Tuesday, January 26, 2016

13)அடக்கம் உடைமை

1.அடக்கம் அழியாப்புகழையும்,அடங்காமை வாழ்வில் இருளையும் உண்டாக்கும்.

2.மிக்க உறுதியுடன் காக்கப்படும் அடக்கம், ஆக்கத்தையே தரும்.

3.தெரிந்து கொள்ளவேண்டியதை அறிந்து அடக்கத்துடன் நடப்பவர் பண்பு உலகு பாராட்டும்.

4.உறுதியான உள்ளம், அடக்க உணர்வு கொண்டவர் உயர்வு மலையைப்போல் ஆகும்.

5.பணிவு நலம் பயக்கும்...அதுவே செல்வமாகும்.

6.தன் ஓட்டுக்குள் உடலையே அடக்கும் ஆமைப்போல் ஐம்பொறிகளையும் அடக்க வேண்டும்.

7.யாரானாலும்..தன் நாக்கை கட்டுப்படுத்த வேண்டும்.இல்லையேல் துன்பமே வரும்.

8.பேசும் நல்ல வார்த்தைகளில்,சில தீய சொல் இருந்தாலும்..குடம் பாலில் கலந்த நஞ்சு போல் ஆகிவிடும்.

9.நெருப்பினால் பட்ட காயம் கூட ஒரு நாள் ஆறிவிடும்..ஆனால் நாவினால் கொட்டப்பட்ட சொற்களால் ஏற்படும்
துன்பம் ஆறவே ஆறாது.

10.நன்கு கற்று,கோபம் தவிர்த்து அடக்கம் கொண்டவரை அடைய அறவழி காத்திருக்கும்.

14)ஒழுக்கம் உடைமை

1.ஒழுக்கம் உயர்வைத் தருவதால், அது உயிரை விட மேலானதாகும்.

2.எப்படி ஆராய்ந்தாலும்,வாழ்வில் ஒழுக்கமே சிறந்த துணை..ஆதலால் எப்பாடுபட்டாவது அதை காக்கவேண்டும்.

3.உயர்ந்த குடிபிறப்பு ஒழுக்கத்தையே அடிப்படையாகக் கொண்டது.ஒழுக்கம் தவறியவர் இழிந்த குடிபிறப்பாவர்.

4.உயர் குடியில் பிறந்தவன் படித்ததை மறந்தால்..மீண்டும் படிக்கலாம்.ஆனால் ஒழுக்கம் தவறினால் அவன்
இழிமகனே ஆவான்

5.பொறாமைக்காரனும்,தீய ஒழுக்கமும் உள்ளவன் வாழ்வு உயர்வான வாழ்வாகாது.

6.மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறினால் உண்டாகும் இழிவுப்பற்றி தெரிந்திருப்பதால்..நல்லொழுக்கத்துடன் நடப்பார்கள்.

7.நன்னடத்தை உயர்வு தரும்.அல்லதோர் மீது இழிவான பழி சேரும்.

8.நல்லொழுக்கம் நன்மைக்கு வித்து.தீயொழுக்கமோ தீராத துன்பம்.

9.தவறி கூட தகாத வார்த்தைகளை ஒழுக்கமுடையோர் கூறக்கூடாது.

10.ஒழுக்கம் என்ற பண்போடு வாழத்தெரியாதவர்..எவ்வளவு படித்தும்..அறிவில்லாதவர்களே ஆவர்.

15)பிறனில் விழையாமை

1.அறநூல்,பொருள் நூல்களை உணர்ந்தவர்கள் பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்ளமாட்டார்கள்.

2.பிறன் மனைவியை அடைய நினைப்பவர்கள் மிகவும் கீழானவர்களாவர்.

3.பிறர் மனைவியிடம் தகாதமுறையில் நடப்பவன்..உயிர் இருந்தும் பிணத்துக்கு ஒப்பாவான்.

