Friday, January 15, 2016

44-அறிஞர்களின் சொல்படி நடக்க வேண்டும்



அறிஞர்களின் நன்மொழிகளை நடைமுறையில் கொண்டுவருவதால் விளையக்கூடிய நன்மைகள் பற்றி நன்கு சிந்தனை செய்தபின்னர் செயலில் இறங்கி உழைக்கத் தொடங்கும் மனிதன் குன்றாப் புகழைப் பெறுவான்

கெட்டிக்காரர்கலூம் அறிவைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.இதனால்...எதனை அறிந்து கொள்ள வேண்டுமோ..அதை அறிந்து கொள்ள முடியாமல் போகிறது.எது,ஏற்கனவே அறிந்து கொள்ளப்பட்டதோ அதை பின்பற்றவும் முடியாமல் போகிறது

ஒரு அறிஞன் பாவச்செயல் என்று கருதப்படும் செயல்களைப் புரியாதிருந்தாலவன் வளம் பெற்று வாழ்வான்,ஒருவன் அறிஞனாக இருந்தும் அறிவு கோணலாகப் போய், விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் முன்பு செய்த பாவக்காரியங்களைத் தொடர்ந்து செய்து வந்தால் அவன் நரகத்தில் அமுக்கப் படுவான்.அதிலிருந்து அவனால் தப்ப இயலாது.

ரகசிய ஆலோசனைகளும்..பின் சொல்லப்பட்டுள்ள வழிகளில் ஒன்றின் மூலம் வெளிப்பட்டுவிடக் கூடும் என்பதை அறிவுள்ளவன் கவனத்தில் கொள்ள வேண்டும்.வாழ்வில், வெற்றியும், செல்வமும் அடையவும், தன் பரம்பரை வளர்ந்து தொடரவும் விரும்புகிறவன் அந்த ஆறு அபாயங்களையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்

மதுவின் போதை,தூக்கத்தில் உளறுதல்,எதிரிகளை ஒற்றர்கள் கண்காணிப்பது பற்றி அறியாமை, மனதில் இருப்பது முகத்தில் பிரதிபலிப்பாகி விடுதல், கெட்டவர்களான அமைச்சர்களை நம்புதல்,தூதர்கள் திறமையற்றவராய் இருத்தல் என்று ஆறு வழிகளில் நமது ரகசியம் வெளிப்பட்டு விடும்

இந்த ஆறு வழிகளுக்கு வாய்ப்பளிக்காமல் அடைத்துவிட வேண்டும்.அவ்வாறு எச்சரிக்கையாக இருப்பதுடன், எவன் அறநெறியைக் கடைப்பிடித்தல், நேர்மையாக வாழ்க்கை வசதிகள் பெறுதல்,மிதமாக இன்பம் அனுபவித்தல் இந்த மூன்று விஷயங்களை பின்பற்றுகின்றானோ அவன் தன் எதிரிகளை வென்று அடக்கி ஆளமுடியும்.

ஒருவன் பிரஹஸ்பதியைப் போல அறிவாளியாய் இருக்கலாம்.ஆயினும்,அவன் புனித நூல்களையும், சாஸ்திரங்களையும் பயிலாதவனாகவும், வயதானவர்களுக்கு சேவை செய்யாதவனாகவும் இருந்தால் அவன் நற்பண்புகளை பெறுவதற்கும் வாழ்க்கை வசதிகளை அடைவதற்கும் உரிய வழியை அறியாதவனாக இருப்பான்

கடலில் விழுந்த பொருள்...போனது போனதுதான்.நாம் சொல்வதை ஒருவன் கேட்காவிடின்..நம் சொற்கள் எல்லாம் வீணாகி விட்டன எனலாம்.சுயக்கட்டுப்பாடு இல்லாத ஒருவன் வேதநூல் அறிவைப் பெற்றிருப்பினும் வீண்தான்.நெருப்பில்லாத வேள்விக் குண்டத்தில் பூஜைப் பொருட்களைப் போடுவதால் எந்த ஆன்மீக நன்மையும் ஏற்படாது.

Tuesday, January 12, 2016

43-தீயோரும்- உறவும்



விதுரரை நோக்கி திருதராஷ்டிரர், "விதுரரே! வாழ்க்கையில் வளம் பல பெற்று முன்னேறவும், அல்லது வறுமையிலிருந்து வீழவும் மனிதன் தனிப்பட்ட முறையில் பொறுப்பாளி இல்லை.அவன் கயிற்றால் கட்டப்பட்ட பொம்மலாட்ட பொம்மை.பிரம்மா, மனிதனைத் த்லைவிதிக்குக் கீழ்ப் படவேண்டியவனாக படைத்து விட்டார்.எனெனும் உமது உபதேசத்தை தொடர்ந்து சொல்லவும்" என்றார்.

விதுரர் கூறலானார், "தேவர்களுக்குக் குருவான பிரகஸ்பதி கூட சூழ்நிலை சரியாக இல்லையெனில் பேசக்கூடாது.காலத்துக்கு ஒவ்வாது அவர் பேசினால், அவரது அறிவிற்கு மதிப்பின்றிப் போய் விடும்.அவரது மரியாதைக் கெடும்.

மனிதர்கள் பலவிதம்.பரிசு கொடுத்துத்தான் சிலரது பிரியத்தைப் பெற முடியும்.இனிமையாகப் பேசி சிலரை கவரலாம். வேறு சிலரை, மந்திரம், தந்திரம், தாயத்து என வசப்படுத்தலாம்.ஆனால், இயல்பாகவே அன்பு மிக்கவன் மற்றவர்களின் மகிழ்ச்சி இன்றியே அவர்களிடம் பிரியம் காட்டுவான்.

ஒருவரை நாம் வெறுக்கும் போது அவரது பண்பையோ, புத்திக் கூர்மையையோ,அறிவின் ஆழத்தையோ நாம் உணர முடிவதில்லை.ஒருவரை நாம் நேசித்தால் அவரிடம் அனைத்தும் நல்லபடியாக இருப்பதாகத் தெரிகிறது.நாம் வெறுப்பவரிடம் எல்லாமே கோணலாய்த் தெரிகிறது...

அரசே! துரியோதனன் பிறந்ததுமே உங்களை எச்சரித்தேன்!இவன் மீது அளவிற்கு அதிகமாகப் பாசம் வைக்காதீர்கள்.அப்போதுதான் நூறு மகன்களும் நல்ல முறையில் வாழமுடியும் என சொன்னேன்.துரியோதனன் மீது கண்மூடித்தனமான பாசத்தை கைவிடாவிடின் நூறு மகன்களும் கொல்லப்படுவார்கள்'என்றும் கூறினேன்.

