Wednesday, January 6, 2016

40- வலிமைகளும்- நெருப்பின் ஆற்றலும்



மனிதர்களிடம் இருக்கும் வலிமைகள் ஐந்து வகைஆகும்.இந்த ஐந்தில் ஒன்று உடல் வலிமை ஆகும்.இது தரத்தில் கடைசி ஆகும்

இதற்கு மாறுபட்டது சிறந்த ஆலோசகர்களைப் பெற்றிருப்பது.ஆகும்.இந்த வலிமை மங்களமானது.இதற்கும் மேற்பட்டவலிமை நிரம்பச் செல்வம் பெற்றிருத்தல்.

உயர் குலத்தில் பிறந்திருத்தல் செல்வ வலிமையை விட மேம்பட்டதாகும்.பரம்பரையாக பாட்டனாரிடமிருந்து தந்தைக்கும்,தந்தையிடமிருந்து மகனுக்கும் இயற்கையாகவே மரபுப்பெருமை எனும் இந்த வலிமை  கிடைக்கிறது

அறிவு எனும் வல்லமை மற்றவற்றைவி ட அதிக வலுவானது.அறிவே முதல் வலிமை ஆகும்.அதுவே மற்ற நான்கு  வலிமைகளைப் பெற வழி வகுக்கிறது

பழி வாங்கக் கூடியவனிடம் விரோதம் கூடாது.ஒருவேளை அவன் நெடுந்தொலைவில் வசித்துக் கொண்டிருக்கலாம்.ஆகவே அவனால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என நினைத்து விரோதம் வைத்துக் கொள்ளக் கூடாது

பெண்கள், அரசன்,பாம்பு, ஒருவன் பெற்றுள்ள ஏட்டறிவு, பணக்காரர்கள், எதிரிகள்,புலன் இன்பங்கள், ஒருவனது ஆயுள் ஆகியவை நம்பற்குரியவை அல்ல.எந்த அறிவாளியும் இவற்றை நம்பி இருக்க மாட்டான்

விவேகமுள்ளவன் எடுக்கும் நடவடிக்கை ஆகிய அம்பின் விளைவை மருத்துவர்களோ,மருந்துகளோ மாற்ற முடியாது.கடவுளுக்கு படையல் அளித்தல், புனிதச் சடங்குகள், அதர்வ வேதத்திலுள்ள தந்திர மந்திரங்களை பிரயோகித்தல், மூலிகை மருந்துகள் ஆகியவற்றைக் கொண்டும் விவேகமுள்ளவனின் செயலின் விளைவை மாற்ற முடியாது.(அவனது செயல்கள் மிகச் சரியான மாற்ற வழி தேவையில்லாததாகும்)

பாம்பு, நெருப்பு, சிங்கம் ஆகியவற்றையும், நல்ல குடும்பத்தில் பிறந்தவனையும் யாரும் அலட்சியம் செய்யக்கூடாது.ஏனெனில் இவற்றின் ஆற்றல் அளவு கடந்ததாகும்

தீ, உலகில் அதிக அளவில் சக்தி பெற்றதாகும்.அது விறகுனுள் மறைந்துள்ளது.ஆனாலும் மற்றவர்கள் தூண்டிவிடாத வரையில் பிறருக்கு எநத்க் கெடுதலும் செய்வதில்லை

மரங்கள் ஒன்றுடன் ஒன்று உராய்கையில் அவற்றினுள் இருக்கும் வெப்ப ஆற்றல், தீயாகக் கிளம்பி மரங்களையே எரித்து விடுகிறது.அந்த நெருப்பு பரவி, காடு முழுவதும் சாம்பலாகி விடுகிறது.அப்போது காட்டிலுள்ள இதரப் பொருள்களும் ,உயிரினங்களும் கூட எரிந்து விடுகின்றன

அதுபோலவே உயர் பண்புகள் நிறைந்தவர்களும்,ஆற்றலாகிய பெரிய நெருப்பை மறைத்து வைத்துள்ளனர்.அந்த ஆற்றல் பொறுமை ஆகும்.அது வெளிப்படாது விறகினுள் நெருப்புப் போல உள்ளது

நீங்களும், உங்கள் புதல்வர்களும் மரத்தில் படரும் கொடி போன்றவர்கள்.மரத்தின் துணையின்றி, மரத்தைச் சாராமல் கொடி வளரமுடியாது.

உங்களது புதல்வர்கள் காடு போல.பாண்டவர்கள் சிங்கம் போல.சிங்கம் இல்லா காடு அழிக்கப்படும்.காட்டில் வாழும் சிங்கங்கள் அழியும்.

இவ்வாறு விதுரர் கூறி முடித்தார்.

39-போரைத் தவிர்



கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே போர் மூண்டால் என்ன தீமைகள் உண்டாகும் என யோசித்துப் பாருங்கள்.அப்போர், இந்திரனுக்கும்,இதர தேவர்களுக்கும் வேதனைத் தரும்.கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே நிரந்திரப் பகை ஏற்படும்.உங்களின் எஞ்சியுள்ள வாழ்க்கை கவலை நிறைந்ததாய் அமையும்.குரு வம்சத்தின் பெயர் களங்கப்படும்.உங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைக் கண்டு எதிரிகள் மகிழ்ச்சியடைவர்

வானத்தின் உச்சியில் எழுந்து, பூமியின் குறுக்காக வீழ்கின்ற வால்நட்சத்திரம் நாட்டின் நலனுக்குக் கெடுதலாக அமையும்.அதுபோலவே போரின் காரணமாக உங்களுக்கும்,பீஷ்மர்-துரோணர்-தருமர் ஆகிய மாவீரர்களுக்கும் பொங்கி வரும் சினம் உலகையே அழித்துவிடும்

இதற்கு மாறாக நாட்டின் நலன் கருதி உங்களது நூறு மகன்களும், பாண்டுவின் ஐந்து மகன்களும், கர்ணன் ஆகியோரும் ஒன்று சேர்ந்தால் கடல்வரை பரவியுள்ள நிலப்பரப்பு முழுவதையும் வென்று அரசாளலாம்

