Thursday, January 21, 2016

48-வாழ்வின் முடிவு சாவு




எத்தனை மாவீரர்கள், மாமன்னர்கள் கடந்த காலத்தில் தோன்றியிருக்கின்றனர்! தானிய செல்வத்திலும்,மற்றவகைச் செல்வங்களாலும் நிறைந்து விளங்கிய நிலப்பரப்பை ஆட்சி புரிந்துள்ளனர்.அவர்களுக்குச் சாவுத்தெய்வம் சலுகைக்காட்டவில்லை.எல்லாவற்றையும் இழந்து சாவுக்கு இரையாகிவிட்டனர்

நாம், மிகுந்த கவனத்தோடும், முயற்சியோடும் மகனை வளர்த்து பெரியவன் ஆக்குகிறோம்.அவன் இறந்துவிட்டால்....என்ன செய்வது? உடலை வீட்டிலிருந்து மயானத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டியதுதான்.வீட்டுப் பெண்கள் அலறிப் புலம்புவார்கள் என வீட்டில் பிணத்தை வைத்திருக்க முடியுமா? யார் எப்படி அழுதாலும்....விறகுகள் நடுவே உடலையும் விறகாய் சிதையில் வைக்க வேண்டியதேத் தவிர வேறு வழியில்லை

வாழ்நாள் முழுதும் உழைத்து இறந்த ஒருவன் திரட்டிய செல்வத்தை வேறொருவன் அனுபவிக்கிறான்.நாம் எவ்வளவு சீராட்டி வளர்த்தாலும்..ஐந்து மூலப்பொருட்களால் ஆன இவ்வுடலை பறவைகள் மிச்சமின்றி அழிக்கின்றன...அல்லது நெருப்பு எரித்துவிடுகிறது.இறந்தவன், இதுவரை செய்த பாவபுண்ணியங்கள் என்றும் உடன் வர மேலுலகம் செல்கிறான்

மரங்கள் பூப்பதையும், கனிகள் தருவதையும் நிறுத்தி விட்டால் அவற்றை விட்டு பறவைகள் வேறிடம் சென்று விடும்.அதுபோலவே, ஒருவன் இறந்துவிட்டால்....அவனால் இனிப்பயன் இல்லை என அவனுடைய மகன்களும்,உறவினர்களும், நண்பர்களும் அவன் உடலைச் சுடுகாட்டில் வைத்துவிட்டு வந்து விடுகின்றனர்

சிதை நெருப்பில் போடப்படுகின்ற இறந்தவனுடைய ஆத்மாவுடன் வருபவை அவன் வாழ்க்கையில் செய்த காரியங்களின் பலன் மட்டுமே..ஆகவே நாம் எப்படிப்பட்டாவது கொஞ்சம்..கொஞ்சமாகவாவது நற்செயல்கள் செய்து புண்ணியத்தை சேகரிக்க வேண்டும்

நாம் வாழும் இவ்வுலகில் மேற்பகுதியிலும்...கீழுள்ள பகுதியிலும் வேதனையான இருண்ட உலகங்கள் பல உண்டு.அவை நம் புலன்களையும்  திணறும் அளவிற்குக் கொடுமையானவை.துரியோதனன் மீதுள்ள பாசம் காரணமாக பாவச்செயல்களுக்கு உடந்தை போய் அந்தக் கொடிய உலகங்களில் தள்ளப்பட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள்.
(மேலுலகங்கள் - பூலோகம்,சுவர்லோகம்,அயர்லோகம்,சனலோகம்,தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம்
 கீழுலகங்கள்- அதலம்,விதலம்,சுதலம்,தராதலம்,மகாதலம்,ரசாதலம், பாதாளம்)

அரசே! நான் கூறிய அறிவுரைகளைப் பொறுமையுடன் கேட்டீர்கள்.அதன்படி நீங்கள் உண்மையாக நடந்து கொண்டால் இவ்வுலகில் பெரும் புகழ் பெறுவீர்கள்.பின்...இவ்வுலகில் எதற்கும் நீங்கள் பயப்பட வேண்டாம்.மேலுலகிலும் அஞ்சும்படி எத்துன்பமும் விளையாது

ஆத்மா..ஒரு நதிக்கு சமம்.புண்ணியச் செயல்களே அந்நதியில் குளிப்பதற்குரிய இடமாகும்.சத்தியமே...அந்நதியின் நீர்ப்பெருக்கு.ஐம்புலன் கட்டுப்பாடே அந்நதியின் கரைப்பகுதி.கருணை உணர்வே அதன் அலைகள்.அதில் குளிப்பவன் தூய்மைப் பெற்றுப் புண்ணியசாலியாகிறான்.ஏனெனில் ஆத்மா புனிதமானது.ஆசைகளைத் துறத்தலே தலை சிறந்த புண்ணியமாகும்

உலக வாழ்க்கை என்பது ஒரு நதி.அதில் ஐம்புலன் ஆசைகள் தண்ணீராய் உள்ளன.காமம்,சினம்,என்ற முதலைகள் அதில் நிறைந்துள்ளன.மீண்டும், மீண்டும் பிறத்தல் என்ற நீர்ச்சுழல்கள் நம்மை அச்சுறுத்துகின்றன.இத்தகைய பயங்கர ஆற்றை நாம் சுயக்கட்டுப்பாடு என்ற படகின் உதவியோடு கடக்க வேண்டும்

நம்மைச் சுற்றியுள்ளவர்களில் அல்லது உறவினர்களில் யாராவது அல்லது சிலர் விவேகத்திலோ, நற்பண்பிலோ,உலக அறிவிலோ, வயதிலோ நம்மைவிட மூத்தவர்களாக  இருக்கக் கூடும்.அப்படிப்பட்டவர்களுக்கு நாம் மரியாதை காட்ட வேண்டும்.அவரது தயவைப் பெற்றிட வேண்டும்.நாம் ஒரு சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும்....என்ன செய்யக்கூடாது என அத்தகைய மூத்தவரிடம் ஆலோசனைப் பெற்று அதற்கேற்ப நடந்து கொண்டால், தவறு செய்ய வாய்ப்பே இல்லை

நாம் காமத்தையும், வாயுணர்வையும் உள்ளத்து வலிமையைக் கொண்டு அடக்கி ஆள வேண்டும்.கைகளையும், கால்களையும் கண்களின் உதவியால் கட்டுப்படுத்த வேண்டும்.கண்களையும்-செவிகளையும் மனத்தால் வசப்படுத்த வேண்டும்.சிந்தனையையும், பேச்சையும் செயல்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டும். 

Wednesday, January 20, 2016

47-முன்னேற்றத்தைத் தடுக்கும் பகைவர்கள்



ஒருவன் நல்ல மனிதர்களால் மதிக்கப்பட்டு,எந்தப் பற்றும் இல்லாமல்கடமைகளை செய்து வந்து,தனது ஆற்றலை வீணாக்காமல் உழைத்து வந்தால் அவன் விரைவில் புகழ் பெறுவான்.ஏனெனில்,சான்றோரிடம் நாம் திருப்தித் தரும் விதத்தில் நடந்து கொண்டால், அவர்கள் நம் வாழ்வை மகிழ்ச்சி ஏற்படும்படி செய்யும் வல்லவர்கள் ஆவர்

ஒரு பொருளோ, பரிசோ, பதவியோ தவறான வழிமுறையைப் பின்பற்றி வாங்கப்பட்டிருந்தால் நாம் உடனே அதை மறுத்து விட வேண்டும்.பாம்பு தன் சட்டையை உரித்த பின் அதை அப்படியே போட்டுவிட்டுச் செல்வது போல, தவறான வழியில் கிடைக்கும் எதன் மீதும் பற்று வைக்காது உதறித் தள்ளினால் நாம் எத்துன்பமும் இன்றி சந்தோஷமாக வாழலாம்

பொய் வழக்கு மூலம் மேன்மை பெறுவதும், அரசர் மீது வெறுப்பு கொண்டு, அவரை பகைத்து கொள்வதும், குருவிடம் தவறான தகவல்களைத் தெரிவித்து அவை சரியானவைதான் என பிடிவாதமாகக் கூறுவதும்...வேதம் படித்த அறிஞனைக் கொல்வதற்குச் சமமாகும்.(வேதம் படித்தவன் அறிவு, ஒழுக்கம்,பண்பு, லட்சியம், எளிமை,ஆன்மீக நாட்டம், புலன்களைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் முதன்மையானவர்கள் ஆவார்கள் )

பொறாமை குணம் சாவதற்கு சமமாகும்.கடுஞ்சொற்கள் சொல்வது, வசைமாரி பொழிவது, நமது செல்வச் சிறப்புகளுக்குச் சாவுமணி அடிப்பதற்கு சமமாகும்.ஆன்மீக குரு உபதேசம் செய்கையில் கவனிக்காமல் இருப்பது, எதற்கெடுத்தாலும் அவசரப்படுத்துவது, தற்பெருமையடித்துக் கொள்வது ஆகிய மூன்றும் நம்மைக் கல்வியறிவில் முன்னேறாமல் தடுக்கும் பகைவர்கள் ஆகும்.

