Friday, January 1, 2016

35-உறவும் பகையும்



உறவினர்களுடன் சண்டையிட்டு பிரிந்து போனவர்கள் நிம்மதியாய் தூங்க முடியாது.நேர்த்தியான படுக்கை வசதியிருந்தாலும் தூக்கம் வராது.பெண்களின் இன்பமும் அவர்களுக்குத் திருப்தியைத் தராது.சுற்றியுள்ளவர்கள் எவ்வளவு புகழ்ந்து பாராட்டினாலும் மகிழ்வு ஏற்படாது

உறவினர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தவர்கள் நற்பண்புகளைக் கடைப்பிடிக்க இயலாது.அவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்காது.யாரும் மரியாதை காட்டமாட்டார்கள்.அமைதியாக வாழும் ஆனந்தம் கிட்டாது.(கௌரவர்கள் , பாண்டவர்களைப் பகைத்துக் கொண்டது தீது என மறைமுகமாக கூறுகிறார்)

உறவினர்களைப் பகைத்துக் கொள்பவர்கள் யார் நல்ல புத்தியைச் சொன்னாலும் மகிழ்ச்சியாகக் கேட்டுவிட்டு, அதை பின்பற்ற மாட்டார்கள்.தங்கள் வாழ்க்கை நல்லவிதமாக அமைய வேண்டும் என்பதில் அக்கறை கொள்ள மாட்டார்கள்.உறவினர்களை வெறுத்துத் தவிப்பார்கள்.கடைசியில் நாசமாகப் போவார்கள்

பசுக்கள் பாலைத் தருவது இயற்கை.அந்தணர்களிடம் கடுமையான விரதக் கட்டுப்பாட்டை எதிர்பார்க்கலாம்.இளம் பெண்களிடம் சஞ்சலத் தன்மை இருக்கும்.அதுபோல உறவினர்களிடம் பகைத்து கொள்பவன் பயந்து வாழ வேண்டிய நிலை ஏற்படுவதும் சாத்தியமே

மெல்லியவை ஆயினும் ஒரே நீளமுள்ள தரமான நூல் இழைகள் தொகுக்கப்பட்டால் அவை துணி நெய்கையில் எத்தகைய இழுப்பையும் தாங்கும்.அதுபோல நல்லவர்கள்(பாண்டவர்கள்) ஒன்று சேர்ந்தால் மாபெரும் சாதனைகள் நிகழ்த்த முடியும்

எரிந்து கொண்டிருக்கும் விறகுகள் தனித்தனியாகப் பிரித்தால் புகைதான் கிளம்பும்.அவற்றை ஒன்றாகச் சேர்த்தால் தீ கொழுந்துவிட்டு எரியும்.உறவினர்களிடமிருந்து நாம் பிரிந்துவிட்டால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கமுடியாது.எல்லா உறவும் சேர்ந்து முயற்சித்தால் அக்குடும்பம் பெரிய சாதனைகள் செய்ய முடியும்

யார், அந்தணர்கள்,பெண்கள், உறவினர்கள் ஆகியோருக்கும், பசுக்களுக்கும் கொடுமை இழைப்பதில் வீரம் காட்டுகின்றார்களோ அவர்கள் முற்றிய பழம் மரத்திலிருந்து விழுவதைப் போல ஆதாரத்தை இழந்து அழிந்து போவார்கள்

ஒரு மரம் தனியாக இருக்கிறது.அது பெரியதாகவும், வலுவாகவும் இருக்கலாம்.அதன் வேர்கள் பூமியில் ஆழமாக பதிந்திருக்கலாம்.ஆனாலும் சூறாவளிக் காற்று வீசினால் அம்மரம் ஒரு நிமிடத்தில் கிளைகள் உட்பட முற்றிலும் ஒடிந்து விழுந்துவிடும்.ஆனால், பல மரங்கள் அருகருகே அமைந்து, பூமிக்குள் நன்கு ஊடுருவி..அடர்த்தியாகத் திரண்டு நின்றால் அவை பலத்த புயல் காற்றையும் சமாளித்துவிட முடியும்.அவை ஒன்றையொன்று தாங்கிக் காப்பாற்றுவதுதான் நீடிக்க முடிவதன் காரணமாகும்

ஒரு ,மனிதரிடம் எல்லாச் சிறப்புகளும் இருக்கலாம்.ஆனால் ஊரோடு ஒட்டி வாழாமல் தனித்து நின்றால் அவனுடைய எதிரிகள் மகிழ்வர்.தனிமரத்தை காற்று வீழ்த்துவது பொல அவனை எளிதில் வெல்லலாம் என பகைவர்கள் தெரிந்துகொண்டு விடுவார்கள்

நீலத்தாமரைச் செடிகளின் தண்டுகள் தடாகத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்து வளர்வது போல ஒருவரை ஒருவர் சார்ந்து ஆதரித்தால் எல்லோரும் நிறைய செல்வமும், செழிப்பும் பெற்று விளங்க முடியும்

அந்தணர்கள், பசுக்கள், உறவினர்கள், குழந்தைகள், பெண்கள், நமக்கு உணவு தயாரித்து அளித்தவர்கள், நம்மிடம் அடைக்கலம் புகுந்தவர்கள் ஆகியோரை ஒருபொழுதும் கொல்லக்கூடாது.அவர்களில் யாரேனும் கடுமையான குற்றம் இழைத்திருந்தாலும் அவர்களை நாடு கடத்துவதே அதிக பட்சத் தண்டனை ஆகும்