அரசே! உங்கள் மகன்கள் அனைவரும் சேர்ந்து ஒரு காடு போன்றவர்கள்.பாண்டுவின் புதல்வர்கள் புலிகளுக்குச் சமம்.புலிகளைக் கொல்வதாகக் கிளம்பிக் காடே அழியும் நிலை செய்துவிடக் கூடாது.காட்டை விட்டு புலிகளை விரட்டிவிடவும் முயற்சிக்கக் கூடாது..புலிகள் இல்லா காடு பாதுகாப்பற்றது.காடில்லாமல் புலிகளும்   வாழாது.புலிகள் காடுகளைக் காக்கின்றன.காடு புலிகளுக்கு பாதுகாப்பைத் தரும்

தீயவர்கள் மற்றவர்களிடம் என்னென்ன நல்ல குணங்கள் உள்ளன என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.மற்றவர்களிடம் என்னென்ன குறைகள் உள்ளன என்பதைக் கண்டுபிடிப்பதில்தான் அக்கறை செலுத்துகின்றனர்

தேவலோகத்திலிருந்து அமிர்தத்தைப் பிரிக்க முடியாது.அதுபோல, வாழ்வில் உயர்தரவளமையை அறநெறியிலிருந்து விலகிப் பெற இயலாது.ஆகவே, வாழ்வில் உன்னத செழிப்பையும், முன்னேற்றத்தையும் நாம் அடைய விரும்பினால் ஆரம்பம் முதலே நற்பண்புகளைக் கடைப் பிடிக்க வேண்டும்

நம் மனம் தீய சிந்தகளிலிருந்து பிரிந்து விலகி நின்று, நற்பண்புகளில் வேரூன்றி இருக்க வேண்டும்,அப்போதுதான் உலகப் பொருட்களின் மெய்யான தன்மையையும்,அவற்றால் ஏர்படும் மாறுதல்களையும் நன்கு அறிந்தவர்கள் ஆக முடியும்

நற்பண்புகளை பின்பற்றுதல், வசதிகளைப் பெறுதல், புலன்வழி இன்பங்களை அனுபவித்தல் ஆகியவற்றை அதற்கான காலத்தில் எவன் முறையாக துய்க்கின்றானோ அவனுக்கு அவை மூன்றும் இவ்வுலகில் கிடைப்பதைப் போல மறுவுலகிலும் கிடைத்துவிடும்

சினமும்,மகிழ்ச்சியும் மிகுந்த ஆற்றலை உடையவை.இவற்றிலிருந்து பொங்கிப் பிரவாகிக்கும் ஆற்றலைக் கட்டுப்படுத்தி, சரியான வழியில் செலுத்துவதுடன் சோதனையான சூழலிலும் தடுமாறாது இருக்க வேண்டும்.இம்முயற்சியில் வெற்றி பெறுபவனை செல்வமும், வசதிகளும் வந்து சேரும்.  

Tuesday, January 5, 2016

38- தவிர்க்கப்பட வேண்டியவர்கள்



நாம் குறிப்பிட்ட சிலரை நம் வீட்டில் தங்க அனுமதிக்கக் கூடாது.சோம்பேறி, மிகையாக உண்பவன்,சமூகத்தால் வெறுக்கப்படுபவன்,மோசடிக்காரன்,கொடூரமானவன்,இடம்-காலம் அறிந்து பழகத் தெரியாதவன்,அசிங்கமாக உடை அணிபவன் ஆகியோரை வீட்டில் தங்கவிடக் கூடாது.

நமக்கு வாழ்க்கையில் எப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும், குறிப்பிட்ட சிலரிடம் உதவி கேட்கக் கூடாது.கருமி,நம்மை ஏசுபவர்,கல்வி அறிவற்றவர்,காட்டுவாசி,போக்கிரி,தகுதியுடைவருக்கு மரியாதை காட்டத் தவறுபவர்,கொடூர குணம் கொண்டவர்,நமது எதிரி,நன்றி கெட்ட்வர் ஆகியோரிடம் உதவி கேட்கக் கூடாது

நாம் எப்போதும் குறிப்பிட்ட சில வகையினருக்கு உதவக் கூடாது.பிறரது வீட்டைக் கொளுத்துதல் போன்ற பயங்கர பாவங்கள் செய்பவன்,எப்போதும் தவறு செய்து கொண்டே இருப்பவன்.எப்போதும் பொய் பேசுபவன்.கடவ்ள் மீது உறுதியான பக்தியற்றவன்.அன்பில்லாதவன்.தான் ஒருவனே அறிவாளி என திமிருள்ளவன் இந்த ஆறு வகையினருக்கு உதவுவதோ அல்லது அவர்களிடம் பணிபுரிவதோ கூடாது

(பயங்கர பாவங்கள்- பிறர் வீட்டைக் கொளுத்துதல்,விஷம் கொடுத்துக் கொல்லுதல்,ஆயுதத்தால் தாக்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல், பிறர் செல்வத்தை அபகரித்தல்,பிறர் நிலத்தை ஆக்கிரமித்தல், பிறர் மனைவியின் கற்புக்குக் கேடிழைத்தல் ஆகியவை ஆகும்)

நம்முடைய செயல்களின் விளைவுகள்,நாம் அவற்றை அடைய மேற்கொள்ளும் வழிமுறைகளைப் பொறுத்து அமைகின்றன.நாம் எந்த வழிமுறைகளை மேற்கொள்கிறோம் என்பது நாம் அடைய விரும்பும் பலன்களுக்கு ஏற்ப அமைகிறது.இவ்வாறு செயல்கள்,வழிமுறைகள்,விளைவுகள் ஆகிய மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன

நம்முடைய கடமை என்ன வென்றால், முதலில் மகன்களையும்,மகள்க ளையும்  பெற்றெடுக்க வேண்டும்.மகன்களை பிரச்னையில்லா நல்ல வேலைகளில் அமர்த்த வேண்டும்.பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும்.இவ்வாறு கடமைகளை நிறைவேற்றிய பின்னர் நாம் காட்டிற்குச் சென்று...வாழ்நாளின் கடைசிப் பகுதியை முனிவர்கள் போல வாழ்ந்து கழிக்க வேண்டும்