வாழ்க்கை முன்னேறுவது போல இருந்து, அது கடைசியில் வீழ்ச்சிக்கு வழி வகுக்குமாயின் அது முன்னேற்றமில்லை.இதற்கு மாறாக, சரிந்து கொண்டே போவது போலத் தோன்றி, அச்சரிவு முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லுமாயின் அது வீழ்ச்சியாகாது

ஒரு நஷ்டம் ஏற்பட்டு, அந்த நஷ்டம் கடைசியில் லாபம் தந்தால் அது ஒரு இழப்பல்ல.ஒரு குறிப்பிட்ட லாபத்தைப் பெறுவதால் கடைசியில் பெருத்த நஷ்டம் ஏற்படக் கூடிய ஆபத்து இருப்பின் அதை லாபமென்று எண்ணாமல் இழப்பாகவே கருத வேண்டும் (எந்த விஷயத்திலும் இறுதியில் முடிவு என்ன என மதிப்பீடு செய்ய வேண்டும்)

சிலரிடம் நற்பண்புகள் நிறைந்திருக்கும்.சிலரிடம் செல்வம் அதிகம் இருக்கும்.செல்வம் மட்டும் இருந்து நற்பண்புகள் இல்லாதவர்களுடன் நாம் பழகக்கூடாது.அத்தகையோரிடமிருந்து நாம் விலகி இருக்க வேண்டும்

உடன், திருதிராஷ்டிரர் குறுக்கிட்டு, "விதுரா! உன் அறிவுரை இப்போது கசந்தாலும் எதிர்காலத்தில் நன்மை தரக்கூடியவை என்பதில் சந்தேகமில்லை.நீ சொல்பவை சான்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை.நான் என் மகனை கைவிடுதல் இயலாது.ஆனாலும், எங்கு தர்மம் உள்ளதோ, அங்குதான் வெற்றியும் நிலைபெற்று விளங்கும்

விதுரர் கூறினார், "எவன் நற்பண்புகளை பெற்றுள்ளதுடன், பண்புடனும் உள்ளானோ, அவன் பிறர்க்கு மிகச் சிறிதளவு கொடுமை இழைக்கப் பட்டாலும் பொறுத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டான்.

பிறரைப் பழித்துக் கூறுவதிலேயே சிலர் ஆர்வமாய் இருப்பார்கள்.அத்தகையோர் பிறரது மனதைப் புண்படுத்தும் விஷயங்களைக் கண்டுபிடித்து, அவற்றைப் பரப்பி அவர்களை வேதனைக்குள்ளாக்குகின்றனர்.இதனால் சம்பந்தப்பட்டவர்களிடையே தகராறுகளையும் மூட்டி விடுகின்றனர்

இவ்வாறு கோள் மூட்டுபவர்களைக் கண்ணால் கூட பார்க்கக் கூடாது.அது அமங்களம்..அபசகுனம்.அவர்கலூடன் தொடர்பு வைத்துக் கொள்வதோ ஆபத்து.அவர்களிடமிருந்து பணம் பெறுவது பாபம்.அவர்களுக்குப் பணம் கொடுப்பதும் கெடுதல்.

மக்களிடையே கோள் முட்டி, தகராறும்-பிரிவினையும் ஏற்படச் செய்பவர்கள், வரம்பு மீறிய காமம் கொண்டவர்கள்,வெட்கம் கெட்டவர்கள்,போக்கிரிகள்,கொடியவர்கள் என இகழப்படுவார்கள்.இத்தாய்யோரிடம் நாம் பழகக்கூடாது

இவர்களுடன் மட்டுமல்ல...இவர்க்ளைப் போல மற்ற தீய குணங்கள் உடையவர்களும் நட்புடன் பழக தகுதியற்றவர்கள்.

தீயோரிடம் நட்பு கொள்ளக் கூடாது.ஏனெனில், அந்நட்பு முறிந்தால்,  தீயவர், தனது முன்னாள் நண்பர் செய்த உதவிகளையும்,அந்த நட்பின் இனிமையையும் மறந்து விடுவார்கள்.அத்துடன் நில்லாது, தீயவர் தனது முன்னாள் நண்பனைப் பற்றிக் கெடுதலானத் தகவல்களை பரப்பி விடுவர்.அந்த நண்பரை நாசமாக்கும் முயற்சியிலும் ஈடுபடுவர்

தீயவருக்கு ஒருவர் தெரிந்தோ-தெரியாமலோ குற்றம் இழைத்து விட்டாலும் தீயவர் பொறுத்துக் கொள்வதில்லை.பகைமையைக் கைவிடுவதில்லை,அறிஞனானவன் இதையெல்லாம் தெளிந்து உணர்ந்து இத்தகைய இழிவானவர்களுடனும், பழி கூறித் திரியும் குடு நோக்கர்களுடனும், மாசடைந்த உள்ளம் கொண்டவர்களுடனும் இயன்றவரை பழகாது விலகி இருக்க வேண்டும்

யார் தனது உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும்,ஆதரவற்றவர்களுக்கும்,துன்புறுவோர்க்கும் ஆறுதல் அளித்து உதவுகின்றனரோ...அவர் குழந்தைச் செல்வம்,கால்நடைச் செல்வம்,நிரந்திரப் புகழ் ஆகிய சிறப்புகளைப் பெற்று விளங்குவார்கள்

யார் தனக்கு மகிழ்ச்சியும், தன் குடும்பத்திற்கு வசதிகளும் என்றும் குறைவின்றிக் கிடைத்து வர வேண்டுமென விரும்புகிறாரோ அவர் தனது உறவுகளைப் பாதுகாத்து பராமரிக்க வேண்டும்

எனவே அரசே! எது உங்களுக்கு நன்மை தருமோ அதையே செய்யுங்கள்.நீங்கள், உறவினர்களுக்கு நன்மையைச் செய்தால், என்றும் புகழ் பெற்று விளங்குவீர்கள்

நம் உறவினர்கள் நற்பண்புகள் இல்லாதவர்கள் ஆயினும்...நாம் அவர்களைக் காக்க வேண்டும்.உங்கள் உறவினர்களோ பண்பாளர்கள்.உங்களது ஆதரவுக்கு ஏங்குபவர்கள்.அவர்களை எந்த அளவிற்கு பராமரிக்க வேண்டும் எனச் சொல்லத் தேவையில்லை

திருதராஷ்டிரரே! வீரர்களாகிய பாண்டவர்களுக்கு ஆதரவு கொடுங்கள்.அவர்களுக்கு சில குக்கிராமங்களையாவது கொடுங்கள்.அவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயிலிருந்து அவர்கள் வசதியாக வாழ்வார்கள்.அவர்களுக்கு இவ்வாறு உதவுவதன் மூலம் நீங்கள் இவ்வுலகில் புகழ் பெறுவீர்கள்.வயதாகிவிட்ட போதும் நீங்கள் உரிய நடவடிக்கை எடுத்து உங்கள் புதல்வர்களைக் கட்டுப்பாற்குள் கொண்டு வர வேண்டும்

