Sunday, December 13, 2015

28_-விதுரர் சொன்ன கதை (தொடர்ச்சி)



அதற்கு பரஹம்சர் "அரசே! ஒருவர் தன் மகனுக்குத் தன்னிடம் உள்ள அனைத்து செய்வங்களையும் கொடுக்கலாம்.ஆனால், மகனுக்கும், மற்றவர்க்கும் தகராறு ஏற்பட்டு விவாதம் எழுந்தால் உண்மையான பதிலைக் கூற வேண்டும்" என்றார்.

பிரகலாதர், "முனிவரே! ஒருவன் முழு உண்மையையோ, பொய்யையோ பதிலாகக் கூறாவிடின் என்ன பாவம் செய்தவனாகிறான்? அவனுக்கு என்ன கஷ்டம் ஏற்படும்?" என வினவினார்.

"தர்மநெறி பற்றி ஒருவரிடம் கேட்டால் சரியான பதில் தர வேண்டும்,வழி தவறிய கழுதை அலைவதைப் போல சுற்றி வளைத்துப் பேசக் கூடாது.அவ்வாறு சொல்பவன் அறநெறியிலிருந்து வீழ்பவன் ஆகிறான்.அப்படிப்பட்டவன், அரசன் எனில், அவன் தன் நாட்டையும், குடிமக்களையும் இழந்தவன் ஆகிறான்.ஆற்றங்கரையில் உள்ள மரங்கள் வெள்ளம் பெருக்கெடுத்தால் வீழ்ந்துவிடும்.அதுபோல அறநெறியை அறிந்திருந்தும் மௌனமாய் இருப்பவரும்,அதுபற்றி சிந்தித்தும் கருத்தை வெளியிடாதவனும் அழிந்து போவார்கள்.ஒரு சபையின் கூட்டத்தில் சிலர் தவறாக நடந்தால் அவர்கள் கண்டிக்கப் பட வேண்டும்.அல்லையேல்,பாதி பாவம் சபைத்தலைவரைச் சேரும்.மீதியில் கால் பாகம் தவறிழைத்தவரையும், எஞ்சியுள்ள கால் பாகம் கூட்டத்திற்கு வந்து மௌனமாய் இருந்தவர்களையும் சாரும். (இவ்விடத்தில்..பாஞ்சாலி சபையில் அவமானப்பட்டபோது, விதுரர்,விகர்ணன் தவிர பீஷ்மர் உடபட மௌனம் காத்த அனைவரும் தவறிழத்தவர்கள் என்பதை நினைவுக்கு வருகிறது).

இதற்கு மாறாக குற்றம் செய்தவர்கள் கண்டிக்கப் பட்டால் சபையின் தலைவர் பாவமற்றவர் ஆகிறார்.சபையிலுள்ளோர் பாவமும் நீங்கும்.எல்லாப் பாவமும் கூற்றமிழைத்தவரையேச் சாரும்." என்றார் பரஹம்சர்.

பின் பிரகலாதர், " முனிவரே! அறியாமை காரணமாகவோ அல்லது சுயநலத்தாலோ தூண்டப்பட்டு ஒருவன் பொய்யான பதிலைச் சொன்னாலவன் நிலை என்ன? அவன் எத்துன்பத்தை அனுபவிப்பான்?" என வினவினார்.

கணவன் இன்னொருத்தியை மணந்து கொண்டால் முதல் மனைவியும், சூதாட்டத்தில் தோற்றவனும், கவலைகளால் நசுக்கப்பட்டவனும் இரவு நேரத்தில் தூங்காமல் புலம்பிக் கொண்டிருப்பார்கள்.அதுபோலவே ஒருவன் தனக்குத் தெரிந்துள்ள உண்மையை தெளிவாகவும், துணிச்சலாகவும் பேசாவிடில் வாழ்நாள் முழுதும் துயருடன் கழிப்பான்.