நாம் எல்லா உயிரினங்களுக்கும் நன்மையும், நமக்கு மகிழ்ச்சியும் அளிக்கும் செயல்களையேச் செய்ய வேண்டும்.அவற்றையும் அவற்றின் நற்பலனையும் இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.இத்தகைய மனப்போக்கு அமைந்தால் நம்முடைய குறிக்கோள்கள் அனைத்தும் நிறைவேறும்

ஒருவன் அறிவு,திறமை, நெருப்பைப்போலத் தீவிரம்,வலிமை,உழைப்பு,உறுதி ஆகிய குணங்களைப் பெற்றிருந்தால் அவன் வேலை எதுவும் கிடைக்காமல் போய்விடுவோமோ என அஞ்ச வேண்டியதில்லை

Monday, January 4, 2016

37-முதலாளியும் ..ஊழியரும்



தன்னிடம் விசுவாசம் கொண்டு, தன் நன்மைக் கருதி உழைக்கின்ற ஊழியர்களிடம் ஒரு போதும் கோபம் கொள்ளாத எஜமானன், அவர்களின் முழு நம்பிக்கையைப் பெற்றுவிடுகிறான்.ஆகவே அப்படிப்பட்ட எஜமானனுக்குப் பிரச்னையான சூழல் ஏற்படுகையில் ஊழியர்கள் அவனைவிட்டு ஓடாமல் நிலைத்து நின்று உதவுவார்கள்

ஒரு அரசன் தன்னுடைய பணியாளர்கள் உயிர் வாழ செய்கின்றத் தொழிலைத் தடுத்து புதியதோர் அரசை நிறுவவோ அல்லது செல்வம் ஈட்டவோ முயற்சிக்கக் கூடாது.இவ்வாறு வஞ்சிக்கப்பட்டு யார் உயிர் வாழ சிரமப்பட வேண்டியுள்ளதோ அவர்கள் பிரிய அமைச்சர்களாக இருந்தாலும் எதிர்ப்பு உணர்வு மேலிட தலைவனைவிட்டு பிரிவர்

ஒருவன் தன் கீழுள்ள ஊழியர்களை நியமிக்கையில்  அவர்களின் பணிகள் என்ன, தனது வரவு செலவு நிலவரம் எவ்வாறு உள்ளது.ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை எல்லாம் முன்னரே ஆராய வேண்டும்.சரியான பணியும், சரியான ஊதியமும் நிச்சயித்து பொருத்தமான ஊழியர்களை நியமித்துவிட்டால் அவர்கள் உதவியுடன் கடினமான சாதனைகளையும் நிறைவேற்றலாம்

நம் கீழ் பணிபுரிபவர் யாரெல்லாம், விருப்பு-வெறுப்பு, நோக்கத்தை அற்றவர்களாகவும், சுசுறுப்பாக எல்லாக் கடமைகளையும் செய்பவர்களாகவும், நமக்கு நன்மைத் தருவதையே பேசுபவர்களாகவும், நம்மியம் விசுவாசம் உள்ளவர்களாகவும், கண்ணியமான நடத்தை கொண்டவர்களாகவும், தங்கள் உழைப்பின் அதிகப் பட்ச அளவையும்,தங்களுக்குப் போட்டியாக உள்ளவர்களின் ஆற்றலையும் உணர்ந்தவர்களாகவும் உள்ளனரோ அவர்களை நாம் மிகவும் வேண்டியவர்களாகக் கருதிப் பணிவுடன் நடத்த வேண்டும்

நம் கீழ் பணிபுரிபவர் யாராவது நாம் கட்டளையிட்டாலும் அக்கறையுடன் வேலைசெய்யாதவராகவும், நாம் வேலை சொன்னால் எதிர்த்து பேசுபவராகவும், தனக்கு நிரம்ப அறிவுள்ளதாகக் கர்வப்பட்டவராகவும், எதற்கெடுத்தாலும் நம்முடன் வாதம் செய்பவராகவும் இருந்தால் அவரை முடிந்த அளவு விரைவில் பதவிநீக்கம் செய்ய வேண்டும்

தூதருக்குரிய குணங்கள் எட்டு என அறிஞர்கள் கருதுகிறார்கள்.சமயத்திற்கேற்ப முடிவெடுக்கும் திறமை,துணிச்சல், எக்கணமும் செயலில் இறங்க தயாராக இருப்பது, கனிவுடமை,நடை-உடை பழக்கங்களில் பண்பட்ட நளினம். ஊழல் வசப்படாமை,ஆரோக்கியம், கண்ணியம், கவர்ந்து இழுக்கும் பேச்சுத் திறன்,ஆகியவை அந்த எட்டுக் குணங்களாகும்

விவேகமுள்ள எவனும், தான் செய்வது தவறில்லை என நம்பிக்கையுடன் பொருத்தமில்லா நேரத்தில் இன்னொருவர் வீட்டிற்குள் நுழையக் கூடாது.இரவு நேரத்தில் இன்னொருவர் வீட்டில் ஒளிர்ந்திருக்கக் கூடாது.அரசன் விரும்பும் பெண்ணை ஆசையுடன் அணுகக் கூடாது

தீயவர்களுடன் நட்பு வைத்து அவர்களிடம் ஆலோசனைப் பெறுவோரின் கூட்டங்களுடன் நாம் கலந்து கொள்ளக் கூடாது.நமக்கு ஒருவரிடம் நம்பிக்கையில்லாவிடினும் அதை அவரிடம் நேருக்கு நேர் சொல்லிவிடக்கூடாது.ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் முகத்தில் அடித்தாற் போலத் தெரிவிக்காமல் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி பின் வாங்கிவிடவேண்டும்