ஆரோக்கியமற்றவன். கிட்டத்தட்ட இறந்தவனுக்கு சமமாவான்.ஆரோக்கியம் இல்லாவிட்டால் செல்வச் செழிப்புப் பெறுவது சிரமம்.செல்வந்தவனாக இல்லாவிடின் சமூகத்தில் சிறப்பும் கிடைக்காது

திருதராஷ்டிரரே! கோபம் என்பது ஒருவகையான தலைவலி.அது நோயின் காரணமாக ஏற்படுவதில்லை.கோபம் தீவிரமான பானம் போன்றது.கசப்பானது.காரசாரமானது.வெம்மை நிறைந்தது.தீய விளைவுகளை ஏற்படுத்துவது.இவ்வளவு பயங்கர கோபத்தைச் சான்றோர்களால்தான் அடக்க முடியும்.நீங்களும் பாண்டவர்கள் மீதான கோபத்தை விழுங்கி விடுங்கள்.அமைதி பெறுவீர்கள்.

நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம், தங்களது குழந்தைகளைக் கொஞ்சி நேசிக்கும் பொறுமை இருக்காது.அவர்களுக்கு தங்கள் பொருள் வசதிகளை ரசித்து அனுபவிக்க முடியாது.நல்லது, கெட்டது  என பகுத்தறியும் விவேக புத்தியும் மழுங்கிப் போயிருக்கும்.அவர்கள் எப்போதும் துக்கத்தில் சிக்கித் தவித்து கொண்டிருப்பார்கள்.கையிலுள்ள செல்வத்தைக் கொண்டு எப்படி சந்தோசமாக இருப்பது என அறிந்திருக்க மாட்டார்கள்

துரியோதனன் நடத்த விரும்பிய சூதாட்டத்தை ஆதரிக்காமல் தடுக்குமாறு முதலிலேயே உங்களிடம் யோசனைக் கூறினேன்.ஏனெனில், அறிவாளிகள் சூதாடுவதைத் தடுப்பார்கள்.ஆனால், நீங்கள் என் பேச்சை ஏற்றுச் சூதாட்டத்தைத் தடுக்காமல் இருந்து விட்டீர்கள்.இதனால் திரௌபதி இழுக்கப்பட்டு கதற நேர்ந்தது

நாம் நமது வலிமையை மென்மையானவர்களுக்கும், பலகீனர்களுக்கும் எதிராகப் பயன்படுத்தக் கூடாது.நமது வலிமையை நியாயம் பெறுவதற்காகவே உபயோகிக்க வேண்டும்.கொடூரமான வழிகளில் சம்பாதித்த செல்வம் நிச்சயமாக அழிந்துப் போகும்.மென்மையான முறையில், கண்ணியமான வழியில் சம்பாதித்த செல்வம் மகன்கள், பேரன்கள் என்று பரம்பரையாக நீடித்துச் செல்லும்

அரசே! உங்கள் புதல்வர்கள் பாண்டவனின் புதல்வர்களைப் பாதுகாக்கட்டும்.அதுபோலவே பாண்டுவின் மகன்கள் உங்கள் மகன்களை ரட்சிக்கட்டும்.இருவரும்..குரு வம்சத்தினரே!  ஆகவே கௌரவர்களின் நண்பர்களைப் பாண்டவர்கள் தங்கள் நண்பர்களாகவும்,பாண்டவர்களின் எதிரிகளைக் கௌரவர்கள் தங்கள் எதிரிகளாகவும் கருத வேண்டும்.இருதரப்பினரும் ஒரே மாதிரியான லட்சியங்களை ஏற்படுத்திக் கொண்டு ஒரே மாதிரியான நடவடிக்கைகளில் ஏடுபட்டு, மகிழ்ச்சியாகவும்,பலவளங்கள் பெற்று சிறப்பாகவும் வாழ வேண்டும்

அஸ்தினாபுரத்தை ஏற்படுத்தியவரான ஹஸ்தியின் மூத்த மகனாகிய அஜமீடரின் பரம்பரையில் வந்த உங்களைத்தான் குரு வம்சம் சார்ந்துள்ளது.ஆனால் நீங்களோ, வெறும் கௌரவர்களை மட்டுமே ஆதாரமாகத் தாங்குகிறீர்கள்.பாண்டவர்கள் காட்டுக்கு விரட்டப்பட்டனர்.அவர்களையும் நீங்கள் அரவணைத்துக் காத்தால் உங்கள் பெயர் களங்கப்படாமல் இருக்கும்

குரு வம்சத்தில் உதித்தவரே! பாண்டுவின் புதல்வர்களுடன் சமரசம் செய்து கொள்ளுங்கள்.உங்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் எதிரிகள் ஆவார்கள்.அதற்கு இடம் கொடுக்காதீர்கள்.பாண்டவர்கள் சத்தியவாதிகள்.ஆகவே நீங்கள் துரியோதனனை அடக்கி வையுங்கள்.

என்று விதுரர் கூறி முடித்தார்.

No comments:

Post a Comment