Monday, August 3, 2015

1.தரும தேவதையும், மாண்டவ்யரும்

முன்னுரை

வணக்கம்

மகாபாரதத்தில் மூன்று உபதேசங்கள் சொல்லப்பட்டுள்ளன

ஒன்று - கண்ணன், அர்ச்சுணனுக்குச் சொன்ன கீதா உபதேசம்
இரண்டு- அம்புப் படுக்கயில் இருந்தவாறே, பீஷ்மர், தருமருக்கு உரைத்த அறிவுரைகள் (இதை நான் எனது, மினியேச்சர் மகாபாரதம்" என்ற நூலில் விரிவாகக் கூறியுள்ளேன்.
மூன்று- மனம் சஞ்சலத்தில் இருந்த போது, திருதராஷ்டிரருக்கு, விதுரர் கூறிய அறிவுரைகள்

இவற்றுள், கீதை, போற்றப்பட்ட அளவிற்கு மற்ற இரண்டும் சொல்லப்படவில்லை.

விதுரர் நீதியும் பேசப்பட வேண்டும் என்ற அவாவே..இந்நூல் எழுதக் காரணம்.

சமஸ்கிருத ஸ்லோகங்களை தமிழில் மொழிபெயர்த்து டாக்டர் என்.ஸ்ரீதரன் அவர்கள் எழுதியுள்ள "விதுர நீதி" என்ற நூலை, நான் படித்துக் கொண்டிருந்த போது, அதில் சொல்லப்பட்டிருந்த பல செய்திகளை, பொய்யாமொழிப் புலவனும் , இரண்டு...இரண்டு அடிகளில் சொல்லியிருப்பதுக் கண்டு அதிசயத்தேன்

உடன், விதுரர் நீதியயும், வள்ளுவர் நீதியையும் தொகுத்து ஒரு புத்தகமாக்கும் எண்ணம் எழுந்தது.இவர்கள் கூறியுள்ள அறிவுரைகளை முடிந்த அளவிற்கு நாமும் நம் வாழ்நாளில் பின்பற்றலாமே!

ஆமாம்...விதுரருடன்...வள்ளுவரை ஏன் ஒப்பிட்டேன்...

விதுரர்...தனிப்பட்ட ஒருவருக்கு உரைத்தார்..ஆனால் வள்ளுவரோ, பொதுவாக அனைவருக்கும் சொல்லியுள்ளார்.

தவிர்த்து....திருக்குறள் ஒரு வாழ்வுநூல்

அறநூல்...எனில், அறநெறியை மட்டுமே வகுத்துக் கூறும் போக்குடையதாய் இருக்கும்.ஆனால், வாழ்வுநூல் எனில், தனக்கென பல தனித்தன்மைகளைக் கொண்டதாய் இருக்கும்.ஒரு குறிப்பிட்ட சமயத்தினர்,மொழியினர்,நாட்டினர் என்ற எல்லைகளைக் கடந்து மனிதகுலத்தின் வாழ்வு நூலாக விளங்குகிறது திருக்குறள்.இது, நடுவுநிலையுடன் உள்ளது என்பதை படிப்பவர்கள் உணர்வார்கள்

அறத்துப்பாலில், அறத்தின் பெருமையும்,பயனும் விளக்கப்பட்டுள்ளது
பொருளின் சிறப்பு,அதை சேகரித்து, காத்து,வகுத்து வழங்குமுறைகளை பொருட்பால் கூறுகிறது.இதில், சமுதாயக் கருத்துகள், அரசியல் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.

தவிர, ஒரு அதிசயம் என்னவெனில், தமிழில் எழுதப்பட்டுள்ள திருக்குறளில், ஒரு குறளில் கூட தமிழ்நாடு என்றோ, தமிழன் என்றோ, தமிழ் என்றோ சொற்கள் கிடையாது.ஆகவேதான் திருக்குறள் உலகப் பொதுமறை எனப் போற்றப் படுகிறது

இந்நூலை கொண்டுவர ஊக்குவித்த சூரியன் பதிப்பகத்தாருக்கும், குறிப்பாக திரு முருகன் அவர்களுக்கும்,முகப்பு ஓவியம் வரைந்த --------- ஓவியருக்கும், அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

கடைசியாக ...ஒரு செய்தி....