நாம் யாருக்குப் பணம் கொடுக்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.நம்மை வெறுப்பவர்,அரசன்,ஒழுக்கமற்ற பெண்,அரசாங்க ஊழியர், மகன்,சகோதரன்,குழந்தைகள்,விதவை,ராணுவத்தில் வேலை பார்ப்பவன்,சொத்தையோ..அதிகாரத்தையோ முழுமையாக இழந்தவன் ஆகியோரிடம் பண விவகாரம் வைத்துக் கொள்ளக்கூடாது

தினமும் குளிப்பதால் பின் வரும் நன்மைகள் விளையும்.உடல் வலிமை பெறும்.அழகுக் கூடும்.குரல் தெளிவு பெறும்.உடலின் நிறம் சிறக்கும்.உடல் மிருதுவாக இருக்கும்,உடலிலிருந்து நறுமணம் வீசும்.உடல் தூய்மையாக இருக்கும்.எழில் மிகும்,இளமை நீடிக்கும்,அழகியப் பெண்களின் நட்பு கிடைக்கும்

அளவோடு உண்பவனுக்கு ஆறு நன்மைகள் விளைகின்றன.ஆரோக்கியம் உறுதிப்படுகிறது.ஆயுள் நீள்கிறது.வளமை கூடுகிறது.மகிழ்ச்சி மிகுதியாகிறது.ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.சாப்பாட்டுராமன் என இகழப்படும் நிலை ஏற்படாது 

Sunday, January 3, 2016

36- அந்தப் பதினேழு




விதுரர் மேலும் திரிதராஷ்டிரருக்குச் சொல்ல ஆரம்பித்தார்

அரசே! பிரம்மாவின் புதல்வரான மனு, நான் சொல்லப் போகும் பதினேழு நபர்களை, ஆகாயத்தைத் தாக்குபவர்கள் (அவசரப்பட்டுச் செயல்படுவது, லட்சியமின்றி செயல்படுவது)என பட்டியல் இட்டுள்ளார். இத்தகையோர் இந்திரனின் வளைக்க முடியாத வில்லை வளைப்போம் என வீண் பெருமை பேசுவார்கள்.யாராலும் வசப்படுத்த முடியாத சூரிய  கிரணங்களையும், சந்திர கிரணங்களையும் நாங்கள் கையால் பிடித்துக் காட்டுவோம் என்று திமிராகச் சொல்வார்கள் என்றும் சொல்கிறார்.
அவர் கூறும் பதினேழு வகையினர்-
படிக்க விரும்பாத மாணவருக்கு கற்பிக்கும் ஆசிரியர்
முன்னேறும் ஆர்வமின்றி சம்பாத்தியத்துடன் நிறுத்திக் கொள்பவர்
எதிரிகளுக்கு பணிவிடை செய்து வாழ்க்கை நடத்துவர்
தீய பெண்களைப் பாதுகாத்துத் தரகர் வாழ்க்கை நடத்துபவர்
யாரிடம் உதவிக் கேட்கக் கூடாதோ அவரிடம் சென்று யாசிப்பவர்
தற்பெருமை பிடித்துக் கொள்ளும் வழக்கமுள்ளவர்
உயர்குலத்தில் பிறந்திருந்தும் குலப்பெருமைக்குப் பொருந்தாத செயல்களைச் செய்பவர்
தான் பலகீனராயினும் வலிமை மிக்கவர்களிடம் பகைமைக் கொள்பவர்
தன் பேச்சைக் கவனமாகக் கேட்காதவரிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்
விரும்பத்தகாத பொருள்களுக்கு ஆசைப்படுபவர்
மாமனார் என்ற கண்ணியயமான ஸ்தானத்தில் இருந்த போதிலும் மருமகளிடம் கேலியும், கிண்டலுமாகத் தரக்குறைவாக பழகுபவர்
தனது பயத்தை நீக்கப் பெண்களின் உதவி தேவைப்பட்ட போதிலும், வெளியில் பெண்களை அதிகாரம் செய்பவர்
இன்னொருவரின் வயலில் விதைகள் நட்டு அறுவடை செய்பவர்(பிறன் மனை விரும்புபவர்)
பெண்களை அளவு கடந்து குறை  கூறுபவர்
ஒருவரிடமிருந்து ஒரு பொருளைப் பெற்றுக் கொண்டபின் அவ்வாறு பெற்றதாக நினைவில்லை என வாதாடுபவர்
ஒரு பொருளைக் கேட்டவருக்குக் கொடுத்துவிட்டு அதைப்பற்றியே தற்பெருமை பேசுபவர்
தவறான வழியில் செல்பவர்களை ஆதரிப்பவர்கள்

இந்தப் பதினேழு பேர்களையும் எமதூதர்கள் கையில் பாசக்கயிறு எடுத்து வந்து நரகத்திற்கு இழுத்துச் செல்வார்கள்

ஒருவன் இன்னொருவனிடம் எப்படிப் பழக வேண்டும் என்பது அந்த இன்னொருவன் அவனுடன் எப்படிப் பழகுகிறான் என்பதைப் பொறுத்ததாகும்.நம்மிடம் தந்திரமாக பழகுபவரிடம் நாமும் தந்திரமாகப் பழக வேண்டும்.நம்மிடம் நல்லதனமாக பழகுபவரிடம் நாமும் நேர்மையாக நடக்க வேண்டும்(நல்லவனாக இருக்கலாம்..ஆனால் ஏமாளியாக இருக்ககூடாது)

திருதராஷ்டிரர் கேட்டார். "விதுரரே! மனிதன் நூறாண்டு வாழ்பவன் என வேதங்களில் கூறப்பட்டுள்ளது.ஆனால் அனைவராலும் நூறு வயதுவரையில் வாழ முடியவில்லை"

விதுரர் கூறினார், "அளவுக்கு மீறிய கர்வம்.அடக்கமற்றப் பேச்சு அல்லது கடுஞ்சொல் கூறுதல், கருமித்தனம், சினம், புலன் வழி இன்பங்களில் விருப்பம்.நண்பர்களுக்கோ,உறவினருக்கோ துரோகம் செய்தல் என ஆறு கொடிய பாவங்கள் உள்ளன.

