Tuesday, January 26, 2016

13)அடக்கம் உடைமை

1.அடக்கம் அழியாப்புகழையும்,அடங்காமை வாழ்வில் இருளையும் உண்டாக்கும்.

2.மிக்க உறுதியுடன் காக்கப்படும் அடக்கம், ஆக்கத்தையே தரும்.

3.தெரிந்து கொள்ளவேண்டியதை அறிந்து அடக்கத்துடன் நடப்பவர் பண்பு உலகு பாராட்டும்.

4.உறுதியான உள்ளம், அடக்க உணர்வு கொண்டவர் உயர்வு மலையைப்போல் ஆகும்.

5.பணிவு நலம் பயக்கும்...அதுவே செல்வமாகும்.

6.தன் ஓட்டுக்குள் உடலையே அடக்கும் ஆமைப்போல் ஐம்பொறிகளையும் அடக்க வேண்டும்.

7.யாரானாலும்..தன் நாக்கை கட்டுப்படுத்த வேண்டும்.இல்லையேல் துன்பமே வரும்.

8.பேசும் நல்ல வார்த்தைகளில்,சில தீய சொல் இருந்தாலும்..குடம் பாலில் கலந்த நஞ்சு போல் ஆகிவிடும்.

9.நெருப்பினால் பட்ட காயம் கூட ஒரு நாள் ஆறிவிடும்..ஆனால் நாவினால் கொட்டப்பட்ட சொற்களால் ஏற்படும்
துன்பம் ஆறவே ஆறாது.

10.நன்கு கற்று,கோபம் தவிர்த்து அடக்கம் கொண்டவரை அடைய அறவழி காத்திருக்கும்.

14)ஒழுக்கம் உடைமை

1.ஒழுக்கம் உயர்வைத் தருவதால், அது உயிரை விட மேலானதாகும்.

2.எப்படி ஆராய்ந்தாலும்,வாழ்வில் ஒழுக்கமே சிறந்த துணை..ஆதலால் எப்பாடுபட்டாவது அதை காக்கவேண்டும்.

3.உயர்ந்த குடிபிறப்பு ஒழுக்கத்தையே அடிப்படையாகக் கொண்டது.ஒழுக்கம் தவறியவர் இழிந்த குடிபிறப்பாவர்.

4.உயர் குடியில் பிறந்தவன் படித்ததை மறந்தால்..மீண்டும் படிக்கலாம்.ஆனால் ஒழுக்கம் தவறினால் அவன்
இழிமகனே ஆவான்

5.பொறாமைக்காரனும்,தீய ஒழுக்கமும் உள்ளவன் வாழ்வு உயர்வான வாழ்வாகாது.

6.மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறினால் உண்டாகும் இழிவுப்பற்றி தெரிந்திருப்பதால்..நல்லொழுக்கத்துடன் நடப்பார்கள்.

7.நன்னடத்தை உயர்வு தரும்.அல்லதோர் மீது இழிவான பழி சேரும்.

8.நல்லொழுக்கம் நன்மைக்கு வித்து.தீயொழுக்கமோ தீராத துன்பம்.

9.தவறி கூட தகாத வார்த்தைகளை ஒழுக்கமுடையோர் கூறக்கூடாது.

10.ஒழுக்கம் என்ற பண்போடு வாழத்தெரியாதவர்..எவ்வளவு படித்தும்..அறிவில்லாதவர்களே ஆவர்.

15)பிறனில் விழையாமை

1.அறநூல்,பொருள் நூல்களை உணர்ந்தவர்கள் பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்ளமாட்டார்கள்.

2.பிறன் மனைவியை அடைய நினைப்பவர்கள் மிகவும் கீழானவர்களாவர்.

3.பிறர் மனைவியிடம் தகாதமுறையில் நடப்பவன்..உயிர் இருந்தும் பிணத்துக்கு ஒப்பாவான்.

4.தப்பு செய்யும் எண்ணத்துடன் பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது எப்பேர்ப்பட்டவனையும்
மதிப்பிழக்கச் செய்துவிடும்.

5.பிறன் மனைவியை எளிதாக அடையலாம் என முறைகேடான செயலில் ஈடுபடுபவன் அழியா பழியை அடைவான்.

6.பிறன் மனைவியை விரும்புவனிடமிருிந்து பகை,தீமை,அச்சம்,பழி இந்நான்கும் நீங்காது.

7.பிறன் மனைவியிடம் இன்பத்தை நாடி செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை
மேற்கொண்டவனாவான்.

8.காம எண்ணத்துடன்... பிறன் மனைவியை அணுகாதவனின் குணம் அவனை ஒழுக்கத்தின் சிகரமாக
ஆக்கும்.

9.பிறன் மனைவியைத் தீண்டாதவனே உலகின் பெருமைகளை அடைய தகுதியானவன்.

10.பிறன் மனைவியை விரும்புவது... அறவழியில் நடக்காதவர் செயலை விடத் தீமையானதாகும்.

16)பொறையுடைமை

1.கூட இருந்தே குழிப்பறிப்போரையும்...இந்த பூமி தாங்குவது போல...நம்மை இகழ்பவர்களை
பொறுத்துக்கொள்ளவேண்டும்.

2.ஒருவர் செய்த தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக்காட்டிலும் ....அத்தீங்கை மறந்துவிடுவதே சிறந்த பண்பு.

3.வறுமையில் பெரும் வறுமை விருந்தை வரவேற்க முடியாதது.அதுபோல ...பெரும்வலிமை
அறிவிலிகளை பொறுத்துக்கொள்வது.

4.பொறுமையாய் இருப்பவரை நிறைவான மனிதர் என போற்றுவர்.

5.தமக்கு இழைக்கப்படும் தீமையை பொறுத்துக்கொள்பவரை உலகம் பொன்னாக மதித்து போற்றும்.

6.தமக்கு கேடு செய்பவரை தண்டித்தல் ஒரு நாள் இன்பம்.
அவரை மன்னித்தல் வாழ்நாள் முழுவதும் இன்பம்.

7.பிறர் செய்யும் இழிவுக்கு பதிலாக இழிவே செய்யாது பழி வாங்காதிருத்தலே நற்பண்பாகும்.

8.அநீதி விளைவிப்பவர்களை ...பொறுமை என்னும் குணத்தால் வென்றிடலாம்.

9.கொடுமையான சொற்கள் நம்மீது வீசப்பட்டாலும் ....அதை பொறுப்பவனே தூய்மையானவனாவான்.

10.இறைவனுக்கு உண்ணா நோன்பு இருப்பவரை விட...ஒருத்தர் கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுப்பவர்
முதன்மையானவர் ஆவார்.

17)அழுக்காறாமை

1.ஒழுக்கத்துக்குரிய நெறி மனத்தில் பொறாமையின்றி வாழ்வதே.

2.ஒருவர் பெரும் மேலான பேறு யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பே ஆகும்.

3.அறநெறி.ஆக்கம் .ஆகியவற்றை விரும்பாதவன் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.

4.தீயவழியில் சென்றால் துன்பம் ஏற்படும் என்பதை உணர்ந்தால் பொறாமை காரணமாக
தீயச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

5.பொறாமைக்குணம் கொண்டவர்களை வீழ்த்த வேறு பகை தேவை இல்லை.... அந்த குணமே போதும்.

6.ஒருவர்க்கு செய்யும் உதவியைக்கண்டு பொறாமை அடைந்தால் அந்த குணம் ..அவனையும்..
அவனை சார்ந்தோரையும் அழிக்கும்.

7.பொறாமைக் குணம் கொண்டவனை விட்டு லட்சுமி விலகுவாள்.

8.பொறாமை என்னும் தீ ஒருவனுடைய செல்வத்தை அழித்து அவனை தீய வழியில் விட்டுவிடும்.

9.பொறாமைக்குணம் கொண்டவனின் வாழ்வு வளமாகவும்...அல்லாதவன் வாழ்வு வேதனையாகவும்
இருந்தால் அது வியப்பான செய்தியாகும்.

10.பொறாமையால் உயர்ந்தோரும் இல்லை...அல்லாத காரணத்தால் புகழ் இகழ்ந்தாரும் இல்லை

18)வெஃகாமை

1.பிறரின் பொருளைக் கவர்ந்துக்கொள்ள விரும்புபவரின் குடியும் கெட்டொழிந்து..பழியும் வந்து சேரும்.

2.நடுவுநிலை தவறுவது வெட்கப்படும் செயல் என்பவர்..பயனுக்காக பழிக்கப்படும் செயலை செய்யார் .

3.அறவழி பயனை உணர்வோர்..உடனடிப் பயன் கிடைக்கும் என்பதற்காக அறவழி தவறார்.

4.புலனடக்கம் கற்றோர்..வறுமையில் வாடினாலும் பிறர் பொருளை விரும்பார்.

5.அறவழிக்கு புறம்பாக நடப்பவரிடம் நுண்ணறிவு இருந்தும் பயனில்லை.

6.அறவழி நடப்பவன் பிறர் பொருளை விரும்பி தவறான செயலில் ஈடுபட்டால் கெட்டழிவான்.

7.பிறன் பொருளால் வளம் பெற விழைபவனுக்கு அதனால் உண்டாகும் பயனால் நன்மை இருக்காது.

8.நம்மிடம் உள்ள செல்வச்செழிப்பு குன்றாமல் இருக்க வேண்டின்,பிறன் பொருள் மீதான ஆசை தவிர்க்க வேண்டும்.

9.பிறன் பொருளைக் கவரா மக்களின் ஆற்றலுக்கேற்ப செல்வம் சேரும்.

10.பிறன் பொருளை கவர்பவன் வாழ்வு அழியும்.அல்லாதான் வாழ்வு வெற்றி அடையும்.