நான் எப்போதும் உங்கள் நன்மையையே நாடுபவன் என்பதை உணருங்கள்.எது உங்களுக்கு நன்மை பயக்குமோ அதை எடுத்துச் சொல்ல நான் கடமைப்பட்டவனாகிறேன்.தனது நன்மைகளை விரும்பும் யாரும் உறவினர்களுடன் ஒருபோதும் தகராறு வைத்துக் கொள்ளக்கூடாது

நாம் வாழ்க்கையில் நம் மகிழ்ச்சியை எல்லாம் நம் உறவினர்களுடன் சேர்ந்து அனுபவிக்க வேண்டும்.சேர்ந்து உண்ணுதல்,ஒருவர் வீட்டிற்கு ஒருவர் வந்து போய்க்கோண்டிருத்தல், பரஸ்பர அன்பு ஆகியவை உறவினருடன் நிலைக்க வேண்டும்,

உறவினரிடையே விரோதம் கூடாது.உறவினர்களால்தான் நம்மை உலகில் நடத்திச் சென்று அக்கரையில் கொண்டு போய்ச் சேர்க்க முடியும்.அவர்களைப் பகைத்துக் கொண்டால் மூழ்கடித்தும் விட முடியும்.

நல்ல நடத்தையுள்ள உறவினர் நம்மை பாதுகாப்பார்கள்.ஆனால், கொடிய உறவினர்கள் நம்மை மூழ்க செய்து விடுவார்கள்.அரசே! நீங்கள் அனைவருக்கும் நன்மைகளை வாரி வழங்கக் கூடியவர்.பாண்டுவின் புதல்வர்களிடம் நல்ல முறையில், நியாயமான முறையில் நடந்து கொள்ளுங்கள்.பாண்டவர் சூழ நீங்கள் இருந்தால் உங்களை எந்தப் பகைவரும் ஏதும் செய்ய முடியாது

கையில் விஷம் தோய்ந்த அம்புகளுடன் வரும் வேடனை எதிர்த்து மான்களால் ஏதும் செய்ய இயலாது.அதைக் கொல்லும் பாவம் அவனைச் சேருகிறது.அதுபோலவே வேறு வழியின்றி உறவினர் ஒருவர் நம்மைக் காப்பாற்ற வேண்டி வந்தால்,அது குழ்ந்தையானாலும்...நாம் உதவாது போனால்...பாவமெல்லாம் நம் தலையில் ஏற்றப்படும்

பாரதப்போர் நடந்தால்..பாண்டவர்களோ..அல்லது கௌரவர்களோ ஒரு சாரார் இறப்பது நிச்சயம்.அதிக் கேட்கும் போது, நீங்கள்..முங்கூட்டியே போரைத் தடுக்காமல் போய்விட்டோமே என வருந்துவீர்கள்...எனவே, நன்கு சிந்தித்து இப்பவே ஒரு முடிவை எடுங்கள்

நாம் தீயச் செயலைச் செய்தால் அவமான உணர்ச்சி மேலிட தனியறையில் ஒதுங்கி மனம் புழுங்க நேரிடுகிறது.ஆகவே, அத்தகைய தீயச்செயல்களை நாம் செய்யாமல் இருந்து விட வேண்டும். ஏனெனில் நம் வாழ்க்கை எந்த சமயம் முடியும் என உறுதியாகக் கூற இயலாது

பார்கவர் எனப்படும் சுக்கிராச்சாரியாரைத் தவிர....ஒருபோதும் ஒழுக்கம் தவறாமலோ, நியாயம் தவறாமலோ நடந்துகொண்ட மனிதன் உலகில் யாரும் கிடையாது.எனினும் அறிவுடையார்...கடந்த காலத்தில் செய்த தவறுகளைப் பற்ரி எண்ணி வருந்திக் கொண்டிராமல் இனி எதிர்காலத்தில் சரியாக, நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என முடிவெடுப்பர்

ஏற்கனவே, பாண்டவர்களுக்குத் துரியோதனன் பல இன்னல்களை விளைவித்திருக்கிறான்.குலப்பெரியவரான நீங்கள் அதற்கெல்லாம் பிராயச்சித்தம் செய்து நியாயமாக நடந்து கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும்

பாண்டவர்களுக்கு அவர்களது உயர்ந்த தகுதிக்கேற்ற அரச பதவிகள் அளித்து கௌரவித்தால், நீங்கள் எல்லாவகையான பாவங்கள், களங்கங்களிருந்து விடுபடுவீர்கள்.அறிஞர்களும் நீங்கள் போற்றப்பட வேண்டியவர் என புகழ்வார்கள்  

Sunday, January 10, 2016

42-ரகசியம் காத்தல்



ஒரு அரசன் தான் எடுக்கும் முடிவுகளை வெளி நபர்களோ, தனக்கு வேண்டியவர்களோ தெரிந்து கொள்ள விடாமல் கவனமாக இருப்பதுடன், அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையைக் கடை பிடித்தால் அவரால் நீண்ட காலம் செழிப்பாக ஆட்சி செய்ய முடியும்

தர்மகாரியங்கள், இன்பங்களை நுகர்தல், பொருளீட்டும் முயற்சி ஆகியவற்றை அச்செயல்கள் நிறைவேற்றி முடிந்த பின்னே வெளியே சொல்வது ஏற்றது.நாம் பிறரிடம் மேற்கொள்ளும் அல்லது பிறரிடமிருந்து பெறும் ரகசிய ஆலோசனைகளையும் முன் கூட்டியே  வெளியிடக் கூடாது

முக்கியமான விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டுமாயின் அதற்கேற்ப தனியான இடத்தை நாடிச் செல்ல வேண்டும்.மலையுச்சி,தனி வீடு,காட்டுப்பகுதி போன்ற இடங்களுக்குச் சென்று சிந்திக்க வேண்டும்

நாம் மிகவும் முக்கியமானதாகக் கருதும் ரகசியங்களை நம் நண்பர்களைத் தவிர வேறு யாரிடமும் சொல்லக் கூடாது.அந்த நண்பர் மதிநுட்பம் அற்றவராக இருந்தால் அவரிடமும் கூறக்கூடாது.நமக்கு நண்பனாக இருந்து, சுயக்கட்டுப்பாடு இல்லாதவராயின் அவரிடமும் ரகசியத்தை வெளியிடக் கூடாது

ஆட்சி புரிபவர்,நன்கு பரிசோதனை  செய்த பின்னரே ,ஒருவரை தன் அமைச்சராக நியமித்துக் கொள்ள வேண்டும்.நாட்டின் நிதி நிலைமையைச் சீராக வைத்திருப்பதும், தக்க ஆலோசனைகள் கூறும் பொறுப்பும் அமைச்சரின் கடமைகளாகும்

