிறருக்கு துன்பம் இழைத்தால் நமக்குக் கேடு உண்டாகும். இதை வள்ளுவன் எப்படிச் சொல்கிறார்..

செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்

செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்.செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்

இங்கு செய்யக் கூடாதது, தும்பிக்கு துன்பம்

செய்ய வேண்டியது, தும்பியை துன்புறுத்தாமல், சுதந்திரமாக செயல் பட வைக்க வேண்டியது.)