19புறங்கூறாமை

1.மற்றவர்களைப் பற்றி புறம் பேசுதல் அறவழியில் நடக்காதிருத்தலை விடத் தீமையானது.

2.நேரில் பொய்யாக சிரித்து..மறைவில் அவர் பற்றி தீது உரைப்பது கொடுமையானது.

3.ஒருவரை பார்க்கும்போது ஒன்றும் ....பார்க்காதபோது ஒன்றுமாக பேசுபவர் உயிர் வாழ்வதைவிட சாவது நன்று.

4.நேருக்கு நேர் ஒருவரது குறைகளை சாடுவது புறங்கூறுவதை விட நல்லது.

5.பிறரைப்பற்றி புறம் பேசுபவன் அறவழியில் நடக்காதவனாவான்.

6.பிறர் மீது புறம் கூறினால் ...அதுவே கூறுபவனை திரும்பி தாக்கும்.

7.இனிமையாக பேசத்தெரியாதவர்கள்தான் நட்பை கெடுத்து புறங்கூறுவார்கள்.

8.நெருங்கியவர்களை பற்றியே புறம் பேசுபவர்கள் மற்றவர்களைப்பற்றி எவ்வளவு கூறுவார்கள்.

9.ஒருவன் இல்லாதபோது அவனைப்பற்றி பழிச்சொல் கூறுபவனையும் தருமமாக நினைத்தே
பூமி காக்கிறது

10.பிறர் குற்றம் பற்றி எண்ணுபவர்கள் தன்னிடமுள்ள குற்றத்தையும் நினைத்தல் நல்லது.

20)பயனில சொல்லாமை

1.பலர் வெறுக்கும் பயனற்ற சொற்களை பேசக்கூடாது.

2.பலர்முன் பயனற்றவற்றை பேசுவது தீமையுடையதாகும்.

3.பயனற்றவற்றைப்பற்றி பேசுபவனை பயனற்றவன் என்று சொல்லலாம்.

4.பயனற்ற,பண்பற்ற சொற்கள் மகிழ்ச்சியை குலைக்கும்,தீமையை ஏற்படுத்தும்.

5.பண்புடையர் பயனில்லா சொற்களை கூறுவாரானில் அவரது மதிப்பு நீங்கிவிடும்.

6.பயனற்றவற்றைப் பேசி..பயன் கிடைக்கும் என எண்ணுபவன் மனிதப்பதர் ஆவான்.

7.பண்பாளர்கள் இனிய சொற்களைக் கூறாவிட்டாலும் பயனில்லா சொற்களை சொல்லக்கூடாது.

8.பலன்களை ஆராயும் ஆற்றல் படைத்தவர்...பயன் விளைவிக்காத சொற்களை கூறமாட்டார்.

9.மாசற்ற அறிவு கொண்டவர்கள்.. மறந்தும் பயனில்லா வார்த்தைகளை பேசமாட்டார்கள்.

10.பயனற்ற சொற்களை விடுத்து மனதில் பதியும் பயனுள்ள சொற்களையே பேச வேண்டும்.

21)தீவினையச்சம்

1.தீயசெயல்களை செய்ய தீயோர் அஞ்சமாட்டார்கள்...ஆனால் சான்றோர் அஞ்சுவர்.

2.தீய செயல்கள் தீயைவிடக் கொடுமையானதால் அதை செய்திட அஞ்சவேண்டும்.

3.நமக்கு தீமை செய்தவர்க்கு தீமையை திருப்பிச் செய்யாதிருத்தலே அறிவுடமை ஆகும்.

4.மறந்தும் கூட பிறருக்கு கேடு நினைக்கக்கூடாது.அப்படி நினைத்தால்..நினைப்பவனுக்கே கேடு உண்டாகும்.

5.வறுமையின் காரணாமாகக்கூட தீய செயல்கள் செய்யக்கூடாது.அப்படிச்செய்தால்
வறுமை அவனை விட்டு அகலவே அகலாது.

6.தீய செயல்கள் நம்மை தாக்கக்கூடாது என எண்ணுபவன் பிறர்க்கும் தீங்கு செய்யக்கூடாது.

7.நேர்மையான பகையை விட ஒருவன் செய்யும் தீயவினைகள் பெரும் பகையாகும்.

8.நிழல் நம்மைவிட்டு அகலாது இருப்பது போல செய்யும் தீமையும் கடைசிவரை நம்மை விட்டு அகலாது.

9.தனது நலம் விரும்புபவன் தீய செயல்கள் பக்கம் நெருங்கமாட்டான்.

10.பிறர்க்கு தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்த கெடுதியும் ஏற்படாது.,

22)ஒப்புறவறிதல்

1.பதிலுதவி எதிர்ப்பார்த்து நாம் உதவி செய்யக்கூடாது..நமக்காக பெய்யும் மழை எந்த உதவியை திரும்ப
எதிர்ப்பார்க்கிறது?

2.பிறர் நலனுக்கு உதவும் பொருட்டே நம்மிடம் உள்ள பொருள் பயன்பட வேண்டும்.

3.பிறர்க்கு உதவிடும் பண்பைத்தவிர சிறந்த பண்பு வேறு எதுவும் இல்லை.

4.பிறர்க்கு உதவி செய்ய தன் வாழ்வில் நினைப்பவனே உண்மையில் உயிருள்ளவனாக கருதப்படுவான்.

5.பொது நோக்குடன் வாழ்பவனின் செல்வம்..மக்களுக்கு பயன் தரும் நீர் நிறைந்த ஊருணி ஆகும்.

6.பிறர்க்கு உதவும் எண்ணம் உள்ளவனிடம் செரும் செல்வம் பழுத்த மரம் போன்றது.

7.பிறர்க்கு உதவுபவனின் செல்வம்..ஒரு நல்ல மரத்தின் எல்லா பாகமும் பயன்படுவது போன்றது ஆகும்.

8.நம்மை வறுமை வாட்டினாலும்..முடிந்த அளவு உதவுதலே சிறந்த பண்புடையாளனுக்கு அடையாளம்.

9.பிறர்க்கு உதவுபவன் ..வறுமையடைந்து விட்டான் என்று உணர்த்துவது அவன் பிறர்க்கு உதவிட முடியாத நேரமே ஆகும்.

10.பிறர்க்கு உதவும் செயல் கேடு விளைவிக்குமாயின்..அக்கேட்டை தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ள வேண்டும்.

23)ஈகை

1.எந்த ஆதாயமுமின்றி இல்லாதவருக்கு வழங்குவதே ஈகைப்பண்பாகும்.

2.பிறரிடம் கை யேந்துவது சிறுமை..ஆயினும்..கொடுப்பவர்க்கு கொடுத்து வாழ்வதே பெருமை.

3.தன் வறுமையைக் காட்டிக்கொள்ளாமல்..பிறர்க்கு கொடுப்பது உயர் குடியினர் பண்பாகும்.

4.கொடுப்பவர்..அதனால் பயனடைபவரின் புன்னகை முகத்தைக் கண்டு மகிழ்ந்தாலும்..பெறுபவர் நிலை கண்டு
வருந்துவர்.
5.உண்ணா நோன்பை விட ..பசிப்பவர்க்கு உணவு அளித்ததால் உண்டாகும் பலன் அதிகம்.

6.பட்டினியால் வாடும் ஒருவரின் பசியை தீர்ப்பது மிகவும் புண்ணியமான செயல் ஆகும்.

7.பகிர்ந்து உண்போரை பசி என்றும் அணுகாது.

8.யாவருக்கும் எதுவும் அளிக்காத ஈவு இரக்கமற்றோர், ஒருவருக்கு உதவி..அதனால் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியை அறியார்.

9.பிறர்க்கு கொடுப்பதால் செல்வம் குறையுமெனக் கூறி தான் மட்டும் உண்ணுவது பிச்சை எடுப்பதற்கு சமம்.

10.சாவு என்னும் துன்பத்தை விட, வறியவர்க்கு ஏதும் கொடுக்க முடியா துன்பம் பெரியது

24)புகழ்

1.பிறர்க்கு ஈதலும்,புகழுமே வாழ்வில் ஆக்கம் தரும்

2.இல்லாதவர்க்கு வழங்குபவரின் புகழே போற்றப்படும் புகழாகும்.

3.ஒப்பற்றதும்,அழிவில்லாததும் இந்த உலகில் புகழ் ஒன்றே ஆகும்.

4.தன்னலமின்றி புகழ் ஈட்டிய மக்களை ஏழேழு உலகும் பாராட்டும்.

5.துன்பம்,சாவு.. இவற்றிலும் கூட புகழ் பெறுவார் ஆற்றலுடையவர்.

6.எத்துறையில் ஈடுபட்டாலும் புகழோடு விளங்க வேண்டும்.அல்லாதார் அத்துறையில் ஈடுபடவே கூடாது.

7.புகழுடன் வாழ முடியாதார் ..தம் செயல்களை இகழ்பவரை நொந்துக்கொள்ளாமல் தன்னைத்தானே நொந்துக்கொள்ள வேண்டும்.

8.தமக்குப்பிறகு எஞ்சி நிற்கக்கூடிய புகழை பெறாதார், வாழ்ந்தும் பயன் இல்லை.

9.மனித உடலில் உயிர் எனப்படுவது புகழ் ஆகும்.அது இல்லாதார் இந்த பூமியில் தரிசு நிலமே ஆவர்.

10.பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை.அதுபோல புகழுடன் வாழ்வதே வாழ்க்கை.