ஒரு அரசன் மேற்கொள்ளும் அறச்செயல், செல்வம் பெருக்குதல் இன்பமாக வாழ்தல் என்னும் அறம்-பொருள்-இன்பம் பற்றிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகே ஆலோசகர்களுக்குத் தெரிய வேண்டும்.அப்படிப்பட்ட அரசனை யாரும் வீழ்த்த முடியாது.அவன் உயர் நிலையில் இருப்பான்

தன் முடிவுகளை ரகசியமாக வைத்திருக்கும் மன்னன் ,தான் விரும்பும் லட்சியங்களை நிச்சயமாக அடைந்துவிட முடியும்.ஆனால் அவன் அறிவில் தெளிவற்றவனாய் இருந்தால் தவறான முடிவுகளை எடுத்து விடுவான்.அவற்றால் கெடுதல் ஏற்படும்.இதனால் அம்மன்னன் அழிய நேரிடும்

பிறர் பாராட்டும் நற்செயல்களைச் செய்தால், அவை நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.அத்தகையச் செயலைச் செய்ய தவறிவிட்டால் பின்னால் நம் மனம் வருந்தி புழுங்கும் நிலை உண்டாகும்

வேத மந்திரங்களைக் கற்காத அந்தணர்,முன்னோர்களுக்கான திதிச் சடங்கின் போது புரோகிதராக வழிகாட்டி நடத்தி வைக்கும் தகுதியற்றவர் ஆகிறார்.அதுபோல் ஆறுவிதமான போர்த் தந்திரங்களை அறியாத அரசன்,அரசியல் ரகசியங்களை அறிந்து கொள்ள உரியவரல்லர்.(ஆறுவகை தந்திரங்கள்- சமாதானப் பேச்சு,போர்,படை வரிசை முன்னேற்றம்,முற்றுகையும்-முகாமிடலும்,எதிரிப்படையில் கலகமூட்டல்,பாதுகாப்பிற்காக அடைக்கலம் கூறல் ஆகியவை)


எந்த அரசன் தன் நாட்டின் தற்போதைய நிலையை, அதன் உயிர்சக்தி கூடுவதையும், குறைவதையும் கணக்காக கவனிக்கின்றானோ, மேற்சொன்ன ஆறுவகை தந்திரங்களையுமறிந்துள்ளவனாகவும்,பிறர் பாராட்டும்படித் தூய நடத்தையும் உடையவனாகவும் விளங்குகின்றானோ...அவன் தனது நாட்டை வெற்றிகரமாகத் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பான்.(நாட்டின் உயிர்சக்தி- சேனை, கருவூலம்,தலைநகரம், பரப்பு எல்லை)

யாருடைய கோபமும் மகிழ்ச்சியும் செல்லுபடியாகுமோ, யார் தான் மேற்சொல்லியுள்ள பணிகளைப் பற்றி தீவிரமாக சிந்திக்கின்றானோ, தன்னம்பிக்கையைப் பொக்கிஷம் போலப் பெற்றுள்ளானோ...அவனுக்கு உலகு எல்லா செல்வங்களையும் வழங்கும்

ஒவ்வொரு அரசனும் தான் பெற்றுள்ள பட்டத்துடன், தன் வெண்கொற்றக் கடையுடன் மன நிறைவு அடைய வேண்டும்.அரசன் என்ற முறையில் தன்னிடம் வந்து சேரும் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது.தன்னிடமுள்ள செல்வத்தைத்  தன் கீழ் பணிபுரிபவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்

ஒரு அந்தணர்தான் இன்னொரு அந்தணரைப் புரிந்து கொள்ள முடியும்.கணவன், தன் மனையைப் பற்றி நன்கு அறிந்தவன்.அரசனுக்குத் தான் அமைச்சரைப் பற்றி சரியாகத் தெரியும்.ஒரு அரசன் தான் இன்னொரு அரசனைப் பற்றி தெளிவாக அறிந்திருப்பான்

எதிரியிடம் சிக்கிக் கொண்டு மரணதண்டனைப் பெற்றவன் விடுதலை பெற முடியாது.எதிரியிடம் பணிவன்புடன் நடந்து கொண்டு.சேவை புரிய வேண்டும்.தனக்குப் போதுமான அளவு வலிமை சேரும் வரை பொறுத்திருந்த் பின்னரே எதிரியை அழிக்க வேண்டும்.அவ்வாறு தக்க நேரத்தில் எதிரியைக் கொல்லாவிட்டால் பெரிய அபாயம் விளையும்

நமக்குக் கோபம் ஏற்படும் போது யாரைக் கோபித்துக் கொள்கிறோம் என்று பார்க்க வேண்டும்.தெய்வம்,அரசன்,அந்தணர்,முதியவர்,குழந்தைகள், நோயாளிகள் ஆகியோரை நாம் கோபித்துக் கொள்ளக் கூடாது

அறிவுடைய மன்னன் காரணமற்ற தகராறுகளைச் செய்யக் கூடாது.முட்டாள்கள்தான் தகராறுகளில் மாட்டிக் கொள்வர்.தகராறில் சிக்காமல் எச்சரிக்கையாக வாழ்பவன் உலகில் புகழ் பெறுவான்.அவனுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது

எந்தப் பெண்ணும் ஆண்மையற்றவனைக் கணவனாக அடைய விரும்ப மாட்டாள்.அதுபோலவே, ஒரு குறிப்பிட்ட அரசனின் ஆதரவானாலும் பயனில்லை.அவன் கோபித்தாலும் பயமில்லை.என்றால் அந்த அரசனைத் தலைவனாகப் பெறுவதை மக்கள் விரும்ப மாட்டார்கள்.

ஒருவன் அறிவாளியாய் இருந்தால் மட்டுமே அவனிடம் செல்வம் சேர்ந்துவிடும் எனச் சொல்ல முடியாது.உழைக்காமல் சோம்பேறியாய் இருந்தால் வறுமை ஏற்பட்டுவிடும் என்பதும் நிச்சயமில்லை.ஆனால், அறிவாளி காலம் சாதகமாக மாறும் என அறிந்திருக்கின்றான்.சோம்பேறி அதை அறிவதில்லை.அறிவாளி வாழ்க்கையை அறிந்துள்ளான்

அறிவில்லாதவன், தன்னைவிட அதிகம் படித்தவர்கள், மேலான நடத்தையுடையவர்கள்,வயதில் மூத்தவர்கள்,அறிவில் சிறந்தவர்கள்,அதிகச் செல்வந்தர்கள்,உயர் குலத்தில் பிறந்தவர்கள் ஆகியோரைச் சரிவர மதித்து மரியாதையாக நடத்த மாட்டான்.