சோம்பேறித்தனம், கர்வத்தால் மனம் கெடுதல்,தடுமாற்றம், கூட்டமாக அரட்டை அடித்தல்,முரட்டுப் பிடிவாதம், போலித்தற்பெருமை, சுயநலம் ஆகிய ஏழும் நம்மை சுற்றி வளைத்துக் கொண்டு கெடுதல் செய்கின்ற பாவங்களாகும்

வாழ்க்கையில் புலன் இன்பங்களைத் தேடி அலைபவர்கள், கல்வி, கேள்விகளில் எப்படி சிறப்பு அடைய முடியும்? அது போலவே..அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமுள்ளவன் சுகத்தைத் தேடி அலையக் கூடாது.வாழ்க்கையில் வசதிகள்தான் முக்கியம் என நினைப்பவன், அதே நேரம் அதிக அறிவையும் பெற்றிட வேண்டும் என்ற  ஆசையைக் கைவிட வேண்டும்.படிப்புதான் முக்கியம் என நினைப்பவன், வசதிகளுக்கும்,இன்பங்களுக்கு ஏங்கக் கூடாது

எவ்வளவுதான் கரி, விறகுகள் போட்டாலும் நெருப்பு திருப்தி அடையாது.எத்தனை நதிகள் வந்து கலந்தாலும் கடல் திருப்தியடையாது புதிதாக வருவதையும் ஏற்கும்.கோடிக்கணக்கான உயிர்களை கவர்ந்து சென்ற பின்னும் சாவுக்கடவுளுக்கு திருப்தியாகவில்லை.அழகிய பெண் ,எத்தனை ஆண்கள் தன்னைப் பார்த்து மயங்கினாலும், அனைவரும் தன் அழகுக் கண்டு மயங்க வேண்டும் என எண்ணுவாள்.

ஆசை சுயக்கட்டுப்பாட்டை அழிக்கும்.சாவு, வளர்ச்சியைத் தடுத்து அழிக்கிறது.கோபம் செல்வத்தை அழித்துவிடும்.கருமித்தனம் புகழைக் கொல்லும்.பராமரிப்பில் அக்கறையில்லாவிடின் பசுக்கள் இறந்துவிடும்.ஒரு அந்தணர்க்கு சினம் ஏற்பட்டால்..ஒரு பேரரசையே அழிக்கும்

நம்முடைய வீடுகளில் ஆடுகள், வெண்கலப்பாத்திரங்கள்,வெள்ளிப்பாத்திரங்கள்,தேன், விஷமுறிவு மருந்துகள், பறவைகள் முதலியவற்றையும், புனித நூல் கற்ற அந்தணர், வயதான உறவினர், துன்பத்தில் சிக்கிக் கொண்ட உயர்குடிப் பிறப்பினர் ஆகியவர்களையும் பராமரிக்க வேண்டும்

ஆடுகள், எருதுகள்,சந்தனம்,வீணை,முகம் பார்க்கும் கண்ணாடி,தேன்,நெல், இரும்பு,தாமிரம்,சங்கு, சாலகிராமம்,மஞ்சள், கோரோஜனை ஆகியவை மங்களப் பொருட்களாகக் கருதப்படுகிறது

மேற்கண்ட பொருட்களை நாம் வீட்டில் தயாராக வைத்திருக்க வேண்டும் என மனு அறிவுறுத்துகிறார்.ஏனெனில், அவை பூஜைக்கும்,பெரியவர்களை வழிபடவும்,விருந்தினரை உபசரிக்கவும் பயன்படும் என மனு கூறியுள்ளார்

இன்னொரு நேர்த்தியான விஷயம் -- நாம் உயிரைக்காப்பாற்றிக் கொள்ளக்கூடிய அறவழியைக் கைவிடக் கூடாது.எதன் மீதாவது விருப்பம் கொண்டோ, எவரிடமும் பயந்தோ,எதற்காகவாவது பேராசைப்பட்டோ தர்ம நெறியிலிருந்து விலகக் கூடாது
...
அறம் நிரந்தரமானது.ஆனால் இன்பமும், துன்பமும் தற்காலிகமாக வந்து செல்லும் நிகழ்ச்சிகளாகும்.வாழ்க்கை நிரந்தரமானது...ஆனால் அது எடுக்கும் வடிவங்கள் மாயையானவை.நிகழ்ச்சிகள் மீது நாம் பற்றுக் கொள்ளக் கூடாது. நிரந்தரமானவற்றை நாம் பற்றிக் கொண்டு திருப்தியுடன் வாழ வேண்டும்.நல்ல மனிதர்கள் இத்தகைய திருப்தியை அடைவதிலேயே முழுக் கவனமும் செலுத்துவார்கள்

Tuesday, January 19, 2016

46- வெற்றி அடைய....



உயர்தரமான மனிதன் ,ஒரு காரியத்தில் முயன்று தோல்வியடைந்தாலோ, இழப்பிற்கு ஆளானாலோ அவன் சும்மா இருப்பதில்லை.பின், சரியான புதிய வழியொன்றைப் பின்பற்றி, தான் இழந்ததை மீண்டும் கை பற்றுவேன் என்று சபதம் ஏற்பான்.(பாண்டவர் இழந்த்தை மீண்டும் பெறுவார்கள்)

நாம் எதிர்காலத்தில் எழக்கூடிய பிரச்னைகளை சமாளிக்கும் வழிகளை அறிந்திருக்க வேண்டும்.நிகழ்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளில் உறுதியுடன் இருக்க வேண்டும்.நடந்ததற்கு வருந்தாமல்...அதன் விளைவுகளை எதிர் கொள்ளத் தயாராக  இருக்க வேண்டும்.இவ்வாறு முக்காலம் குறித்தும் தெளிவாக இருந்தால் , தன் குறிக்கோள்களை அடைவதில் தோல்வி ஏற்படாது.

ஒருவன் சிந்தனையாலும், பேச்சாலும், செயலாலும் இடைவிடாது தன் லட்சியங்களில் முழுமையாக ஈடுபட்டால் அந்த லட்சியம் அவனை நோக்கி வரும்.ஆகவே நாம்.நமக்கு நன்மை தரும் விஷயங்களையே அறிந்திருக்க வேண்டும்

பிறருக்கு நன்மை தரும் செயல்களில் ஈடுபடுதல், சோம்பல் இல்லா முயற்சி,அறிவு, சுறுசுறுப்பு, நேர்மை ஆகியவற்றைப் பெற்றிருத்தல், நல்ல மனிதர்கள் இருப்பிடம் சென்று அவர்களை அடிக்கடி சந்தித்தல் ஆகியவை மூலம் வாழ்க்கையில் வளம் பெற முடியும்

விடாமுயற்சி, வாழ்க்கை வளத்திற்கு ஊற்றுக் கண்ணாகும்.விடாமுயற்சியின் மூலம் லாபமும்,மகிழ்ச்சியும் விளைகின்றன.எளிதில் சலிப்படைந்து, தளராமல் தொடர்ந்து முயற்சி செய்பவன் உயர் நிலையை அடைவான்.ஆனந்தமாய் இருப்பான்

அனைவருக்கும் பொறுமைத் தேவை.வலிமையற்ற ஒருவன் எல்லாப் பிரச்னைகளையும் பொறுமையுடன் சகித்துக் கொள்வது நல்லது.ஒருவன் வல்லமை உடையவனாயினும் அவன் பொறுமையை ஒழுக்கத்தின் அம்சமாகக் கருதி கடைப் பிடிக்க வேண்டும்.நல்லது-கெட்டது இரண்டையும் சமமாக நினைப்பவன் மன்னிக்கும் உள்ளம் கொண்டவன் ஆவான்

ஒருவன் புலன்வழி இன்பங்களை அனுபவித்துக் கொண்டு, அதே நேரம் நற்பண்புகளை இழக்காமலும், உலகிற்கு நன்மை செய்வதை மறக்காமலும் இருந்தால்...அவன் புலன்வழி இன்பங்களில் ஈடுபடினும் தவறில்லை.ஆனால் முட்டாள்தனம் மேலோங்கி, புலன்வழி இன்பங்களை மிகையாக ஈடுபடுபவனாக மட்டுமே ஆகிவிடக் கூடாது

தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத அளவிற்குக் கவலை வசப்படுபவர்கள் ,தொடர்ந்து தவறு செய்பவர்கள்,கடவுளை நம்பாதவர்கள்,சோம்பேறிகள்,சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்கள், முயற்சியும்-உழைப்பும் செய்யாதவர்கள் ஆகியோரிடம் செல்வமும், வாழ்க்கை வசதிகளும் தங்கி நிற்பதில்லை

வாழ்க்கையில் நேர்மையாக இருப்பவனை, மேலும் நேர்மைக் காரணமாகத் தவறான செயல்களில் ஈடுபடுவதற்குக் கூசுபவனை, கோணல் புத்திக்காரர்கள், பலகீன மானவன் என மட்டம் தட்டுவார்கள்.அவனுக்குத் தொல்லைத் தருவார்கள்

அளவிற்கு மீறித் தகுதியுடையவனாகத் தன்னைப் பற்றி நினைப்பவன், எல்லை மீறி பிறருக்கு வாரி வழங்குபவன்,அளவு கடந்த வீரம் உள்ளவன்,தன்னை வருத்திக் கொண்டு கடும் விரதங்களைப் பின்பற்றுபவன், தானே அறிவாளி என எண்ணிக் கொண்டிருப்பவன்..ஆகியோரிடம் செல்வமும், வசதிகளும் வராமல் விலகி நிற்கும்

அளவிற்கு மீறிய ஒழுக்கமுடைய சான்றோர்கள் வளமும், வசதியும் பெறுவதில்லை.பண்பே  இல்லாதவர்களிடம் செல்வமும், வசதிகளும் நிலைத்து நிற்பதில்லை.பண்பாளனைத் தேடி செல்வம் செல்வதில்லை.பண்பில்லாதவரிடம்தான் செல்வம் சேருகிறது என்றும் உறுதி படக் கூற முடியாது

கட்டுப்பாடின்றித் திரியும் ஆவேசமான மாடு போல செல்வமும் குருட்டுத்தனமாக யாரிடம் வேண்டுமானாலும் போய்ச் சேருகிறது.

தீ மூட்டித் தேவதைகளுக்கு செய்யும் வேள்விகளால், வேதங்களில் கூறப்படும் நற்பலன்கள் ஏற்படும்.புனித நூல்களைப் பயின்றால் . நற்குணங்களும்,நன்னடத்தையும் நமக்கு அமையும்.மனைவியாக அமையும் பெண் மூலம், குடும்ப இன்பமும்,மக்கள் பேறும் கிடைக்கும்.நம்மிடம் செல்வம் இருந்தால் நாம் மகிழ்வுடன் விளங்கிப் பிறரையும் சந்தோஷப்படுத்தலாம்.

இறந்தபின் மேலுலகில் பல நன்மைகளும்,இன்பங்களும் பெறுவதற்காகப் பலர் இவ்வுலகில் பலியுணவு,காணிக்கை போன்ற சடங்குகளைச் செய்கிறார்கள்.ஆனால், தவறான முறையில் பணம் சம்பாதித்து அதை வைத்து இந்த சடங்குகளைச் செய்தால்,சாவிற்குப் பிறகு விண்ணுலகில் எந்நன்மையும் விளையாது.

தைரியம் நிறைந்த மனிதன் மக்கள் நடமாட்டமில்லா பாலைவனப் பகுதியிலோ, யாரும் நுழைய முடியா அடர்ந்த காட்டிலோ, நுழைய முடியா கோட்டையிலோ பயங்கர ஆபத்து எற்பட்டாலோதிகைப்பூட்டி தடுமாற வைக்கின்ற சூழ்நிலையிலோ, எதிரி தனக்கு எதிராக ஆயுதத்தை உயர்த்தி விட்ட நிலையிலோ சிக்கிக் கொண்டால் பயப்பட மாட்டார்கள்.

சுறுசுறுப்பாக உழைத்தல்,சுயக்கட்டுப்பாடு,நுணுக்கமானத் திறமை,கவனமாக வேலை செய்தல்,மனவுறுதி,நினைவாற்றல், நன்கு யோசித்த பிறகே பணிகளை மேற்கொள்ளுதல்- இவை நல் வளத்தையும், வசதிகளையும் பெருகச் செய்யும் குணங்களாகும்

துறவிகளின் வலிமை தவத்தில் உள்ளது.மெய்ஞானம் பெற்ற வேத அறிஞர்களின் வலிமை பரம்பொருள் பற்றி அவர்கள் அறிந்திருப்பதில் உள்ளது.தீயவர்களின் வலிமை வன்முறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது.பண்பாளரின் பலம் பொறுமையில் அடங்கியுள்ளது

விரதங்களை மேற்கொள்கையில், நடுவில் தண்ணீர்,மூலிகை, பழம்,பால், நெய் ஆகிய ஐந்தை சாப்பிட்டாலோ, புரோகிதர் சொல்படி நடந்து கொண்டாலோ. குருவின் கட்டளைப்படி அச்சமயத்தில் வேறு வேலை செய்தாலோ, மருந்து குடித்தாலோ அவை விரதத்திற்கு பங்கமாகக் கருதப்படுவதில்லை

நமக்கு மற்றவர்களால் என்ன நேரக்கூடாது, நம்மை மற்றவர்கள் என்ன செய்யக்கூடாது என விரும்புகிறோமோ அதை நாமும் பிறருக்குச் செய்யக் கூடாது.இவ்வாறு நம்மை கட்டுப்படுத்திக் கொண்டாலே...இவற்றிலிருந்து நற்பண்புகள் தோன்றும்.தீய குணங்கள் எல்லாம் மிகையான புலனாசைகளால் தோன்றுகின்றன

கோபப்படுபவனை பொறுமையாலும், தீயவர்களை நற்செயல்களாலும்,கருமியை தாராள மனப்பான்மை மூலமும், பொய் பேசுபவனை நேர்மையாலும் நாம் வெல்ல முடியும்.(மற்றவர் கோபிக்கும் போது நாம் பொறுமையாக இருந்தால் அவர் கோபம் நீங்கிவிடும்)

நாம் கீழ்கண்டவர்களை நம்பி ரகசியங்களைச் சொல்லக் கூடாது.பெண், போக்கிரி,சோம்பேறி,கோழை,கடுங்கோபம் கொள்பவன்,தன் வலிமைப் பற்றி பெருமை பேசுபவன்,திருடன்,நன்றி கெட்டவன்,நாத்திகன் ஆகியோர் ரகசியங்களைப் பாதுகாக்க வல்லவர்கள் அல்ல

எவன், தன்னைவிட உயர்ந்தவர்களை பணிவுடன் வணங்குபவனாகவும், மூத்தவர்களுக்கு சேவை செய்வதை வழக்கமாகவும் கொண்டுள்ளானோ அவன் அதிகம் பாராட்டப்படுவான்.அவன் ஆயுள் கூடும்.அவனது புகழும், ஆற்றலும் வளரும்

சில காரியங்களை நிறைவேற்றுவது கடினம்.மிகவும் துன்பப்பட்ட பிறகோ, நற்பண்புகளை கைவிட்டோ, எதிரியின் கால்களில் விழுந்தோ நாம் விரும்பும் குறிப்பிட்ட சில பொருட்களை அடைய முடியுமனால் அப்பொருட்கள் மீது ஆசை வைக்கக் கூடாது

கல்வியறிவற்றவன் பரிதாபத்துக்குரியவன்.தாம்பத்திய உறவு இருந்தும் குழந்தைகள் பிறக்காவிடின் அது வருத்தப்பட வேண்டிய விஷயமாகும்.அரசன் இருந்தும் உணவின்றி பட்டினியால் வாழும் குடிமக்கள் இரக்கத்துக்குரியவர்கள்.குடிமக்கள் இருந்தும் அரசனில்லா நாடு பரிதாபகரமான நிலையில் இருக்கும்

நெடுந்தூரம் நடப்பது, (நீண்ட பயணம்) உடல் நலத்தைக் கெடுத்துவிடும்.உயரத்திலிருந்து விழும் நீர் மலையையும் தேய்த்துவிடும்.தாம்பத்திய சுகம் அறியாத பெண்கள் விரைவில் மூப்பு எய்துவர்.கடுமையான சொற்கள் அம்பு போல பாய்ந்து மனக்கலக்கத்தையும், சோர்வையும் உண்டாக்கி விடும்