4.தப்பு செய்யும் எண்ணத்துடன் பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது எப்பேர்ப்பட்டவனையும்
மதிப்பிழக்கச் செய்துவிடும்.

5.பிறன் மனைவியை எளிதாக அடையலாம் என முறைகேடான செயலில் ஈடுபடுபவன் அழியா பழியை அடைவான்.

6.பிறன் மனைவியை விரும்புவனிடமிருிந்து பகை,தீமை,அச்சம்,பழி இந்நான்கும் நீங்காது.

7.பிறன் மனைவியிடம் இன்பத்தை நாடி செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை
மேற்கொண்டவனாவான்.

8.காம எண்ணத்துடன்... பிறன் மனைவியை அணுகாதவனின் குணம் அவனை ஒழுக்கத்தின் சிகரமாக
ஆக்கும்.

9.பிறன் மனைவியைத் தீண்டாதவனே உலகின் பெருமைகளை அடைய தகுதியானவன்.

10.பிறன் மனைவியை விரும்புவது... அறவழியில் நடக்காதவர் செயலை விடத் தீமையானதாகும்.

16)பொறையுடைமை

1.கூட இருந்தே குழிப்பறிப்போரையும்...இந்த பூமி தாங்குவது போல...நம்மை இகழ்பவர்களை
பொறுத்துக்கொள்ளவேண்டும்.

2.ஒருவர் செய்த தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக்காட்டிலும் ....அத்தீங்கை மறந்துவிடுவதே சிறந்த பண்பு.

3.வறுமையில் பெரும் வறுமை விருந்தை வரவேற்க முடியாதது.அதுபோல ...பெரும்வலிமை
அறிவிலிகளை பொறுத்துக்கொள்வது.

4.பொறுமையாய் இருப்பவரை நிறைவான மனிதர் என போற்றுவர்.

5.தமக்கு இழைக்கப்படும் தீமையை பொறுத்துக்கொள்பவரை உலகம் பொன்னாக மதித்து போற்றும்.

6.தமக்கு கேடு செய்பவரை தண்டித்தல் ஒரு நாள் இன்பம்.
அவரை மன்னித்தல் வாழ்நாள் முழுவதும் இன்பம்.

7.பிறர் செய்யும் இழிவுக்கு பதிலாக இழிவே செய்யாது பழி வாங்காதிருத்தலே நற்பண்பாகும்.

8.அநீதி விளைவிப்பவர்களை ...பொறுமை என்னும் குணத்தால் வென்றிடலாம்.

9.கொடுமையான சொற்கள் நம்மீது வீசப்பட்டாலும் ....அதை பொறுப்பவனே தூய்மையானவனாவான்.

10.இறைவனுக்கு உண்ணா நோன்பு இருப்பவரை விட...ஒருத்தர் கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுப்பவர்
முதன்மையானவர் ஆவார்.

17)அழுக்காறாமை

1.ஒழுக்கத்துக்குரிய நெறி மனத்தில் பொறாமையின்றி வாழ்வதே.

2.ஒருவர் பெரும் மேலான பேறு யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பே ஆகும்.

3.அறநெறி.ஆக்கம் .ஆகியவற்றை விரும்பாதவன் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.

4.தீயவழியில் சென்றால் துன்பம் ஏற்படும் என்பதை உணர்ந்தால் பொறாமை காரணமாக
தீயச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

5.பொறாமைக்குணம் கொண்டவர்களை வீழ்த்த வேறு பகை தேவை இல்லை.... அந்த குணமே போதும்.

6.ஒருவர்க்கு செய்யும் உதவியைக்கண்டு பொறாமை அடைந்தால் அந்த குணம் ..அவனையும்..
அவனை சார்ந்தோரையும் அழிக்கும்.

7.பொறாமைக் குணம் கொண்டவனை விட்டு லட்சுமி விலகுவாள்.

8.பொறாமை என்னும் தீ ஒருவனுடைய செல்வத்தை அழித்து அவனை தீய வழியில் விட்டுவிடும்.