எவனது நடத்தை சீராக இல்லையோ, அன்பு குறைவாக உள்ளதோ,.மனம் பொறாமையில் நிரம்பியுள்ளதோ, எண்ணங்கள் அநியாயமான வழியில் செல்கின்றதோ, எவன் கடுஞ்சொற்கள் பேசுபவனாகவும்,கடும் கோபக்காரனாகவும் உள்ளானோ அவன் விரைவில் துன்பத்திற்கு ஆளாவான்

பிறரை மோசடி செய்யாமலிருத்தல், தான தருமம் புரிதல்,வாக்குத் தவறாமை,பொருத்தமாகவும்-நன்மை தரும் வகையிலும் பேசுதல் ஆகிய பண்புகளால் நாம் அனைவரையும் கவர்ந்துவிட முடியும்

எவனொருவன் பிறரை ஏமாற்றாதவனாகவும்,உழைப்பாளியாகவும்,நன்றியுள்ளவனாகவும், கூர்மையான அறிவுடையவனாகவும், நேர்மையாளனாகவும் வாழ்கிறானோ அவன் செல்வவசதி இல்லாதவனாயினும் அவனைப் பின் தொடர்ந்து ஒரு பெரிய பட்டாளமே அவனுக்கு உதவ முன்வரும்

எரிபொருளாகிய விறகு முதலியவை, நெருப்பைத் தூண்டுவது போல துன்பங்களில் தளராமை,மனக்கட்டுப்பாடு, புலன்களைக் கட்டுப்படுத்துதல், தூய்மை,கருணை,இன்சொல் உரைத்தல்,நண்பர்களுக்குத் துரோகம் செய்யாமல் இருத்தல் ஆகிய ஏழு பண்புகளும் வாழ்வில் வளத்தையும்,வசதிகளையும் பன்மடங்காகத் தூண்டிவிடும்.
எந்த அரசன் தன்னிடம் வந்து சேரும் செல்வத்தையும்,வசதிகளையும் பிறருடன் பகிர்ந்து கொள்ளாமல் தான் மட்டும் அனுபவிப்பராகவும், தீய மனம் கொண்டவராயும்,,நன்றி கெட்டவராயும்,தீயவை செய்யக் கூசாதவராகவும் உள்ளாரோ அவரைத் தவிர்த்து விட வேண்டும்.
ஒரு வீட்டில் பாம்பு ஒளிந்திருந்தால், அந்த வீட்டுக்காரனால் அச்சமின்றி தூங்க முடியாது.அதுபோல தன்னைச் சுற்றியுள்ள அப்பாவியான ஒரு மனிதனுக்குத் தொந்தரவு கொடுக்கும் தீய மனிதனும் நிம்மதியாக உறங்க முடியாது

தீய எண்ணத்தாலோ, கோபத்தாலோ தூண்டப்பட்டு நம்மிடமுள்ள செல்வத்தையும், மற்ற வசதிப் பொருட்களையும் நாசமாக்கக் கூடிய அளவிற்கு அக்கிரம் செய்யும் வலிமை கொண்டவர்க்கு எதையாவதுக் கொடுத்துத் திருப்திப்படுத்தி அனுப்பி விடுவதுதான் நமக்கு பாதுகாப்பானது(தீயவர்களை இயன்றவரை தவிர்ப்பதே புத்திசாலித்தனம்)

முக்கியமான பணிகளைப் பெண்களிடம் ஒப்படைக்கக் கூடாது.வழக்கமாகத் தவறு செய்பவர்கள் , சமுக மதிப்பு அல்லது சாதியிலிருந்து தாழ்ந்து வீழ்ந்தவர்கள்,நேர்மையும் ஒழுக்கமும் இல்லாதவர்கள் ஆகியோரிடம் முக்கியமானப் பணிகளை ஒப்படைக்கக் கூடாது.அவர்களிடம் பொறுப்புள்ள பணிகளைக் கொடுத்தாலவை நிறைவேறுவது சந்தேகமே!(விதுரர் காலத்தில் பெண்களால் கூடுதலான பொறுப்புகளை சுமப்பது கடினம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்)

கல்லால் படகு செய்து அதைத் தண்ணீரில் விட்டு நாம் அமர்ந்தால் அதனுடன் சேர்ந்து மூழ்க நேரும்.அதுபோன்றே நாம், பெண்கள், மோசடிக்காரர்கள் அல்லது குழந்தைகளின் ஆலோசனைப்படிச் செயல்பட்டால் தோல்வியடைந்து அழிந்து போவோம்(பெண்களுக்கு உலக அனுபவம் போதாது)

வாழ்க்கையில் அடைய விரும்பும் லட்சியங்களின் இறுதிப்பயனில் கவனம் செலுத்துவதே அறிவுள்ளவன் கடமையாகும்.அந்த லட்சியங்களை அடைவதற்கான முயற்சியின் இடையில் காணப்படும் சிறு விஷயங்களிலும், விசித்திரங்களிலும் அறிவாளியின் கவனம் சிதறக்கூடாது.ஏனெனில் நடுவில் வரும் விஷயங்கள் தற்செயலானவை.மேலும் இரண்டாம் பட்சமானவை

ஒருவன் போக்கிரிகளாலும், முகஸ்துதி செய்து பிழைக்கும் கவிஞர்கள் அல்லது பாடகர்களாலும், விலை மாதர்களாலும் மட்டுமே புகழப்படுவானாயின் அவன் உயிர் வாழ்வதைவிட சாவதே மேல்

அரசே! பாண்டவர்கள் அற்புதமான வில் வித்தை வீரர்கள்,அளவற்ற ஆற்றல் கொண்டவர்கள்.அவர்களை நீங்கள் கைவிட்டீர்கள்.இந்தப் பேரரசை ஆளும் பொறுப்பைத் துரியோதனனிடம் ஒப்படைத்துத் தவறு செய்து விட்டீர்கள்

மகாபலி யைப் போல துரியோதனன், செல்வமும், செல்வாக்கும் உள்ள காரணத்தால் திமிர் பிடித்து அலைகிறான்.மூவுலகையும் ஆண்ட மகாபலி அவற்றை இழந்தது போல துரியோதனனும் விரைவில் இப்பேரரசை ஆளுகின்ற உன்னத நிலையிலிருந்து உருண்டு விழத்தான் போகிறான்.இதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்" என்று விதுரர் கூறி முடித்தார்.  