ஒரு நகரினுள் நுழையமுடியாது தடுக்கப்பட்டவனும், நகருக்கு வெளியே இருக்க நேர்ந்து பட்டினி கிடப்பவனும், கண்ணெதிரே எதிரிகளையேக் காண்பவனும் , இரவு நேரத்தில் தூங்க முடியாது புலம்பிக் கொண்டிருப்பர்.அதுபோல ஒருவன் தான் அறிந்த உண்மையைத் துணிச்சலாக வெளியிடாவிடின் வாழ்நாளை துயருடன் கழிப்பர்

ஒருவன் தான் வளர்க்கும் விலங்கிற்காக (ஆடு போன்றவை) பொய் சொன்னால் அவன் முன்னோர்களில் ஐவர் நரகத்தில் தள்ளப்படுவர்.தனது பசுவிற்காகப் பொய் சொன்னால் பத்து முன்னோர்களும், தனது குதிரைக்காகப் பொய் சொன்னால் நூறு முன்னோர்களும் நரகத்தில் தள்ளப்படுவர்.தனது வேண்டிய மனிதர்களுக்காகப் பொய் சொன்னால் ஆயிரம் முன்னோர்கள் நரகத்தை அடைவர்

செல்வத்தை அடைய பொய் கூறுபவன், தன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும், எதிர்காலத்தில் பிறக்கப் போகிறவர்களுக்கும் அழிவு ஏற்படச் செய்கிறான்.நிலம் சம்பந்தமாய் பொய் சொன்னால் தன்னிடம் உள்ளவையும் தன்னைச் சார்ந்தவையும் எதுவும் மிஞ்சாமல் அழிந்துவிடும்.ஆகவே நிலம் (ராஜ்ஜியம்) பற்றிப் பொய் பேசக்கூடாது.,

பரஹம்சர் சொன்னவற்றைக் கேட்ட பிரகலாதர் விரோசனன், சுதன்வன் இருவரின் கேள்விக்கு தீர்ப்பு சொல்ல ஆரம்பித்தார்.

விரோசனனைப் பார்த்து, "விரோசனா! சுதன்வனின் தந்தை அங்கிரச முனிவர் என்னைவிட உயர்ந்தவர்.சுதன்வனின் தாயார் உன் தாயாரைவிட உயர்ந்தவர்.எனவே சுதன்வனும் உன்னைவிட உயர்ந்தவர் ஆகிறார்.அவர் உன்னை பந்தயத்தில் வென்று விட்டார். உன் உயிரப் பணயம் வைத்துப் போட்டியிட்டதால் சுதன்வன் உன் உயிருக்கு உரைமையாளர் ஆகிறார்" என்றார்.

பின் சுதன்வனைப் பார்த்து, "சுதன்வரே! தயவு செய்து விரோசனின் உயிரை அவனுக்குத் திருப்பித் தாருங்கள்" என்றார்.

சுதன்வன், "பிரகலாதரே1 உங்கள் மகன் போட்டியில் தோற்றதால் பணயமாக வைத்த உயிர் மீதான உரிமையை இழந்துவிட்டார்.ஆனால் நீண்கள் தர்மத்தையே கடைப்பிடிக்க முடிவெடுத்தீர்கள்.சுயநலத்திற்குக் கூட நீங்கள் பொய் சொல்ல வில்லை.நீங்கள் சத்தியத்தைக் கூறியதற்காக உங்கள் மகனை உங்களுக்கேத் திருப்பி அளிக்கிறேன்.விரோசனனின் உயிர் மீதான என் உரிமையைத் திருப்பித் த்ந்து விட்டேன்.நான் உயர்ந்தவன் என்பதை ஒப்புக் கொண்டுவிட்டதால் கேசினியின் முன் விரோசனன் என் கால்களைக் கழுவ வேண்டும்" என்றார்.

(சாதி, மதங்கள், உயர்ந்தவன் .தாழ்ந்தவன் ஆகியவை ஒழிந்துவரும் இக்காலத்தில்...மேற்கண்ட கதை..அந்தக் காலக்கட்டத்தில் சொல்லப்பட்டது என்பதி நினைவில் கொள்க)

இனி வள்ளுவர்

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி

ஒரு பக்கமே சாய்ந்துவிடாமல் நாணயமான தராசுமுள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்


No comments:

Post a Comment