9.பொறாமைக்குணம் கொண்டவனின் வாழ்வு வளமாகவும்...அல்லாதவன் வாழ்வு வேதனையாகவும்
இருந்தால் அது வியப்பான செய்தியாகும்.

10.பொறாமையால் உயர்ந்தோரும் இல்லை...அல்லாத காரணத்தால் புகழ் இகழ்ந்தாரும் இல்லை

18)வெஃகாமை

1.பிறரின் பொருளைக் கவர்ந்துக்கொள்ள விரும்புபவரின் குடியும் கெட்டொழிந்து..பழியும் வந்து சேரும்.

2.நடுவுநிலை தவறுவது வெட்கப்படும் செயல் என்பவர்..பயனுக்காக பழிக்கப்படும் செயலை செய்யார் .

3.அறவழி பயனை உணர்வோர்..உடனடிப் பயன் கிடைக்கும் என்பதற்காக அறவழி தவறார்.

4.புலனடக்கம் கற்றோர்..வறுமையில் வாடினாலும் பிறர் பொருளை விரும்பார்.

5.அறவழிக்கு புறம்பாக நடப்பவரிடம் நுண்ணறிவு இருந்தும் பயனில்லை.

6.அறவழி நடப்பவன் பிறர் பொருளை விரும்பி தவறான செயலில் ஈடுபட்டால் கெட்டழிவான்.

7.பிறன் பொருளால் வளம் பெற விழைபவனுக்கு அதனால் உண்டாகும் பயனால் நன்மை இருக்காது.

8.நம்மிடம் உள்ள செல்வச்செழிப்பு குன்றாமல் இருக்க வேண்டின்,பிறன் பொருள் மீதான ஆசை தவிர்க்க வேண்டும்.

9.பிறன் பொருளைக் கவரா மக்களின் ஆற்றலுக்கேற்ப செல்வம் சேரும்.

10.பிறன் பொருளை கவர்பவன் வாழ்வு அழியும்.அல்லாதான் வாழ்வு வெற்றி அடையும்.

19புறங்கூறாமை

1.மற்றவர்களைப் பற்றி புறம் பேசுதல் அறவழியில் நடக்காதிருத்தலை விடத் தீமையானது.

2.நேரில் பொய்யாக சிரித்து..மறைவில் அவர் பற்றி தீது உரைப்பது கொடுமையானது.

3.ஒருவரை பார்க்கும்போது ஒன்றும் ....பார்க்காதபோது ஒன்றுமாக பேசுபவர் உயிர் வாழ்வதைவிட சாவது நன்று.

4.நேருக்கு நேர் ஒருவரது குறைகளை சாடுவது புறங்கூறுவதை விட நல்லது.

5.பிறரைப்பற்றி புறம் பேசுபவன் அறவழியில் நடக்காதவனாவான்.

6.பிறர் மீது புறம் கூறினால் ...அதுவே கூறுபவனை திரும்பி தாக்கும்.

7.இனிமையாக பேசத்தெரியாதவர்கள்தான் நட்பை கெடுத்து புறங்கூறுவார்கள்.

8.நெருங்கியவர்களை பற்றியே புறம் பேசுபவர்கள் மற்றவர்களைப்பற்றி எவ்வளவு கூறுவார்கள்.

9.ஒருவன் இல்லாதபோது அவனைப்பற்றி பழிச்சொல் கூறுபவனையும் தருமமாக நினைத்தே
பூமி காக்கிறது

10.பிறர் குற்றம் பற்றி எண்ணுபவர்கள் தன்னிடமுள்ள குற்றத்தையும் நினைத்தல் நல்லது.

20)பயனில சொல்லாமை

1.பலர் வெறுக்கும் பயனற்ற சொற்களை பேசக்கூடாது.

2.பலர்முன் பயனற்றவற்றை பேசுவது தீமையுடையதாகும்.