Thursday, January 7, 2016

41-விருந்தினர்



ஒரு முதியவர் அல்லது பெரியவர் ,ஒரு இளைஞனின் வீட்டிற்கு வந்தால். அவன் உரிய மரியாதையைக் காட்ட வேண்டும்.இல்லாவிட்டால் அவனது உயிர் சக்தியில் சிறிது வெளியேறிவிடும்.பெரியவர் ஒருவரைப் பார்த்து எழுந்து நின்று வணங்குபவனுக்கு உயிர் சக்தி கிடைக்கும்

ஒரு நல்லவர் நம் வீட்ட்ற்கு வந்தால்,அவரை வரவேற்று உட்கார ஆசனம் தர வேண்டும்.பிறகு தண்ணீர் கொண்டுவந்து அவருடைய பாதங்களைக் கழுவ வேண்டும்.அடுத்து, அவர் நலன் விசாரித்த பின், நம் குடும்ப நலனைத் தெரிவிக்க வேண்டும்.அவர் வந்துள்ள சமயத்திற்கேற்ப உணவு பரிமாற வேண்டும்

வேதங்களை நன்று பயின்றவர்க்கு தண்ணீரோ, தயிரும்-தேனும் கலந்த பானமோ, பசுவோ அளிப்பதன் மூலம் நன்மை பெறலாம் என பேராசைப் படுபவர்களிடமிருந்து வேதியர் எதையும் ஏற்க மாட்டார்.அவர்கள் சாபத்திற்கு பயந்து பொருட்கள் அளிப்பவர்களிடமிருந்தும் வேதியர் எதையும் ஏற்க மாட்டார். இவ்வாறு வேதியரைச் சரிகட்டும் குடும்பஸ்தினரின் வாழ்க்கை வீணாகிவிடும்

குறிப்பிட்ட சில வகையினரை நாம் விருந்தினர்களாக வரவேற்று உபசரிக்கக் கூடாது.அததகையோரில் அறுவை சிகிச்சை செய்பவர்,பிரம்மச்சரியத்தை நடுவில் கைவிட்ட சமயக் கல்வி மாணவர்,திருடன்,கொடூரன்,குடிகாரன்,கருச்சிதைவு செய்பவன்,ராணுவ வீர ஊழியர், வேத அறிவை விற்பனை பொருளாக்குபவர் ஆகியோர் அடங்குவர்.இவர்களில் யாராவது நமக்கு வேண்டியவர்களாக இருந்தாலும் விருந்தினர்களை உபசரிக்கக் கூடாது

சில பொருட்களை விற்பது உயர்ந்தத் தொழிலாகக் கருதப்படுவதில்லை.உயர்ரக வணிகராகக் கருதப்பட விரும்புபவன், அவற்றை விற்பதைத் தவிர்க்க வேண்டும்.உப்பு, சமைக்கப்பட்ட உணவு,தயிர், பால்,தேன், எண்ணெய், நெய்,எள்,இறைச்சி,பழங்கள்,கிழங்குகள்,கீரை, காய்கறி,சிவப்பு சாயமேற்றிய துணி,வசனை திரவியங்கள்,வெல்லப்பாகு ஆகியவற்றை விற்பனை செய்வது உயர் வணிகம் அல்ல

உண்மையான தூறவி கோபப்பட மாட்டார்.மண்ணையும்,தங்கத்தையும் சமமாகவே மதிப்பர்.எதற்கும் கவலைப்பட மாட்டார்கள், யார் மீதும் பற்று வைப்பதோ...யாரையும் வெறுப்பதோ கிடையாது.தன்னை யார் புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் பாதிப்படைவதில்லை.பிரியமானவை-பிரியமற்றவை என்று வேறுபடுத்திப் பார்க்கும் மனப்பான்மை அவசியம் இருப்பதில்லை.அவர் எந்நிலையிலும் சலனப்படாது அமைதியாக இருப்பர்.

உண்மையான துறவி யாருக்கும் சொந்தமில்லாதவர்..காட்டில் விளையும் அரிசி, கிழங்குகள்,மரக்கொட்டைகள், இலைகள் ஆகியவற்றை உண்டு உயிர்வாழ்வார்.சுயக்கட்டுப்பாடு உள்ளவராக இருப்பார்.அக்கினிக்கு பலியுணவைக் கொடுத்து வழிபடுவார்.தனியிடத்தில் வசிப்பார்.ஆனாலும் தன்னை சந்திப்பவர்களை நன்கு உபசரிப்பார்

தொலைவில் உள்ள நல்லறிஞர் ஒருவருக்குக் கெடுதல் செய்து விட்டு, அவர்தான் தொலைவில் இருக்கிறாரே....நம்மை ஒன்றும் செய்ய முடியாது என நினைக்க வேண்டாம்.அறிஞர்கள் கைகள் நீண்டவை,ஆகவே அவர்கள் தமக்குத் தீங்கிழைத்தவர்கள் எங்கிருந்தாலும் தண்டித்து விடமுடியும்,

நம்மத் தகாதவரிடம் நாம் நம்பிக்கை வைக்கக் கூடாது.ஒருவர் நம்பத்தக்கவர் ஆனாலும் ஆர் மீதும் அளவு கடந்து நம்பிக்கை வைக்கக் கூடாது.எத்ற்கும் மற்றவர்களையே நம்பினால் நாம் ஆதரவற்றோர் ஆகி பலகீனம் அடையவர் ஆவோம்

யாரிடமும் நாம் பொறாமை கொள்ளக் கூடாது.நமது மனைவிக்கு துன்பம் நேராமல் காப்பாற்ற வேண்டும்.நம்மைச் சார்ந்தவர்களுடனும், விருந்தினருடனும் உணவை,வசதிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.இனிய சொற்களையே கூற வேண்டும்.குறிப்பாக பெண்களீடம் கனிவாகப் பேச வேண்டும்.ஆனால் அவர்களுக்கு மயங்கி அடிமை ஆகிவிடக் கூடாது.

சிறப்பான குணங்களுடன் நன்னடத்தையைக் கடைப்பிடித்து குடும்பத்திற்குப் புகழ் சேர்க்கும் பெண்கள் பூஜிக்கத் தக்கவர்கள்.திருமகளே அவர்கள் வடிவத்தில் அவதாரம் எடுத்து அக்குடும்பத்தில் வாழ்வதாகக் கருதப்படும்.இத்தகைய தெய்வீகப் பெண்கள் சிறப்பாகப் பாதுகாக்கப் பட்டு...பராமரிக்கப்பட வேண்டியவர்கள்

ஒருவன் குடும்பத்தின் தலைமையை எடுத்துக் கொண்டு விட்டால், வீட்டின் உள் நீர்வாகத்தை தந்தையிடமும், சமையலறைப் பொறுப்பைத் தாயிடமும், தனக்கு நிகரானவரிடம் பசுக்களின் பராமரிப்பயும் ஒப்படைக்க வேண்டும்.விவசாய வேலைகளைத் தானே நேரில் கவனிக்க வேண்டும்.வீட்டிற்கு வரும் விருந்தினரை தனது புதல்வர்களைக் கொண்டு உபசரிக்க வேண்டும்

நீரிலிருந்து நெருப்புத் தோன்றியது.அந்தணர் குலத்திலிருந்து சத்திரியர்கள் தோன்றினர்.கல்லிலிருந்து உலோகங்கள் எடுக்கப் பட்டன.இவ்வாறு தோன்றிய தீயின் சக்தி,சத்திரியரின் வலிமை,உலோகங்களின் ஆற்றல் எங்கும் செல்லுபடி ஆகக் கூடியவை.ஆனால், இவை தாங்கள் உதித்த இடத்தைப் பார்ப்பதில்லை