இந்நூலை ஆரம்பத்திலிருந்து...நாவலைப் போலத் தொடர்ச்சியாய் படித்தால்தான் புரியும் என்பதில்லை.எந்தப் பக்கத்தை எடுத்து, எப்போது வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் படிக்கலாம்

படியுங்கள், ரசியுங்கள், முடிந்தவற்றை பின்பற்றுங்கள்.

அனைவருக்கும் நன்றி

அன்புடன்
டி.வி.ராதாகிருஷ்ணன்
--------------------------------------------------------------------------------------------------------------------
விதுர நீதி
--------------------------------------------------------------------------------------------------------------

மாண்டவ்யர் என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார்.அந்த இடத்திற்கு சில திருடர்கள் வந்தனர்.

அந்தத் திருடர்களை, அரண்மனை சேவகர்கள் துரத்தியதால், அவர்கள் தாங்கள் திருடிய பொருள்களை அந்த முனிவரின் ஆசிரமத்தில் ஒளித்து வைத்துவிட்டு மறைந்து கொண்டனர்.

முனிவரைத் திருடர்களின் தலைவன் என்று நினைத்த படைத்தலைவன், சேவகர்களை அங்குக் காவல் வைத்து விட்டு அரசரிடம் முறையிடச் சென்றான்.அரசனும், சிறிதும் யோசியாது, "அத் திருடனை சூலத்தின் ஏற்றுங்கள்" என்றார்.

சூலத்தில் ஏற்றப்பட்ட முனிவர் இறக்காமல் சமாதி நிலையில் இருந்தார்.

இந்தச் செய்தி பரவ, பல முனிவர்கள் அங்குக் கூடினர்.அரசரும் அங்கு வந்தார்.பின், முனிவரைப் பற்றி அறிந்த அரசன், அவரை சூலத்திலிருந்து இறக்கி, அவரிம் மன்னிப்புக் கேட்டான்.

மாண்டவ்யர், தரும தேவதையிடம் சென்று, "நான் செய்த குற்றம் என்ன?  என்னை ஏன் தண்டித்தீர்கள்?" என்றார்,

"நீங்கள் சிறு வயதில் தும்பி ஒன்றைப் பிடித்து, அதன் வாலை வெட்டி எறிந்து , அதன் உடலில் ஒரு முள்ளைச் செருகி, அதை பறக்கவிட்டு துன்புறுத்தினீர்கள். அந்தத் தவறினால்தான் , தண்டனையாக சூலத்தில் ஏற்றப்பட்டீர்கள்' என்றது தரும தேவதை.

"அறியாத பருவத்தில், தெரியாமல் செய்த சிறு செயலுக்கு, என்னை இவ்வளவு கொடுமையாக தண்டித்த நீ....பூவுலகில் மனிதனாகப் பிறந்து வாழ்வாயாக1" என்று முனிவர் தருமதேவதைக்கு சாபமிட்டார்.

இந்த சாபத்தால் தரும தேவதை பீஷ்மரின் சிற்றன்னை சத்தியவதியின் மகனாகிய விசித்திரவீரியனின் மனைவி அம்பிகையின் பணிப்பெண்ணிற்கும், வியாசமுனிவருக்கும் மகனாகப் பிறந்து விதுரர் என்ற பெயர் பெற்றார் (ள்) தருமதேவதை.

(பிற உயிரை துன்புறுத்தக் கூடாது.அப்படிச் செய்பவருக்குக் கேடு விளையும்.இங்கும் மாண்டவ்யர், தும்பிக்குச் செய்த சிறு தீங்கு, அவரை சூலத்தில் ஏற்றும் நிலைக்கு வந்தது.பிறருக்கு துன்பம் இழைத்தால் நமக்குக் கேடு உண்டாகும். இதை வள்ளுவன் எப்படிச் சொல்கிறார்..

செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்

செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்.செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்

இங்கு செய்யக் கூடாதது, தும்பிக்கு துன்பம்

செய்ய வேண்டியது, தும்பியை துன்புறுத்தாமல், சுதந்திரமாக செயல் பட வைக்க வேண்டியது.)

No comments:

Post a Comment