3.பயனற்றவற்றைப்பற்றி பேசுபவனை பயனற்றவன் என்று சொல்லலாம்.

4.பயனற்ற,பண்பற்ற சொற்கள் மகிழ்ச்சியை குலைக்கும்,தீமையை ஏற்படுத்தும்.

5.பண்புடையர் பயனில்லா சொற்களை கூறுவாரானில் அவரது மதிப்பு நீங்கிவிடும்.

6.பயனற்றவற்றைப் பேசி..பயன் கிடைக்கும் என எண்ணுபவன் மனிதப்பதர் ஆவான்.

7.பண்பாளர்கள் இனிய சொற்களைக் கூறாவிட்டாலும் பயனில்லா சொற்களை சொல்லக்கூடாது.

8.பலன்களை ஆராயும் ஆற்றல் படைத்தவர்...பயன் விளைவிக்காத சொற்களை கூறமாட்டார்.

9.மாசற்ற அறிவு கொண்டவர்கள்.. மறந்தும் பயனில்லா வார்த்தைகளை பேசமாட்டார்கள்.

10.பயனற்ற சொற்களை விடுத்து மனதில் பதியும் பயனுள்ள சொற்களையே பேச வேண்டும்.

21)தீவினையச்சம்

1.தீயசெயல்களை செய்ய தீயோர் அஞ்சமாட்டார்கள்...ஆனால் சான்றோர் அஞ்சுவர்.

2.தீய செயல்கள் தீயைவிடக் கொடுமையானதால் அதை செய்திட அஞ்சவேண்டும்.

3.நமக்கு தீமை செய்தவர்க்கு தீமையை திருப்பிச் செய்யாதிருத்தலே அறிவுடமை ஆகும்.

4.மறந்தும் கூட பிறருக்கு கேடு நினைக்கக்கூடாது.அப்படி நினைத்தால்..நினைப்பவனுக்கே கேடு உண்டாகும்.

5.வறுமையின் காரணாமாகக்கூட தீய செயல்கள் செய்யக்கூடாது.அப்படிச்செய்தால்
வறுமை அவனை விட்டு அகலவே அகலாது.

6.தீய செயல்கள் நம்மை தாக்கக்கூடாது என எண்ணுபவன் பிறர்க்கும் தீங்கு செய்யக்கூடாது.

7.நேர்மையான பகையை விட ஒருவன் செய்யும் தீயவினைகள் பெரும் பகையாகும்.

8.நிழல் நம்மைவிட்டு அகலாது இருப்பது போல செய்யும் தீமையும் கடைசிவரை நம்மை விட்டு அகலாது.

9.தனது நலம் விரும்புபவன் தீய செயல்கள் பக்கம் நெருங்கமாட்டான்.

10.பிறர்க்கு தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்த கெடுதியும் ஏற்படாது.,

22)ஒப்புறவறிதல்

1.பதிலுதவி எதிர்ப்பார்த்து நாம் உதவி செய்யக்கூடாது..நமக்காக பெய்யும் மழை எந்த உதவியை திரும்ப
எதிர்ப்பார்க்கிறது?

2.பிறர் நலனுக்கு உதவும் பொருட்டே நம்மிடம் உள்ள பொருள் பயன்பட வேண்டும்.

3.பிறர்க்கு உதவிடும் பண்பைத்தவிர சிறந்த பண்பு வேறு எதுவும் இல்லை.

4.பிறர்க்கு உதவி செய்ய தன் வாழ்வில் நினைப்பவனே உண்மையில் உயிருள்ளவனாக கருதப்படுவான்.

5.பொது நோக்குடன் வாழ்பவனின் செல்வம்..மக்களுக்கு பயன் தரும் நீர் நிறைந்த ஊருணி ஆகும்.

6.பிறர்க்கு உதவும் எண்ணம் உள்ளவனிடம் செரும் செல்வம் பழுத்த மரம் போன்றது.