சம்பிரதாய முறைப்படி பயிலவில்லை எனின் அல்லது பயின்றதை பின்பற்றாவிடில் வேதங்களின் தூய்மையும்,பாஹ்லீகர்கள் என்ற இனத்து மக்களால் பூமியின் தூய்மையும், பொய்யுரைப்பதால் மனிதர்களின் தூய்மையும் களங்கப்பட்டுவிடுகிறது(பாஹ்லீகர்கள் என்ற இனம் நாகரீகமற்ற, பாவச்செயல்கள் புரியும்...இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் முற்காலத்தில் வாழ்ந்து வந்தனர்)

கற்புள்ள பெண் தேவையின்றிப் பல விஷயங்களில் ஆர்வம் காட்டினால் அவளது தூய்மை கெட்டுவிடும் அபாயமுள்ளது.பொதுவாகவே பெண்கள் கணவரைப் பிரிந்திருந்தால் மாசு அடையக் கூடும்.தங்கம் தரம் குறைந்தால் வெள்ளியின் மதிப்பிற்கு இறங்கிவிடும்.வெள்ளி தரம் குறைந்தால் தகரத்தின் விலைக்கு விற்கும்.ஈயம் தூய்மை கெட்டால் அதைவிட மோசமான பொருள் கிடையாது.

படுத்துக் கிடப்பவன் மூலம் தூக்கத்தை வெல்ல முடியாது.உடலின்பத்தை அனுபவிப்பதன் மூலம் பெண்களை வெல்ல முடியாது.எரிபொருள் மூலம் நெருப்பை அணைக்க  முடியாது.குடிப்பதன் மூலம் மதுப்பழக்கத்தை வெல்ல முடியாது.

நண்பர்களுக்கு அவ்வப்போது அன்பளிப்புகள் அளித்து அவர்களை வசப்படுத்துபவர்கள்,எதிரிகளைப் போரில் தோற்கடித்தவர்கள்,நல்ல உணவுகளும்,பானங்களும் கிடைக்குமாறு வசதியான வாழ்க்கையை மனைவிக்கு ஏற்படுத்தித் தந்தவர்கள் ஆகியோர் வாழ்வில் வெற்றி வீரர்களாக விளங்குவர்.

ஆயிரக்கணக்கில் வருமானம் உடையவரும் வாழ்கிறார்கள்.நூற்றுக்கணக்கான வருமானம் வருபவரும் வாழ்கிறார்கள்.எதுவுமே இல்லாதோரும் எப்படியோ உயிர் வாழ்கிறார்கள்.திருதராஷ்டிரரே! நாடும், அரசும் இருந்தால்தான் வாழலாம் என்ற நினைப்பையும், ஆசையையும் விட்டுவிடுங்கள்

உலகில் உணவு தானியங்கள், தங்கம், மிருகங்கள்,பெண்கள் நிறைந்து கிடந்தாலும், மனிதனின் ஆசை தனிவதில்லை.இதைப் புரிந்து கொண்டால், உலகில் எல்லாப் பொருட்களும் தமக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று முட்டாள்தனமாக நினைக்க மாட்டோம்

அரசே! உங்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்...உங்கள் புதல்வர்களையும், பாண்டுவின் புதல்வர்களையும் சமமாகக் கருதி எவ்வித வித்தியாசமும் இல்லாமல் இருவரையும் சமமாக நடத்துங்கள்.

இவ்வாறு விதுரர் கூறி முடித்தார்.



Saturday, January 16, 2016

45-நட்பைத் தேர்ந்தெடுத்தல்



புத்திசாலியான மனிதன் தனது அறிவினைக் கொண்டு ஆராய்ந்து அறிஞர்களுடன் நட்பு கொள்ள வேண்டும்.நல்லது-கெட்டது அறிந்து நண்பர்களை மதிப்பீடு செய்ய வேண்டும்.இதற்காக தனது காதுகளையும், கண்களையும் , விவேகத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

பணிவின் மூலம் அவமானத்தைத் தவிர்க்கலாம்.வலிமையின் மூலம் பெரிய துன்பத்தைப் போக்கிக் கொள்ளலாம்.பொறுமையின் மூலம் கோபத்தை வெல்லலாம்.நன்னடத்தையின் மூலம் எல்லா அம்சங்களையும் நீக்கலாம்

ஒரு மனிதனின் குலமரபின் உயர்வை அவன் பயன்படுத்தும் அல்லது வைத்துக் கொண்டிருக்கும் பொருட்கள், சொந்தமாகக் கொண்டுள்ள நிலம், வீடு,பொதுவான நடத்தை, உணவுப் பொருட்கள், உடைகள் ஆகியவற்றைக் கொண்டு மதிப்பிட வேண்டும்

உலகப் பற்றுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவனும், புலன் நுகர்ச்சிக்குரிய ஏதேனும் தன்னை வந்தடைந்தாலும், அதை மறுத்து அனுபவிக்காமல் இருந்துவிட மாட்டான்.பற்றற்றவன் நிலையே இப்படியெனில், ஆசைகளில் நிரம்பிவழியும் சாதாரண மனிதர்களைப் பற்றி என்ன சொல்வது?

நம்முடன் பழகுபவர்களில் நல்லறிவை பெற்றவர்களையும்,அறிவாளிகளைச் சார்ந்திருப்பவர்களையும், நல்ல நடத்தை, இனிய தோற்றம், சுமுகமாகப் பழகுதல், இன்சொல் கூறும் பண்பு ஆகிய சிறப்புகள் உடையவர்களையும் நாம் நண்பர்களாக வைத்துக் கொள்ள வேண்டும்

ஒருவன் தாழ்ந்த குலத்திலோ, உயர் குலத்திலோ பிறந்திருக்கலாம்.அவன் அறநெறிக்கு புறம்பானதைச் செய்யாதவனாகவும், நற்பண்புகளுக்கு மதிப்புக் கொடுப்பவனாகவும், மென்மையும்-கனிவும் உள்ளவனாகவும், தீயதைச் செய்யக் கூசுபவனாகவும் இருந்தாலவன் உயர்குலத்தைல் பிறந்த சிறப்புடைய நூறுபேர்களைவிட உயர்ந்தவனாகப் போற்றப்படுவான்

நெருங்கிப் பழகும் இருவர்,ஒரே மாதிரியான மனப்பான்மை, ரகசியங்களை ஒன்றாக பகிர்ந்து கொள்ளுதல்,ஒரே மாதிரியாக உலகவிஷயங்களைப் புரிந்து கொள்லுதல் ஆகிய ஒற்றுமையான தன்மைகளைக் கொண்டிருந்தால் ,அவ்விருவரிடையே நிலவும் நட்பு ஒருபோதும் தேயாது.

ஒருவன் கொடிய மனம் கொண்டவனாகவும், சரியான படிப்போ-பயிற்சியோ பெறாதவனாகவும் இருந்தால் அவனுடன் அறிவாளி நட்பு கொள்வதைத் தவிர்ப்பான்.தண்ணீரை.மறைத்துப் பாசி படிந்துள்ள கிணற்றைப் போல மனம் விட்டுப் பேசாமால் மூடி மறைத்துப் பேசுகின்றவனையும் நண்பனாக்கிக் கொள்வதை அறிஞர்கள் தவிர்ப்பர்.ஏனெனில் அப்படிப்பட்ட நட்பு நீடிக்காது

கர்வம் நிறைந்தவர்கள்,அறிவிலிகள், கோபாவேசப்படுபவர்கள், அவசரப்படுபவர்கள், பண்புகள் அமையப் பெறாதவர்கள் ஆகியோருடன் நட்புக் கொள்வதை புத்திசாலி தவிர்த்துவிட வேண்டும்

நன்றியுடையவர்கள்,பண்பாளர்கள்,உண்மையானவர்கள்,உயர்தரமானவர்கள், விசுவாசிகள்,சுயக்கட்டுப்பாடு கொண்டவர்கள், ஒழுக்கத்திலும்-நேர்மையிலும் உறுதியானவர்கள் ஆகியவர்களை நண்பர்கள் ஆக்கிக் கொள்வது விரும்பத்தக்கது.