Friday, January 22, 2016

50-இனி வள்ளுவ நீதி

--------------------------------------------------------------------

வள்ளுவ நீதி
-------------------------------------------------------------------------------

கடவுள் வாழ்த்து-

1. 'அ' என்ற உயிர்எழுத்து எழுத்துக்களுக்கு முதல் அதுபோலஆதி பகவன் உலக உயிர்களுக்கு முதல்.
(திருவள்ளுவரின் தாய்,தந்தை ஆதி பகவன் என்பதால் உலக உயிர்களுக்கு தாய்,தந்தை முதல் என்றும்
சொல்லலாம்)

2. இறைவனை வணங்கும் பண்பில்லாதவன் படித்திருந்தும் பயனில்லை

. 3. மலரை ஒத்த இறைவனை மனதில் ஆராதிப்பவன் பெயர் உலகில் நீடித்து இருக்கும்

4.விருப்பு வெறுப்பு இல்லா இறைவனை வேண்டுவோர்க்கு எந்த துன்பமும் வராது.

5. இறைவனை புரிந்து கொண்டால் நன்மை,தீமைகள் எல்லாம் ஒன்றே போல் தெரியும்.

6.ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தியவனின் ஒழுக்க நெறியை பின்பற்றவேண்டும்.

7.இறைவனை வேண்டினால் மனக்கவலைகள் மறையும்.

8.இறைவனை வேண்டினால் துன்பங்களை எளிதில் வெல்லலாம்.

9.இறைவனை வேண்டாதவனுக்கு ஐம்புலன்கள் இருந்தும் பயனில்லை.

10.இறைவனை வேண்டினால் நற்பிறவி அடைய முடியும்


2)வான் சிறப்பு
-----------------------

1.மழை தான் உலகத்தை வாழ வைக்கும் அமிர்தம்.

2.உணவுப்பொருட்கள் விளைய மழை தேவை...தவிர...மழையே அருந்தும் உணவாகும் உள்ளது.

3.எங்கும் கடல் நீர் சூழ்ந்திருந்தாலும் மழை இல்லை எனில் பசி வாட்டி வதைக்கும்.

4.மழை இல்லையேல் உழவுத்தொழிலும் இல்லை.

5.மழை பெய்யாமல் வாழ்வையும் கெடுக்கும்...பெய்து வாழ்வின் வளத்தையும் சேர்க்கும்.

6.மழை இல்லையேல் மண்ணில் புல்லைக்கூட பார்க்கமுடியாது.

7.கடல்நீர் மேகமாக மீண்டும் கடலில் பெய்வதால் கடல் வற்றுவதில்லை.அதுபோல மனிதனும் சமுதாயத்துக்கு
பயன்பட்டால்தான் சமுதாயம் வாழும்.

8.மழை பொய்த்துவிட்டால்  இறைவனுக்கு விழாக்களும் கிடையாது...வழிபாடும் இருக்காது.

9.மழை பெய்யாவிடின்..செய்யும் தானம்....மேற்கொள்ளும் நோன்பு ஆகியவை இருக்காது.

10.உலகில் மழை இல்லை எனில் ஒழுக்கமே கேள்விக்குறியாகும்...

(மழையின் முக்கியத்தை இதைவிட அருமையாக யாரால் சொல்லமுடியும்.)


3)நீத்தார் பெருமை
---------------------------------

1.ஒழுக்கமுள்ள துறவிகளின் புகழ் அழியாப் புகழாய் திகழும்.

2.பற்றுகளைத் துறந்தவர்களின் பெருமையை அளவிட முடியாது.

3.நன்மை எது, தீமை எது என உணர்ந்து நன்மைகளை செய்பவர்கள் உலகில் பெருமையானவர்கள்.

4.துறவி என்பவன் உறுதியுடன் ஐம்புலன்களையும் அடக்கிக்காப்பவன்.

5.புலன்களை அடக்கியவர்கள் புகழ் எப்படிப்பட்டது என்பது புலன்களை அடக்காத இந்திரனின் செயலால்
தெரியவருகிறது.

6.பெருமை தரும் செயல்களை செய்பவர்கள் பெரியோராகவும், மற்றவர்கள் சிறியோராகவும் கருதப்படுவர்.

7.ஐம்புலன்களை அடக்கும் திறன் கொண்டவனை உலகம் புகழும்.

8.அறவழி நூல்கள் சான்றோரின் பெருமையை உலகிற்கு காட்டும்.

9. நல்ல குணம் படைத்தவர்கள் கோபம் கொண்டால்...அந்த கோபம் வந்த வேகத்திலேயே மறைந்துவிடும்.

10.உயிர்களிடத்தில் அன்பு கொண்ட அனைவருமே அந்தணர்கள் ஆவார்கள்.


4)அறன் வலியுறுத்தல்
------------------------------------


1. அறவழி மட்டுமே சிறப்பையும் செல்வத்தையும் தரும்.

2. தீமைகளில் பெரிய தீமை அறவழியை மறப்பதுதான்.

3. செய்யக்கூடிய செயல்கள் அனைத்தும் அறவழியிலேயே செய்யப்படவேண்டும்.

4.மனத்தூய்மையே அறம் ஆகும்.

5. பொறாமை,பேராசை,கோபம்,வன்சொல் இவை அறமாகாது.

6. நாள் கடத்தாமல் ஒருவர் அறவழியை மேற்கொண்டால் இறந்தும் புகழப்படுவார்.

7. அறவழியில் நடப்பவர்கள் இன்ப துன்பங்கள் இரண்டையும் ஒன்றாய் கருதி மகிழ்வர்.

8.ஒரு நாள் கூட வீணாக்காது நற்செயலில் ஈடுபட வேண்டும்.

9. அறவழியில் நடப்பதன் மூலம் அடையும் புகழே இன்பமாகும்.

10. அறவழிச் செயல்களில் ஈடுபடுவதே ஒருவருக்கு புகழ் சேர்க்கும்.



5)இல்வாழ்க்கை
-------------------------------

1.பெற்றோர்,மனைவி,குழந்தைகள் ஆகியோருக்கு துணையே ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

2.துறவிகள்,பசியால் வாடுபவர்,பாதுகாப்பில்லாதவர்கள் ஆகியோருக்கு இல்லறத்தானே துணை.

3.இறந்தவர்களை நினைத்தல்,தெய்வத்தை நினைத்தல்,விருந்தோம்பல்,உறவினர் பேணுதல்,
தன்னை இவற்றிற்கு தயார்படுத்திக்கொள்ளல் ஆகிய அறநெறிகள் இல்வாழ்க்கைக்குரியது.

4.சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பே வாழ்க்கையின் ஒழுக்கம் ஆகும்.

5.அன்பும்,அறவழியுமே இல்வாழ்க்கையின் பண்பும் பயனும் உடையதாகவையாகவும் ஆக்கும்.

6.இல்வாழ்க்கை அறநெறியில் அமைத்துக்கொண்டால் பெரும் பயன் அதிகமாகும்.

7.இல்வாழ்க்கையின் இலக்கண முணர்ந்து வாழ்பவர்கள் நல்வாழ்க்கையில் தலையானவர்.

8.அறவழியில் நடந்து ...பிறரையும் அதில் ஈடுபட சொல்வாரின் ...அது துறவிகளின் தவத்தை விட
மேன்மை யுடையதாகும்.

9.பிறர் பழிப்புக்கு இடமில்லா இல்வாழ்க்கையே இல்லறம்.

10.வாழவேண்டிய அறநெறியில் வாழ்பவன் தெய்வத்துக்கு இணையாக போற்றப்படுவான்


6)வாழ்க்கைத் துணைநலம்
--------------------------------------------

1.பொருள் வளத்துக்கு ஏற்றார் போலவும்,நற்பண்புகளுடனும் அமையும் மனைவி
கணவனின் பெருந்துணையாகும்.

2.பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறந்ததாயிருந்தாலும் பயனில்லை.

3.நற்பண்புள்ள மனைவி அமைந்தால் வாழ்க்கையில் எல்லாமே கிடைத்தாற்போல் ஆகும்.

4.பெண்ணுக்கு கற்பைத் தவிர பெருமைத்தருவது எதுவும் இல்லை.

5.சிறந்த மனைவி பெய் என்று சொன்னால்...மழையும் அது கேட்டு பெய்யுமாம்.

6.சிறந்த மனைவி கணவனையும் காத்து,உறுதி குலையாது புகழுடன் திகழ்வாள்.

7.பண்புள்ள மனைவியை அடிமை என எண்ணுவது அறிவுடமை ஆகாது.

8.நல்ல கணவனை அடைந்த பெண்ணின் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

9.இல்வாழ்க்கை சரியாக அமையாதவர்கள் சமூகத்தில் நிமிர்ந்து நடக்கமுடியாது.

10.நல்ல குழந்தைகளுடனும்,பண்புகளுடனும் வாழ்வதே இல்வாழ்க்கையின் சிறப்பு.



7)மக்கட் பேறு
----------------------

1.அறிவுள்ள நல்ல பிள்ளைகளை பெறும் பேறே சிறந்த இல்வாழ்ககை.

2.பண்புள்ள குழந்தைகளை பெற்றெடுப்பவர்களை ஏழேழு பிறவிக்கும் தீமை அண்டாது.

3.நம் நற்செயல்களின் விளைவே ...நாம் பெறும் மக்கட்செல்வங்களாகும்.

4.நம் குழந்தைகளின் பிஞ்சுக்கையால் அளிக்கும் கூழ் அமிர்தத்தைவிட சிறந்ததாகும்.

5.நம் குழந்தைகளைத் தழுவுதல் உடலுக்கு இன்பத்தையும் ..அவர்கள் மழலை செவிக்கு இன்பத்தையும் தரும்.

6.குழலோசை,யாழோசை இனிமை என்பவர்கள் தங்கள் குழந்தைகளின் மழலையை கேட்காதவர்கள்.