இந்த ஆறும் கூர்மையான வாள் போல.இவை ஆயுளின் ஆண்டுகளை வெட்டிவிடுகின்றன.இவைதான் மனிதர்களை கொல்கின்றனவே தவிர சாவு மனிதனைக் கொல்வதில்லை.உங்கள் மகன்கள் இந்த ஆறு பாவங்களையும் செய்யாதிருந்து நூறாண்டுகள் வாழக் கடவுள் ஆசிர்வதிப்பாராக!

தன்னை நம்பியுள்ளவரது மனைவிக்குக் கேடிழைத்தல், தனது குருவின் மனைவியைப் பலவந்தப்படுத்துதல், தாழ்ந்த சாதிப் பெண்ணை உயர்குலத்தவர் மணந்து கொள்ளல், குடிப்பழக்கம்,சான்றோர்கள் மீது அதிகாரம் செலுத்துதல், ஒருவர் சம்பாதித்து வாழ உதவுகின்றத் தொழிலை நாசமாக்குதல்.அந்தணர்களை அடிமையைப் போல நடத்தி வேலை வாங்குதல், அடைக்கலம் புகுந்தவரைக் கொல்லுதல்...இத்தகையக் கொடியச் செயல்களைப் புரிந்தவர்கள் பாவிகளைப் போல நிந்திக்கப்படுவர்.அவர்களது பாவம் உடன் இருப்போரையும் தொற்றிக்கொள்ளும்.ஆகவே அவர்களுடன் இருப்பவர்கள் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்கின்றன வேதங்கள்.

எவன் சான்றோர்களாகிய ஆசிரியர்களின் உபதேசத்தைப் பின்பற்றுகிறானோ, ஒழுக்கத்தில் தேர்ச்சி பெற்றுள்ளானோ, பெருந்தன்மை உடையவனோ,கடவுள்-முன்னோர்-விருந்தினர் ஆகிய மூவருக்கும் படைத்தப்பின உண்கின்றானோ,பிறரைத் துன்புறுத்துவதில்லையோ, தீமை ஏதும் செய்யாது கவலையின்றி விளங்குகின்றானோ,நன்றி உடையவனோ, கனிவுடன் பழகுகின்றானோ, அறிஞனாக உள்ளானோ அவன் எளிதில் சுவர்க்கத்திற்குப் போகிறான்

மற்றவர்களுக்குப் பிடித்தபடி இனிமையாய் எப்போதும் பேசுபவர் நிறைய உள்ளனர்.ஆனால், இன்னொருவருக்குப் பிடிக்காது என தெரிந்தும் கசப்பான அறிவுரைகளை தயங்காது கூறுபவர்கள் சிலரே!அந்தக் கசப்பான அறிவுரைகளையும் பொறுமையாகக் கேட்பவர் மிகவும் சிலரே

அறிஞன், தனது உபதேசம், அதிக்கேட்பவரின் மனதிற்கேற்றபடி இனிமையாக உள்ளதா..இல்லையா என்பதை கருத்தில் கொள்ளக் கூடாது.நல் விளைவுகளைத் தரும் உபதேசம் கேட்பதற்குக் கசந்தாலும் அறிஞன் அதை எடுத்துக் கூற வேண்டும்.அத்தகையவனே மன்னனின் உண்மையான உபகாரி ஆவான்

குடும்பத்தின் நலன் கருதிக் குடும்ப உறுப்பினர் ஒருவரைக் கைவிட நேர்ந்தால் தயங்கக்கூடாது.அதுபோல, கிராமத்தின் நலன் கருதிக் குடும்பத்தையும், நாட்டின் நலனுக்காகக் கிராமத்தையும் கைவிடத் தயங்கக்கூடாது.தன் ஆத்மாவின் நலனைக் கருதும் போது அதற்காக உலகையேத் தியாகம் செய்யவும் தயாராக இருக்க வேண்டும்

எதிர்காலத்தில் விளையக்கூடிய ஆபத்துகளைச் சமாளிக்க இப்பொழுதிலிருந்தே பணம் சேமித்து வர வேண்டும்.ஆனால், மனைவியைக் காப்பாற்றுவதா இல்லை பணத்தைக் காப்பாற்றுவதா என்ற சிக்கல் எழுந்தால் மனைவியைக் காப்பாற்றுவதே முக்கியம்.பணம்,  மனைவி, ஆத்மா ஆகிய மூன்றில் எதைக் காப்பாற்றுவது என்ற குழப்பம் ஏற்பட்டால் ஆத்மாவின் தூய்மையைக் காப்பாற்றுவதே முக்கியம்

சூதாட்டம் மனிதர்களிடையே பகையை விளைவிக்கும் என்பது அறியப்பட்ட உண்மையாகும்.ஆகவே அறிவுள்ள மனிதன் எவனும் சூதாடக்கூடாது.பொழுது போக சூதாட அழைக்கப்பட்டாலும் அதில் கலந்து கொள்ளக் கூடாது

சகுனியும், தருமரும் சூதாடுகையில், அதைத் தடுக்குமாறு தங்களிடம் கூறினேன்.ஆனால், நோயாளி கசப்பு மருந்தையும், பத்திய உணவையும் வெறுப்பதைப் போல என் ஆலோசனை உங்களுக்குப் பிடிக்காமல் போய் விட்டது

வண்ணச்சிறகுகளைக் கொண்ட மயில்கள் போன்ற பாண்டவர்களைக் காக்கைகள் போன்ற உங்கள் மகன்கள் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் எண்ணம் போலும்.சிங்கங்களை ஆதரித்துப் பாதுகாப்பதற்குப் பதிலாக நீங்கள் நரிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டால், அதன் விளைவுகளை சந்தித்து அழுது புலம்பிட வேண்டும்.