புலன்களை அவை நாடும் இன்ப நுகர்ச்சிகளிலிருந்து பின் வாங்கச் செய்து கட்டுப்படுத்தினால் அவை சாவை வெல்வதற்கு சமமாகு.புலன் இன்பங்களில் அளவுக்கு மீறி ஆழ்ந்திருப்பது ஆபத்து.அவ்வாறு இன்பங்களில் மூழ்கி இருப்பவர்கள் தேவர்களாயினும் அழிவுறுவர்

பணிவு,எல்லா உள்ளங்களிடத்தும்.கனிவு, பொறாமையின்மை,பொறுமை, சகிப்துத் தன்மை,நண்பர்கலீடம் மரியாதையும் பழகுதல் ஆகியவை நம் ஆயுளை நீடிக்க வைக்கும் என அறிஞர்கள் கூற்கின்றனர்

(வள்ளுவன் _ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
             தான்சாம் துயரம் தரும்
திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவிற்குத் துயரத்தை உண்டாக்கிவிடும்

 நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
 வீடில்லை நட்பாள் பவர்க்கு

ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவிற்குக் கேடுகளை உண்டாக்கும்

Friday, January 15, 2016

44-அறிஞர்களின் சொல்படி நடக்க வேண்டும்



அறிஞர்களின் நன்மொழிகளை நடைமுறையில் கொண்டுவருவதால் விளையக்கூடிய நன்மைகள் பற்றி நன்கு சிந்தனை செய்தபின்னர் செயலில் இறங்கி உழைக்கத் தொடங்கும் மனிதன் குன்றாப் புகழைப் பெறுவான்

கெட்டிக்காரர்கலூம் அறிவைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.இதனால்...எதனை அறிந்து கொள்ள வேண்டுமோ..அதை அறிந்து கொள்ள முடியாமல் போகிறது.எது,ஏற்கனவே அறிந்து கொள்ளப்பட்டதோ அதை பின்பற்றவும் முடியாமல் போகிறது

ஒரு அறிஞன் பாவச்செயல் என்று கருதப்படும் செயல்களைப் புரியாதிருந்தாலவன் வளம் பெற்று வாழ்வான்,ஒருவன் அறிஞனாக இருந்தும் அறிவு கோணலாகப் போய், விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் முன்பு செய்த பாவக்காரியங்களைத் தொடர்ந்து செய்து வந்தால் அவன் நரகத்தில் அமுக்கப் படுவான்.அதிலிருந்து அவனால் தப்ப இயலாது.

ரகசிய ஆலோசனைகளும்..பின் சொல்லப்பட்டுள்ள வழிகளில் ஒன்றின் மூலம் வெளிப்பட்டுவிடக் கூடும் என்பதை அறிவுள்ளவன் கவனத்தில் கொள்ள வேண்டும்.வாழ்வில், வெற்றியும், செல்வமும் அடையவும், தன் பரம்பரை வளர்ந்து தொடரவும் விரும்புகிறவன் அந்த ஆறு அபாயங்களையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்

மதுவின் போதை,தூக்கத்தில் உளறுதல்,எதிரிகளை ஒற்றர்கள் கண்காணிப்பது பற்றி அறியாமை, மனதில் இருப்பது முகத்தில் பிரதிபலிப்பாகி விடுதல், கெட்டவர்களான அமைச்சர்களை நம்புதல்,தூதர்கள் திறமையற்றவராய் இருத்தல் என்று ஆறு வழிகளில் நமது ரகசியம் வெளிப்பட்டு விடும்

இந்த ஆறு வழிகளுக்கு வாய்ப்பளிக்காமல் அடைத்துவிட வேண்டும்.அவ்வாறு எச்சரிக்கையாக இருப்பதுடன், எவன் அறநெறியைக் கடைப்பிடித்தல், நேர்மையாக வாழ்க்கை வசதிகள் பெறுதல்,மிதமாக இன்பம் அனுபவித்தல் இந்த மூன்று விஷயங்களை பின்பற்றுகின்றானோ அவன் தன் எதிரிகளை வென்று அடக்கி ஆளமுடியும்.

ஒருவன் பிரஹஸ்பதியைப் போல அறிவாளியாய் இருக்கலாம்.ஆயினும்,அவன் புனித நூல்களையும், சாஸ்திரங்களையும் பயிலாதவனாகவும், வயதானவர்களுக்கு சேவை செய்யாதவனாகவும் இருந்தால் அவன் நற்பண்புகளை பெறுவதற்கும் வாழ்க்கை வசதிகளை அடைவதற்கும் உரிய வழியை அறியாதவனாக இருப்பான்

கடலில் விழுந்த பொருள்...போனது போனதுதான்.நாம் சொல்வதை ஒருவன் கேட்காவிடின்..நம் சொற்கள் எல்லாம் வீணாகி விட்டன எனலாம்.சுயக்கட்டுப்பாடு இல்லாத ஒருவன் வேதநூல் அறிவைப் பெற்றிருப்பினும் வீண்தான்.நெருப்பில்லாத வேள்விக் குண்டத்தில் பூஜைப் பொருட்களைப் போடுவதால் எந்த ஆன்மீக நன்மையும் ஏற்படாது.

Tuesday, January 12, 2016

43-தீயோரும்- உறவும்



விதுரரை நோக்கி திருதராஷ்டிரர், "விதுரரே! வாழ்க்கையில் வளம் பல பெற்று முன்னேறவும், அல்லது வறுமையிலிருந்து வீழவும் மனிதன் தனிப்பட்ட முறையில் பொறுப்பாளி இல்லை.அவன் கயிற்றால் கட்டப்பட்ட பொம்மலாட்ட பொம்மை.பிரம்மா, மனிதனைத் த்லைவிதிக்குக் கீழ்ப் படவேண்டியவனாக படைத்து விட்டார்.எனெனும் உமது உபதேசத்தை தொடர்ந்து சொல்லவும்" என்றார்.

விதுரர் கூறலானார், "தேவர்களுக்குக் குருவான பிரகஸ்பதி கூட சூழ்நிலை சரியாக இல்லையெனில் பேசக்கூடாது.காலத்துக்கு ஒவ்வாது அவர் பேசினால், அவரது அறிவிற்கு மதிப்பின்றிப் போய் விடும்.அவரது மரியாதைக் கெடும்.

மனிதர்கள் பலவிதம்.பரிசு கொடுத்துத்தான் சிலரது பிரியத்தைப் பெற முடியும்.இனிமையாகப் பேசி சிலரை கவரலாம். வேறு சிலரை, மந்திரம், தந்திரம், தாயத்து என வசப்படுத்தலாம்.ஆனால், இயல்பாகவே அன்பு மிக்கவன் மற்றவர்களின் மகிழ்ச்சி இன்றியே அவர்களிடம் பிரியம் காட்டுவான்.

ஒருவரை நாம் வெறுக்கும் போது அவரது பண்பையோ, புத்திக் கூர்மையையோ,அறிவின் ஆழத்தையோ நாம் உணர முடிவதில்லை.ஒருவரை நாம் நேசித்தால் அவரிடம் அனைத்தும் நல்லபடியாக இருப்பதாகத் தெரிகிறது.நாம் வெறுப்பவரிடம் எல்லாமே கோணலாய்த் தெரிகிறது...

அரசே! துரியோதனன் பிறந்ததுமே உங்களை எச்சரித்தேன்!இவன் மீது அளவிற்கு அதிகமாகப் பாசம் வைக்காதீர்கள்.அப்போதுதான் நூறு மகன்களும் நல்ல முறையில் வாழமுடியும் என சொன்னேன்.துரியோதனன் மீது கண்மூடித்தனமான பாசத்தை கைவிடாவிடின் நூறு மகன்களும் கொல்லப்படுவார்கள்'என்றும் கூறினேன்.