7.தந்தை தன் குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமை.....கல்வியறிவு தந்து அவையில் முதல்வனாக
இருக்கச் செய்தலே ஆகும்.

8.பெற்றோர்களை விட அறிவிற் சிறந்த பிள்ளைகளைக் கண்டால் உலகமே மகிழும்.

9.தன் மகனை பெற்றேடுத்தபோது அடைந்த மகிழ்ச்சியை விட ...அவனை ஊரார் புகழும் போது...
தாய் மிகவும் மகிழ்வாள்.

10....இவனைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தான் என ஊரார் சொல்லும்படி நடப்பதே
தந்தைக்கு மகன் செய்யும் உதவி ஆகும்.


8)அன்புடமை
---------------------

1.அன்பைத் தாழ்ப்பாள் போட்டு பூட்ட முடியாது.அன்புக்குரியவர் துன்பம் அடைந்தால்,நமக்கு கண்ணீர் வரும்.

2.அன்பு உடையவர்..அன்பு இல்லாதவர் போலின்றி..தன் உடல்,பொருள்,ஆவி மூன்றும் பிறருக்கென்றே எண்ணுவர்.

3.உயிரும்,உடலும் இணைந்துள்ளது போல், அன்பும்,செயலும் இணைந்திருக்கும்.

4.அன்பு பிறரிடம் பற்றை ஏற்படுத்தும்.அவர் உள்ளம் நட்பை உருவாக்கும்.

5.அன்புள்ளம் கொண்டவர்கள் உலகில் இன்புற்று வாழும் சிறப்பு அடைவர்.

6.அறச்செயல்களுக்கு மட்டுமின்றி வீரச்செயல்களுக்கும் அன்பே துணையாய் நிற்கும்.

7.அறம் எதுவென தெரிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை...மனசாட்சி வாட்டி வதைக்கும்.

8.மனதில் அன்பற்றவர் வாழ்க்கை...பாலைவனத்தில் பட்ட மரம் தளிர்த்தது போன்றது.

9.அன்புள்ளம் இல்லாதவர்களின் புறத்தோற்றம் அழகாய் இருந்து என்ன பயன்?

10.அன்பு வழியில் நடக்கும் உடலே உயிருள்ள உடல் மற்றவை எலும்பை போர்த்திய வெறும் உடலாகும்


9)விருந்தோம்பல்
----------------------------

1.விருந்தினரை வரவேற்று ...அவர்க்கு வேண்டியதை செய்வதே இல்லறத்தானின் பண்பு.

2.சாகாத மருந்து கிடைத்தாலும் ..அதை விருந்தினர் வெளியே இருக்க நாம் மட்டும் உண்ணுவது
பண்பான செயல் அல்ல.

3.விருந்தினரை வரவேற்று மகிழ்பவரின் வாழ்வு என்றும் துன்பம் அடைவதில்லை.

4.முகத்தில் மகிழ்ச்சியுடன் விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.

5.பண்பாளன் என்பவன்...எதுவுமே இல்லை என்றாலும் ...விதை நெல்லைக்கூட எடுத்து விருந்துக்கு
அளிப்பான்.

6. வந்த விருந்தை உபசரித்து அனுப்பி ...வரும் விருந்தை எதிபார்ப்பவன்...தேவலோகத்தினராலும்
போற்றப்படுவான்.

7.விருந்தினரின் சிறப்பை எண்ணி ...விருந்தை ஒரு வேள்வியாகக் கூட கருதலாம்.

8.செல்வத்தை சேர்த்து...அது அழியும்போதுதான் ...அந்த செல்வத்தை விருந்தோம்பலுக்கு
பயன்படுத்தவில்லையே. .என வருத்தம் ஏற்படும்.

9.பணம் படைத்தவர்கள் ..விருந்தினர்களை போற்றத் தெரியாவிட்டால் தரித்திரம் படைத்தவராகவே
கருதப்படுவர்.

10.வரும் விருந்தினரை முகமலர்ச்சியின்றி  வரவேற்றால் விருந்தினர் வாடிவிடுவர்.


10)இனியவை கூறல்
---------------------------------

1.வஞ்சனையில்லாமல்,அன்புடனும்,வாய்மையுடனும் பேசப்படுவதே இன்சொல் ஆகும்.

2.மனம் விரும்பி ஏதேனும் அளிப்பதை விட முகம் மலர்ந்து இனிமையாக பேசுவதே சிறந்தது.

3.முகம் மலரவும்,அகம் மலரவும் இனியவை கூறினால் அதுவே அறவழிப்பண்பாகும்.

4.அனைவரிடமும் இன்சொல்கூறி கனிவுடன் பழகினால் நண்பர்கள் அதிகமாக இருப்பர்.

5.சிறந்த பண்பும்.. இனிமையான சொல்லும் மட்டுமே சிறந்த அணிகலங்கள் ஆகும்.

6.தீய செயல்களை அகற்றினால் அறனெறித்தழைக்கும்.இனிய சொற்களை பயன்படுத்தினால்
நல்வழி ஏற்படும்.

7.நல்ல பண்பான சொற்கள் இன்பத்தையும்,நன்மையையும் உண்டாக்கும்.

8.இனிய சொல் ... ஒருவன் வாழும்போதும்...மறைந்தபிறகும் அவனுக்கு புகழ் தரும்.

9.இன்சொற்கள் இன்பத்தை தருதலால்...கடுஞ்சொற்களை ஏன் பயன்படுத்தவேண்டும்.

10.இனிமையாக சொற்கள் இருக்கையில் கடுஞ்சொற்களை கூறுவது கனிக்கு பதில்
காயை உண்பதுபோல ஆகும்



11)செய்நன்றியறிதல்
--------------------------------------

1. அரிய உதவிக்கு வானமும்,பூமியும் கூட ஈடாகாது.

2.தேவைப்படும் சமயத்தில் செய்யப்படும் உதவி சிறிதாக இருந்தாலும் அது பெரிதாக போற்றப்படும்.

3.பயனை எதிர்பாராது ...அன்பிற்காக ஒருவர் செய்த உதவி கடலை விடப் பெரிது.

4.தினையளவு சிறிய நன்மையை செய்தாலும்.. அதனால் பயனடைபவர் அதை பனை அளவு பெரிதாக எண்ணுவர்.

5.உதவி செய்யப்படும் அளவை பொருத்தது அல்ல...அதை பெறுபவரின் பண்பை பொருத்தது.

6.குற்றமற்றவர்கள் உறவையும், துன்பத்தில் நம்முடன் இருந்தவர் நட்பையும் இழக்கக்கூடாது.

7.ஒருவரின் துன்பத்தை போக்கியவரின் நட்பு ஏழேழு பிறப்புக்கும் போற்றப்படும்.

8.ஒருவர் செய்த நன்மையை மறக்கக்கூடாது. தீமையை செய்த அன்றே மறந்திட வேண்டும்

9.ஒருவர் நமக்கு செய்த தீமையை மறக்கவேண்டுமென்றால்..அதற்கு முன் அவர் செய்த ஒரு நன்மையை எண்ணினால்
போதுமானது.

10.எப்படிப்பட்ட தர்மத்தை மறந்தாலும்,ஒருவர் செய்த உதவியை மட்டும் மறக்கவே கூடாது.


12)நடுவுநிலைமை
-------------------------------

1.ஒருவரை பகைவர்,அயலார்,நண்பர் என பகுத்து பார்க்காமல் செயல்படுவதே நடுவு நிலைமை ஆகும்.

2.நடுவுநிலையாளனின் செல்வம் அழியாமல்,வரும் தலைமுறையினருக்கும் பயன் அளிக்கும்.

3.நடுவுநிலை தவறினால் நமக்கு பயன் கிடைக்குமென்றால்கூட ...அந்தப் பயனை பெரிதாக
எண்ணாமல் நிலை மாறக்கூடாது..

4.ஒருவர் நேர்மையானவரா..நெறிதவறியவரா என்பதெல்லாம் அவருக்குப்பின் உண்டாகக்கூடிய
புகழையோ,பழிச்சொல்லையோ வைத்து அறியலாம்.

5.வாழ்வும்,தாழ்வும் இயற்கை நியதி.இரு நிலையிலும் நடுவுநிலைமை மாறக்கூடாது..

6.நடுவுநிலை மாறி செயல்படுவோம் என்ற எண்ணம் தோன்றியதுமே அவனது அழிவுகாலம்
ஆரம்பித்துவிடும்.

7.நடுவுநிலைமை காப்பவருக்கு அதனால் வறுமை ஏற்பட்டாலும் ...உலகம் அவரை போற்றவே செய்யும்.

8.தராசுமுள் ...நேராக நின்று அளவை காட்டுதல் போல,நடுவுநிலைகாரர்களும் இருக்கவேண்டும்.

9.நேர்மை,உறுதி இருப்போர் சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும்.

10.பிறர் பொருளையும்,தன்னுடையது போல எண்ணி வாணிகம் செய்தலே நேர்மை எனப்படும்.

Thursday, January 21, 2016

49- சுவர்க்கத்தை அடைய....