உயர்குலத்தில் பிறந்த நல்லவர்கள் நெருப்பப் போலவே அளவற்ற சக்தி உடையவர்கள் ஆவர்.ஆனால், வடிவெடுக்காமல் விறகுக்குள் அமைதியாகக் கிடக்கும் தீயைப் போல உயர்குலச் சான்றோர்கள் தங்களது ஆற்றலை வீணாக வெளியிடாமல் பொறுமையாய் இருப்பார்கள் 

Wednesday, January 6, 2016

40- வலிமைகளும்- நெருப்பின் ஆற்றலும்



மனிதர்களிடம் இருக்கும் வலிமைகள் ஐந்து வகைஆகும்.இந்த ஐந்தில் ஒன்று உடல் வலிமை ஆகும்.இது தரத்தில் கடைசி ஆகும்

இதற்கு மாறுபட்டது சிறந்த ஆலோசகர்களைப் பெற்றிருப்பது.ஆகும்.இந்த வலிமை மங்களமானது.இதற்கும் மேற்பட்டவலிமை நிரம்பச் செல்வம் பெற்றிருத்தல்.

உயர் குலத்தில் பிறந்திருத்தல் செல்வ வலிமையை விட மேம்பட்டதாகும்.பரம்பரையாக பாட்டனாரிடமிருந்து தந்தைக்கும்,தந்தையிடமிருந்து மகனுக்கும் இயற்கையாகவே மரபுப்பெருமை எனும் இந்த வலிமை  கிடைக்கிறது

அறிவு எனும் வல்லமை மற்றவற்றைவி ட அதிக வலுவானது.அறிவே முதல் வலிமை ஆகும்.அதுவே மற்ற நான்கு  வலிமைகளைப் பெற வழி வகுக்கிறது

பழி வாங்கக் கூடியவனிடம் விரோதம் கூடாது.ஒருவேளை அவன் நெடுந்தொலைவில் வசித்துக் கொண்டிருக்கலாம்.ஆகவே அவனால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என நினைத்து விரோதம் வைத்துக் கொள்ளக் கூடாது

பெண்கள், அரசன்,பாம்பு, ஒருவன் பெற்றுள்ள ஏட்டறிவு, பணக்காரர்கள், எதிரிகள்,புலன் இன்பங்கள், ஒருவனது ஆயுள் ஆகியவை நம்பற்குரியவை அல்ல.எந்த அறிவாளியும் இவற்றை நம்பி இருக்க மாட்டான்

விவேகமுள்ளவன் எடுக்கும் நடவடிக்கை ஆகிய அம்பின் விளைவை மருத்துவர்களோ,மருந்துகளோ மாற்ற முடியாது.கடவுளுக்கு படையல் அளித்தல், புனிதச் சடங்குகள், அதர்வ வேதத்திலுள்ள தந்திர மந்திரங்களை பிரயோகித்தல், மூலிகை மருந்துகள் ஆகியவற்றைக் கொண்டும் விவேகமுள்ளவனின் செயலின் விளைவை மாற்ற முடியாது.(அவனது செயல்கள் மிகச் சரியான மாற்ற வழி தேவையில்லாததாகும்)

பாம்பு, நெருப்பு, சிங்கம் ஆகியவற்றையும், நல்ல குடும்பத்தில் பிறந்தவனையும் யாரும் அலட்சியம் செய்யக்கூடாது.ஏனெனில் இவற்றின் ஆற்றல் அளவு கடந்ததாகும்

தீ, உலகில் அதிக அளவில் சக்தி பெற்றதாகும்.அது விறகுனுள் மறைந்துள்ளது.ஆனாலும் மற்றவர்கள் தூண்டிவிடாத வரையில் பிறருக்கு எநத்க் கெடுதலும் செய்வதில்லை

மரங்கள் ஒன்றுடன் ஒன்று உராய்கையில் அவற்றினுள் இருக்கும் வெப்ப ஆற்றல், தீயாகக் கிளம்பி மரங்களையே எரித்து விடுகிறது.அந்த நெருப்பு பரவி, காடு முழுவதும் சாம்பலாகி விடுகிறது.அப்போது காட்டிலுள்ள இதரப் பொருள்களும் ,உயிரினங்களும் கூட எரிந்து விடுகின்றன

அதுபோலவே உயர் பண்புகள் நிறைந்தவர்களும்,ஆற்றலாகிய பெரிய நெருப்பை மறைத்து வைத்துள்ளனர்.அந்த ஆற்றல் பொறுமை ஆகும்.அது வெளிப்படாது விறகினுள் நெருப்புப் போல உள்ளது

நீங்களும், உங்கள் புதல்வர்களும் மரத்தில் படரும் கொடி போன்றவர்கள்.மரத்தின் துணையின்றி, மரத்தைச் சாராமல் கொடி வளரமுடியாது.

உங்களது புதல்வர்கள் காடு போல.பாண்டவர்கள் சிங்கம் போல.சிங்கம் இல்லா காடு அழிக்கப்படும்.காட்டில் வாழும் சிங்கங்கள் அழியும்.

இவ்வாறு விதுரர் கூறி முடித்தார்.

39-போரைத் தவிர்



கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே போர் மூண்டால் என்ன தீமைகள் உண்டாகும் என யோசித்துப் பாருங்கள்.அப்போர், இந்திரனுக்கும்,இதர தேவர்களுக்கும் வேதனைத் தரும்.கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே நிரந்திரப் பகை ஏற்படும்.உங்களின் எஞ்சியுள்ள வாழ்க்கை கவலை நிறைந்ததாய் அமையும்.குரு வம்சத்தின் பெயர் களங்கப்படும்.உங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைக் கண்டு எதிரிகள் மகிழ்ச்சியடைவர்

வானத்தின் உச்சியில் எழுந்து, பூமியின் குறுக்காக வீழ்கின்ற வால்நட்சத்திரம் நாட்டின் நலனுக்குக் கெடுதலாக அமையும்.அதுபோலவே போரின் காரணமாக உங்களுக்கும்,பீஷ்மர்-துரோணர்-தருமர் ஆகிய மாவீரர்களுக்கும் பொங்கி வரும் சினம் உலகையே அழித்துவிடும்

இதற்கு மாறாக நாட்டின் நலன் கருதி உங்களது நூறு மகன்களும், பாண்டுவின் ஐந்து மகன்களும், கர்ணன் ஆகியோரும் ஒன்று சேர்ந்தால் கடல்வரை பரவியுள்ள நிலப்பரப்பு முழுவதையும் வென்று அரசாளலாம்