வாழ்க்கை முன்னேறுவது போல இருந்து, அது கடைசியில் வீழ்ச்சிக்கு வழி வகுக்குமாயின் அது முன்னேற்றமில்லை.இதற்கு மாறாக, சரிந்து கொண்டே போவது போலத் தோன்றி, அச்சரிவு முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லுமாயின் அது வீழ்ச்சியாகாது

ஒரு நஷ்டம் ஏற்பட்டு, அந்த நஷ்டம் கடைசியில் லாபம் தந்தால் அது ஒரு இழப்பல்ல.ஒரு குறிப்பிட்ட லாபத்தைப் பெறுவதால் கடைசியில் பெருத்த நஷ்டம் ஏற்படக் கூடிய ஆபத்து இருப்பின் அதை லாபமென்று எண்ணாமல் இழப்பாகவே கருத வேண்டும் (எந்த விஷயத்திலும் இறுதியில் முடிவு என்ன என மதிப்பீடு செய்ய வேண்டும்)

சிலரிடம் நற்பண்புகள் நிறைந்திருக்கும்.சிலரிடம் செல்வம் அதிகம் இருக்கும்.செல்வம் மட்டும் இருந்து நற்பண்புகள் இல்லாதவர்களுடன் நாம் பழகக்கூடாது.அத்தகையோரிடமிருந்து நாம் விலகி இருக்க வேண்டும்

உடன், திருதிராஷ்டிரர் குறுக்கிட்டு, "விதுரா! உன் அறிவுரை இப்போது கசந்தாலும் எதிர்காலத்தில் நன்மை தரக்கூடியவை என்பதில் சந்தேகமில்லை.நீ சொல்பவை சான்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை.நான் என் மகனை கைவிடுதல் இயலாது.ஆனாலும், எங்கு தர்மம் உள்ளதோ, அங்குதான் வெற்றியும் நிலைபெற்று விளங்கும்

விதுரர் கூறினார், "எவன் நற்பண்புகளை பெற்றுள்ளதுடன், பண்புடனும் உள்ளானோ, அவன் பிறர்க்கு மிகச் சிறிதளவு கொடுமை இழைக்கப் பட்டாலும் பொறுத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டான்.

பிறரைப் பழித்துக் கூறுவதிலேயே சிலர் ஆர்வமாய் இருப்பார்கள்.அத்தகையோர் பிறரது மனதைப் புண்படுத்தும் விஷயங்களைக் கண்டுபிடித்து, அவற்றைப் பரப்பி அவர்களை வேதனைக்குள்ளாக்குகின்றனர்.இதனால் சம்பந்தப்பட்டவர்களிடையே தகராறுகளையும் மூட்டி விடுகின்றனர்

இவ்வாறு கோள் மூட்டுபவர்களைக் கண்ணால் கூட பார்க்கக் கூடாது.அது அமங்களம்..அபசகுனம்.அவர்கலூடன் தொடர்பு வைத்துக் கொள்வதோ ஆபத்து.அவர்களிடமிருந்து பணம் பெறுவது பாபம்.அவர்களுக்குப் பணம் கொடுப்பதும் கெடுதல்.

மக்களிடையே கோள் முட்டி, தகராறும்-பிரிவினையும் ஏற்படச் செய்பவர்கள், வரம்பு மீறிய காமம் கொண்டவர்கள்,வெட்கம் கெட்டவர்கள்,போக்கிரிகள்,கொடியவர்கள் என இகழப்படுவார்கள்.இத்தாய்யோரிடம் நாம் பழகக்கூடாது

இவர்களுடன் மட்டுமல்ல...இவர்க்ளைப் போல மற்ற தீய குணங்கள் உடையவர்களும் நட்புடன் பழக தகுதியற்றவர்கள்.

தீயோரிடம் நட்பு கொள்ளக் கூடாது.ஏனெனில், அந்நட்பு முறிந்தால்,  தீயவர், தனது முன்னாள் நண்பர் செய்த உதவிகளையும்,அந்த நட்பின் இனிமையையும் மறந்து விடுவார்கள்.அத்துடன் நில்லாது, தீயவர் தனது முன்னாள் நண்பனைப் பற்றிக் கெடுதலானத் தகவல்களை பரப்பி விடுவர்.அந்த நண்பரை நாசமாக்கும் முயற்சியிலும் ஈடுபடுவர்

தீயவருக்கு ஒருவர் தெரிந்தோ-தெரியாமலோ குற்றம் இழைத்து விட்டாலும் தீயவர் பொறுத்துக் கொள்வதில்லை.பகைமையைக் கைவிடுவதில்லை,அறிஞனானவன் இதையெல்லாம் தெளிந்து உணர்ந்து இத்தகைய இழிவானவர்களுடனும், பழி கூறித் திரியும் குடு நோக்கர்களுடனும், மாசடைந்த உள்ளம் கொண்டவர்களுடனும் இயன்றவரை பழகாது விலகி இருக்க வேண்டும்

யார் தனது உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும்,ஆதரவற்றவர்களுக்கும்,துன்புறுவோர்க்கும் ஆறுதல் அளித்து உதவுகின்றனரோ...அவர் குழந்தைச் செல்வம்,கால்நடைச் செல்வம்,நிரந்திரப் புகழ் ஆகிய சிறப்புகளைப் பெற்று விளங்குவார்கள்

யார் தனக்கு மகிழ்ச்சியும், தன் குடும்பத்திற்கு வசதிகளும் என்றும் குறைவின்றிக் கிடைத்து வர வேண்டுமென விரும்புகிறாரோ அவர் தனது உறவுகளைப் பாதுகாத்து பராமரிக்க வேண்டும்

எனவே அரசே! எது உங்களுக்கு நன்மை தருமோ அதையே செய்யுங்கள்.நீங்கள், உறவினர்களுக்கு நன்மையைச் செய்தால், என்றும் புகழ் பெற்று விளங்குவீர்கள்

நம் உறவினர்கள் நற்பண்புகள் இல்லாதவர்கள் ஆயினும்...நாம் அவர்களைக் காக்க வேண்டும்.உங்கள் உறவினர்களோ பண்பாளர்கள்.உங்களது ஆதரவுக்கு ஏங்குபவர்கள்.அவர்களை எந்த அளவிற்கு பராமரிக்க வேண்டும் எனச் சொல்லத் தேவையில்லை

திருதராஷ்டிரரே! வீரர்களாகிய பாண்டவர்களுக்கு ஆதரவு கொடுங்கள்.அவர்களுக்கு சில குக்கிராமங்களையாவது கொடுங்கள்.அவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயிலிருந்து அவர்கள் வசதியாக வாழ்வார்கள்.அவர்களுக்கு இவ்வாறு உதவுவதன் மூலம் நீங்கள் இவ்வுலகில் புகழ் பெறுவீர்கள்.வயதாகிவிட்ட போதும் நீங்கள் உரிய நடவடிக்கை எடுத்து உங்கள் புதல்வர்களைக் கட்டுப்பாற்குள் கொண்டு வர வேண்டும்

நான் எப்போதும் உங்கள் நன்மையையே நாடுபவன் என்பதை உணருங்கள்.எது உங்களுக்கு நன்மை பயக்குமோ அதை எடுத்துச் சொல்ல நான் கடமைப்பட்டவனாகிறேன்.தனது நன்மைகளை விரும்பும் யாரும் உறவினர்களுடன் ஒருபோதும் தகராறு வைத்துக் கொள்ளக்கூடாது

நாம் வாழ்க்கையில் நம் மகிழ்ச்சியை எல்லாம் நம் உறவினர்களுடன் சேர்ந்து அனுபவிக்க வேண்டும்.சேர்ந்து உண்ணுதல்,ஒருவர் வீட்டிற்கு ஒருவர் வந்து போய்க்கோண்டிருத்தல், பரஸ்பர அன்பு ஆகியவை உறவினருடன் நிலைக்க வேண்டும்,

உறவினரிடையே விரோதம் கூடாது.உறவினர்களால்தான் நம்மை உலகில் நடத்திச் சென்று அக்கரையில் கொண்டு போய்ச் சேர்க்க முடியும்.அவர்களைப் பகைத்துக் கொண்டால் மூழ்கடித்தும் விட முடியும்.

நல்ல நடத்தையுள்ள உறவினர் நம்மை பாதுகாப்பார்கள்.ஆனால், கொடிய உறவினர்கள் நம்மை மூழ்க செய்து விடுவார்கள்.அரசே! நீங்கள் அனைவருக்கும் நன்மைகளை வாரி வழங்கக் கூடியவர்.பாண்டுவின் புதல்வர்களிடம் நல்ல முறையில், நியாயமான முறையில் நடந்து கொள்ளுங்கள்.பாண்டவர் சூழ நீங்கள் இருந்தால் உங்களை எந்தப் பகைவரும் ஏதும் செய்ய முடியாது

கையில் விஷம் தோய்ந்த அம்புகளுடன் வரும் வேடனை எதிர்த்து மான்களால் ஏதும் செய்ய இயலாது.அதைக் கொல்லும் பாவம் அவனைச் சேருகிறது.அதுபோலவே வேறு வழியின்றி உறவினர் ஒருவர் நம்மைக் காப்பாற்ற வேண்டி வந்தால்,அது குழ்ந்தையானாலும்...நாம் உதவாது போனால்...பாவமெல்லாம் நம் தலையில் ஏற்றப்படும்