அந்தணர் எனப்படுபவர், தினமும் காலை-மாலை குளிக்க வேண்டும்.பூணூல் அணிந்திருக்க வேண்டும்.வேதம் ஓத வேண்டும்.சுகாதாரமற்ற உணவை உண்ணக் கூடாது.உண்மையே பேச வேண்டும்.தன் குரு சொன்ன சடங்குகளைச் செய்து வர வேண்டும்.அப்படிப்பட்டவர்கள் சுவர்க்கத்தில் வாழ்வர்

சத்திரியர் எனப்படுபவர் , வேதங்களின் பொருளை அறிய வேண்டும்.தூய்மையான வேள்விகள் நடைபெற உதவ வேண்டும்.தானும், வேள்விகளை நிகழ்த்த வேண்டும்.குடிமக்களை பராமரிக்க வேண்டும்.பசுக்களுக்கும், வேதவிற்பன்னர்களுக்கும் தீங்கு நேராமல் பாதுகாக்க வேண்டும்.போர்க்களத்தில் கொல்லப்பட தயாராய் இருக்க வேண்டும்.அத்தகையோர் சுவர்க்கத்தில் வாழ்வர்

வைசியர் எனப்படுபவர், வேதங்களின் பொருளைக் கேட்டறிய வேண்டும்.உரிய சமயத்தைல் தன் செல்வத்தை வாரிசுகளுக்குக் கொடுப்பதுடன் ,அந்தணர்களுக்கும்,சத்திரியர்களுக்கும்,சொத்தில் பங்கு தர வேண்டும்.மூவகை வேள்விகளின் புனிதப் புகையை நுகர வேண்டும்.இப்படிப்பட்ட வைசியர் சாவிற்குப் பின் சுவர்க்கத்தில் வசிப்பர்

மேற்படி மூவருணங்களுக்கு அப்பாற்பட்ட நான்காம் வருணத்தில் உள்ளவர்கள், அந்தணர்கள் - சத்திரியர்கள்- வைசியர்கள் ஆகியவரின் அதே வரிசைப்படி மதித்து, வழிப்பட்டு அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும்.இதனால் மூவருணத்தினரும் திருப்தியடைவர்.அவர்களுக்கு பணிவிடை செய்த இவர்களின் பாவம் நீங்கும்.நிம்மதியுடன் இவர்கள் இறப்பார்கள்.அதற்குப்பின் இவர்கள் சுவர்க்கத்தில் இன்பமாய் வசிப்பர்

அரசே! நான்கு வருணத்தினர் கடமைகளையும் கூறினேன்.அதற்குக் காரணம் உண்டு.இதுவரை,..சத்திரியர்களுக்குரிய முறையில் தருமபுத்திரர் தன் கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை.ஆகவே, அவரை அரியணையில் அமர்த்தி ஆட்சிப் பொறுப்பை ஒப்படையுங்கள்" என விதுரர் கூறி முடித்தார்

விதுரர்க்கு திருதராஷ்டிரர் பதில் கூறலானார்....

"விதுரா! நீ தொடர்ந்து அறிவுறுத்தி வருவதைப்போலத்தான், நடவடிக்கை எடுக்க நான் விரும்புகிறேன்.ஏனெனில் உன் அறிவுரைகள் சரியானது ஆகும்

எனது மனம் எப்போதும் பாண்டவர்க்கு நன்மை செய்ய வேண்டும் என்றுதான் விரும்புகிறது.ஆனால், துரியோதனனிடம் கொண்ட பாசம் என் மனதை மாற்றிவிடுகிறது.
விதியின் வலிமை பெரியது.இதுவரை விதியை வென்றவர் இல்லை.நாம் எவ்வளவு முயற்சித்தாலும் விதியின்படிதான் நடக்கும்.விதியின் போக்கை மாற்றவோ..தடுக்கவோ முடியாது,விதி வலியது" என்று முடித்தார்
(திருதிராஷ்டிரர், தன்னால் முடியாது என்பதை கூறாமல் விதியின் மீது பழையைப்போட்டார்.ஆனால் துரியோதனின் செயலுக்கு தண்டனை வேண்டும்.பாண்டவர்கள் வெல்ல வேண்டும் என்பதும் விதியின் செயல்  என்று அவர் நினைப்பதாகக் கொள்ளலாம்)



ஊழை விட வலியது இல்லை என்கிறார் வள்ளுவரும்...

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று.
சூழினுந் தான்முந் துறும்

விதியைவிட வலிமை உள்ளது வேறு என்ன?ஊழை விலக்க வேறு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் ஊழ்தான் வந்து நிற்கும்.

48-வாழ்வின் முடிவு சாவு




எத்தனை மாவீரர்கள், மாமன்னர்கள் கடந்த காலத்தில் தோன்றியிருக்கின்றனர்! தானிய செல்வத்திலும்,மற்றவகைச் செல்வங்களாலும் நிறைந்து விளங்கிய நிலப்பரப்பை ஆட்சி புரிந்துள்ளனர்.அவர்களுக்குச் சாவுத்தெய்வம் சலுகைக்காட்டவில்லை.எல்லாவற்றையும் இழந்து சாவுக்கு இரையாகிவிட்டனர்

நாம், மிகுந்த கவனத்தோடும், முயற்சியோடும் மகனை வளர்த்து பெரியவன் ஆக்குகிறோம்.அவன் இறந்துவிட்டால்....என்ன செய்வது? உடலை வீட்டிலிருந்து மயானத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டியதுதான்.வீட்டுப் பெண்கள் அலறிப் புலம்புவார்கள் என வீட்டில் பிணத்தை வைத்திருக்க முடியுமா? யார் எப்படி அழுதாலும்....விறகுகள் நடுவே உடலையும் விறகாய் சிதையில் வைக்க வேண்டியதேத் தவிர வேறு வழியில்லை

வாழ்நாள் முழுதும் உழைத்து இறந்த ஒருவன் திரட்டிய செல்வத்தை வேறொருவன் அனுபவிக்கிறான்.நாம் எவ்வளவு சீராட்டி வளர்த்தாலும்..ஐந்து மூலப்பொருட்களால் ஆன இவ்வுடலை பறவைகள் மிச்சமின்றி அழிக்கின்றன...அல்லது நெருப்பு எரித்துவிடுகிறது.இறந்தவன், இதுவரை செய்த பாவபுண்ணியங்கள் என்றும் உடன் வர மேலுலகம் செல்கிறான்

மரங்கள் பூப்பதையும், கனிகள் தருவதையும் நிறுத்தி விட்டால் அவற்றை விட்டு பறவைகள் வேறிடம் சென்று விடும்.அதுபோலவே, ஒருவன் இறந்துவிட்டால்....அவனால் இனிப்பயன் இல்லை என அவனுடைய மகன்களும்,உறவினர்களும், நண்பர்களும் அவன் உடலைச் சுடுகாட்டில் வைத்துவிட்டு வந்து விடுகின்றனர்

சிதை நெருப்பில் போடப்படுகின்ற இறந்தவனுடைய ஆத்மாவுடன் வருபவை அவன் வாழ்க்கையில் செய்த காரியங்களின் பலன் மட்டுமே..ஆகவே நாம் எப்படிப்பட்டாவது கொஞ்சம்..கொஞ்சமாகவாவது நற்செயல்கள் செய்து புண்ணியத்தை சேகரிக்க வேண்டும்

நாம் வாழும் இவ்வுலகில் மேற்பகுதியிலும்...கீழுள்ள பகுதியிலும் வேதனையான இருண்ட உலகங்கள் பல உண்டு.அவை நம் புலன்களையும்  திணறும் அளவிற்குக் கொடுமையானவை.துரியோதனன் மீதுள்ள பாசம் காரணமாக பாவச்செயல்களுக்கு உடந்தை போய் அந்தக் கொடிய உலகங்களில் தள்ளப்பட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள்.
(மேலுலகங்கள் - பூலோகம்,சுவர்லோகம்,அயர்லோகம்,சனலோகம்,தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம்
 கீழுலகங்கள்- அதலம்,விதலம்,சுதலம்,தராதலம்,மகாதலம்,ரசாதலம், பாதாளம்)

அரசே! நான் கூறிய அறிவுரைகளைப் பொறுமையுடன் கேட்டீர்கள்.அதன்படி நீங்கள் உண்மையாக நடந்து கொண்டால் இவ்வுலகில் பெரும் புகழ் பெறுவீர்கள்.பின்...இவ்வுலகில் எதற்கும் நீங்கள் பயப்பட வேண்டாம்.மேலுலகிலும் அஞ்சும்படி எத்துன்பமும் விளையாது

ஆத்மா..ஒரு நதிக்கு சமம்.புண்ணியச் செயல்களே அந்நதியில் குளிப்பதற்குரிய இடமாகும்.சத்தியமே...அந்நதியின் நீர்ப்பெருக்கு.ஐம்புலன் கட்டுப்பாடே அந்நதியின் கரைப்பகுதி.கருணை உணர்வே அதன் அலைகள்.அதில் குளிப்பவன் தூய்மைப் பெற்றுப் புண்ணியசாலியாகிறான்.ஏனெனில் ஆத்மா புனிதமானது.ஆசைகளைத் துறத்தலே தலை சிறந்த புண்ணியமாகும்

உலக வாழ்க்கை என்பது ஒரு நதி.அதில் ஐம்புலன் ஆசைகள் தண்ணீராய் உள்ளன.காமம்,சினம்,என்ற முதலைகள் அதில் நிறைந்துள்ளன.மீண்டும், மீண்டும் பிறத்தல் என்ற நீர்ச்சுழல்கள் நம்மை அச்சுறுத்துகின்றன.இத்தகைய பயங்கர ஆற்றை நாம் சுயக்கட்டுப்பாடு என்ற படகின் உதவியோடு கடக்க வேண்டும்

நம்மைச் சுற்றியுள்ளவர்களில் அல்லது உறவினர்களில் யாராவது அல்லது சிலர் விவேகத்திலோ, நற்பண்பிலோ,உலக அறிவிலோ, வயதிலோ நம்மைவிட மூத்தவர்களாக  இருக்கக் கூடும்.அப்படிப்பட்டவர்களுக்கு நாம் மரியாதை காட்ட வேண்டும்.அவரது தயவைப் பெற்றிட வேண்டும்.நாம் ஒரு சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும்....என்ன செய்யக்கூடாது என அத்தகைய மூத்தவரிடம் ஆலோசனைப் பெற்று அதற்கேற்ப நடந்து கொண்டால், தவறு செய்ய வாய்ப்பே இல்லை

நாம் காமத்தையும், வாயுணர்வையும் உள்ளத்து வலிமையைக் கொண்டு அடக்கி ஆள வேண்டும்.கைகளையும், கால்களையும் கண்களின் உதவியால் கட்டுப்படுத்த வேண்டும்.கண்களையும்-செவிகளையும் மனத்தால் வசப்படுத்த வேண்டும்.சிந்தனையையும், பேச்சையும் செயல்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டும். 