7.பிறர்க்கு உதவுபவனின் செல்வம்..ஒரு நல்ல மரத்தின் எல்லா பாகமும் பயன்படுவது போன்றது ஆகும்.

8.நம்மை வறுமை வாட்டினாலும்..முடிந்த அளவு உதவுதலே சிறந்த பண்புடையாளனுக்கு அடையாளம்.

9.பிறர்க்கு உதவுபவன் ..வறுமையடைந்து விட்டான் என்று உணர்த்துவது அவன் பிறர்க்கு உதவிட முடியாத நேரமே ஆகும்.

10.பிறர்க்கு உதவும் செயல் கேடு விளைவிக்குமாயின்..அக்கேட்டை தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ள வேண்டும்.

23)ஈகை

1.எந்த ஆதாயமுமின்றி இல்லாதவருக்கு வழங்குவதே ஈகைப்பண்பாகும்.

2.பிறரிடம் கை யேந்துவது சிறுமை..ஆயினும்..கொடுப்பவர்க்கு கொடுத்து வாழ்வதே பெருமை.

3.தன் வறுமையைக் காட்டிக்கொள்ளாமல்..பிறர்க்கு கொடுப்பது உயர் குடியினர் பண்பாகும்.

4.கொடுப்பவர்..அதனால் பயனடைபவரின் புன்னகை முகத்தைக் கண்டு மகிழ்ந்தாலும்..பெறுபவர் நிலை கண்டு
வருந்துவர்.
5.உண்ணா நோன்பை விட ..பசிப்பவர்க்கு உணவு அளித்ததால் உண்டாகும் பலன் அதிகம்.

6.பட்டினியால் வாடும் ஒருவரின் பசியை தீர்ப்பது மிகவும் புண்ணியமான செயல் ஆகும்.

7.பகிர்ந்து உண்போரை பசி என்றும் அணுகாது.

8.யாவருக்கும் எதுவும் அளிக்காத ஈவு இரக்கமற்றோர், ஒருவருக்கு உதவி..அதனால் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியை அறியார்.

9.பிறர்க்கு கொடுப்பதால் செல்வம் குறையுமெனக் கூறி தான் மட்டும் உண்ணுவது பிச்சை எடுப்பதற்கு சமம்.

10.சாவு என்னும் துன்பத்தை விட, வறியவர்க்கு ஏதும் கொடுக்க முடியா துன்பம் பெரியது

24)புகழ்

1.பிறர்க்கு ஈதலும்,புகழுமே வாழ்வில் ஆக்கம் தரும்

2.இல்லாதவர்க்கு வழங்குபவரின் புகழே போற்றப்படும் புகழாகும்.

3.ஒப்பற்றதும்,அழிவில்லாததும் இந்த உலகில் புகழ் ஒன்றே ஆகும்.

4.தன்னலமின்றி புகழ் ஈட்டிய மக்களை ஏழேழு உலகும் பாராட்டும்.

5.துன்பம்,சாவு.. இவற்றிலும் கூட புகழ் பெறுவார் ஆற்றலுடையவர்.

6.எத்துறையில் ஈடுபட்டாலும் புகழோடு விளங்க வேண்டும்.அல்லாதார் அத்துறையில் ஈடுபடவே கூடாது.

7.புகழுடன் வாழ முடியாதார் ..தம் செயல்களை இகழ்பவரை நொந்துக்கொள்ளாமல் தன்னைத்தானே நொந்துக்கொள்ள வேண்டும்.

8.தமக்குப்பிறகு எஞ்சி நிற்கக்கூடிய புகழை பெறாதார், வாழ்ந்தும் பயன் இல்லை.

9.மனித உடலில் உயிர் எனப்படுவது புகழ் ஆகும்.அது இல்லாதார் இந்த பூமியில் தரிசு நிலமே ஆவர்.

10.பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை.அதுபோல புகழுடன் வாழ்வதே வாழ்க்கை.

No comments:

Post a Comment