பாரதப்போர் நடந்தால்..பாண்டவர்களோ..அல்லது கௌரவர்களோ ஒரு சாரார் இறப்பது நிச்சயம்.அதிக் கேட்கும் போது, நீங்கள்..முங்கூட்டியே போரைத் தடுக்காமல் போய்விட்டோமே என வருந்துவீர்கள்...எனவே, நன்கு சிந்தித்து இப்பவே ஒரு முடிவை எடுங்கள்

நாம் தீயச் செயலைச் செய்தால் அவமான உணர்ச்சி மேலிட தனியறையில் ஒதுங்கி மனம் புழுங்க நேரிடுகிறது.ஆகவே, அத்தகைய தீயச்செயல்களை நாம் செய்யாமல் இருந்து விட வேண்டும். ஏனெனில் நம் வாழ்க்கை எந்த சமயம் முடியும் என உறுதியாகக் கூற இயலாது

பார்கவர் எனப்படும் சுக்கிராச்சாரியாரைத் தவிர....ஒருபோதும் ஒழுக்கம் தவறாமலோ, நியாயம் தவறாமலோ நடந்துகொண்ட மனிதன் உலகில் யாரும் கிடையாது.எனினும் அறிவுடையார்...கடந்த காலத்தில் செய்த தவறுகளைப் பற்ரி எண்ணி வருந்திக் கொண்டிராமல் இனி எதிர்காலத்தில் சரியாக, நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என முடிவெடுப்பர்

ஏற்கனவே, பாண்டவர்களுக்குத் துரியோதனன் பல இன்னல்களை விளைவித்திருக்கிறான்.குலப்பெரியவரான நீங்கள் அதற்கெல்லாம் பிராயச்சித்தம் செய்து நியாயமாக நடந்து கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும்

பாண்டவர்களுக்கு அவர்களது உயர்ந்த தகுதிக்கேற்ற அரச பதவிகள் அளித்து கௌரவித்தால், நீங்கள் எல்லாவகையான பாவங்கள், களங்கங்களிருந்து விடுபடுவீர்கள்.அறிஞர்களும் நீங்கள் போற்றப்பட வேண்டியவர் என புகழ்வார்கள்  

Sunday, January 10, 2016

42-ரகசியம் காத்தல்



ஒரு அரசன் தான் எடுக்கும் முடிவுகளை வெளி நபர்களோ, தனக்கு வேண்டியவர்களோ தெரிந்து கொள்ள விடாமல் கவனமாக இருப்பதுடன், அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையைக் கடை பிடித்தால் அவரால் நீண்ட காலம் செழிப்பாக ஆட்சி செய்ய முடியும்

தர்மகாரியங்கள், இன்பங்களை நுகர்தல், பொருளீட்டும் முயற்சி ஆகியவற்றை அச்செயல்கள் நிறைவேற்றி முடிந்த பின்னே வெளியே சொல்வது ஏற்றது.நாம் பிறரிடம் மேற்கொள்ளும் அல்லது பிறரிடமிருந்து பெறும் ரகசிய ஆலோசனைகளையும் முன் கூட்டியே  வெளியிடக் கூடாது

முக்கியமான விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டுமாயின் அதற்கேற்ப தனியான இடத்தை நாடிச் செல்ல வேண்டும்.மலையுச்சி,தனி வீடு,காட்டுப்பகுதி போன்ற இடங்களுக்குச் சென்று சிந்திக்க வேண்டும்

நாம் மிகவும் முக்கியமானதாகக் கருதும் ரகசியங்களை நம் நண்பர்களைத் தவிர வேறு யாரிடமும் சொல்லக் கூடாது.அந்த நண்பர் மதிநுட்பம் அற்றவராக இருந்தால் அவரிடமும் கூறக்கூடாது.நமக்கு நண்பனாக இருந்து, சுயக்கட்டுப்பாடு இல்லாதவராயின் அவரிடமும் ரகசியத்தை வெளியிடக் கூடாது

ஆட்சி புரிபவர்,நன்கு பரிசோதனை  செய்த பின்னரே ,ஒருவரை தன் அமைச்சராக நியமித்துக் கொள்ள வேண்டும்.நாட்டின் நிதி நிலைமையைச் சீராக வைத்திருப்பதும், தக்க ஆலோசனைகள் கூறும் பொறுப்பும் அமைச்சரின் கடமைகளாகும்

ஒரு அரசன் மேற்கொள்ளும் அறச்செயல், செல்வம் பெருக்குதல் இன்பமாக வாழ்தல் என்னும் அறம்-பொருள்-இன்பம் பற்றிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகே ஆலோசகர்களுக்குத் தெரிய வேண்டும்.அப்படிப்பட்ட அரசனை யாரும் வீழ்த்த முடியாது.அவன் உயர் நிலையில் இருப்பான்

தன் முடிவுகளை ரகசியமாக வைத்திருக்கும் மன்னன் ,தான் விரும்பும் லட்சியங்களை நிச்சயமாக அடைந்துவிட முடியும்.ஆனால் அவன் அறிவில் தெளிவற்றவனாய் இருந்தால் தவறான முடிவுகளை எடுத்து விடுவான்.அவற்றால் கெடுதல் ஏற்படும்.இதனால் அம்மன்னன் அழிய நேரிடும்

பிறர் பாராட்டும் நற்செயல்களைச் செய்தால், அவை நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.அத்தகையச் செயலைச் செய்ய தவறிவிட்டால் பின்னால் நம் மனம் வருந்தி புழுங்கும் நிலை உண்டாகும்

வேத மந்திரங்களைக் கற்காத அந்தணர்,முன்னோர்களுக்கான திதிச் சடங்கின் போது புரோகிதராக வழிகாட்டி நடத்தி வைக்கும் தகுதியற்றவர் ஆகிறார்.அதுபோல் ஆறுவிதமான போர்த் தந்திரங்களை அறியாத அரசன்,அரசியல் ரகசியங்களை அறிந்து கொள்ள உரியவரல்லர்.(ஆறுவகை தந்திரங்கள்- சமாதானப் பேச்சு,போர்,படை வரிசை முன்னேற்றம்,முற்றுகையும்-முகாமிடலும்,எதிரிப்படையில் கலகமூட்டல்,பாதுகாப்பிற்காக அடைக்கலம் கூறல் ஆகியவை)


எந்த அரசன் தன் நாட்டின் தற்போதைய நிலையை, அதன் உயிர்சக்தி கூடுவதையும், குறைவதையும் கணக்காக கவனிக்கின்றானோ, மேற்சொன்ன ஆறுவகை தந்திரங்களையுமறிந்துள்ளவனாகவும்,பிறர் பாராட்டும்படித் தூய நடத்தையும் உடையவனாகவும் விளங்குகின்றானோ...அவன் தனது நாட்டை வெற்றிகரமாகத் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பான்.(நாட்டின் உயிர்சக்தி- சேனை, கருவூலம்,தலைநகரம், பரப்பு எல்லை)

யாருடைய கோபமும் மகிழ்ச்சியும் செல்லுபடியாகுமோ, யார் தான் மேற்சொல்லியுள்ள பணிகளைப் பற்றி தீவிரமாக சிந்திக்கின்றானோ, தன்னம்பிக்கையைப் பொக்கிஷம் போலப் பெற்றுள்ளானோ...அவனுக்கு உலகு எல்லா செல்வங்களையும் வழங்கும்

ஒவ்வொரு அரசனும் தான் பெற்றுள்ள பட்டத்துடன், தன் வெண்கொற்றக் கடையுடன் மன நிறைவு அடைய வேண்டும்.அரசன் என்ற முறையில் தன்னிடம் வந்து சேரும் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது.தன்னிடமுள்ள செல்வத்தைத்  தன் கீழ் பணிபுரிபவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்

ஒரு அந்தணர்தான் இன்னொரு அந்தணரைப் புரிந்து கொள்ள முடியும்.கணவன், தன் மனையைப் பற்றி நன்கு அறிந்தவன்.அரசனுக்குத் தான் அமைச்சரைப் பற்றி சரியாகத் தெரியும்.ஒரு அரசன் தான் இன்னொரு அரசனைப் பற்றி தெளிவாக அறிந்திருப்பான்

எதிரியிடம் சிக்கிக் கொண்டு மரணதண்டனைப் பெற்றவன் விடுதலை பெற முடியாது.எதிரியிடம் பணிவன்புடன் நடந்து கொண்டு.சேவை புரிய வேண்டும்.தனக்குப் போதுமான அளவு வலிமை சேரும் வரை பொறுத்திருந்த் பின்னரே எதிரியை அழிக்க வேண்டும்.அவ்வாறு தக்க நேரத்தில் எதிரியைக் கொல்லாவிட்டால் பெரிய அபாயம் விளையும்

நமக்குக் கோபம் ஏற்படும் போது யாரைக் கோபித்துக் கொள்கிறோம் என்று பார்க்க வேண்டும்.தெய்வம்,அரசன்,அந்தணர்,முதியவர்,குழந்தைகள், நோயாளிகள் ஆகியோரை நாம் கோபித்துக் கொள்ளக் கூடாது

அறிவுடைய மன்னன் காரணமற்ற தகராறுகளைச் செய்யக் கூடாது.முட்டாள்கள்தான் தகராறுகளில் மாட்டிக் கொள்வர்.தகராறில் சிக்காமல் எச்சரிக்கையாக வாழ்பவன் உலகில் புகழ் பெறுவான்.அவனுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது

எந்தப் பெண்ணும் ஆண்மையற்றவனைக் கணவனாக அடைய விரும்ப மாட்டாள்.அதுபோலவே, ஒரு குறிப்பிட்ட அரசனின் ஆதரவானாலும் பயனில்லை.அவன் கோபித்தாலும் பயமில்லை.என்றால் அந்த அரசனைத் தலைவனாகப் பெறுவதை மக்கள் விரும்ப மாட்டார்கள்.