Wednesday, January 20, 2016

47-முன்னேற்றத்தைத் தடுக்கும் பகைவர்கள்



ஒருவன் நல்ல மனிதர்களால் மதிக்கப்பட்டு,எந்தப் பற்றும் இல்லாமல்கடமைகளை செய்து வந்து,தனது ஆற்றலை வீணாக்காமல் உழைத்து வந்தால் அவன் விரைவில் புகழ் பெறுவான்.ஏனெனில்,சான்றோரிடம் நாம் திருப்தித் தரும் விதத்தில் நடந்து கொண்டால், அவர்கள் நம் வாழ்வை மகிழ்ச்சி ஏற்படும்படி செய்யும் வல்லவர்கள் ஆவர்

ஒரு பொருளோ, பரிசோ, பதவியோ தவறான வழிமுறையைப் பின்பற்றி வாங்கப்பட்டிருந்தால் நாம் உடனே அதை மறுத்து விட வேண்டும்.பாம்பு தன் சட்டையை உரித்த பின் அதை அப்படியே போட்டுவிட்டுச் செல்வது போல, தவறான வழியில் கிடைக்கும் எதன் மீதும் பற்று வைக்காது உதறித் தள்ளினால் நாம் எத்துன்பமும் இன்றி சந்தோஷமாக வாழலாம்

பொய் வழக்கு மூலம் மேன்மை பெறுவதும், அரசர் மீது வெறுப்பு கொண்டு, அவரை பகைத்து கொள்வதும், குருவிடம் தவறான தகவல்களைத் தெரிவித்து அவை சரியானவைதான் என பிடிவாதமாகக் கூறுவதும்...வேதம் படித்த அறிஞனைக் கொல்வதற்குச் சமமாகும்.(வேதம் படித்தவன் அறிவு, ஒழுக்கம்,பண்பு, லட்சியம், எளிமை,ஆன்மீக நாட்டம், புலன்களைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் முதன்மையானவர்கள் ஆவார்கள் )

பொறாமை குணம் சாவதற்கு சமமாகும்.கடுஞ்சொற்கள் சொல்வது, வசைமாரி பொழிவது, நமது செல்வச் சிறப்புகளுக்குச் சாவுமணி அடிப்பதற்கு சமமாகும்.ஆன்மீக குரு உபதேசம் செய்கையில் கவனிக்காமல் இருப்பது, எதற்கெடுத்தாலும் அவசரப்படுத்துவது, தற்பெருமையடித்துக் கொள்வது ஆகிய மூன்றும் நம்மைக் கல்வியறிவில் முன்னேறாமல் தடுக்கும் பகைவர்கள் ஆகும்.

சோம்பேறித்தனம், கர்வத்தால் மனம் கெடுதல்,தடுமாற்றம், கூட்டமாக அரட்டை அடித்தல்,முரட்டுப் பிடிவாதம், போலித்தற்பெருமை, சுயநலம் ஆகிய ஏழும் நம்மை சுற்றி வளைத்துக் கொண்டு கெடுதல் செய்கின்ற பாவங்களாகும்

வாழ்க்கையில் புலன் இன்பங்களைத் தேடி அலைபவர்கள், கல்வி, கேள்விகளில் எப்படி சிறப்பு அடைய முடியும்? அது போலவே..அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமுள்ளவன் சுகத்தைத் தேடி அலையக் கூடாது.வாழ்க்கையில் வசதிகள்தான் முக்கியம் என நினைப்பவன், அதே நேரம் அதிக அறிவையும் பெற்றிட வேண்டும் என்ற  ஆசையைக் கைவிட வேண்டும்.படிப்புதான் முக்கியம் என நினைப்பவன், வசதிகளுக்கும்,இன்பங்களுக்கு ஏங்கக் கூடாது

எவ்வளவுதான் கரி, விறகுகள் போட்டாலும் நெருப்பு திருப்தி அடையாது.எத்தனை நதிகள் வந்து கலந்தாலும் கடல் திருப்தியடையாது புதிதாக வருவதையும் ஏற்கும்.கோடிக்கணக்கான உயிர்களை கவர்ந்து சென்ற பின்னும் சாவுக்கடவுளுக்கு திருப்தியாகவில்லை.அழகிய பெண் ,எத்தனை ஆண்கள் தன்னைப் பார்த்து மயங்கினாலும், அனைவரும் தன் அழகுக் கண்டு மயங்க வேண்டும் என எண்ணுவாள்.

ஆசை சுயக்கட்டுப்பாட்டை அழிக்கும்.சாவு, வளர்ச்சியைத் தடுத்து அழிக்கிறது.கோபம் செல்வத்தை அழித்துவிடும்.கருமித்தனம் புகழைக் கொல்லும்.பராமரிப்பில் அக்கறையில்லாவிடின் பசுக்கள் இறந்துவிடும்.ஒரு அந்தணர்க்கு சினம் ஏற்பட்டால்..ஒரு பேரரசையே அழிக்கும்

நம்முடைய வீடுகளில் ஆடுகள், வெண்கலப்பாத்திரங்கள்,வெள்ளிப்பாத்திரங்கள்,தேன், விஷமுறிவு மருந்துகள், பறவைகள் முதலியவற்றையும், புனித நூல் கற்ற அந்தணர், வயதான உறவினர், துன்பத்தில் சிக்கிக் கொண்ட உயர்குடிப் பிறப்பினர் ஆகியவர்களையும் பராமரிக்க வேண்டும்

ஆடுகள், எருதுகள்,சந்தனம்,வீணை,முகம் பார்க்கும் கண்ணாடி,தேன்,நெல், இரும்பு,தாமிரம்,சங்கு, சாலகிராமம்,மஞ்சள், கோரோஜனை ஆகியவை மங்களப் பொருட்களாகக் கருதப்படுகிறது

மேற்கண்ட பொருட்களை நாம் வீட்டில் தயாராக வைத்திருக்க வேண்டும் என மனு அறிவுறுத்துகிறார்.ஏனெனில், அவை பூஜைக்கும்,பெரியவர்களை வழிபடவும்,விருந்தினரை உபசரிக்கவும் பயன்படும் என மனு கூறியுள்ளார்

இன்னொரு நேர்த்தியான விஷயம் -- நாம் உயிரைக்காப்பாற்றிக் கொள்ளக்கூடிய அறவழியைக் கைவிடக் கூடாது.எதன் மீதாவது விருப்பம் கொண்டோ, எவரிடமும் பயந்தோ,எதற்காகவாவது பேராசைப்பட்டோ தர்ம நெறியிலிருந்து விலகக் கூடாது
...
அறம் நிரந்தரமானது.ஆனால் இன்பமும், துன்பமும் தற்காலிகமாக வந்து செல்லும் நிகழ்ச்சிகளாகும்.வாழ்க்கை நிரந்தரமானது...ஆனால் அது எடுக்கும் வடிவங்கள் மாயையானவை.நிகழ்ச்சிகள் மீது நாம் பற்றுக் கொள்ளக் கூடாது. நிரந்தரமானவற்றை நாம் பற்றிக் கொண்டு திருப்தியுடன் வாழ வேண்டும்.நல்ல மனிதர்கள் இத்தகைய திருப்தியை அடைவதிலேயே முழுக் கவனமும் செலுத்துவார்கள்

Tuesday, January 19, 2016

46- வெற்றி அடைய....



உயர்தரமான மனிதன் ,ஒரு காரியத்தில் முயன்று தோல்வியடைந்தாலோ, இழப்பிற்கு ஆளானாலோ அவன் சும்மா இருப்பதில்லை.பின், சரியான புதிய வழியொன்றைப் பின்பற்றி, தான் இழந்ததை மீண்டும் கை பற்றுவேன் என்று சபதம் ஏற்பான்.(பாண்டவர் இழந்த்தை மீண்டும் பெறுவார்கள்)

நாம் எதிர்காலத்தில் எழக்கூடிய பிரச்னைகளை சமாளிக்கும் வழிகளை அறிந்திருக்க வேண்டும்.நிகழ்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளில் உறுதியுடன் இருக்க வேண்டும்.நடந்ததற்கு வருந்தாமல்...அதன் விளைவுகளை எதிர் கொள்ளத் தயாராக  இருக்க வேண்டும்.இவ்வாறு முக்காலம் குறித்தும் தெளிவாக இருந்தால் , தன் குறிக்கோள்களை அடைவதில் தோல்வி ஏற்படாது.