Friday, January 1, 2016

35-உறவும் பகையும்



உறவினர்களுடன் சண்டையிட்டு பிரிந்து போனவர்கள் நிம்மதியாய் தூங்க முடியாது.நேர்த்தியான படுக்கை வசதியிருந்தாலும் தூக்கம் வராது.பெண்களின் இன்பமும் அவர்களுக்குத் திருப்தியைத் தராது.சுற்றியுள்ளவர்கள் எவ்வளவு புகழ்ந்து பாராட்டினாலும் மகிழ்வு ஏற்படாது

உறவினர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தவர்கள் நற்பண்புகளைக் கடைப்பிடிக்க இயலாது.அவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்காது.யாரும் மரியாதை காட்டமாட்டார்கள்.அமைதியாக வாழும் ஆனந்தம் கிட்டாது.(கௌரவர்கள் , பாண்டவர்களைப் பகைத்துக் கொண்டது தீது என மறைமுகமாக கூறுகிறார்)

உறவினர்களைப் பகைத்துக் கொள்பவர்கள் யார் நல்ல புத்தியைச் சொன்னாலும் மகிழ்ச்சியாகக் கேட்டுவிட்டு, அதை பின்பற்ற மாட்டார்கள்.தங்கள் வாழ்க்கை நல்லவிதமாக அமைய வேண்டும் என்பதில் அக்கறை கொள்ள மாட்டார்கள்.உறவினர்களை வெறுத்துத் தவிப்பார்கள்.கடைசியில் நாசமாகப் போவார்கள்

பசுக்கள் பாலைத் தருவது இயற்கை.அந்தணர்களிடம் கடுமையான விரதக் கட்டுப்பாட்டை எதிர்பார்க்கலாம்.இளம் பெண்களிடம் சஞ்சலத் தன்மை இருக்கும்.அதுபோல உறவினர்களிடம் பகைத்து கொள்பவன் பயந்து வாழ வேண்டிய நிலை ஏற்படுவதும் சாத்தியமே

மெல்லியவை ஆயினும் ஒரே நீளமுள்ள தரமான நூல் இழைகள் தொகுக்கப்பட்டால் அவை துணி நெய்கையில் எத்தகைய இழுப்பையும் தாங்கும்.அதுபோல நல்லவர்கள்(பாண்டவர்கள்) ஒன்று சேர்ந்தால் மாபெரும் சாதனைகள் நிகழ்த்த முடியும்

எரிந்து கொண்டிருக்கும் விறகுகள் தனித்தனியாகப் பிரித்தால் புகைதான் கிளம்பும்.அவற்றை ஒன்றாகச் சேர்த்தால் தீ கொழுந்துவிட்டு எரியும்.உறவினர்களிடமிருந்து நாம் பிரிந்துவிட்டால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கமுடியாது.எல்லா உறவும் சேர்ந்து முயற்சித்தால் அக்குடும்பம் பெரிய சாதனைகள் செய்ய முடியும்

யார், அந்தணர்கள்,பெண்கள், உறவினர்கள் ஆகியோருக்கும், பசுக்களுக்கும் கொடுமை இழைப்பதில் வீரம் காட்டுகின்றார்களோ அவர்கள் முற்றிய பழம் மரத்திலிருந்து விழுவதைப் போல ஆதாரத்தை இழந்து அழிந்து போவார்கள்

ஒரு மரம் தனியாக இருக்கிறது.அது பெரியதாகவும், வலுவாகவும் இருக்கலாம்.அதன் வேர்கள் பூமியில் ஆழமாக பதிந்திருக்கலாம்.ஆனாலும் சூறாவளிக் காற்று வீசினால் அம்மரம் ஒரு நிமிடத்தில் கிளைகள் உட்பட முற்றிலும் ஒடிந்து விழுந்துவிடும்.ஆனால், பல மரங்கள் அருகருகே அமைந்து, பூமிக்குள் நன்கு ஊடுருவி..அடர்த்தியாகத் திரண்டு நின்றால் அவை பலத்த புயல் காற்றையும் சமாளித்துவிட முடியும்.அவை ஒன்றையொன்று தாங்கிக் காப்பாற்றுவதுதான் நீடிக்க முடிவதன் காரணமாகும்

ஒரு ,மனிதரிடம் எல்லாச் சிறப்புகளும் இருக்கலாம்.ஆனால் ஊரோடு ஒட்டி வாழாமல் தனித்து நின்றால் அவனுடைய எதிரிகள் மகிழ்வர்.தனிமரத்தை காற்று வீழ்த்துவது பொல அவனை எளிதில் வெல்லலாம் என பகைவர்கள் தெரிந்துகொண்டு விடுவார்கள்

நீலத்தாமரைச் செடிகளின் தண்டுகள் தடாகத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்து வளர்வது போல ஒருவரை ஒருவர் சார்ந்து ஆதரித்தால் எல்லோரும் நிறைய செல்வமும், செழிப்பும் பெற்று விளங்க முடியும்

அந்தணர்கள், பசுக்கள், உறவினர்கள், குழந்தைகள், பெண்கள், நமக்கு உணவு தயாரித்து அளித்தவர்கள், நம்மிடம் அடைக்கலம் புகுந்தவர்கள் ஆகியோரை ஒருபொழுதும் கொல்லக்கூடாது.அவர்களில் யாரேனும் கடுமையான குற்றம் இழைத்திருந்தாலும் அவர்களை நாடு கடத்துவதே அதிக பட்சத் தண்டனை ஆகும்

ஆரோக்கியமற்றவன். கிட்டத்தட்ட இறந்தவனுக்கு சமமாவான்.ஆரோக்கியம் இல்லாவிட்டால் செல்வச் செழிப்புப் பெறுவது சிரமம்.செல்வந்தவனாக இல்லாவிடின் சமூகத்தில் சிறப்பும் கிடைக்காது

திருதராஷ்டிரரே! கோபம் என்பது ஒருவகையான தலைவலி.அது நோயின் காரணமாக ஏற்படுவதில்லை.கோபம் தீவிரமான பானம் போன்றது.கசப்பானது.காரசாரமானது.வெம்மை நிறைந்தது.தீய விளைவுகளை ஏற்படுத்துவது.இவ்வளவு பயங்கர கோபத்தைச் சான்றோர்களால்தான் அடக்க முடியும்.நீங்களும் பாண்டவர்கள் மீதான கோபத்தை விழுங்கி விடுங்கள்.அமைதி பெறுவீர்கள்.

நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம், தங்களது குழந்தைகளைக் கொஞ்சி நேசிக்கும் பொறுமை இருக்காது.அவர்களுக்கு தங்கள் பொருள் வசதிகளை ரசித்து அனுபவிக்க முடியாது.நல்லது, கெட்டது  என பகுத்தறியும் விவேக புத்தியும் மழுங்கிப் போயிருக்கும்.அவர்கள் எப்போதும் துக்கத்தில் சிக்கித் தவித்து கொண்டிருப்பார்கள்.கையிலுள்ள செல்வத்தைக் கொண்டு எப்படி சந்தோசமாக இருப்பது என அறிந்திருக்க மாட்டார்கள்

துரியோதனன் நடத்த விரும்பிய சூதாட்டத்தை ஆதரிக்காமல் தடுக்குமாறு முதலிலேயே உங்களிடம் யோசனைக் கூறினேன்.ஏனெனில், அறிவாளிகள் சூதாடுவதைத் தடுப்பார்கள்.ஆனால், நீங்கள் என் பேச்சை ஏற்றுச் சூதாட்டத்தைத் தடுக்காமல் இருந்து விட்டீர்கள்.இதனால் திரௌபதி இழுக்கப்பட்டு கதற நேர்ந்தது

நாம் நமது வலிமையை மென்மையானவர்களுக்கும், பலகீனர்களுக்கும் எதிராகப் பயன்படுத்தக் கூடாது.நமது வலிமையை நியாயம் பெறுவதற்காகவே உபயோகிக்க வேண்டும்.கொடூரமான வழிகளில் சம்பாதித்த செல்வம் நிச்சயமாக அழிந்துப் போகும்.மென்மையான முறையில், கண்ணியமான வழியில் சம்பாதித்த செல்வம் மகன்கள், பேரன்கள் என்று பரம்பரையாக நீடித்துச் செல்லும்

அரசே! உங்கள் புதல்வர்கள் பாண்டவனின் புதல்வர்களைப் பாதுகாக்கட்டும்.அதுபோலவே பாண்டுவின் மகன்கள் உங்கள் மகன்களை ரட்சிக்கட்டும்.இருவரும்..குரு வம்சத்தினரே!  ஆகவே கௌரவர்களின் நண்பர்களைப் பாண்டவர்கள் தங்கள் நண்பர்களாகவும்,பாண்டவர்களின் எதிரிகளைக் கௌரவர்கள் தங்கள் எதிரிகளாகவும் கருத வேண்டும்.இருதரப்பினரும் ஒரே மாதிரியான லட்சியங்களை ஏற்படுத்திக் கொண்டு ஒரே மாதிரியான நடவடிக்கைகளில் ஏடுபட்டு, மகிழ்ச்சியாகவும்,பலவளங்கள் பெற்று சிறப்பாகவும் வாழ வேண்டும்

அஸ்தினாபுரத்தை ஏற்படுத்தியவரான ஹஸ்தியின் மூத்த மகனாகிய அஜமீடரின் பரம்பரையில் வந்த உங்களைத்தான் குரு வம்சம் சார்ந்துள்ளது.ஆனால் நீங்களோ, வெறும் கௌரவர்களை மட்டுமே ஆதாரமாகத் தாங்குகிறீர்கள்.பாண்டவர்கள் காட்டுக்கு விரட்டப்பட்டனர்.அவர்களையும் நீங்கள் அரவணைத்துக் காத்தால் உங்கள் பெயர் களங்கப்படாமல் இருக்கும்

குரு வம்சத்தில் உதித்தவரே! பாண்டுவின் புதல்வர்களுடன் சமரசம் செய்து கொள்ளுங்கள்.உங்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் எதிரிகள் ஆவார்கள்.அதற்கு இடம் கொடுக்காதீர்கள்.பாண்டவர்கள் சத்தியவாதிகள்.ஆகவே நீங்கள் துரியோதனனை அடக்கி வையுங்கள்.

என்று விதுரர் கூறி முடித்தார்.

Wednesday, December 30, 2015

34-நட்பு




யாருடைய கோபம் நம்மை அச்சப்படுத்துகிறதோ...அவர் நண்பர் அல்ல.அச்சத்தாலோ அல்லது தப்பாக நினைக்கக்கூடாது என்றோ யாருக்கு நாம் பணிவிடை செய்ய நேரிடுகிறதோ..அவர் நம் நண்பர் அல்ல.தந்தையிடம் பேசுவது போல நாம் யாரை நம்பிக்கையுடன் அணுகி பிரச்னைகளுக்கு ஆறுதல் பெறுகிறோமோ அவரே நம் நண்பர் ஆவார்.மற்றவர்கள் அவ்வப்போது தலைகாட்டுபவர்கள் ஆவார்கள்.அவ்வளவே!

நமக்கு உறவாக இல்லாவிடினும்..நட்போடு பழகினால் அவர் நமக்கு உறவுபோலத்தான்.அவரே நம் நண்பர்.அவரே நமக்கு உதவக் கூடியவர்.அவரே பிரச்னைகளின் போது நமக்கு அடைக்கலமும், ஆறுதலும் தருபவராக இருப்பார்

சஞ்சலமான மனதினனுக்கும், விவேகமும் அனுபவமும் உள்ள பெரியோர்களுக்கு பணிவிடை செய்யாதவனுக்கும், பதற்றப்பட வேண்டியவனுக்கும் அல்லது ஏமாற்றுபவனுக்கும் ஒரு போதும் நிரந்தர நண்பர்கள் இருக்க மாட்டார்கள்

ஏரி வறண்டு போனால் அன்னப்பறவைகள் வெளியேறி விடுவது போல..ஒருவன் சஞ்சலமான மனதினனாகவும், சுயக்கட்டுப்பாடு அற்றவனாகவும், புலன் ஆசைகளுக்கு வசப்பட்டவனாகவும் இருந்தால் அவனுடைய செல்வமும், வசதிகளும் அவனை விட்டு நீங்கி விடும்