ஒருவன் அறிவாளியாய் இருந்தால் மட்டுமே அவனிடம் செல்வம் சேர்ந்துவிடும் எனச் சொல்ல முடியாது.உழைக்காமல் சோம்பேறியாய் இருந்தால் வறுமை ஏற்பட்டுவிடும் என்பதும் நிச்சயமில்லை.ஆனால், அறிவாளி காலம் சாதகமாக மாறும் என அறிந்திருக்கின்றான்.சோம்பேறி அதை அறிவதில்லை.அறிவாளி வாழ்க்கையை அறிந்துள்ளான்

அறிவில்லாதவன், தன்னைவிட அதிகம் படித்தவர்கள், மேலான நடத்தையுடையவர்கள்,வயதில் மூத்தவர்கள்,அறிவில் சிறந்தவர்கள்,அதிகச் செல்வந்தர்கள்,உயர் குலத்தில் பிறந்தவர்கள் ஆகியோரைச் சரிவர மதித்து மரியாதையாக நடத்த மாட்டான்.

எவனது நடத்தை சீராக இல்லையோ, அன்பு குறைவாக உள்ளதோ,.மனம் பொறாமையில் நிரம்பியுள்ளதோ, எண்ணங்கள் அநியாயமான வழியில் செல்கின்றதோ, எவன் கடுஞ்சொற்கள் பேசுபவனாகவும்,கடும் கோபக்காரனாகவும் உள்ளானோ அவன் விரைவில் துன்பத்திற்கு ஆளாவான்

பிறரை மோசடி செய்யாமலிருத்தல், தான தருமம் புரிதல்,வாக்குத் தவறாமை,பொருத்தமாகவும்-நன்மை தரும் வகையிலும் பேசுதல் ஆகிய பண்புகளால் நாம் அனைவரையும் கவர்ந்துவிட முடியும்

எவனொருவன் பிறரை ஏமாற்றாதவனாகவும்,உழைப்பாளியாகவும்,நன்றியுள்ளவனாகவும், கூர்மையான அறிவுடையவனாகவும், நேர்மையாளனாகவும் வாழ்கிறானோ அவன் செல்வவசதி இல்லாதவனாயினும் அவனைப் பின் தொடர்ந்து ஒரு பெரிய பட்டாளமே அவனுக்கு உதவ முன்வரும்

எரிபொருளாகிய விறகு முதலியவை, நெருப்பைத் தூண்டுவது போல துன்பங்களில் தளராமை,மனக்கட்டுப்பாடு, புலன்களைக் கட்டுப்படுத்துதல், தூய்மை,கருணை,இன்சொல் உரைத்தல்,நண்பர்களுக்குத் துரோகம் செய்யாமல் இருத்தல் ஆகிய ஏழு பண்புகளும் வாழ்வில் வளத்தையும்,வசதிகளையும் பன்மடங்காகத் தூண்டிவிடும்.
எந்த அரசன் தன்னிடம் வந்து சேரும் செல்வத்தையும்,வசதிகளையும் பிறருடன் பகிர்ந்து கொள்ளாமல் தான் மட்டும் அனுபவிப்பராகவும், தீய மனம் கொண்டவராயும்,,நன்றி கெட்டவராயும்,தீயவை செய்யக் கூசாதவராகவும் உள்ளாரோ அவரைத் தவிர்த்து விட வேண்டும்.
ஒரு வீட்டில் பாம்பு ஒளிந்திருந்தால், அந்த வீட்டுக்காரனால் அச்சமின்றி தூங்க முடியாது.அதுபோல தன்னைச் சுற்றியுள்ள அப்பாவியான ஒரு மனிதனுக்குத் தொந்தரவு கொடுக்கும் தீய மனிதனும் நிம்மதியாக உறங்க முடியாது

தீய எண்ணத்தாலோ, கோபத்தாலோ தூண்டப்பட்டு நம்மிடமுள்ள செல்வத்தையும், மற்ற வசதிப் பொருட்களையும் நாசமாக்கக் கூடிய அளவிற்கு அக்கிரம் செய்யும் வலிமை கொண்டவர்க்கு எதையாவதுக் கொடுத்துத் திருப்திப்படுத்தி அனுப்பி விடுவதுதான் நமக்கு பாதுகாப்பானது(தீயவர்களை இயன்றவரை தவிர்ப்பதே புத்திசாலித்தனம்)

முக்கியமான பணிகளைப் பெண்களிடம் ஒப்படைக்கக் கூடாது.வழக்கமாகத் தவறு செய்பவர்கள் , சமுக மதிப்பு அல்லது சாதியிலிருந்து தாழ்ந்து வீழ்ந்தவர்கள்,நேர்மையும் ஒழுக்கமும் இல்லாதவர்கள் ஆகியோரிடம் முக்கியமானப் பணிகளை ஒப்படைக்கக் கூடாது.அவர்களிடம் பொறுப்புள்ள பணிகளைக் கொடுத்தாலவை நிறைவேறுவது சந்தேகமே!(விதுரர் காலத்தில் பெண்களால் கூடுதலான பொறுப்புகளை சுமப்பது கடினம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்)

கல்லால் படகு செய்து அதைத் தண்ணீரில் விட்டு நாம் அமர்ந்தால் அதனுடன் சேர்ந்து மூழ்க நேரும்.அதுபோன்றே நாம், பெண்கள், மோசடிக்காரர்கள் அல்லது குழந்தைகளின் ஆலோசனைப்படிச் செயல்பட்டால் தோல்வியடைந்து அழிந்து போவோம்(பெண்களுக்கு உலக அனுபவம் போதாது)

வாழ்க்கையில் அடைய விரும்பும் லட்சியங்களின் இறுதிப்பயனில் கவனம் செலுத்துவதே அறிவுள்ளவன் கடமையாகும்.அந்த லட்சியங்களை அடைவதற்கான முயற்சியின் இடையில் காணப்படும் சிறு விஷயங்களிலும், விசித்திரங்களிலும் அறிவாளியின் கவனம் சிதறக்கூடாது.ஏனெனில் நடுவில் வரும் விஷயங்கள் தற்செயலானவை.மேலும் இரண்டாம் பட்சமானவை

ஒருவன் போக்கிரிகளாலும், முகஸ்துதி செய்து பிழைக்கும் கவிஞர்கள் அல்லது பாடகர்களாலும், விலை மாதர்களாலும் மட்டுமே புகழப்படுவானாயின் அவன் உயிர் வாழ்வதைவிட சாவதே மேல்

அரசே! பாண்டவர்கள் அற்புதமான வில் வித்தை வீரர்கள்,அளவற்ற ஆற்றல் கொண்டவர்கள்.அவர்களை நீங்கள் கைவிட்டீர்கள்.இந்தப் பேரரசை ஆளும் பொறுப்பைத் துரியோதனனிடம் ஒப்படைத்துத் தவறு செய்து விட்டீர்கள்

மகாபலி யைப் போல துரியோதனன், செல்வமும், செல்வாக்கும் உள்ள காரணத்தால் திமிர் பிடித்து அலைகிறான்.மூவுலகையும் ஆண்ட மகாபலி அவற்றை இழந்தது போல துரியோதனனும் விரைவில் இப்பேரரசை ஆளுகின்ற உன்னத நிலையிலிருந்து உருண்டு விழத்தான் போகிறான்.இதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்" என்று விதுரர் கூறி முடித்தார்.