ஒருவன் சிந்தனையாலும், பேச்சாலும், செயலாலும் இடைவிடாது தன் லட்சியங்களில் முழுமையாக ஈடுபட்டால் அந்த லட்சியம் அவனை நோக்கி வரும்.ஆகவே நாம்.நமக்கு நன்மை தரும் விஷயங்களையே அறிந்திருக்க வேண்டும்

பிறருக்கு நன்மை தரும் செயல்களில் ஈடுபடுதல், சோம்பல் இல்லா முயற்சி,அறிவு, சுறுசுறுப்பு, நேர்மை ஆகியவற்றைப் பெற்றிருத்தல், நல்ல மனிதர்கள் இருப்பிடம் சென்று அவர்களை அடிக்கடி சந்தித்தல் ஆகியவை மூலம் வாழ்க்கையில் வளம் பெற முடியும்

விடாமுயற்சி, வாழ்க்கை வளத்திற்கு ஊற்றுக் கண்ணாகும்.விடாமுயற்சியின் மூலம் லாபமும்,மகிழ்ச்சியும் விளைகின்றன.எளிதில் சலிப்படைந்து, தளராமல் தொடர்ந்து முயற்சி செய்பவன் உயர் நிலையை அடைவான்.ஆனந்தமாய் இருப்பான்

அனைவருக்கும் பொறுமைத் தேவை.வலிமையற்ற ஒருவன் எல்லாப் பிரச்னைகளையும் பொறுமையுடன் சகித்துக் கொள்வது நல்லது.ஒருவன் வல்லமை உடையவனாயினும் அவன் பொறுமையை ஒழுக்கத்தின் அம்சமாகக் கருதி கடைப் பிடிக்க வேண்டும்.நல்லது-கெட்டது இரண்டையும் சமமாக நினைப்பவன் மன்னிக்கும் உள்ளம் கொண்டவன் ஆவான்

ஒருவன் புலன்வழி இன்பங்களை அனுபவித்துக் கொண்டு, அதே நேரம் நற்பண்புகளை இழக்காமலும், உலகிற்கு நன்மை செய்வதை மறக்காமலும் இருந்தால்...அவன் புலன்வழி இன்பங்களில் ஈடுபடினும் தவறில்லை.ஆனால் முட்டாள்தனம் மேலோங்கி, புலன்வழி இன்பங்களை மிகையாக ஈடுபடுபவனாக மட்டுமே ஆகிவிடக் கூடாது

தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத அளவிற்குக் கவலை வசப்படுபவர்கள் ,தொடர்ந்து தவறு செய்பவர்கள்,கடவுளை நம்பாதவர்கள்,சோம்பேறிகள்,சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்கள், முயற்சியும்-உழைப்பும் செய்யாதவர்கள் ஆகியோரிடம் செல்வமும், வாழ்க்கை வசதிகளும் தங்கி நிற்பதில்லை

வாழ்க்கையில் நேர்மையாக இருப்பவனை, மேலும் நேர்மைக் காரணமாகத் தவறான செயல்களில் ஈடுபடுவதற்குக் கூசுபவனை, கோணல் புத்திக்காரர்கள், பலகீன மானவன் என மட்டம் தட்டுவார்கள்.அவனுக்குத் தொல்லைத் தருவார்கள்

அளவிற்கு மீறித் தகுதியுடையவனாகத் தன்னைப் பற்றி நினைப்பவன், எல்லை மீறி பிறருக்கு வாரி வழங்குபவன்,அளவு கடந்த வீரம் உள்ளவன்,தன்னை வருத்திக் கொண்டு கடும் விரதங்களைப் பின்பற்றுபவன், தானே அறிவாளி என எண்ணிக் கொண்டிருப்பவன்..ஆகியோரிடம் செல்வமும், வசதிகளும் வராமல் விலகி நிற்கும்

அளவிற்கு மீறிய ஒழுக்கமுடைய சான்றோர்கள் வளமும், வசதியும் பெறுவதில்லை.பண்பே  இல்லாதவர்களிடம் செல்வமும், வசதிகளும் நிலைத்து நிற்பதில்லை.பண்பாளனைத் தேடி செல்வம் செல்வதில்லை.பண்பில்லாதவரிடம்தான் செல்வம் சேருகிறது என்றும் உறுதி படக் கூற முடியாது

கட்டுப்பாடின்றித் திரியும் ஆவேசமான மாடு போல செல்வமும் குருட்டுத்தனமாக யாரிடம் வேண்டுமானாலும் போய்ச் சேருகிறது.

தீ மூட்டித் தேவதைகளுக்கு செய்யும் வேள்விகளால், வேதங்களில் கூறப்படும் நற்பலன்கள் ஏற்படும்.புனித நூல்களைப் பயின்றால் . நற்குணங்களும்,நன்னடத்தையும் நமக்கு அமையும்.மனைவியாக அமையும் பெண் மூலம், குடும்ப இன்பமும்,மக்கள் பேறும் கிடைக்கும்.நம்மிடம் செல்வம் இருந்தால் நாம் மகிழ்வுடன் விளங்கிப் பிறரையும் சந்தோஷப்படுத்தலாம்.

இறந்தபின் மேலுலகில் பல நன்மைகளும்,இன்பங்களும் பெறுவதற்காகப் பலர் இவ்வுலகில் பலியுணவு,காணிக்கை போன்ற சடங்குகளைச் செய்கிறார்கள்.ஆனால், தவறான முறையில் பணம் சம்பாதித்து அதை வைத்து இந்த சடங்குகளைச் செய்தால்,சாவிற்குப் பிறகு விண்ணுலகில் எந்நன்மையும் விளையாது.

தைரியம் நிறைந்த மனிதன் மக்கள் நடமாட்டமில்லா பாலைவனப் பகுதியிலோ, யாரும் நுழைய முடியா அடர்ந்த காட்டிலோ, நுழைய முடியா கோட்டையிலோ பயங்கர ஆபத்து எற்பட்டாலோதிகைப்பூட்டி தடுமாற வைக்கின்ற சூழ்நிலையிலோ, எதிரி தனக்கு எதிராக ஆயுதத்தை உயர்த்தி விட்ட நிலையிலோ சிக்கிக் கொண்டால் பயப்பட மாட்டார்கள்.

சுறுசுறுப்பாக உழைத்தல்,சுயக்கட்டுப்பாடு,நுணுக்கமானத் திறமை,கவனமாக வேலை செய்தல்,மனவுறுதி,நினைவாற்றல், நன்கு யோசித்த பிறகே பணிகளை மேற்கொள்ளுதல்- இவை நல் வளத்தையும், வசதிகளையும் பெருகச் செய்யும் குணங்களாகும்

துறவிகளின் வலிமை தவத்தில் உள்ளது.மெய்ஞானம் பெற்ற வேத அறிஞர்களின் வலிமை பரம்பொருள் பற்றி அவர்கள் அறிந்திருப்பதில் உள்ளது.தீயவர்களின் வலிமை வன்முறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது.பண்பாளரின் பலம் பொறுமையில் அடங்கியுள்ளது

விரதங்களை மேற்கொள்கையில், நடுவில் தண்ணீர்,மூலிகை, பழம்,பால், நெய் ஆகிய ஐந்தை சாப்பிட்டாலோ, புரோகிதர் சொல்படி நடந்து கொண்டாலோ. குருவின் கட்டளைப்படி அச்சமயத்தில் வேறு வேலை செய்தாலோ, மருந்து குடித்தாலோ அவை விரதத்திற்கு பங்கமாகக் கருதப்படுவதில்லை

நமக்கு மற்றவர்களால் என்ன நேரக்கூடாது, நம்மை மற்றவர்கள் என்ன செய்யக்கூடாது என விரும்புகிறோமோ அதை நாமும் பிறருக்குச் செய்யக் கூடாது.இவ்வாறு நம்மை கட்டுப்படுத்திக் கொண்டாலே...இவற்றிலிருந்து நற்பண்புகள் தோன்றும்.தீய குணங்கள் எல்லாம் மிகையான புலனாசைகளால் தோன்றுகின்றன

கோபப்படுபவனை பொறுமையாலும், தீயவர்களை நற்செயல்களாலும்,கருமியை தாராள மனப்பான்மை மூலமும், பொய் பேசுபவனை நேர்மையாலும் நாம் வெல்ல முடியும்.(மற்றவர் கோபிக்கும் போது நாம் பொறுமையாக இருந்தால் அவர் கோபம் நீங்கிவிடும்)

நாம் கீழ்கண்டவர்களை நம்பி ரகசியங்களைச் சொல்லக் கூடாது.பெண், போக்கிரி,சோம்பேறி,கோழை,கடுங்கோபம் கொள்பவன்,தன் வலிமைப் பற்றி பெருமை பேசுபவன்,திருடன்,நன்றி கெட்டவன்,நாத்திகன் ஆகியோர் ரகசியங்களைப் பாதுகாக்க வல்லவர்கள் அல்ல

எவன், தன்னைவிட உயர்ந்தவர்களை பணிவுடன் வணங்குபவனாகவும், மூத்தவர்களுக்கு சேவை செய்வதை வழக்கமாகவும் கொண்டுள்ளானோ அவன் அதிகம் பாராட்டப்படுவான்.அவன் ஆயுள் கூடும்.அவனது புகழும், ஆற்றலும் வளரும்

சில காரியங்களை நிறைவேற்றுவது கடினம்.மிகவும் துன்பப்பட்ட பிறகோ, நற்பண்புகளை கைவிட்டோ, எதிரியின் கால்களில் விழுந்தோ நாம் விரும்பும் குறிப்பிட்ட சில பொருட்களை அடைய முடியுமனால் அப்பொருட்கள் மீது ஆசை வைக்கக் கூடாது

கல்வியறிவற்றவன் பரிதாபத்துக்குரியவன்.தாம்பத்திய உறவு இருந்தும் குழந்தைகள் பிறக்காவிடின் அது வருத்தப்பட வேண்டிய விஷயமாகும்.அரசன் இருந்தும் உணவின்றி பட்டினியால் வாழும் குடிமக்கள் இரக்கத்துக்குரியவர்கள்.குடிமக்கள் இருந்தும் அரசனில்லா நாடு பரிதாபகரமான நிலையில் இருக்கும்