கொடியவர்கள் திடீரென சீறி விழுவார்கள்.அதுபோல திடீரென காரணமில்லாமலேயே மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.அவர்கள் குணம் ஆகாயத்தின் தோற்றம் போல கணம் தோறும் மாறியபடியே இருக்கும் (வானம் மேகங்களால் திடீரென இருளும்..பின் மேகங்கள் விலக திடீரென வெளிச்சமாகும்)

சிலர் தங்கள் நண்பர்களால் நன்கு வரவேற்கப்பட்டு, உபசரிக்கப்பட்டு நன்மைகள் பல பெற்றாலும், நன்றியுணர்வு அற்றவர்களாக இருப்பர்.அத்தகையோர் இறந்த பின்..அவர்களது உடலை நரி, கழுகு போன்றவை கூடத் தொடாது

ஒருவன் பணம் படைத்தவனாக இருந்தாலும் சரி,ஏழையாக இருந்தாலும் சரி உதவி தேவைப்படும் போது நண்பர்களை அணுக வேண்டும்.அப்படி ஒருபோதும் உதவி கோராவிடின் நம் நண்பர்கள் எனப்படுபவர்கள் உண்மையானவர்களா ,இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடியாது

கவலையால் அழகு குலையும்.உடல் வலிமை குறையும், அன்பு மழுங்கும். கவலை காரணமாக மனிதன் பல நோய்களுக்கு ஆளாகிறான்

கவலைப்படுவதால் மட்டும் நாம் விரும்பும் எதையும் பெற முடியாது.மனதில் துன்பம் பரவி உடலும் கஷ்டத்திற்குள்ளாகிறது.இது கண்டு நம் எதிரிகள் மகிழ்வர்.எனவே கவலையால் மனம் தளரக்கூடாது

மனிதன் இறக்கிறான்.மீண்டும் பிறக்கிறான்..ஏழையாகிறான்.மீண்டும் செல்வச் சிறப்பு பெறுகிறான்.பிச்சை எடுக்கிறான்..பின்னர் வாரி வழங்குகிறான்.இன்னொருவரின் மரணத்திற்காக சோகத்தை வெளிப்படுத்துகிறான்.வேறொரு சமயம் அவன் மரணத்திற்காக மற்றவர்கள் விசனப்படுகின்றனர்

இன்பம்-துன்பம், தோற்றம்- அழிவு, வளமை- வறுமை, லாபம்- நஷ்டம், சாவு- பிறப்பு, என்ற இரட்டை நிலைகள் எல்லோருக்கம் மாறி மாறி, மீண்டும் மீண்டும் ஏற்படுகின்றன.எனவே, நாம் நமது மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு, ஒரு சமயம் கூத்தாடாமலும் மறுசமயம் புலம்பாமலும் அமைதியாகவே இருக்க வேண்டும்

கண், காது, மூக்கு,நாக்கு,சருமம். மனம் என ஆறும் எப்போதும் சஞ்சலத்துடனே உள்ளன. பானையின் எந்தப் பகுதி ஓட்டையானாலும் ஊற்றப்படும் தண்ணீர் வெளியேறுவது போல நம்புலன்கள் ஏதேனும் ஒன்று தவறாக இயங்கினாலும் அதன் வழியே நம் அறிவு வெளியேறிவிடும்

என்று விதுரர் கூறினார்.

திருதராஷ்டிரர் சோகமாக விதுரரிடம்,"துரியோதனனைச் செல்லமாக வளர்த்துவிட்டேன்.அது தவறு.உடலுக்குள் நெருப்பை மறைத்துவைக்க முயன்றது போல ஆகிவிட்டது.அந்த நெருப்பு உடலை எரித்து..அதனுடன் தொடர்பு கொண்டுள்ள மற்றவற்றையும் அழித்துவிடும்.துரியோதனன் தானும் அழிவதுடன், என் மற்ற மகன் களையும்  கூட அழித்துவிடுவான் போல இருக்கிறதே! இச் சூழ்நிலைத் தொடர்ந்து அச்சுறுத்துவதாகவே உள்ளது.இதனால் மனம் குழம்பிக் கிடக்கிறது.விதுரரே! எல்லா கவலைகளில் இருந்து  விடுபட வழி என்ன?" என்றார்

விதுரர் கூறலானார், "தூய மன்னரே! அறநெறி அறிந்திருத்தல், கடமையைத் தவம் போலச் செய்து வருதல், புலன்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல்,பிறர் செல்வத்திற்கு ஆசைப்பாடாதிருத்தல் ஆகியவை மூலம் மனிதர்கள் மன அமைதியைப் பெற முடியும்

அறிவின் மூலம் அச்சத்தை விரட்டலாம்.கடமையைத் தவம் போலச் செய்தால் பெரிய சாதனைகள் புரியலாம்.குருவைச் சார்ந்திருந்து சேவை புரிந்தால் ஆத்ம ஞானம் பெறலாம்.புலன்களை வசப்படுத்தினால் அமைதியாக வாழலாம்

முக்தி பெற விரும்புபவர்கள், வாழ்க்கையில் விருப்பு, வெறுப்பு அற்றவர்களாகவும், பற்றுகளை குறைத்துக் கொண்டும் வாழ வேண்டும்.தான தருமம் செய்வதால் விளையக்கூடிய நல்ல பலன் களுக்காக ஏங்கக் கூடாது.வேதங்கள் கூறும் சடங்குகளைச் செய்வதால் கிடைக்கக் கூடிய நல்ல விளைவுகளுக்காகவும் ஆசைப்படக் கூடாது

சரியான படிப்பைத் தேர்ந்தெடுத்து முறையாக பயில்வனும்,நியாயமான காரணத்திற்காக வீரமாக போராடுபவனும், எப்போதும் நற்செயல்களையே செய்பவனும் கடமைகளைத் தவம் போல உறுதியாகச் செய்பவனும் தங்கள் முயற்சியின் முடிவில் வளமாக வாழ்வார்கள்

இனி வள்ளுவர்

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து

உறுப்புகளைஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல ஐம் புலன் களையும் அடக்கியாளும் உறுதி காலமெல்லாம் வாழ்க்கைக்கு அரணாக அமையும்