அரசே! உங்கள் மகன்கள் அனைவரும் சேர்ந்து ஒரு காடு போன்றவர்கள்.பாண்டுவின் புதல்வர்கள் புலிகளுக்குச் சமம்.புலிகளைக் கொல்வதாகக் கிளம்பிக் காடே அழியும் நிலை செய்துவிடக் கூடாது.காட்டை விட்டு புலிகளை விரட்டிவிடவும் முயற்சிக்கக் கூடாது..புலிகள் இல்லா காடு பாதுகாப்பற்றது.காடில்லாமல் புலிகளும்   வாழாது.புலிகள் காடுகளைக் காக்கின்றன.காடு புலிகளுக்கு பாதுகாப்பைத் தரும்

தீயவர்கள் மற்றவர்களிடம் என்னென்ன நல்ல குணங்கள் உள்ளன என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.மற்றவர்களிடம் என்னென்ன குறைகள் உள்ளன என்பதைக் கண்டுபிடிப்பதில்தான் அக்கறை செலுத்துகின்றனர்

தேவலோகத்திலிருந்து அமிர்தத்தைப் பிரிக்க முடியாது.அதுபோல, வாழ்வில் உயர்தரவளமையை அறநெறியிலிருந்து விலகிப் பெற இயலாது.ஆகவே, வாழ்வில் உன்னத செழிப்பையும், முன்னேற்றத்தையும் நாம் அடைய விரும்பினால் ஆரம்பம் முதலே நற்பண்புகளைக் கடைப் பிடிக்க வேண்டும்

நம் மனம் தீய சிந்தகளிலிருந்து பிரிந்து விலகி நின்று, நற்பண்புகளில் வேரூன்றி இருக்க வேண்டும்,அப்போதுதான் உலகப் பொருட்களின் மெய்யான தன்மையையும்,அவற்றால் ஏர்படும் மாறுதல்களையும் நன்கு அறிந்தவர்கள் ஆக முடியும்

நற்பண்புகளை பின்பற்றுதல், வசதிகளைப் பெறுதல், புலன்வழி இன்பங்களை அனுபவித்தல் ஆகியவற்றை அதற்கான காலத்தில் எவன் முறையாக துய்க்கின்றானோ அவனுக்கு அவை மூன்றும் இவ்வுலகில் கிடைப்பதைப் போல மறுவுலகிலும் கிடைத்துவிடும்

சினமும்,மகிழ்ச்சியும் மிகுந்த ஆற்றலை உடையவை.இவற்றிலிருந்து பொங்கிப் பிரவாகிக்கும் ஆற்றலைக் கட்டுப்படுத்தி, சரியான வழியில் செலுத்துவதுடன் சோதனையான சூழலிலும் தடுமாறாது இருக்க வேண்டும்.இம்முயற்சியில் வெற்றி பெறுபவனை செல்வமும், வசதிகளும் வந்து சேரும்.  

Tuesday, January 5, 2016

38- தவிர்க்கப்பட வேண்டியவர்கள்



நாம் குறிப்பிட்ட சிலரை நம் வீட்டில் தங்க அனுமதிக்கக் கூடாது.சோம்பேறி, மிகையாக உண்பவன்,சமூகத்தால் வெறுக்கப்படுபவன்,மோசடிக்காரன்,கொடூரமானவன்,இடம்-காலம் அறிந்து பழகத் தெரியாதவன்,அசிங்கமாக உடை அணிபவன் ஆகியோரை வீட்டில் தங்கவிடக் கூடாது.

நமக்கு வாழ்க்கையில் எப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும், குறிப்பிட்ட சிலரிடம் உதவி கேட்கக் கூடாது.கருமி,நம்மை ஏசுபவர்,கல்வி அறிவற்றவர்,காட்டுவாசி,போக்கிரி,தகுதியுடைவருக்கு மரியாதை காட்டத் தவறுபவர்,கொடூர குணம் கொண்டவர்,நமது எதிரி,நன்றி கெட்ட்வர் ஆகியோரிடம் உதவி கேட்கக் கூடாது

நாம் எப்போதும் குறிப்பிட்ட சில வகையினருக்கு உதவக் கூடாது.பிறரது வீட்டைக் கொளுத்துதல் போன்ற பயங்கர பாவங்கள் செய்பவன்,எப்போதும் தவறு செய்து கொண்டே இருப்பவன்.எப்போதும் பொய் பேசுபவன்.கடவ்ள் மீது உறுதியான பக்தியற்றவன்.அன்பில்லாதவன்.தான் ஒருவனே அறிவாளி என திமிருள்ளவன் இந்த ஆறு வகையினருக்கு உதவுவதோ அல்லது அவர்களிடம் பணிபுரிவதோ கூடாது

(பயங்கர பாவங்கள்- பிறர் வீட்டைக் கொளுத்துதல்,விஷம் கொடுத்துக் கொல்லுதல்,ஆயுதத்தால் தாக்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல், பிறர் செல்வத்தை அபகரித்தல்,பிறர் நிலத்தை ஆக்கிரமித்தல், பிறர் மனைவியின் கற்புக்குக் கேடிழைத்தல் ஆகியவை ஆகும்)

நம்முடைய செயல்களின் விளைவுகள்,நாம் அவற்றை அடைய மேற்கொள்ளும் வழிமுறைகளைப் பொறுத்து அமைகின்றன.நாம் எந்த வழிமுறைகளை மேற்கொள்கிறோம் என்பது நாம் அடைய விரும்பும் பலன்களுக்கு ஏற்ப அமைகிறது.இவ்வாறு செயல்கள்,வழிமுறைகள்,விளைவுகள் ஆகிய மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன

நம்முடைய கடமை என்ன வென்றால், முதலில் மகன்களையும்,மகள்க ளையும்  பெற்றெடுக்க வேண்டும்.மகன்களை பிரச்னையில்லா நல்ல வேலைகளில் அமர்த்த வேண்டும்.பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும்.இவ்வாறு கடமைகளை நிறைவேற்றிய பின்னர் நாம் காட்டிற்குச் சென்று...வாழ்நாளின் கடைசிப் பகுதியை முனிவர்கள் போல வாழ்ந்து கழிக்க வேண்டும்

நாம் எல்லா உயிரினங்களுக்கும் நன்மையும், நமக்கு மகிழ்ச்சியும் அளிக்கும் செயல்களையேச் செய்ய வேண்டும்.அவற்றையும் அவற்றின் நற்பலனையும் இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.இத்தகைய மனப்போக்கு அமைந்தால் நம்முடைய குறிக்கோள்கள் அனைத்தும் நிறைவேறும்

ஒருவன் அறிவு,திறமை, நெருப்பைப்போலத் தீவிரம்,வலிமை,உழைப்பு,உறுதி ஆகிய குணங்களைப் பெற்றிருந்தால் அவன் வேலை எதுவும் கிடைக்காமல் போய்விடுவோமோ என அஞ்ச வேண்டியதில்லை