நெடுந்தூரம் நடப்பது, (நீண்ட பயணம்) உடல் நலத்தைக் கெடுத்துவிடும்.உயரத்திலிருந்து விழும் நீர் மலையையும் தேய்த்துவிடும்.தாம்பத்திய சுகம் அறியாத பெண்கள் விரைவில் மூப்பு எய்துவர்.கடுமையான சொற்கள் அம்பு போல பாய்ந்து மனக்கலக்கத்தையும், சோர்வையும் உண்டாக்கி விடும்

சம்பிரதாய முறைப்படி பயிலவில்லை எனின் அல்லது பயின்றதை பின்பற்றாவிடில் வேதங்களின் தூய்மையும்,பாஹ்லீகர்கள் என்ற இனத்து மக்களால் பூமியின் தூய்மையும், பொய்யுரைப்பதால் மனிதர்களின் தூய்மையும் களங்கப்பட்டுவிடுகிறது(பாஹ்லீகர்கள் என்ற இனம் நாகரீகமற்ற, பாவச்செயல்கள் புரியும்...இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் முற்காலத்தில் வாழ்ந்து வந்தனர்)

கற்புள்ள பெண் தேவையின்றிப் பல விஷயங்களில் ஆர்வம் காட்டினால் அவளது தூய்மை கெட்டுவிடும் அபாயமுள்ளது.பொதுவாகவே பெண்கள் கணவரைப் பிரிந்திருந்தால் மாசு அடையக் கூடும்.தங்கம் தரம் குறைந்தால் வெள்ளியின் மதிப்பிற்கு இறங்கிவிடும்.வெள்ளி தரம் குறைந்தால் தகரத்தின் விலைக்கு விற்கும்.ஈயம் தூய்மை கெட்டால் அதைவிட மோசமான பொருள் கிடையாது.

படுத்துக் கிடப்பவன் மூலம் தூக்கத்தை வெல்ல முடியாது.உடலின்பத்தை அனுபவிப்பதன் மூலம் பெண்களை வெல்ல முடியாது.எரிபொருள் மூலம் நெருப்பை அணைக்க  முடியாது.குடிப்பதன் மூலம் மதுப்பழக்கத்தை வெல்ல முடியாது.

நண்பர்களுக்கு அவ்வப்போது அன்பளிப்புகள் அளித்து அவர்களை வசப்படுத்துபவர்கள்,எதிரிகளைப் போரில் தோற்கடித்தவர்கள்,நல்ல உணவுகளும்,பானங்களும் கிடைக்குமாறு வசதியான வாழ்க்கையை மனைவிக்கு ஏற்படுத்தித் தந்தவர்கள் ஆகியோர் வாழ்வில் வெற்றி வீரர்களாக விளங்குவர்.

ஆயிரக்கணக்கில் வருமானம் உடையவரும் வாழ்கிறார்கள்.நூற்றுக்கணக்கான வருமானம் வருபவரும் வாழ்கிறார்கள்.எதுவுமே இல்லாதோரும் எப்படியோ உயிர் வாழ்கிறார்கள்.திருதராஷ்டிரரே! நாடும், அரசும் இருந்தால்தான் வாழலாம் என்ற நினைப்பையும், ஆசையையும் விட்டுவிடுங்கள்

உலகில் உணவு தானியங்கள், தங்கம், மிருகங்கள்,பெண்கள் நிறைந்து கிடந்தாலும், மனிதனின் ஆசை தனிவதில்லை.இதைப் புரிந்து கொண்டால், உலகில் எல்லாப் பொருட்களும் தமக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று முட்டாள்தனமாக நினைக்க மாட்டோம்

அரசே! உங்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்...உங்கள் புதல்வர்களையும், பாண்டுவின் புதல்வர்களையும் சமமாகக் கருதி எவ்வித வித்தியாசமும் இல்லாமல் இருவரையும் சமமாக நடத்துங்கள்.

இவ்வாறு விதுரர் கூறி முடித்தார்.



Saturday, January 16, 2016

45-நட்பைத் தேர்ந்தெடுத்தல்



புத்திசாலியான மனிதன் தனது அறிவினைக் கொண்டு ஆராய்ந்து அறிஞர்களுடன் நட்பு கொள்ள வேண்டும்.நல்லது-கெட்டது அறிந்து நண்பர்களை மதிப்பீடு செய்ய வேண்டும்.இதற்காக தனது காதுகளையும், கண்களையும் , விவேகத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

பணிவின் மூலம் அவமானத்தைத் தவிர்க்கலாம்.வலிமையின் மூலம் பெரிய துன்பத்தைப் போக்கிக் கொள்ளலாம்.பொறுமையின் மூலம் கோபத்தை வெல்லலாம்.நன்னடத்தையின் மூலம் எல்லா அம்சங்களையும் நீக்கலாம்

ஒரு மனிதனின் குலமரபின் உயர்வை அவன் பயன்படுத்தும் அல்லது வைத்துக் கொண்டிருக்கும் பொருட்கள், சொந்தமாகக் கொண்டுள்ள நிலம், வீடு,பொதுவான நடத்தை, உணவுப் பொருட்கள், உடைகள் ஆகியவற்றைக் கொண்டு மதிப்பிட வேண்டும்

உலகப் பற்றுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவனும், புலன் நுகர்ச்சிக்குரிய ஏதேனும் தன்னை வந்தடைந்தாலும், அதை மறுத்து அனுபவிக்காமல் இருந்துவிட மாட்டான்.பற்றற்றவன் நிலையே இப்படியெனில், ஆசைகளில் நிரம்பிவழியும் சாதாரண மனிதர்களைப் பற்றி என்ன சொல்வது?

நம்முடன் பழகுபவர்களில் நல்லறிவை பெற்றவர்களையும்,அறிவாளிகளைச் சார்ந்திருப்பவர்களையும், நல்ல நடத்தை, இனிய தோற்றம், சுமுகமாகப் பழகுதல், இன்சொல் கூறும் பண்பு ஆகிய சிறப்புகள் உடையவர்களையும் நாம் நண்பர்களாக வைத்துக் கொள்ள வேண்டும்

ஒருவன் தாழ்ந்த குலத்திலோ, உயர் குலத்திலோ பிறந்திருக்கலாம்.அவன் அறநெறிக்கு புறம்பானதைச் செய்யாதவனாகவும், நற்பண்புகளுக்கு மதிப்புக் கொடுப்பவனாகவும், மென்மையும்-கனிவும் உள்ளவனாகவும், தீயதைச் செய்யக் கூசுபவனாகவும் இருந்தாலவன் உயர்குலத்தைல் பிறந்த சிறப்புடைய நூறுபேர்களைவிட உயர்ந்தவனாகப் போற்றப்படுவான்

நெருங்கிப் பழகும் இருவர்,ஒரே மாதிரியான மனப்பான்மை, ரகசியங்களை ஒன்றாக பகிர்ந்து கொள்ளுதல்,ஒரே மாதிரியாக உலகவிஷயங்களைப் புரிந்து கொள்லுதல் ஆகிய ஒற்றுமையான தன்மைகளைக் கொண்டிருந்தால் ,அவ்விருவரிடையே நிலவும் நட்பு ஒருபோதும் தேயாது.

ஒருவன் கொடிய மனம் கொண்டவனாகவும், சரியான படிப்போ-பயிற்சியோ பெறாதவனாகவும் இருந்தால் அவனுடன் அறிவாளி நட்பு கொள்வதைத் தவிர்ப்பான்.தண்ணீரை.மறைத்துப் பாசி படிந்துள்ள கிணற்றைப் போல மனம் விட்டுப் பேசாமால் மூடி மறைத்துப் பேசுகின்றவனையும் நண்பனாக்கிக் கொள்வதை அறிஞர்கள் தவிர்ப்பர்.ஏனெனில் அப்படிப்பட்ட நட்பு நீடிக்காது

கர்வம் நிறைந்தவர்கள்,அறிவிலிகள், கோபாவேசப்படுபவர்கள், அவசரப்படுபவர்கள், பண்புகள் அமையப் பெறாதவர்கள் ஆகியோருடன் நட்புக் கொள்வதை புத்திசாலி தவிர்த்துவிட வேண்டும்

நன்றியுடையவர்கள்,பண்பாளர்கள்,உண்மையானவர்கள்,உயர்தரமானவர்கள், விசுவாசிகள்,சுயக்கட்டுப்பாடு கொண்டவர்கள், ஒழுக்கத்திலும்-நேர்மையிலும் உறுதியானவர்கள் ஆகியவர்களை நண்பர்கள் ஆக்கிக் கொள்வது விரும்பத்தக்கது.

புலன்களை அவை நாடும் இன்ப நுகர்ச்சிகளிலிருந்து பின் வாங்கச் செய்து கட்டுப்படுத்தினால் அவை சாவை வெல்வதற்கு சமமாகு.புலன் இன்பங்களில் அளவுக்கு மீறி ஆழ்ந்திருப்பது ஆபத்து.அவ்வாறு இன்பங்களில் மூழ்கி இருப்பவர்கள் தேவர்களாயினும் அழிவுறுவர்

பணிவு,எல்லா உள்ளங்களிடத்தும்.கனிவு, பொறாமையின்மை,பொறுமை, சகிப்துத் தன்மை,நண்பர்கலீடம் மரியாதையும் பழகுதல் ஆகியவை நம் ஆயுளை நீடிக்க வைக்கும் என அறிஞர்கள் கூற்கின்றனர்

(வள்ளுவன் _ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
             தான்சாம் துயரம் தரும்
திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவிற்குத் துயரத்தை உண்டாக்கிவிடும்

 நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
 வீடில்லை நட்பாள் பவர்க்கு

ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவிற்குக் கேடுகளை உண்டாக்கும்